Monday, August 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 551

#ச்ருதி_கீதை

வேதங்கள் பகவானைத் துதிக்கின்றன.

அனைத்துலகையும் ஆட்டிப்‌ படைக்கும் இறைவா! பரமாத்ம தத்வத்தை உணர்தல் மிகக் கடினம். அதனாலேயே நீங்கள் பற்பல அவதாரங்கள் செய்து திருவிளையாடல்கள் புரிகிறீர்கள். அவை கேட்பதற்கும், பாடுவதற்கும் இனியவை. அமுதம் போன்றவை. மனம் மயக்குபவை. அவற்றில் மூழ்கும் ஜீவன் உலகியல் துன்பங்கள் அழியப்பெற்று பிறிவிச் சுழலினின்று விடுபடுகிறான்.

தங்கள் கதையமுதம் பருகுபவன் உலகியல் மட்டுமல்ல, விண்ணுலக இன்பங்களையும் துச்சமாக எண்ணுகிறான்.

பஞ்சபூதங்களாலான இவ்வுடல் தங்களை அடைவதற்கான சாதனமாகத் தங்களால் அளிக்கப்பட்டிருக்கிறது.

தங்களை அடையும் வழியில்‌ இவ்வுடல் செயல்பட்டால் தனக்குத்தானே நன்மை செய்துகொள்கிறது. உண்மையில்‌ ஜீவனின் உற்ற நண்பன் தாங்களே. தாங்களே ஜீவனின் உண்மையான நலம் விரும்பி. ஜீவனைத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறீர்கள். ஆனால், மனிதர்களோ இவ்வுடல் நுகர்ச்சியை விழைந்து அதைக் காத்து, ஆன்மாவை நசுக்கிப் பிழிந்து தன்னைச் சிதைத்துக்கொள்கின்றனர்.

அதன் பயனாக விலங்கு, பறவை எனப் பல பிறவிகள் எடுத்து உழல்கின்றனர்.

தாங்கள் சமநோக்குடையவர். அனைவரிடத்தும் ஒரே மாதிரியான கருணையைப் பொழிபவர். யோக புருஷர்கள் மனத்தை அடக்கித் தங்களை அடைகிறார்கள். சிசுபாலன், ராவணன், கம்சன் போன்றவர்கள் தங்களிடம் மாளாப்பகை கொண்டதால் தங்களையே அடைந்தனர். பக்தியோ, பகையோ நினைப்பது தங்களைத்தானே. கோபிகள் தங்களைக் காதலன் என்று மயங்கியதால் தங்களை அடைந்தனர். வேதங்களாகிய நாங்களும் தங்களையே அடைகிறோம். ப்ரப்ப்ரும்மம் என்றாலும் காதலன் என்றாலும் அடைவது தங்களைத்தான்.

உலகம் தோன்றும் முன்பும், அழிந்த பின்னும் நிலைத்துள்ள உம்மை காலவசப்பட்டவன் எவ்வாறு அறிய இயலும்? உம்மிடமிருந்து ப்ரும்மா தோன்றினார். அவரைத் தொடர்ந்து புலன்களும் அவற்றின் தேவதைகளும் தோன்றின. அவர்களைத் தொடர்ந்து மற்ற ச்ருஷ்டிகள் துவங்கின. இவ்வுலகமைத்தையும் தம்முள் அடக்கி உறங்கும்போது வாசனைகளைக் கொண்டு உறங்கும் ஜீவன்களுக்கு உணர்வுப் புலன்கள் ஏதுமில்லை. அப்போது மஹத் முதலிய தத்துவங்களும் இல்லை. அவற்றை முறைப்படுத்திச் சொல்லும் வேதங்களாகிய நாங்களும் இல்லை. ச்ருஷ்டிக்குப் பிறகு ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களால் புத்தி தடுமாறுவதால் நீங்கள்‌ உணரப்படுவதில்லை. ப்ரயளயத்திலோ ஜீவனுக்கும் தங்களுக்கும் இடைவெளி இல்லை. ஆனாலும் புலன்களற்றிருப்பதால் உணர இயலாது. எனவே, தங்கள் சரணங்களைப் பற்றி பக்தி செய்வதே எளிய மார்கமாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment