Sunday, August 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 544

சுபத்ரையின் திருமணக் கதையைக் கூறிய ஸ்ரீ சுகாசார்யார் மேலும் தொடர்ந்தார். 

மிதிலா நகரத்தில் ச்ருததேவர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் கண்ணனின் பக்தராவார்.‌ ஆடம்பர வாழ்வில்லாவிட்டாலும் அவர் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் அவருக்குக் கிடைத்தது. மிகவும் நிறைவான குறைகளற்ற வாழ்வு அவருடையது. கண்ணனின் பக்தர்க்கேது குறை?

மிதிலா தேசத்தின் அரசரான பஹுளாச்வன் மிகவும் புகழ் பெற்றவன். அகந்தையின்றி நல்லாட்சி புரிந்துவந்தான். அவனும் கண்ணனிடம் மாறாத பக்தி கொண்டிருந்தான்.

அந்தர்யாமியான கண்ணன் பக்தரின் உள்ளம் அறியானா? அவர்கள் இருவருக்கும் தரிசனம் அளிக்க விரும்பினான். 

நாரதர், வாமதேவர், அத்ரி வியாஸர், பரசுராமர், அஸிதர், அருணர், ப்ருஹஸ்பதி, கண்வர், மைத்ரேயர், சியவனர் மற்றும் நான் எல்லோரையும் அழைத்துக்கொண்டு கண்ணன் மிதிலையை நோக்கிப் புறப்பட்டான். வழியெங்கும் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் ஒன்றுகூடி கண்ணனைப் பூஜை செய்தனர்.

ஆனர்த்தம், தன்வம், குருஜாங்காலம், கங்கம், மத்ஸ்யம், பாஞ்சாலம், குந்தி, மது, கேகயம், கோசலம், அர்ணம் முதலிய நாடுகளைக் கடந்து சென்றோம். எல்லா நாடுகளிலும் மக்கள் தேடிவரும் கண்ணனின் தாமரை முகத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டனர். 

அவர்களது அறியாமை இருள் அகலும் வண்ணம் கண்ணன் அவர்களுக்கு அபயம் அளித்துக்கொண்டே வந்தான். எங்களுடன் இணைந்துகொண்டு பலர் உடன் வந்தனர் மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. 

விதேக தேசத்தினுள் நுழைந்தோம். அந்த தேசத்தின் மக்கள் அனைவரும் கண்ணனின் புகழைக் கேட்டிருந்தபடியால், பூஜைப் பொருள்களை எடுத்து வந்து வழிபட்டனர். இதுவரை அவர்கள் கண்டிராத முனிவர்களையும் நன்கு உபசரித்தனர். 

விதேகத்தின் தலைநாகரான மிதிலையின் எல்லையில் பஹுளாச்வன் வந்து வரவேற்றான். அனைவரையும் தன் இல்லுக்கு விருந்தேற்க அழைத்தான்.

கண்ணன் ச்ருததேவன் வீட்டிற்கும் செல்ல விரும்பியதால் இரு வடிவங்கள் எடுத்துக் கொண்டான். பஹுளாச்வன் அறியாத வண்ணம் ச்ருததேவன் வீட்டிற்கும், ச்ருததேவனுக்குத் தெரியாமல் பஹுளாச்வன் வீட்டிற்கும் ஒரே நேரத்தில் இரண்டு வடிவங்களுடன் சென்றான்.

தீயோர்களின் செவிகட்கெட்டாத திருப்பெயர் கொண்ட கண்ணனையும், முனிவர்களையும், பஹுளாச்வன் உயர்ந்த ஆசனங்களில் அமர்த்தி முறைப்படி பூஜை செய்தான். அனைவரின் திருவடிகளையும் நீரால் சுத்தம் செய்து அந்நீரைக் குடும்பத்துடன் தலையில் ஏற்றான்.

அனைவர்க்கும் சந்தனம், தூபம், தீபம், பூமாலைகள் சமர்ப்பித்து காணிக்கைகளை அளித்தான்.

விருந்துண்ட பின் அனைவரும் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தான். கண்ணன் அருகே சென்று உலகளந்த அவனது தாமரைத் திருவடிகளைத் தன் மடிமீது எடுத்து வைத்துக்கொண்டு வருடிக்கொண்டே மிகவும் மென்மையான குரலில் கண்ணனைத் துதி செய்யலானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment