Wednesday, June 30, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 656

ஸ்ரீ மத் பாகவத ஸங்க்ரஹம் - 1

ஸ்ரீ ஸூதபௌராணிகர் இவ்வளவு நேரமாகத் தான் விவரமாக வர்ணித்த ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைக் கூறத் துவங்கினார்.
நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பிக்கேட்ட உயர்ந்ததான இந்த பாகவதக் கதையை என்னால் இயன்றவரை கூறினேன்.
இந்த ஸ்ரீ மத் பாகவதத்தில் யோகிகளால் போற்றப்படும், ஸகல கல்யாண குணங்களும் உடைய பகவானான ஸ்ரீ ஹரியின் பெருமைகள் பேசப்படுகின்றன.
இதில் ப்ரும்ம தத்வம் ரகசியமாக விவரிக்கப்படுகிறது. அதிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம், இருப்பு, அழிவு மூன்றும் ஏற்படுகின்றன. இந்த தத்வத்தின் விளக்கங்களும், அவற்றின் பயனான ஞானமும், அதஅதை அடைவதற்கான வழிகளும் விரித்துக் கூறப்பட்டுள்ளன‌.
பக்தியோகம், அதைப் பின்பற்றும் வைராக்யம், துறவு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. முதல் ஸ்கந்தத்தில் பரீக்ஷித்தின் தோற்றம், வியாஸர், நாரதர் இவர்களுக்கிடையே ஆன உரையாடல் மூலம் நாரதரின் வரலாறு ஆகியவை கூறப்படுகின்றன.
முனி குமாரனின் சாபத்தால் பரீக்ஷித், கங்கைக் கரையில் வடக்கிருந்து உயிர்துறக்க முடிவு செய்து அமர்கிறான்‌ அப்போது சுகமுனி அங்கு வர, இருவருக்குமான உரையாடல் கூறப்பட்டது.
இரண்டாவது ஸ்கந்தத்தில் யோக மார்கம், அர்ச்சிராதி மார்கம், நாரதர் மற்றும் ப்ரும்மாவுக்கிடையே ஆன உரையாடல், அவதாரங்களின் கதைச் சுருக்கம், தத்வங்களின் வரிசை, விராட் புருஷன், ச்ருஷ்டி ஆகியவை கூறப்பட்டன.
மூன்றாவது ஸ்கந்தம் விதுரருக்கும் உத்தவருக்குமான உரையாடல், தொடர்ந்து விதுரருக்கும் மைத்ரேயருக்குமான உரையாடல். அதில் ப்ரளயத்தின் போது நிகழும் செயல்கள், பகவானின் யோக நிலை, இந்த ப்ரபஞ்ச ச்ருஷ்டி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஏழு தத்துவங்களால் நிகழும் காரியங்களும், படைப்பும், பிரும்மாண்டத்தின் தோற்றம், அதில் விராட் புருஷனின் நிலை, காலத்தின் பரிமாணங்கள், ப்ரும்மாவின் தோற்றம், இரண்யாக்ஷ வதம், தேவர், அசுரர், மாந்தர் ஆகியோரின் படைப்பு, பதினோரு ருத்ரர்களின் தோற்றம், அர்த்தநாரீ தத்துவம், ஸ்வாயம்புவ மனு, மற்றும் உலகின் முதல் பெண்ணான சதரூபையின் தோற்றம், கர்தம ப்ரஜாபதியின் சரித்ரம், அவரது மனைவி, குழந்தைகள், ஆகியோரின் வரலாறு, கபில பகவானின் தோற்றம், தேவஹூதிக்கும் கபிலருக்குமான உரையாடல் மூலம் சாங்க்ய தத்துவ விளக்கம் ஆகியவை வர்ணிக்கப்பட்டன.
நான்காவது ஸ்கந்தத்தில் மரீசி முதலான ஒன்பது ப்ரஜாபதிகளின் தோற்றம், தக்ஷனின் வேள்வியை வீரபத்ரர் அழித்தல், துருவ சரித்ரம், பிருது, பிராசீனபர்ஹிஸ் ஆகியோரின் சரித்ரங்கள், நாரதருக்கும் ப்ராசீனபர்ஹிஸுக்குமான உரையாடல், புரஞ்ஜனன் கதை ஆகியவை அடங்கும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரசானுபவங்களில் இவையும் சிலவே.

Monday, June 28, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 655

ஐப்பசி மாதத்தின் சூரியன் துவஷ்டா. ரிஷி ஜமதக்னி, நாகம் கம்பளன், அப்ஸரஸ் திலோத்தமா, ராக்ஷஸன் ப்ருமமாபேதன், யக்ஷன் சதஜித், கந்தர்வன் திருதராஷ்டிரன்.

கார்த்திகை மாதத்தின் அதிபதிகள் விஷ்ணு என்னும் சூரியன், அச்வதரன் என்ற நாகம், ரம்பை என்ற அப்ஸரஸ், சூர்யவர்ச்சஸ் என்ற கந்தர்வன்,
ஸத்யஜித், என்ற யக்ஷன், விஸ்வாமித்ர ரிஷி, மகாபேதன் என்ற ராக்ஷஸன் ஆகியோர்.
மார்கழி மாதம் அம்சு என்ற சூரியன், கச்யப ரிஷி, தார்க்ஷ்யன் என்ற யக்ஷன், ருதசேனன் என்ற கந்தர்வன், ஊர்வசி என்ற அப்ஸரஸ், வித்யுச்சத்ரு என்ற ராக்ஷஸன், மகாசங்கன் என்ற நாகம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
தை மாதம் பகன் என்ற சூரியன், ஸ்பூர்ஜன் என்ற ராக்ஷஸன், அரிஷ்டநேமி என்ற கந்தர்வன், ஊர்ணன் என்ற யக்ஷன், ஆயு என்ற ரிஷி, கார்கோடகன் என்ற நாகம் பூர்வசித்தி என்ற அப்ஸரஸ் ஆகியோரால் நடத்தப்படுகிறது.
மாசி மாதத்தை நடத்துபவர்கள் பூஷா என்னும் சூரியன், தனஞ்ஜயன் என்ற நாகம், வாதன் என்னும் ராக்ஷஸன், ஸுஷேணன் என்ற கந்தர்வன், ஸுருசி என்ற யக்ஷன், க்ருதாசீ என்ற அப்ஸரஸ், கௌதம ரிஷி ஆகியோர்.
பங்குனி மாதத்தின் அதிகாரம் பெற்றவர்கள் பர்ஜன்யன் என்ற சூரியன், கிரது என்ற யக்ஷன், வர்ச்சஸ் என்ற ராக்ஷஸன், பரத்வாஜ ரிஷி, சேனஜித் என்ற அப்ஸரஸ், விச்வன் என்ற கந்தர்வன், ஐராவதன் என்ற நாகம் ஆகியோர்.
இவர்கள் அனைவரும் ஆதித்யனான பகவானின் அம்ச பூதங்கள். காலையிலும் மாலையிலும் இவர்களை நினைப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் அழியும்.
சூரியனைப் பற்றி ருக் யஜுர் சாமம் முதலிய மூன்று வேதங்களும் மஹான்களும் ரிஷிகளாலும் பலவாறு ஓதப்படுகின்றன. அப்ஸரஸ்கள் அவர்முன் நர்த்தனமாடுகின்றனர். சூரியனின் தேரை இழுத்துக் கட்டுபவர்கள் நாகர்கள், கந்தர்வர்கள் புகழ்ந்து பாடுகின்றனர். யக்ஷர்கள் அழகுபடுத்துகிறார்கள். அரக்கர்கள் பின்புறமிருந்து தள்ளுகின்றனர். வாலகியர்கள் என்ற அறுபதினாயிரம் ப்ரும்மரிஷிகள் அவரைத் துதித்துக் கொண்டு முன் செல்கின்றனர்‌.
முதலும் முடிவுமற்ற, பகம் எனப்படும் ஆறு குணங்களும் கொண்ட ஸ்ரீ மன் நாராயணன் ஒவ்வொரு கல்பத்திலும் தானே பலவிதமான உருவங்கள் எடுத்து மக்களைக் காக்கிறார்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Sunday, June 27, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 654

சௌனகர் அடுத்த கேள்வி கேட்டார்.

ஸ்வாமி! ஐந்தாவது ஸ்கந்தத்தில் ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், யட்சர்கள், ராக்ஷஸர்கள், தேவர்கள், ஆகிய 7 பிரிவும் சேர்ந்தது சூரியகணம் என்று கூறினீர்கள். இவை ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருப்பதாகக் கூறினீர்களே. பன்னிரண்டு மாதங்களுக்குரிய பன்னிரண்டு கணங்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும் யாவர்? அவர்கள் என்ன பணி செய்கிறார்கள்? என்று கேட்டார்.
ஸூதர் விடையிறுக்கத் துவங்கினார்.
ஸ்ரீ மன் நாராயணனின் மாயையால் உருவாக்கப்பட்டது சூரியமண்டலம். அவரே உலகம் முழுவதும் பயணிக்கிறார்.
பகவான் ஸ்ரீ ஹரியே அனைத்திற்கும் அந்தர்யாமியாக இருப்பவர். அவர் ஒருவராயினும் அனைவரும் பல வடிவங்களில் காண்கின்றனர்‌. அவரே வேதத்தில் கூறப்படும் அத்தனை காரியங்களுக்கும் மூல காரணமாவார்.
விடியும் காலம் முட்கலிய அனைத்துக் காலங்கள், மேடு, பள்ளம், சமம் ஆஹியவை உடைய இடம், வேள்வி முதலான கர்மாக்கள், கர்த்தா, நெயை ஆஹுதி செய்யப் பயன்படும் ஸ்ருக் எனும் கரண்டி, நெல் முதலானவை, வேள்வியின் பயனான ஸ்வர்கம் அனைத்தும் பகவானே.
இவ்வுலக நடைமுறைகள் குறைவின்றி நடைபெறுவதற்காக பகவான் சூரிய நாராயணன் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு கணங்களுடன் சுற்றி வருகிறார்.
தாதா என்ற சூரியன், க்ருதஸ்தலி என்ற அப்ஸரஸ், ஹேதி என்ற அரக்கன், வாசுகி என்ற நாகம், ரதகிருத் என்ற யட்சன், புலஸ்த்ய ரிஷி, தும்புரு என்ற கந்தர்வன் ஆகியோர் சித்திரை மாதத்தில் பணி செய்கிறார்கள்.
அர்யமா என்ற சூரியன், புலஹர், அதௌஜஸ் என்ற யக்ஷன், ப்ரஹேதி என்ற ராக்ஷஸன், புஞ்ஜிகஸ்தலி என்ற அப்ஸரஸ், நாரதன் என்ற கந்தர்வன், கச்சனீரன் என்ற நாகம் ஆகியோர் வைகாசி மாதம் பணி செய்பவர்கள்.
மித்ரன்‌என்ற சூரியன், அத்ரி ரிஷி, பௌருஷேயன் என்ற ராக்ஷஸன், தக்ஷகன், மேனகை, ஹாஹா என்ற கந்தர்வன், ரதஸ்வனன் என்ற யக்ஷன் ஆகியோர் ஆனி மாதத்தின் பணியாளர்கள்.
ஆஷாட (ஆடி) மாதத்தின் பணியாளர்கள் வருணன் எனப்படும் சூரியன், வசிஷ்டர், ரம்பை, ஸகஜன்யன் என்ற யக்ஷன், ஹூஹூ‌என்ற கந்தர்வன், சுக்ர நாகம், சித்ரஸ்வனன் என்ற ராக்ஷஸன் ஆகியோர்.
சிரவண (ஆவணி) மாதம் பணியாற்றுபவர்கள் இந்திரன் என்ற சூரியன், விஸ்வாவசு என்ற கந்தர்வன், சுரோதா என்ற யக்ஷன், ஏலாபத்ர நாகம், ஆங்கிரஸ் ரிஷி, பிரம்லேசா என்ற அப்ஸரஸ், வர்யன் என்ற
ராக்ஷஸன் ஆகியோர்.
புரட்டாசி மாதம் விவஸ்வான் என்ற சூரியன், உக்ரஸேனன் என்ற கந்தர்வன், வியாக்ரன் என்னும் அரக்கன், ஆஸரணன் என்ற ய்க்ஷன், பிருகு, லோசை என்ற அப்ஸரஸ், சங்கபால நாகம் ஆகியோர் பணியாற்றுவர்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Wednesday, June 23, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 653

விராட் ஸ்வரூப லட்சணங்கள்..

வைகுண்டமே பகவானின் வெண்கொற்றக்குடை. கைவல்யம் அவரது வாசஸ்தலம். மூன்று வேதங்களின் உருவமே கருடன்.
மாயையே அவரது சக்தி. வைகானஸ ஆகமத்தின் ஸ்வரூபமான விஷ்வக்ஸேனர் பகவானின் கைங்கர்யபரர்களின் தலைவர். பகவானின் இயல்பு குணங்களான அஷ்டமா சித்திகளும் உருவமெடுத்து வாயிற்காவலர்களாக நிற்கின்றன.
பகவான் வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என நான்கு உருவங்கள் எடுத்து வியூக மூர்த்திகளாய் நிற்கிறார்.
விழிப்பு (ஜாக்ரத்) நிலையின் அபிமான தேவதையான விஸ்வன் என்பவராக இருந்து பகவான் மற்ற உணர்வுகளை ஏற்கிறார்.
கனவு (ஸ்வப்ன) நிலையின் அங்கமாகியா கனவு நிலையின் அபிமான தேவதையான தைஜசன் என்பவராக இருந்து மனத்திலேயே பல காட்சிகளைக் காண்கிறார்.
ஸுஷுப்தி எனப்படும் உறக்க நிலையின் அபிமான தேவதையான ப்ராக்ஞன் என்பவராகி மனத்தின் வாசனைகளுக்கேற்ப ‌அஞ்ஞானத்தினால் மறைக்கப்படுகிறார். துரீய நிலையின் தேவதையான துரீயன் என்ற பெயரில் ஞானத்திற்கு ஆதாரமாக விளங்குவதும் அவரே.
எல்லா நிலைகளிலும் இருந்துகொண்டு இயக்கும் பகவானுக்கு தான் ஜீவன் என்ற எண்ணமில்லை.
பகவான் தன்னொளி பொருந்தியவர். எங்கும் நிறைபவர். மாயையை ஏற்று ப்ரும்மா என்ற பெயருடன் படைத்தலையும், விஷ்ணு என்ற பெயரில் காத்தலையும், ருத்ரன் என்ற பெயரில் அழித்தலையும்‌ செய்கிறார்.
பெயர்கள் பலவாயினும் அவர் ஒருவரே. அனுபூதிமான்கள் அவரை ஆன்மா என்கிறார்கள்.
கூறிக்கொண்டே போன ஸூதர் தன்னிலை மறந்து உரத்த குரலில் ப்ரார்த்தனை செய்தார்.
ஹே க்ருஷ்ணா! அர்ஜுனனின் ஆத்ம நண்பனே! யாதவகுலத்தில் பிறந்து பூவுலகின் பாரத்தை நீக்கியவனே! வீரத்திருமகனே! பசுக்களின் காவலனே! இடையர்களுக்கும் கோபியர்களுக்கும் நாரதர் முதலானோர்க்கும் அன்பை வாரி வழங்கியவனே! உங்கள் திருநாமம், புகழ், குணங்கள் ஆகியவற்றைக் கேட்பதாலேயே நன்மையை அருள்பவனே! எங்களைக் காத்தருள்வீராக!
என்று மேனி சிலிர்த்து கண்ணீர் மல்கக் கதறினார்.
அதிகாலையில் எழுந்து தூய்மையுடன் புருஷோத்தமனான பகவானின் அங்கங்கள், உப அங்கங்கள், ஆயுதங்கள், ஆகியவற்றை மனம் ஒன்றி தியானிப்பவர் க்கு இதய கமலத்தில் வீற்றிருக்கும் ப்ரும்மஸ்வரூபமான பகவான் தெரிகிறான். ஞானம் கைகூடுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Monday, June 21, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 652

மார்க்கண்டேயர் பல கோடி காலம் பிரளய அனுபவம் பெற்றார் என்று சொல்லும்போது அது பகவானின் மாயை என்பது புலப்படுகிறது.

அது அவருக்காக தனிப்பட்ட முறையில் பகவானால் கற்பிக்கப்பட்ட ப்ரளயமாகும். பகவானின் சுவாசத்தில் ஏழுமுறை உட்புகுந்து திருவயிற்றினுள் சென்று வெளிவந்ததால் அந்த ஏழு நொடிப் பொழுதுகள் ஏழு கல்பங்களாக மாயையால் காட்டப்பட்டது என்பர் பெரியோர்.
ஶௌனகர் ஸூதரைப் பார்த்துக் கேட்டார்,
முனிவரே!
இம்மை மறுமை பற்றிய உண்மைகளை அறிந்தவர்களுள் சிறந்தவர் தாங்கள். எங்களுக்கு க்ரியா யோகம் பற்றி விளக்குங்கள்.
பாஞ்சராத்ரம், வைகானஸம், மற்றும் தந்திர மார்கங்களில் பகவானை ஆராதனை செய்வது எங்ஙனம்? அவரது அங்கங்கள், கருடன், சுதர்சனம் முதலிய உப அங்கங்கள், கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் எவ்வாறு அறியப்படுகின்றன. இவை பற்றியும் விளக்குவீராக. என்றார்.
ஸூதர் பதிலிறுக்கத் துவங்கினார்.
என் குருவான வியாஸரின் திருவடிகளை வணங்கி ப்ரும்மா முதலான ஆசார்யர்களும், வேதங்களும், ஆகமங்களும் கூறும் பகவானின் விராட் ரூபத்தையும் அதன் பெருமைகளையும் கூற முயல்கிறேன்.
அனைத்து உலகங்களுக்கும் ஆதார ஸ்தலமாக விளங்குவது பகவானின் விராட் ஸ்வரூபமாகும். ப்ரக்ருதி, சூத்திரம், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, மனம், ஐந்து மஹா பூதங்கள், ஆகிய அனைத்து தத்துவங்களுக்கும் நிலைக்களனாய் விளங்குவது விராட் ஸ்வரூபம் ஆகும்.
பூமியே அவரது திருவடி, தேவலோகமே தலை, ஆகாயம் தொப்புள், சூரியனே கண்கள், வாயு மூக்கு, எட்டுத் திசைகளும் இரு காதுகள், எண்டிசை லோகபாலர்களும் பகவானின் திருக்கரங்கள், சந்திரனே மனம், யமன் புருவங்கள், வெட்கம் மேலுதடு, பொறாமை கீழுதடு, புன்னகையே மயக்கம், மரங்களே ரோமங்கள், மேகங்களே கேசங்கள்.
பகவான் பிறப்பற்றவர். கௌஸ்துப மணி என்ற சுத்த ஜீவ சைதன்யமான ஆன்மஜோதியை அணிந்திருக்கிறார்.
அதன் ஒளியை ஸ்ரீ வத்ஸமாக அணிகிறார்.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள்‌கொண்ட வனமாலையை மார்பில் அணிகிறார்.
வேதஸ்வரூபமே பீதாம்பரம். அகரம், உகரம், மகரம் என மும்மாத்திரைகள் உடைய ப்ரணவம் முப்புரிநூலாகும்.
ஸாங்க்யம், யோகம் ஆகிய இரண்டும் மகர குண்டலங்கள். ப்ரும்மலோகமே கிரீடமாகும். அனந்தனாகிய ஆதிசேஷன் மூலப்ரக்ருதி. ஸத்வகுணமே தொப்புள்.
மனம், இந்திரியம், உடல்‌ ஆகியவற்றோடு தொடர்புள்ள பிராண தத்வமே கௌமோதகீ எனப்படும் கதை. ஜலதத்துவம் பாஞ்சஜன்யமாகும். சுதர்சனம் தேஜஸ் ஆகும்.
ஆகாயத்தின் நீல நிற தத்துவம் நந்தகி எனப்படும் வாள். தமோ குணம் கேடயம்‌. காலதேவதையே சார்ங்கமாகும். கர்மங்களே அம்புறாத்தூணி.
இந்திரியங்களே அம்புகள். க்ரியா சக்தி கொண்ட மனமே தேர். ஐந்து தன்மாத்திரைகளும் தேரின் வெளிப்புறமாகும். அபயம், வரதம் எனும் முத்திரைகள், பயத்தைப் போக்குவது, வரங்களை அருள்வது ஆகியவற்றைச் செய்கின்றன.
சூரிய மண்டலம் மற்றும் அக்னி மண்டலம் ஆகியவை பகவானின் இருப்பிடங்கள்.
ஆசார்யன் அளிக்கும் மந்திர தீட்சையே சித்த சுத்தி. அதுவே பகவானைப் பூஜிப்பதற்கான தகுதியாகும்.
பக என்னும் சொல்லின் பொருளான ஐஸ்வர்யம், தர்மம், செல்வம், ஞானம், புகழ், வைராக்யம் ஆகிய ஆறும் ஒன்றாகச் சேர்ந்து அவரது திருக்கரத்தில் தாமரையாக விளங்குகிறது. தர்மமும் புகழும் வெண்சாமரமும், விசிறியுமாகும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Thursday, June 17, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 651

தானாகவே தம்முன் எழுந்தருளிய பரமேஸ்வரனைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து வணங்கினார் மார்க்கண்டேயர். அவருக்கு முறைப்படி இருக்கை அளித்து அனைத்து உபசாரங்களையும் செய்தார்.


உலகனைத்தையும் இயக்கும் மங்கள ரூபரான தங்களை வணங்குகிறேன். என்று துதித்தார்.

அவரது தெள்ளிய மனம் கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரன் அவரைப் பார்த்துக் கூறலானார்.

தேவர்களுக்குத் தலைவர்களாகிய ப்ரும்மா, விஷ்ணு, சிவனாகிய நான் ஆகிய நாங்கள் அளிக்கும் வரங்கள் ஸத்யமாகும். அவை ஒருக்காலும் வீணாவதில்லை. தங்களைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

தாங்கள் விரும்பும் வரத்தைக் கேளுங்கள். இயல்பிலேயே பரோபகாரியும், ஒழுக்கமுடையவர்களாகவும், அமைதியாகவும், பொறாமையின்றியும், பற்றற்றும், அனைத்து ஜீவன்களிடமும் கருணையும், சம நோக்கும், எங்களிடம் பக்தியும் உடையவர்களை எல்லா உலகத்தாரும் பூஜை செய்கின்றனர்.
நானும், ப்ரும்மாவும், விஷ்ணுவும், மற்ற சான்றோரும் இத்தகையோர்களை வணங்குகிறோம். இந்த ஸாதுக்கள் எங்கள்‌ மூவரிடமும் வித்யாசம் காண்பதில்லை. மற்ற ஜீவன்களுக்கும் தமக்கும் கூட வேறுபாட்டை உணர்வதில்லை.
எல்லா நீரும் புனித நீராகாது. எல்லா தெய்வச்சிலைகளும் தெய்வங்கள் அல்ல. அனைத்தையும் பாகுபாடின்றி உய்விப்பது தங்களைப் போன்ற ஸாதுக்களே. ஒரு தெய்வ உபாசனையோ, நதி நீராட்டமோ பல காலம் சிரத்தையாகச் செய்தால்தான் பலன் தரும். ஆனால் ஸாதுக்களின் தர்சனமோ கண்டவுடனேயே ஜீவனைப் பவித்ரமாக்கிவிடுகிறது.
மன ஒருமைப்பாடு, தவம், வேதம், அறநெறி, ஆகியவற்றின் மூலம் சாதுக்கள் இறைவனைத் தமக்குள் நிலை நிறுத்தி நடமாடும் ஆலயங்களாக விளங்குகிறார்கள்.
ஸாதுக்களான உங்களோடு உரையாடுவது, ஏதேனும் சிறிய தொடர்பு ஆகியவற்றின் மூலமே பஞ்சமாபாதகர்கள் கூட மனத்தூய்மை பெற்றுவிடுகிறார்கள்.
என்றார் பரமேஸ்வரன்.
சந்த்ரமௌலீஸ்வரரின் இத்தகைய சொற்கள் மார்க்கண்டேயருக்கு அமுதம்‌ பருகினாற்போல் புத்துணர்வு கொடுத்தன.
ஸகல லோகங்களுக்கும் தலைவரான தாங்கள் என்னைப் போன்ற எளியோரைப் போற்றுவது தங்கள் நீர்மையையும் எளிமையையும் காட்டுகிறது.
அனைத்தும் அறிந்தவராயினும் ஜீவன்களுக்குப் புரிவதற்காக அறநெறிகளை உபதேசம் செய்வதோடு அவற்றை நடந்தும் காட்டுகின்றனர் சான்றோர்.
செப்படி வித்தைக்காரன் மக்களைப் பல மாய வித்தைகளைக் காட்டி மயக்கினாலும் அவனிடம் மயக்கம் இல்லை. அதுபோல பகவான் உலகை நன்னெறியில் செலுத்த லீலையாகப் பல காரியங்களைச் செய்கிறார்.
கனவில் காணும் காட்சியை உறக்கம் கலையும் வரை உணமையென்று எண்ணுவதுபோல ஜீவன்கள் மாயையின் திரை விலகும் வரை அதை ஸத்யமென்ற்ஸத்யமென்ற் எண்ணுகிறார்கள்.
தங்கள் தரிசனத்தாலேயே நான் பூரணனாகிவிட்டேன். இதற்கு மேலாக வேண்டுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது? தாங்கள் ஏதேனும் அருள விரும்பினால், பகவானின் சரணாரவிந்தங்களிலும், அடியார்களிடத்தும், தங்களிடத்தும் எனக்கு நிலையான பக்தி ஏற்படும்படி அருளுங்கள் என்றார்.
இதைக் கேட்டு பார்வதி தேவி மிகவும் மகிழ்ந்தார். பரமேஸ்வரன் குளிர்ந்து போனார்.
உமக்கு நிலையான பக்தி சித்திக்கட்டும். உலகங்கள் இருக்கும்வரை தங்கள் பெயரும் புகழும் நிலைக்கும். மரணம் ஏற்படாது. என்றும் இளமையோடும், ஆரோக்யத்தோடும் இருப்பீராக. தங்களின் ப்ரும்மதேஜஸ் வளரட்டும். மு க் கால ங் களையும் உணரும் ஞானம், ஆன்ம விஞ்ஞானம், வைராக்யம் ஆகியவை நிலைக்கட்டும். புராணங்களை எடுத்துக் கூறி பலருக்கும் குருவாக நல்வழி காட்டுவீராக என்று அருளினார்.
பின்னர், பரமேஸ்வரன் பார்வதியிடம் மாயையின் சக்தியையும் மார்க்கண்டேயரின் மஹிமைகளையும் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
அதுமுதற்கொண்டு மார்க்கண்டேயர் பக்தி வெள்ளத்தைப் பெருக்கிக்கொண்டு உலகெங்கும் சுற்றித் திரிந்து வருகிறார்.
இந்தக் கதையை மனம் ஒன்றிக் கேட்பவர் சொல்பவர், சொல்லத் தூண்டுபவர் ஆகிய மூவரும் பிறவிப் பயனை எய்துவர். அவர்களின் பிறவிச் சுழல் முற்றிலுமாக அறுபடும் என்றார் ஸூத பௌராணிகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Wednesday, June 16, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 650

சட்டென்று மார்க்கண்டேயருக்கு இவை அனைத்தும் யோகமாயையின் விளைவு, தாம் கேட்ட வரத்தைப் பூர்த்தி செய்யவே இக்காட்சிகள் என்று புரிந்துவிட்டது.

இப்படிப்பட்ட மாயையிலிருந்து விடுபட ஒரே வழி பகவானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதே என்று அறிந்துகொண்டார்.

உடனே பகவானைத் துதிக்கத் துவங்கினார்.

இறைவா! தங்களது மாயையின் சக்தியை நன்கு கண்டேன்‌. அவை அனைத்தும் மாயக்காட்சிகள், பொய் என்று தெரிந்தாலும், சத்யமான வஸ்துவைப் போல் எங்கும் விளங்குகிறது. பெரிய ஞானிகள் கூட இதில் விதிவிலக்கல்ல. இந்த மாயையின் பயம் நீங்க தங்கள் திருவடிகளைத் தொழுகிறேன். அபயமளியுங்கள்.

என்று ப்ரார்த்தனை செய்துகொண்டே தன்னிலை மறந்து துரீய நிலைக்குச் சென்றுவிட்டார்.

அப்போது வான்வழியில் பரமேஸ்வரனும் பார்வதி தேவியும் ரிஷபத்தின் மேலேறி தம் சிவகணங்கள் சூழ சென்றுகொண்டிருந்தனர்.

கீழே மார்க்கண்டேயரைப் பார்த்த பார்வதி தேவிக்கு தாயன்பு பெருகிற்று.

ஐயனே! காற்றில்லாதபோது அசையாமல் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப்போல அனைத்து இந்திரியங்களையும் ஒடுக்கி மனம் அடங்கி தன்னிலை மறந்து இருக்கும் இந்த அந்தணர் மீது கருணை வையுங்கள். இவரது தவத்திற்கேற்ற பலனைத் தாங்கள் அருளவேண்டும்‌ என்றார்.

பரமேஸ்வரனும் அதைக் கேட்டு‌மிகவும் மகிழ்ந்து பதிலிறுத்தார். எனக்கும் கூட இவருடன் உரையாட மிகவும் விருப்பமாயிருக்கிறது. இவர் பகவான் நாராயணனை மனத்தில் இருத்தி புலன்களை வென்றுவிட்டார். முக்தியில் கூட விருப்பமில்லாதவர்க்கு என்ன பலனைக் கொடுத்து விட முடியும்.
இத்தகைய ப்ரும்ம ஞானிகளைப் பார்ப்பதே மிகவும் அரிது. இவர்களுடன் பேசுவது பெரும் பேறன்றோ. வா. போய்ப் பார்க்கலாம். என்று கூறினார். அனைவரும் அந்த ஆசிரமத்திற்குள் இறங்கினார்கள்.

இதயத்தில் பகவான் நிலை பெற்றிருந்த படியால் மார்க்கண்டேயர் தன்னைச் சுற்றி நிகழும் எதையும் உணர்ந்தாரில்லை.
பரமேஸ்வரன் அவர் அருகில் சென்று அழைத்துப் பார்த்தார்.

ம்ஹூம்.. சலனமே இல்லை.

அணிமாதி ஸகல சித்திகளிலும் வல்லவரான கைலாசநாதர் தன் யோக மாயையால் மார்க்கண்டேயரின் ஹ்ருதயத்தினுள் புகுந்தார்.

மின்னல் போன்ற பளீரென்ற மேனி, மஞ்சள் நிறத் திருச்சடைகள், மூன்று கண்கள், பத்து கரங்கள், நெடிய திருவுருவம், சூலம், மழு, பரிகம், கேடயம், ருத்ராக்ஷ மாலை, உடுக்கை, ப்ரும்மகபாலம், கத்தி மற்றும் வில்லுடன் திடீரென்று தானே இதயத்தில் வந்து நின்ற பரமேஸ்வரனைக் கண்டு திகைத்தார் மார்க்கண்டேயர். மேனி சிலிர்க்க, ஸமாதி கலைந்தது.

கண்ணைத் திறந்தால் உள்ளே கண்ட காட்சி கண்முன்னே உருக்கொண்டு பரிவாரங்களுடன் நிற்பதைக் கண்டார்.

கிடைத்தற்கரிய பேறு.
தானே வந்து ஆட்கொண்டதே.

கண்டவுடன் கைநழுவிய தடிபோல அப்படியே திருவடிகளில் விழுந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 14, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 649

பிரளய நீரில் பல்லாண்டுகாலம் அலைக்கழிக்கப்பட்ட மார்க்கண்டேய மஹரிஷி ஒரு நாள் ஒரு திடலின் மீது செழித்த ஆலமரம் ஒன்றைக் கண்டார்.


வ்வாலமரத்தின் கிளை நுனியில் ஒரு சிறிய இலையின் மீது ஒரு சின்னஞ்சிறு குழந்தை படுத்திருந்தது.


அக்குழந்தையின் மேலிருந்து பெருகிய ஒளியில் இவ்வளவு நேரம் அவரைச் சூழ்ந்திருந்த இருட்டு காணாமல் போயிற்று.

கார்மேக வண்ணம், தாமரைபோலத் திருமுகம், வலம்புரிச் சங்கு போன்ற கழுத்து, அகன்ற மார்பு, அழகிய நாசி, வில்லைப் போல் வளைந்த புருவங்கள், முன்னெற்றியிலும் கன்னத்திலும் தவழும் சுருண்ட குழல், மாதுளம்பூ போல சிவந்த செவிகள், மனம் மயக்கும் புன்னகை, முத்துப்பல் வரிசை, அரசிலை போன்ற திருவயிறு, அதில்‌ மூன்று மடிப்புகள், ஆழமான தொப்புள், இளந்தளிர் போன்ற திருவிரல்கள், இரண்டு கரங்களாலும் ஒரு காலைத் தூக்கி கட்டைவிரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தது.

அக்குழந்தையைப் பார்த்ததும் இத்தனை ஆண்டுகாலமாக அவர் பட்ட துயரெல்லாம் மறந்துபோயிற்று. களைப்பனைத்தும் நீங்கிவிட்டது‌.

பளீரென்று ஒரு மகிழ்ச்சிப் பேரலை இதயம் முழுவதும் வீசி வியாபித்தது. கண்கள் மலர, மேனி சிலிர்த்தது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே இக்குழந்தை யார் என்று மனம் கேள்வியெழுப்பியது.

அதனிடம் பேச எண்ணி அருகில் சென்றார்.
ஒரே கணத்தில் சுதாரிப்பதற்குள் அதன் சுவாசக் காற்றால் இழுக்கப்பட்டு குழந்தையின் திருவயிற்றினுள் சென்று விட்டார்.

அங்கே பிரளயத்திற்கு முன் தான் கண்ட காட்சி போலவே அனைத்து உலகங்களையும், படைப்புகளையும் கண்டார்.

பூமி, சுவர்கம், ஆகாயம், நக்ஷத்ர மண்டலம், மலைகள், கடல்கள், தீவுகள், எட்டு திசைகள்,‌ தேவர்கள், அசுரர்கள், காடுகள், நாடுகள், நகரங்கள், வயல்கள், உழவர்கள், இடைச்சேரிகள், முனிவர்கள், ஆசிரமங்கள், பஞ்ச பூதங்கள், யுகங்கள், கல்பங்களைக் காட்டும் காலம் அனைத்தையும் கண்டார். இடம், பொருள், காலம் ஆகிய அனைத்தும் உண்மையாகவே இருப்பதுபோல் கண்டார்.

புஷ்பபத்ரா நதி, அதன் கரையில் தன் ஆசிரமம், மற்ற முனிவர்களின் ஆசிரமங்களாகிய அனைத்தையும் கண்டார்.

ஒன்றும் புரியாமல் வியப்பின் உச்சிக்கே போனார்.

பார்க்கும்போதே அடுத்த சுவாசத்தால் இழுத்து வெளியே தள்ளப்பட்டு பிரளயக் கடலில் மீண்டும் விழுந்தார்.

மீண்டும் கண்ணெதிரே திடல். அதில் ஆலமரம். ஆலமரக்கிளையில் குழந்தையின் காட்சி. இப்போதும் அதே புன்முறுவலுடன் குழந்தை அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதுவே பரம்பொருள் என்று உணர்ந்தார். பேரன்பு மேலிட
எப்படியாவது அதன் அருகில் சென்று பேசவேண்டும். அதை மார்புறத் தழுவ வேண்டும் என்றெண்ணினார்.

மிகுந்த சிரமப்பட்டு கடலில் இருந்து எழுந்து மணல் திட்டில் கரை ஏறி குழந்தையின் அருகில் சென்றார்.
அனைத்து ஜீவராசிகளின் அந்தர்யாமியான அந்தக் குழந்தை அவர் பார்க்கும்போதே மறைந்துபோயிற்று.

மார்க்கண்டேயர் கண்ட அத்தனையும் மறைந்தது. ஆலமரமும் இல்லை. ப்ரளயக் கடலும் இல்லை. முன்போல் தன் ஆசிரமத்தில் தான் அமர்ந்திருக்கக் கண்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Sunday, June 13, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 648

பகவான் நாராயணர் மார்க்கண்டேயரைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.


ரிஷிகளுள் மேன்மையானவரே! என்னிடம் கொண்ட பக்தியாலும், புலனடக்கம், தவம், மற்றும் வேதம் ஓதுதல் ஆகியவற்றாலும் தாங்கள் மேலான சித்திகளைப் பெற்றுவிட்டீர்கள்.


தங்களது ப்ரும்மச்சரியம் மிகவும் போற்றத்தக்கது. வேண்டும் வரம் யாது? கேளுங்கள். என்றார்

மிகவும் நெகிழ்ந்த மார்க்கண்டேயர். தங்கள் தரிசனமே மாபெரும் பேறு. அதற்கு மேலும் என்ன தேவை இருக்கிறது?

தேவாதிதேவரும் காணற்கரிய தாங்கள் என் கண்களுக்குக் காட்சிப் பொருளானீர்.

எந்த மாயையில் இந்த பிரபஞ்சமும் அதன் தலைவரான ப்ரும்மாவும் மயங்குகின்றனரோ, அதைக் காண விரும்புகிறேன். என்றார்.

வித்யாசமான இந்த ஆசையைக் கேட்ட பகவான் புன்னகைத்தார்‌ அவ்வாறே ஆகட்டும் என்று கூறி விடை பெற்றுச் சென்றுவிட்டார். ஏனெனில் பகவான் இருக்கும் இடத்தில் மாயை வர இயலாதல்லவா? அதற்காகக் கிளம்பினார் போலும்.
மார்க்கண்டேயர் தம் ஆசிரமத்திலேயே அமர்ந்து தவத்தைத் தொடர்ந்தார். பகவானின் தரிசனத்தையும், அவரது புன்முறுவல், பேச்சு, நடை உடை பாவனைகள் ஆகியவற்றையே நினைத்துக்கொண்டு மானஸீகமாகப் பூஜை செய்தார்.

சில நேரங்களில் பகவானின் ரூபத்தில் மயங்கி செயல் மறந்து நிற்பார். பின்னர் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவார். இப்படியே காலம் கழித்தார்.

ஒரு நாள் மாலை புஷ்பபத்ரா நதிக்கரையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரும் சுழற்காற்று அடித்தது. இடியும் மின்னலுமாகப் பேரிரைச்சலுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் துவங்கியது.

நதியில் நீர்ச்சுழல் பெருக, நாற்புறமும் நீர் சூழ்ந்தது. பெருங்கடல் மேலேறி வந்ததோ, பூமியே மூழ்குமோ என்னும் அளவிற்கு பெரு வெள்ளமும் அலையும், சுழலுமாக அடித்தது. பெரும் முதலைகளும் நீர் வாழ் பிராணிகளும் அவரை உரசிக்கொண்டு சென்றன.

எங்கு நோக்கினும் நீர் நீர் நீரைத் தவிர வேறொன்றுமே இல்லை. மெல்ல மெல்ல தாவரங்களும், மற்ற ஜீவராசிகளும், அவற்றுடன் தாமும் மூழ்கினார்.

மிகவும் பயந்துபோனார். பெரும் அலைகள் தோன்றி மலைகளும் மூழ்குவதைக் கண்டார்.

மூவுலகங்களும் நீர் சூழ புவி, ஆகாயம், தேவர்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், ஜோதிர் மண்டலம் அனைத்தும் நீரில் மூழ்கின. அப்பேரலைகளுக்கு நடுவில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு மார்க்கண்டேயர் ஒருவரே எஞ்சியிருந்தார்.

அங்கும் இங்கும் அலைந்தார். தம்மைக் காத்துக்கொள்ள வழி தேடினார். பிடிமானம் ஏதும் கிடைக்கவில்லை. விரித்த சடை பறக்க பைத்தியம் போல அரற்றிக்கொண்டு நீரில் திரிந்தார்.

பயங்கரமாகப் பசித்தது. திமிங்கிலங்களும் சுறாக்களும் அவர் மீது வந்து மோதி மிகவும் அடிபட்டது.

ஒன்றும் புரியாமல் மதி மயங்கி அஞ்ஞான இருளில் மூழ்கி, விண்ணுக்கும் மண்ணுக்கும் வேறுபாடு அறியாமல் கலங்கிப்போனார்‌.

ஒரு சமயம் அலைகளால் தூக்கிவீசப்பட்டார். ஒரு சமயம் பிராணிகள் அவரை விழுங்க வந்தன. நடுவில் அவற்றுக்கு ஆகாரமாகி மரணம் தழுவி, மீண்டும் கடலிலேயே விழுந்தார். இப்படியே நூறாயிரம் கோடி வருடங்கள் கடந்தன.

நீரில் சுற்றி சுற்றி அலைந்து கொண்டிருந்த அவர் பல்லாண்டு காலம் கழித்து பூமியில் ஓரிடத்தில் ஒரு திடலைக் கண்டார். அதில் பெரிய ஆலமரம் இருந்தது. நிறைய இலைகளும், தளிர்களும் பழங்களுமாக இருந்தன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Saturday, June 12, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 647

நர நாராயணர்கள் மார்க்கண்டேயர் முன் தோன்றினர்.


ஒருவர் பளீரென்று தங்க நிறத்தில் இருந்தார். மற்றொருவர் கார்மேக வண்ணத்தவர். செவ்வரியோடிய நீண்ட கண்கள், பவித்ரம், முப்புரிநூல், நீண்ட மூங்கில் தண்டம், மற்றும் கமண்டலம், கழுத்தில் தாமரை மணிமாலை, துணிக்குஞ்சலம், ஒளி பெருக்கும் மேனி, நாற்கரங்கள் கொண்ட தோற்றத்தில் இருந்தனர். ஒருவர் மான்தோலும் மற்றவர் மரவுரியும் அணிந்திருந்தனர்.

தவமே உருக்கொண்டதுபோல வந்த அவ்விருவரையும் கண்ட மார்க்கண்டேயர் வேகமாக எழுந்தார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

மேனி சிலிர்த்தது. ஆனந்தக் கண்ணீர் கண்களை மறைத்தது. நாத்தழுதழுக்க ஓடிப்போய் தழுவுவார் போல‌ இருந்தாலும்‌ இரு கரம் கூப்பியபடி வணக்கம் வணக்கம் என்று கூறிக்கொண்டே இருந்தார். வேறெதுவும் பேச நா எழவில்லை.

சற்று நேரம் கழித்து தன்னுணர்வு வந்தவராய் ஓடிப்போய் ஆசனங்கள் இட்டு அமரவைத்து, அர்க்கியம் அளித்து, சந்தனமிட்டு, மாலை அணிவித்து பூஜை செய்தார்.
பின்னர் துதிக்கலானார்.

அற்ப ஜந்துவாகிய நான் தங்கள் பெருமைகளை எவ்வாறு அறிவேன்? எப்படிப் போற்றுவேன்? தங்கள் இயக்கத்திலேயே பிரும்மா உள்பட அனைவரும் வாழ்கின்றனர். உடலின் பிராணனுக்கு ஆதாரம் தாங்களே. பிராணன் இயங்குவதாலேயே மற்ற பொறிகளும் புலன்களும் இயங்குகின்றன.

எவ்வகையிலும் சுதந்திரமற்றதாக ஜீவன் இருப்பினும், மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் தங்களையே போற்றுவோர்க்கு தாங்கள் ஆத்ம பந்துவாயிற்றே.

சுதந்திரமானவர் என்றாலும் எங்கள் அன்பு வலைக்கு அகப்படுகிறீர்கள்.

ப்ரபஞ்சத்தைக் காக்க, மீன், ஆமை, பன்றி போன்ற உருவங்களிலெல்லாம் அவதாரமாகத் தோன்றுகிறீர்கள். இப்போதும் உலக நன்மைக்காக இரு உருவங்கள் எடுத்து வந்திருக்கிறீர். ஒப்பற்ற தலைவராகிய தம்முடைய திருவடிகளை வணங்குகிறேன். தங்கள் திருவடிகளைப் பற்றியவனை எத்தகைய கர்மவினையும் ஒன்றும் செய்வதில்லை.

அனைத்து ஜீவன்களுக்குமான ஒரே பயம் மரணபயம். காலனைக் கண்டு ப்ரும்மாவே பயப்படுகிறார். அவருக்கும் இரண்டு பரார்த்த ஆயுள்தான். அவரால் படைக்கப்பட்ட பஞ்சபூதங்களுக்கும் ஆயுள் உண்டு. அவற்றின் துளிகளால் படைக்கப்பட்ட ஜீவன்களும் பயப்படுகின்றன.

அனைத்து விதமான பயங்களிலிருந்தும் விடுவிப்பது தங்கள் திருவடிகளே ஆகும்.

தங்கள் திருமேனி ஸத்வகுணத்தால் ஆனது. அதை தியானிப்பவர்களுக்கு வைகுண்டம் கிடைக்கிறது. ரஜோகுணமோ, தனோகுணமோ இருப்பவர்களுக்கு தாங்கள் அரிதானவர்.

எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்தவரே. அனைத்து ஜீவராசிகளின் ஸ்வரூபமானவரே. உலகின் குருவே. உயர்வுக்கெல்லாம் உயர்வானவரே. தூய்மையே உருவானவரே. வேதங்களின் தலைவரே. தங்களை வணங்குகிறேன்.

தங்களைப் பற்றிய உண்மையான அறிவை வெளிக்கொணரும் உபாயம் வேதங்களில் உள்ளது. ஆனால், ப்ரும்மா முதலானோரும் தெளிவின்றி தம்மை அறிய இயலாமல் மயங்குகின்றனர்.
தங்களின் உண்மை நிலையை உணராத மதவாதிகள் எவ்வெந்த வழியிலெல்லாம் தம்மை வழிபடுகிறார்களோ அவ்வாறாகவே தாங்கள் குணம், உருவம் மற்றும் வைபவங்களைத் தாங்கி அவர்களுக்கு வெளிப்படுகிறீர்கள்.

உண்மையில் அனைத்தும் தங்கள் ஸ்வரூபத்தின் ஒரு சிறு தோற்றமே. அப்படிப்பட்ட ஆதார புருஷரான புருஷோத்தமரான தம்மை வணங்குகிறேன்.
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 10, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 646

மார்க்கண்டேயரைக் கண்டு ப்ரும்மா முதலான அனைவரும் வியந்தனர்.


டையறாத தவம், கர்மாக்கள் மற்றும் அனுஷ்டாங்களால் உள்ளத்தூய்மை பெற்று பகவான் நாராயணனை ஆராதிக்கத் துவங்கினார் மார்க்கண்டேயர்.


யோக சாதனைகளால் பகவத் ஸ்வரூபத்தில் நிலை பெற்று ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார்.
ஏழாவது மன்வந்தரத்தில் இந்திரனுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. அவர் இந்திர பதவிக்கு ஆசைப்படுகிறாரோ என்றெண்ணி தவத்தைக் கெடுக்க முயற்சி செய்தான்.

மார்க்கண்டேயரின் தவத்தைக் கலைக்க கந்தர்வர்களையும், தேவமாதர்களையும் மன்மதனுடன் அனுப்பினான்.

மார்க்கண்டேயரின் ஆசிரமம் இமயத்திற்கு வடக்கே புஷ்பத்ரா நதிக்கரையில் சித்ரா என்ற பாறையின் அருகில் இருந்தது. இந்த தேவக்கூட்டம் முழுவதும் அங்கு வந்து இறங்கிற்று.

மிகவும் புனிதமான அந்த ஆசிரமத்தில் ஏராளமான முனிவர்கள் கூட்டம் கூட்டமாக வசித்தனர்.

தூய்மையான வற்றாத நீர்நிலைகளும், நாற்புறமும் சூழ்ந்த உயர்ந்த மரங்களும், வண்டுகள், பஞ்சம ஸ்வரத்தில் கூவும் குயிலினங்கள், தோகை விரித்தாடும் மயில்கள், ஏராளமான பறவைகள் என்று அந்த ஆசிரமம் மிகவும் அழகாக இருந்தது.

மன்மதன் அங்கு தன் வேலையைத் துவங்க அவ்விடம்‌ அதி சௌந்தர்யமாக மாறிற்று.

தவத்தில் அமர்ந்திருந்த மார்க்கண்டேயர் அக்னி பகவானே எதிர் வந்ததுபோல் மிகவும் ஒளியுடன் திகழ்ந்திருந்தார்.

கந்தர்வப் பெண்களும் மிக இனிமையாகப் பாடத் துவங்கினர்‌. வீணை, மிருதங்கம், தபேலா ஆகியவை முழங்கின.

அப்ஸரப்பெண்கள் பூப்பந்து விளையாடிக்கொண்டு முனிவர் முன் செல்ல, மன்மதன் மலர் அம்பை எய்தினான்.

ஆனால் அவரது ஒளியின் முன் அனைத்தும் வீணாயின. மலர் அம்பு கருகி விழுந்தது.

அனைவரும் பயந்துபோயினர். மார்க்கண்டேயர் கண்விழித்தால் சபிக்கக் கூடும் என்று கண் முன் நில்லாமல் ஓடிவிட்டனர்.

மன்மதனின் தோல்வியைக் கேட்டு இந்திரன் திகைத்துப்போனான்.
முனிவரோ நிஷ்டையின் மூலம் பகவானை மனத்தில் நிலையாக நிறுத்த முனைந்து கொண்டிருந்தார்.

அவர் மீது அதீத கருணை கொண்ட பகவான் நரன், நாராயணன் என்று இரண்டு உருவங்கள் எடுத்து ரிஷிகளாக அவர் முன் தோன்றினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாஸத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Saturday, June 5, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 645

ஒருவன் விழிப்பு, தூக்கம், கனவு ஆகிய நிலைகளிலிருந்து விடுபட்டு அனைத்திற்கும் காரணம் மாயை என்றறிந்து, ஆத்ம விசாரம் செய்து முக்திப் பாதையில் செல்கிறான். அப்போது தத்வமஸி முதலிய வாக்கியங்களால் ஞானத்தை அடைகிறான். அதன் பின் கர்ம வாஸனைகள் அவனைத் தீண்டுவதில்லை.

பத்து அல்லது ஐந்து என்று புராண இலக்கணங்கள் வகுக்கப்படுகின்றன.

ஐந்து இலக்கணங்கள் கொண்டவை உபபுராணங்கள் என்று நிர்ணயம் செய்யப்படுகின்றன.
மொத்தம் 18 மஹா புராணங்களும், 18 உபபுராணங்களும் உள.
ப்ரம்ம புராணம்
பத்ம புராணம்
வைஷ்ணவ புராணம்
சிவ புராணம்
லிங்க புராணம்
கருட புராணம்
நாரத புராணம்
அக்னி புராணம்
ஸ்காந்த புராணம்
பவிஷ்ய புராணம்
ப்ரும்மவைவர்த்தக புராணம்
மார்க்கண்டேய புராணம்
வாமன புராணம்
வராஹ புராணம்
மத்ஸ்ய புராணம்
கூர்ம புராணம்
ப்ரும்மாண்ட புராணம்
ஸ்ரீமத் பாகவத புராணம்
ஆகியவை மஹா புராணங்கள்.
ஸனத்குமார புராணம்
கபில புராணம்
மானவ புராணம்
ப்ருஹன் நாரதீய புராணம்
வருண புராணம்
கலிக புராணம்
ந்ருஸிம்ஹ புராணம்
ஸௌர புராணம்
பராசர புராணம்
விஷ்ணு தாமோதர புராணம்
ஆதித்ய புராணம்
வஸிஷ்ட புராணம்
தேவி புராணம்
துர்வாஸ புராணம்
மஹேஸ்வர புராணம்
சம்ப புராணம்
தேவி பாகவதம்
சிவ புராணம்
ஆகியவை உபபுராணங்கள்.

வியாஸரின் சீடர்கள் இந்தப் புராணங்களைக் கற்று அவர்களது பரம்பரை மூலம் பரப்பிவருகிறார்கள். இதைக் கேட்பவர்களுக்கு ப்ரும்மதேஜஸ் வளரும் என்றார் ஸூதர்.

சௌனகர் மீண்டும் கேட்டார்.
மிருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி என்று கேள்வியுற்றிருக்கிறேன். ப்ரளய காலத்தில்கூட அவர் மிஞ்சியிருந்தாராமே. அதெப்படி?

அவர் இந்தக் கல்பத்தில் எங்களுடன்தான் பிறந்தார். நாங்கள் பார்த்தவரை ப்ரளயம் எதுவும் இதுவரை நிகழவில்லை.

அப்படியிருக்க அவர் ப்ரளயத்தில் மிஞ்சி, ஆலிலைமேல் பாலகனாக பகவத் தரிசனம் பெற்றாராமே. அது எங்ஙனம்? தாங்கள் அறியாத விஷயமே இல்லை. தயவு செய்து விளக்குங்கள். என்றார்.

ஸூதர் மிகவும் மகிழ்ந்தார்.
மிகவும் பொருத்தமான கேள்வி. பகவானின் லீலைகளைப் பேசுவதால் கலியின் கொடுமை விலகி ஓடும்.

மிருகண்டு முனிவரின் தவப் புதல்வர் மார்க்கண்டேயர்.
என்று துவங்கினார்.

மார்க்கண்டேயர் நியமங்களின்படி வேதங்களைக் கற்று ப்ரும்மயக்ஞம் முதலானவற்றைத் தவறாமல் செய்துவந்தார்.

வாழ்நாள் முழுவதும் ப்ரும்மச்சர்யத்தில் இருப்பதாக உறுதி பூண்டு கழுத்தில் ருத்ராக்ஷம், மான்தோல், தர்பை ஆகியவற்றை அணிந்துகொண்டார்.

அக்னி பூஜைகள், குரு வழிபாடு, சூரிய நமஸ்காரம், பதினாறு உபசாரங்களுடன் கூடிய மானஸ பூஜை இவற்றோடு ஆத்மவிசாரமும் செய்துவந்தார். காலையிலும் மாலையிலும் மௌனமாக பிக்ஷை ஏற்று வருவார். குருவிடம் சமர்ப்பித்து விட்டு அமைதியாக இருப்பார். குரு அனுமதித்தார் உணவு ஏற்பார். இல்லையேல் உபவாசம். இவ்வாறு அவரது வாழ்க்கை தவம், வேதம் ஓதுவது என்று வெகு காலம் ஓடிற்று. தன் பக்தியாலும் தவத்தாலும் காலனையும் வெற்றி கொண்டுவிட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..