Sunday, August 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 532

ஒரு சமயம் ப்ரளய காலத்தில் தோன்றுவதுபோல் மிகப்பெரிய சூரிய கிரஹணம் ஏற்பட்டது. 

வானியல் சாஸ்திரத்தின்படி கணித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கிரஹணங்களை மிகத் துல்லியமாக எழுதிவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

 கிரஹண காலத்தில் செய்யப்படும் புண்ணிய கர்மாக்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் அதிகம். அதிலும் அந்த புண்ய கர்மாவை ஒரு புண்ய ஸ்தலத்தில் போய் செய்தால் இன்னும் பல மடங்கு பலன் கிடைக்கும்.

கிரஹணத்தைப் பற்றி முன்னமேயே அறிந்த மக்கள் பலர் அக்காலத்தில் புண்ணிய கர்மாக்களைச் செய்ய விரும்பி ஸமந்த பஞ்சகம் எனப்படும் குருக்ஷேத்ரத்தில் கூடினர்.

ஒரு சமயம் புவியில் க்ஷத்ரியர்களே இல்லாதவாறு செய்வேன் என்று சபதமிட்ட பரசுராமர் அரசர்களின் குருதியால் குருக்ஷேத்ரத்தில் உள்ள குளங்களை நிரப்பினார்.

பின்னர், பகவானாகவே இருந்தாலும் உலகிற்கு வழி காட்டுவதற்காக, இந்த க்ஷேத்ரத்தில் பாவங்கள் நீங்க யாகம் செய்வதுபோல் செய்தார்.

தீர்த்த யாத்திரையாக அவ்விடத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடினார்கள். அக்ரூரர், வசுதேவர், உக்ரஸேனர், கதன், ப்ரத்யும்னன், சாம்பன் ஆகியோரும் அங்கு வந்தனர். அநிருத்தனும் க்ருதவர்மாவும் துவாரகையைக் காப்பதற்காகத் தங்கி விட்டார்கள்.

யாதவர்கள் அனைவரும் பல்வேறு வாகனங்களிலும், குதிரை, யானை, தேர் முதலியவற்றிலும் குடும்பங்களாக வந்து கூடினர்.

அனைவரும் அங்கு நீராடி உபவாசங்கள் இருந்து அந்தணர்களுக்கு தானம் செய்தனர். 

பரசுராமர் வெட்டிய குளங்களில் நீராடிய யாதவர்கள் அனைவரும் செய்த ஒரே பிரார்த்தனை, கண்ணனிடம் எங்களுக்கு பக்தி உண்டாக வேண்டும் என்பதே.

கண்ணனும் பலராமனும் எல்லா மனைவிகளுடனும் வந்திருந்தனர்.

மத்ஸ்யம், கோசலம், உசீனரம், விதர்ப்பம், குரு, ஸ்ருஞ்ஜயம், காம்போஜம், கேகயம், மத்ரம், குந்தீ, ஆனர்த்தம் ஆகிய தேசத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். பலரும் தம்மைச் சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து கட்டித் தழுவிக்கொண்டனர். 

வ்ருஷ்ணிகள் வெகுநாள்களாகக் காணாமல் இருந்த யாதவர்களையும் நந்தர், யசோதா மற்றும் கோப கோபியர்களைக் கண்டனர்.

பிரிந்தவர் கூடினால் பேச இயலுமா? இறுகக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கி பேச்சற்று நின்றனர். சிறுவர்கள் முதியவர்களை வணங்கினர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து..
வேறென்ன?
கண்ணனைப் பற்றிப் பேசத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment