Thursday, July 8, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 660

ஸ்ரீ ஸூத பௌராணிகர் மேலும்‌ கூறலானார்.

ஆத்மானந்தத்திலே யே மூழ்கித் திளைத்திருக்கும் ஸ்ரீசுகமுனிவரை வணங்குகிறேன். பற்றற்று நீக்கமற நிறையும் அத்வைதமான பரம்பொருளில் கருத்தூன்றி நிற்பதால் உலகம் வேறு தாம் வேறு என்ற எண்ணம் அற்றவர். எனினும் ஜீவராசிகளின் மேலுள்ள கருணைப் பெருக்கால் இறையன்பை உணர்த்தும் இப்புராணத்தை நமக்கு அருளியிருக்கிறார். அனைத்துப் பாவங்களையும் போக்கவல்ல அந்த வியாசரின் மகனுக்கு என் வணக்கங்கள்.
ப்ரும்மா, இந்திரன், வருணன், மருத்கணங்கள் மற்றும் அனைத்து தேவர்களாலும் துதிக்கப்படும் பகவானை வணங்குகிறேன். ரிஷிகளும் முனிவர்களும் வேதங்கள், அதன் உபாங்கங்கள், மற்றும் உபநுஷத்துக்களால் எந்த பகவானைப் பாடுகின்றனரோ அந்த பகவானை வணக்குகிறேன்.
மனத்தை ஒருமுகப்படுத்தி சிறிது அசையாமல் எந்த பகவானை யோகிகள் தம் இதயத்தில் நிறுத்தி வழிபடுகின்றனரோ அந்த பகவானை வணங்குகிறேன்.
எவ்வளவு முயன்றும் எவராலும் யாருடைய உண்மை ஸ்வரூபத்தை இதுதான் என்று குறிப்பிட்டு அறிய முடியவில்லையோ அந்த பகவானை வணங்குகிறேன்.
பாற்கடல் கடையப்பட்டபோது, மந்தரமலை கடலில் அமிழ்ந்துபோகத் துவங்கிற்று. அதை பகவான் கீழிருந்து கூர்ம ரூபம் எடுத்து தாங்கினார். சுழலும் மாமலையின் கற்களின் உராய்வு முதுகு சொறிந்துவிடுவதுபோல் இருந்ததால் அவருக்கு உறக்கம் வந்தது. உறக்கத்தில் அவரது மூச்சு சற்று வேகமாக வெளிவரவே, அதனால் கடல் கொந்தளிப்படைந்து கரைகள் உடைந்து கலங்கிற்று. அவ்வேகமான மூச்சுக் காற்று நம்மை எப்போதும் காக்கட்டும்.
மேலே, புராணங்களிலுள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை, ஸ்ரீ மத் பாகவதத்தில் கூறப்படும் முக்கியமான விஷயம், அதன் பயன், தானம் செய்யும் முறை, பெருமைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
ப்ரும்மபுராணத்தில் 10000 ஸ்லோகங்களும், பாத்மபுராணத்தில் 55000 ஸ்லோகங்களும், ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் 24000 ஸ்லோகங்களும், ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் 18000 ஸ்லோகங்களும், நாரத புராணத்தில் 25000 ஸ்லோகங்களும், அக்னி புராணத்தில் ஸ்லோகங்களும் உள.
பவிஷ்ய புராணத்தில் 14500, ப்ரும்ம வைவர்த்த புராணத்தில் 18000, லிங்க புராணத்தில் 24000, வராஹ புராணத்தில் 24000, ஸ்காந்த புராணத்தில் 81100, வாமன புராணத்தில் 10000, கூர்ம புராணத்தில் 17000, மத்ஸ்ய புராணத்தில் 14000, கருட புராணத்தில் 19000, ப்ரும்மாண்ட புராணத்தில் 12000 என்பவை ஸ்லோகங்களின் எண்ணிக்கை.
இந்த பாகவதம் முன்பு, பகவானால் ப்ரும்மதேவருக்குக் கூறப்பட்டது. இந்நூல் முழுவதுமே பக்திக் கதைகளும், வைராக்யம் ஊறும் கதைகளுமாக விளக்கப்பட்டுள்ளன.
பகவானின் உண்மை ஸ்வரூபமே இந்நூலின் கருப்பொருள். முக்தியே நூலின் பயன்.
புரட்டாசி மாதத்தில் தங்க சிம்மாசனத்தில் இந்நூலை வைத்து தானம் செய்பவர் உயர்ந்த நிலையைப் பெறுகிறார்.
இந்த பாகவத புராணம் உலகில் ப்ரகாசிக்கும் வரையே மற்ற புராணங்களும் ஒளிரும். ஸர்வ வேதாந்த ஸாரம் என்று போற்றப்படும் இப்புராணத்தில் ஒரு முறை ஈடுபடுபவர் வேறெந்த நூலையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.
ஸ்ரீ மத் பாகவதம் மிகவும் தூயமையானது. விஷ்ணு பக்தர்களுக்கு மிகவும் பிரியமானது. மாயையின் கலப்படமே இல்லாதது.
இதைப் படிப்பவர், கேட்பவர், அதிலுள்ள கதைகளைச் சிந்திப்பவர் அனைவரும் சிறந்த பக்தியைப்‌பெற்று முக்தியடைகிறார்கள்.
ஸர்வ சாட்சியான,
ஸத்ய ஸ்வரூபனான பகவானுக்கு நமஸ்காரம்!
பரீக்ஷித் மன்னனுக்கு ஸ்ரீ மத் பாகவதத்தை உபதேசம் செய்து அவரை முக்தி பெறச் செய்த ஸ்ரீசுகாசார்யாருக்கு நமஸ்காரம்!
தோன்றிய காலம் முதல் இன்று வரை பாராயணம் செய்தும், ஸ்ரீ மத் பாகவதக் கதைகளைக் கூறியும் மக்களை உய்வித்து, இன்று நம் கைகளில் தவழும்படி செய்திருக்கும் ஸ்ரீ ஸத்குருநாதர் வரை அத்தனை கோடி மஹான்களுக்கும் கோடானு கோடி நமஸ்காரம்!
நாம ஸங்கீர்த்தனம் யஸ்ய
ஸர்வ பாப ப்ரணாசனம்
ப்ரணாமோ துக்க ஶமன:
தம் நமாமி ஹரிம் பரம்||
கூறிய மாத்திரத்தில் பாவங்களைக் களையும் நாமங்களை உடையவரும், சரணாகதி செய்த மாத்திரத்தில் துன்பங்களைக் களைந்து அமைதி நல்கும் திருவடிகளை உடையவருமான பகவான் ஸ்ரீ ஹரியை வண்க்குகிறேன்.
ஹரி: ஓம்.
தத் ஸத்||
ஸ்ரீமத் பாகவத புராணம் நிறைவுற்றது.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Wednesday, July 7, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 659

ஸூதர் கூறினார். இந்த ஸ்த்ர யாகத்தின் இடைவெளியில் நீங்கள் கேட்டவாறே பகவானின் திருவிளையாடல்கள், அவதாரங்கள், அவற்றின் பயன் அனைத்தையும் நான் அறிந்தவரை கூறிவிட்டேன்.

யார் ஒருவர் இடறி விழும்போதோ, துன்பத்தின்போதோ, தும்மல் வரும்போதோ, தன்னிலை மறந்த நிலையிலோ, ஹரி ஹரி என்று கூறுவாரோ அவர் அனைத்துப் பாவங்களினின்றும் அக்கணமே விடுபடுகிறார்.
பகவானின் திருநாமங்கள் இடம், பொருள், காலம் என்ற பேதங்கள் அற்றது. அவற்றை வாயாரப் பாடினாலோ கேட்டாலோ பகவான் இதயத்தில் குடியமர்ந்துவிடுகிறார்‌. காரிருளைச் சூரியன் சிதறடிப்பது போல அவரது துன்பங்களைச் சிதறடிக்கிறார்.
பகவானின் திருநாமங்களை உச்சரிக்காத நாவிலிருந்து வரும் சொற்கள் எவ்வளவு பொருள் பொதிந்ததாயினும் அவை சாரமற்றவை.
ஆடம்பரங்கள் நிறைந்த அவற்றில் அழகில்லை. எனவே வீண் சொற்களாகின்றன. பகவத் குணத்தை உணர்த்தும் சொற்களே ஆத்ம அனுபவத்தையும், சாந்தியையும் தரக்கூடியவை.
அச்சொற்களே இனிமையானவை, மனத்தை மயக்கக்கூடியவை. ஒவ்வொரு முறை சொல்லும்போதும் கேட்கும்போதும் புதிய இனிய சுவையைத் தரக்கூடியவை‌. அவற்றைக் கேட்பதால் எல்லையற்ற கவலை எனும் வலை அறுபடும். நிலையான ஆனந்தம் கிடைக்கும்.
சொல்லழகும், கருத்தழகும், நடையழகும் இருப்பினும் உயிரற்ற சிலையால் யாது பயன்? ஜீவன் உள்ளது பகவன் நாமமே.
பகவத் குணங்களைச் சொல்லும் சொற்களில் எந்த அழகும் இல்லையென்றாலும் அவற்றைத் தான் சான்றோர் கேட்பர். ஏனெனில் அவை பாவங்களைச் சுட்டெரித்து நிம்மதி தருபவை.
பகவத் பக்தி இல்லாத ஞானமே ஆகிலும் அதில் அழகேது? எவ்வளவு உயர்ந்த கர்மா ஆகிலும் அது பகவானுக்கு அர்ப்பணம் செய்யப்படவில்லை எனில் அதன் பயன் மீண்டும் கர்மச்சுழலில் மாட்டிவைக்கும். அதை அடியார் ஏற்கமாட்டார்.
வர்ணாசிரமம், தர்மங்கள், அனுஷ்டானங்கள், ஒழுக்கம், தவம், நற்கல்வி, நற்குடிப்பிறப்பு அனைத்தும் புகழையும், பொருளையும் ஈட்டித் தரலாம். ஆனால், பகவன் நாமமோ, பக்தியோ இல்லாத எவ்வித செயலும் பயனைத் தராது. இறைநாமம் இறைவனின் திருவடிக் கமலங்களில் நீங்காத அன்பைப் பெருக்கும். அது ஒன்றே அத்தனை பேதங்களையும்‌, இடர்ப்பாடுகளையும், பாவங்களையும் களைந்து‌ மனத்தூய்மை தரும். பகவானைப் பற்றிய உண்மை அறிவையும் இறைநாமமே பெற்றுத்தரும்.
ஹே! பெரியோர்களே! நீங்கள் அனைவரும்‌ பாக்யசாலிகள். தினமும் இடையறாமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை உள்ளத்தில் நிறுத்தி வழிபடுகிறீர்கள்.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திற்கு கங்கைக் கரையில் இந்த ஸ்ரீ மத் பாகவதக் கதைகளைக் கூறினார். அப்போது ரிஷிகளும், பெரியோருமாக 88000 பேர் அமர்ந்து கேட்டனர். நானும் அவர்களிடையே அங்கு அமர்ந்து கேட்டேன். இப்போது நீங்கள் அதை நினைவுபடுத்திக் கேட்டு எனக்குப் பெரிய உதவி செய்தீர்கள்.
பகவானின் அனைத்து லீலைகளையும் கேட்கவும், நினைக்கவும், பாடவும் பேறு பெற்றேன்.
யார் தினமும் மன ஒருமையுடன் ஒரு நொடியாவது பகவானின் பெருமைகளைக் கேட்கிறாரோ அல்லது பிறரைக் கேட்கச் செய்கிறாரோ அவர் தன் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கிக்கொள்கிறார்.
ஏகாதசியிலும் துவாதசியிலும் இக்கதைகளைக் கேட்பவர் நீண்ட ஆயுளைப் பெறுகிறார்.
புலனடக்கத்துடன் உபவாசம் இருந்து படிப்பவன் முன் செய்த அத்தனை பாவங்களையும் தொலைக்கிறான்‌. பாவ எண்ணங்களும் அவனை விட்டு விலகுகின்றன.
புஷ்கரம், மதுரா, துவாரகை முதலிய புண்ணியத் தலங்களில் இந்த பாகவதத்தைப் பாரயணம் செய்து கேட்பவருக்கு சம்சார பயம் அறவே விடுபடுகிறது.
இக்கதையைக் கேட்பதால் தேவ, பித்ரு, ரிஷி கடன்கள் தீர்ந்துபோகின்றன. சித்தர்கள், மனுக்கள், அரசர்கள் அனைவரும் மகிழ்கின்றனர்.
சதுர் வேதங்களையும் ஓதிய பலன் இந்தக் கதைகளைக் கேட்பதாலேயே கிடைத்து விடுகிறது.
நியமத்தோடு படிப்பவர் பரமபதத்தை அடைகிறார்.
எத்தனையோ புராணங்கள் இறைவனைப் பாடினாலும் இடையீடே இன்றி ஒவ்வொரு பதத்திலும் இறைவனின் புகழ் பாடப்படுவது ஸ்ரீ மத் பாகவதத்தில் தான். ஒவ்வொரு சொல்லும், பகவான் ஹரியின் ரூபமே.
ஸத் சித் ஆனந்த ஸ்வரூபரான அந்த பகவானை வணங்குகிறேன்.
எந்த பகவான், தன் ஸ்வரூபத்திலேயே ப்ரக்ருதி, புருஷன், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஒன்பது சக்திகளையும் ஒன்றிணைத்து தன் சங்கல்பத்தினாலேயே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்து தானும் அந்தர்யாமியாக அதன் ஒவ்வொரு துளியிலும் வீற்றிருக்கிறாரோ, எவர் ஞானத்தின் ஆதாரமோ, எவருடைய பரமதம் அவரையே அனுபவத்தில் உணர்த்துகிறதோ, எவர் தேவாதி தேவரோ, எவர் ஆதி அந்தமற்றவரோ அந்த பகவானை வணங்குகிறேன்.
என்றார்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Sunday, July 4, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 658

ஸ்ரீமத் பாகவத ஸங்க்ரஹம் - 3

ஒன்பதாம் ஸ்கந்தத்தில் பரசுராமாவதாரம், இளையின் மகன் புரூரவஸ், யயாதி, நகுஷன், யதுவம்சம் ஆகிய கதைகளும் விளக்கப்படுகின்றன.
பத்தாவது ஸ்கந்தம் முழுவதும் பகவான் கண்ணனின் அவதாரக் கதைகளைக் கூறுவதாகும். பிறப்பு, நந்தன் வீட்டிற்கு மாற்றப்படுதல், பல்வேறு அசுரர்களுக்கு முக்தி அளித்தது, எண்ணற்ற லீலைகள், காட்டுத்தீயிலிருந்து கோபர்களைக் காத்தது, காளியனை அடக்கியது, மலைப்பாம்பிடமிருந்து நந்தனைக் காப்பாற்றிய கதை, கோபிகளின் காத்யாயனி விரதம், கண்ணன் அவர்களுக்கருளிய விதம், யக்ஞ பத்னிகளுக்கு அருள் செய்தது, கோவர்தன மலையைத் தூக்கிய கதை, கோவிந்த பட்டாபிஷேகம், ராஸக்ரீடை, சங்கசூடன், அரிஷ்டன், கேசி ஆகியோரின் வதம், அக்ரூரர் வருகை, கண்ணனும் பலராமனும் மதுரா செல்லுதல்.
குவலயாபீடம், மல்லர்கள், மற்றும் கம்ச வதம் ஆகிய கதைகள், சாந்தீபனியிடம் கல்வி பயின்றது, அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்ட கதை,
கண்ணன் உத்தவனோடும் பலராமனோடும் மதுராவில் நிகழ்த்திய பல இனிய லீலைகள், ஜராஸந்தனுடன் பன்முறை யுத்தம் செய்து பூபாரத்தைக் குறைத்தது, காலயவனனை முசுகுந்தரைக் கொண்டு வதம் செய்வித்தது, துவாரகா நிர்மாணம், அனைவரையும் ஒரே இரவில் அங்கே குடியமர்த்தியது.
ருக்மிணியை வென்று அழைத்துவந்து திருமணம் செய்தது, அஷ்ட மஹிஷிகளுடன் திருமணம், தேவலோகத்திலிருந்து கற்பகத் தரு, பாரிஜாத மலர் ஆகியவற்றை எடுத்துவந்தது,
பாணாசுர யுத்தம், அப்போரில் பரமேஸ்வரனைக் கொட்டாவி விடுமாறு செய்து அஸ்திரம் விட்டு, பாணாசுரனின் கரங்களை அறுத்தது.
ப்ராக்ஜோதிஷபுரத்தின் அரசனான நரகாசுரனின் வதம், பதினாயிரம் கன்னிகைகளை சிறை மீட்டு விவாஹம் செய்தது. சிசுபாலன், பௌண்ட்ரகன், சால்வன், தந்தவக்த்ரன், சம்பராசுரன், த்விவிதன், பீடன், முரன், பஞ்சஜனன் ஆகியோரின் வீரம், பகவான் அவர்களை அலட்சியமாக வதம் செய்த கதைகள், காசியை எரித்த கதை, மஹாபாரதப் போர் நிகழ்த்தி பூமியின் பாரத்தைக் குறைத்த லீலை ஆகியவை விளக்கமாகக்‌ கூறப்படுகின்றன.
பதினோராவது ஸ்கந்தத்தில் பகவான் அந்தண சாபத்தைக் காரணமாக வைத்து பல்கிப் பெருகி நின்ற யதுவம்சத்தை அழித்த கதை, உத்தவனுக்கும் கண்ணனுக்கும் நிகழ்ந்த உரையாடல். அதில் உண்மையான ஞானம், பக்தி, வாழ்வியல் நெறி, கண்ணன் பூவுலகை நீத்தது ஆகியவை கூறப்படுகின்றன.
பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் யுகங்களின் லட்சணங்கள், அவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலியுகம் பற்றிய விவரணம், நால்வகை பிரளயங்கள், மூன்றுவிதமான ச்ருஷ்டிகள், பரீக்ஷித் உடலைத் துறத்தல், வியாஸர் வேதங்களைப் பிரித்தல், மார்க்கண்டேயருக்கு மாயையின் தரிசனம், பகவானின் அங்கங்கள், உபாங்கங்கள், சூரிய பகவானின் கணங்கள் ஆகியவை விளக்கப்பட்டன.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Saturday, July 3, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 657

ஸ்ரீமத் பாகவத ஸங்க்ரஹம் - 2
ஐந்தாவது ஸ்கந்தம் ப்ரியவுரதன் சரித்ரம், நாபி, ரிஷபதேவர், பரதர் ஆகியோரின் புண்ணியக் கதைகளைப் பேசுகிறது. மேலும் புவன கோச வர்ணனம் அதாவது ககனமுட்டைக்குள் விளங்கும் தீவுகள், வர்ஷங்கள், கடல்கள், குலபர்வதங்கள் (ப்ரபஞ்ச எல்லைகளாக நிற்கும் மாபெரும் மலைகள்) மகாநதிகள் அவற்றின் அளவு, காலம், தொலைவு, அந்தந்த இடத்தின் மக்கள், அங்கு வழிபடப்படும் பகவானின் அம்சம், மற்றும் பாதாளம், ஸ்வர்கம், நரகம் முதலிய லோகங்களின் விவரங்களும் ஐந்தாம் ஸ்கந்தத்தில் அடங்கும்.
ஆறாவது ஸ்கந்தம் ஸ்ரீ மத் பாகவத ரத்ன மாலையின் பதக்கம் போன்றது‌. இதில் தக்ஷனின் பிறப்பு, அவனது மகள்களின் வம்சங்கள், விருத்திராசுரன் கதை, அவன் முக்தியடைந்த விதம், அஜாமிளனின் கதை ஆகியவை இந்த ஸ்கந்ததில் விளக்கப்படுகின்றன.
ஏழாம் ஸ்கந்தம் முழுவதும் பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான பிரஹலாதனுக்காக ஒதுக்கப்பட்டது. ஹிரண்யகசிபுவின் விரிவான கதை, ப்ரஹலாதனின் குணநலன்கள், வாழ்க்கை, நரஸிம்மாவதாரம் ஆகியவற்றைச் சுவைக்கலாம்.
எட்டாவது ஸ்கந்தம் கஜேந்திர ஆழ்வாரின் சரித்திலிருந்து துவங்குகிறது.
மன்வந்தரங்களின் கதை, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் எடுத்த அவதாரங்கள், ஹயக்ரீவர், கூர்மாவதாரம், தன்வந்த்ரி, மத்ஸ்யாவதாரம், வாமனாவதாரம், பாற்கடல் கடைதல், தேவாசுர யுத்தம், ஆகியவை எட்டாவது ஸ்கந்தத்தில் கூறப்படுகின்றன.
ஒன்பதாவது ஸ்கந்தத்தில் முக்கியமாக விளக்கப்படுபவை ரகு வம்சத்து அரசர்களின் கதைகள் ஆகும். இக்ஷ்வாகு, அவனது வம்சம், இளை, தாரை, சூரிய வம்சக் கதைகள், சுகன்யாவின் கதை, சர்யாதி, ககுத்ஸ்தன், நிருகன், சசாதன், கட்வாங்கர், மாந்தாதா, சௌபரி, சகரன், ஸ்ரீ ராமாவதாரம், நிமி, ஜனக குலம் ஆகியவை விளக்கப்படுகின்றன.

#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.