Monday, December 31, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 186 அஜாமிளன் - 4

பரீக்ஷித் கேட்டான்
ரிஷியே! அனைத்து ஜீவராசிகளும் யமதர்மராஜனின் வசத்தில் இருக்கின்றன. அப்படி இருக்க அவரது தூதுவர்களைத் திருப்பி அனுப்பி யமதர்மராஜனின் கட்டளையை விஷ்ணுபார்ஷதர்கள் அவமதித்தனரே. அந்த யமனின் தூதுவர்கள் எல்லாவற்றையும் கூறியபின் என்ன நடந்தது?

ஸ்ரீ சுகர் கூறினார்
யமதூதர்கள் ஸம்யமனி பட்டணம் சென்று யமதர்மராஜனிடம் முறையிட்டார்கள்.

ஜீவனைக் கொண்டுவராமல், வெறும் கையோடு வந்த தூதர்களை விசாரித்தார் தர்மராஜன்.

எங்கே ஜீவன்?

அதைக் கொண்டு வர முடியவில்லை மஹாராஜா..

ஏன்?

அவன் ஒரு கூச்சல் போட்டான். அதன் பிறகு அவன் உயிரை எடுக்க முடியவில்லை.

நாம் போகும் இடத்தில் வரவேற்பார்களா? ஜீவன் கூச்சலிடும். சுற்றி இருப்பவர்கள் அரற்றுவார்கள். அதற்கெல்லாம்‌ பயந்து ஜீவனை எடுக்காமல் வந்தால், எதற்கு உங்களுக்கு இங்கே வேலை?

இல்லை மஹாராஜா. அவன் வேறு விதமாய்க்‌ கூச்சலிட்டான்.
எப்படி?

நாராயணா.. என்று கூச்சலிட்டான். அதைக் கேட்டு நான்குபேர் வந்தனர். அவன் ஜீவனை எடுக்கக்கூடாதென்று தடை செய்தனர்
.
தர்மராஜனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. என்ன சொன்னான்? என்ன சொன்னான்?

நாராயணா என்று சொன்னான். சட்டென்று நெகிழ்ந்துபோனார் யமன்.

கட்டளையை நிறைவேற்றாமல் வந்ததற்கு தண்டனைகிடைக்கும் என்று பயந்த தூதர்களுக்கு தைரியம்‌ வந்தது.

மஹாராஜா..

உலகில் ஜீவன்களின் பாவ புண்யங்களை விசாரித்து பலன் அளிக்கும் அதிகாரிகள் எத்தனை பேர்?

ஒருவருக்கு மேற்பட்ட அதிகாரிகள் இருந்தால் நடைமுறைகள் மாறாதா? தண்டனைகளும் மாறும்‌ என்றால், எவருக்கும் மரியாதை இருக்காதே.தாங்கள் ஒருவரே அனைத்திற்கும் தலைவர் என்று நினைத்தோமே.

இதுவரை தங்கள்‌கட்டளையை எவரும் அவமதித்ததே இல்லை. ஆனால், இன்று நான்கு சித்த புருஷர்கள் வந்து தங்கள் கட்டளையை மீறி ஜீவனை விடுவித்தனரே.

ஒரு பாவியை விடுவிக்கும் அளவிற்கு அதிகாரம்‌ பெற்ற அவர்கள் யார்?
இதில் பெரும் வியப்பு என்னவெனில், அந்த அஜாமிளன் தன் மகனை நாராயணா என்றழைக்கும்போதே அபயம் என்று‌ கூறிக்கொண்டு வேகமாக வந்துவிட்டனர்.

தூதர்கள் இப்படிக் கேட்டதும், யமதர்மராஜன் மிக்க மகிழ்ச்சியடைந்தார். பகவானின் திருவடித் தாமரைகளை த்யானித்தார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. மேனி சிலிர்க்கக் கூறலானார்.

தூதர்களே! எனக்கும் மேல் இந்த ப்ரபஞ்சத்திற்கு ஒரு அதிகாரி இருக்கிறார். துணியில் குறுக்கும் நெடுக்குமாக இழைகள் இருப்பதுபோல் இந்த ப்ரபஞ்சம் அவரிடம் வியாபித்திருக்கிறது. அனைத்துமே அவரது ஆளுமைக்குக் கீழ்ப்பட்டதே.

இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் அவருக்கு பயந்தே கடைமைகளைச் செய்கின்றன. நான் உள்பட அனைத்து தேவர்களும் பகவானின் மாயைக்கு ஆட்பட்டவர்களே.

உலகில் எல்லாவற்றையும் நமக்குக் காட்டும்‌ கண்களை நாம்‌காண இயலாது. அதுபோல் நம்‌ இதயத்தில் சாட்சியாக இருக்கும் பகவானை புத்தி,பொறி, புலன்களால் அறியமுடியாது.

தேவர்களும் கொண்டாடும் அந்த விஷ்ணுதூதர்களின் காட்சி மிகவும் அரியது. அவர்கள் பகவானின் அடியார்களை எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்தும் காத்து வருகின்றனர்.

தர்ம நெறி அனைத்தையும் நிர்ணயம்‌ செய்தவர் பகவானே. ஆனால், அதை முழுதும் அறிந்தவர் எவரும்‌ இலர்.

பாகவத தர்மம் என்ற நெறி பகவத் பக்தியைக் காட்டுவது. தூய்மையானது. ரகசியமானது. அதை அறிவது மிகவும்‌ கடினம். அந்நெறியில் ஒழுகுபவன் பகவத் சரணத்தை அடைவான். அதை அறிந்தவர்கள் பன்னிரண்டு பேர்கள்தான். ப்ரும்மா, நாரதர், பரமேஸ்வரன், ஸனத்குமாரர், கபிலர், ஸ்வாயம்புவமனு, ப்ரஹ்லாதன், ஜனகர், பீஷ்மர், பலி, சுகர் மற்றும் நான் என்றார் யமதர்மராஜன்.

இவ்வுலகில் மனிதனின் முதல்‌ கடைமை பிறவியின் நோக்கத்தை உணர்ந்து நாமகீர்த்தனம் செய்து பக்தி செலுத்துவதே. பகவானின் திருநாமத்தை ஒரே ஒருமுறை சொன்னதற்கே யமபாசத்திலிருந்து விடுபட்டுவிட்டானே அந்த அஜாமிளன்!
மன ஒருமைப்பாடின்றி, உயிர் ஊசலாடும்‌ சமயம்‌ மகனை அழைப்பதற்காக நாராயணா என்றழைத்ததும், அது என் பெயராயிற்றே என்று தன்‌பார்ஷதர்களை அனுப்பிக் காத்தாரே பகவான். அவனது அனைத்துப் பாவங்களும் கணத்தில் நீங்கியதே.

பல பெரியோர்கள் வேதநெறியில் சென்று கர்மங்களைச் செய்துகொண்டிருக்க ஒரு முறை நாமம்‌சொன்னதாலேயே இவனுக்கு முக்தி நிச்சயிக்கப்பட்டுவிட்டதே.

ஆகையால்தான் அறிவாளிகள் பக்தி மார்கத்தைத் தேர்வு செய்கின்றனர்.
இந்தத் தேனில் மூழ்க மறுத்து உலகியல் வாழ்க்கையில் உழலும் கயவர்களை‌ மட்டும் இங்கு அழைத்து வாருங்கள்.

ஸ்ரீ மன் நாராயணனை வணங்குபவர்களுக்கும், அவரது திருநாமத்தை உச்சரிப்பவர்களுக்கும் இங்கு இடமில்லை.

ஹே ! பகவானே! இன்று என் தூதர்கள் தங்கள்‌ பார்ஷதர்களை அவமதித்தனர். தாங்கள் இத்தவறை மன்னி த் து விடுங்கள். அந்தர்யாமியான உங்களை வணங்குகிறேன்
என்றார் யமதர்மராஜன்.

உயிர்களின் பாவங்களை விசாரித்து தண்டனை அளிக்கும் அதிகாரியான யமதர்மராஜனேலேயே கூறப்பட்ட நாம சித்தாந்தம் இதுவே. அதனாலேயே இந்த ஸ்கந்தத்திற்கு மிகவும் ஏற்றம். ஸ்ரீ மத் பாகவதத்தின் உட்கருத்து நடுநாயகமான இந்த ஆறாவது ஸ்கந்தத்தில் விளக்கப்பட்டுள்ளது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 30, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 185 அஜாமிளன்‌ - 3

விஷ்ணுதூதர்கள் தொடர்ந்து கூறினர்.
ஏதோ ஒன்றை மனத்தில் நினைத்துக்கொண்டு உலகியல்‌ நடைமுறைக்காகவோ, பாடும்போது ஆலாபனைக்காகவோ, பிறரை ஏளனம் செய்வதற்காகவோ, எவ்வாறாகிலும் பகவன் நாமத்தை உச்சரிப்பவனின் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.

மேலிருந்து இடறி விழும்போதோ, அடிபடும்போதோ, ஜ்வரத்தின்போதோ, மனதார இல்லாமல் தன்னிலை‌ மறந்தோ, எப்படியேனும் சொல்லப்படும் ஹரி எனும் நாமம் அவனை யமதண்டனையிலிருந்து காக்கிறது.

மஹரிஷிகள் சொல்லியிருக்கும் ப்ராயசித்தங்கள் நிச்சயமாக பாவங்களைப் போக்கும். ஆனால் தீய செயல்களில் பழகிய மனம் அவற்றால் தூய்மைப்படுவதில்லை.

தெரிந்தோ தெரியாமலோ எப்படியாயினும் நெருப்பில் போடப்பட்ட பொருள் பொசுங்கிவிடுகிறது. அதுபோல் இறைநாமத்தை அறியாமலே கூறினாலும், அவனது பாவங்கள் அழிந்துபோகின்றன.

மரணத் தறுவாயில் நாமம் சொன்னால் பாவங்கள் அழிவதோடு மீண்டும் பாவம் செய்ய அவகாசம் இல்லாததால் பாவமற்ற ஜீவன் சுத்தமடைந்து பிறவாநிலையை அடைகிறான்.

வைத்தியர் கொடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தை அதன் இயல்பை அறியாமல் உண்டாலும் பலன் தரும். அதுபோலவே வேதமந்திரங்களைப் பொருள் தெரியாமல் சொன்னாலும் அவை நம்மைக் காக்கின்றன.

நாராயண மந்திரமும் சொல்லப்பட்டதற்காக தன் வேலையைச் செய்கிறது. பொருளின் தரத்தைப் பார்ப்பதில்லை.
இவ்வாறு விஷ்ணுதூதர்கள் அஜாமிளனுக்காகப் பரிந்துபேசி அவனை யமபாசத்திலிருந்து விடுவித்தனர்.

யமதூதர்கள் திரும்பிச் சென்று தங்கள்‌ தலைவனான யமதர்மராஜனிடம்‌ கூற அவன் தூதர்களை வணங்கினான்.
விஷ்ணுபார்ஷதர்கள் அஜாமிளன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்துபோனார்கள்.

அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த அஜாமிளனுக்கு தன்மேல் பச்சாதாபம் உண்டாயிற்று.

அந்தோ என்னைப்போல் அறிவிலி யாருளர்?

மஹாபாவியான நான் குலத்திற்கே இழுக்கைத் தேடித் தந்தேனே. பெற்றோர், சாதுக்கள் அனைவரையும் உதறித் தள்ளிவிட்டேனே. நான் கண்ட அற்புதக் காட்சிகள் கனவா? நினைவா?

என்னைக் கயிற்றால் கட்டி இழுத்தவர்கள் யார்? விடுவித்தவர்கள் யார்? எப்போதோ செய்த புண்ணியத்தின் காரணமாக மரணத்தறுவாயில் என் நாவில் பகவன் நாமம் வந்ததோ?

மட்டமான பிறவியான நான் எங்கே? பவித்ரமான பகவன் நாமம் எங்கே? இனியும் என் நேரத்தை வீணடிக்கமாட்டேன். புத்தியை ஒருமைப்படுத்தி பகவன் நாமத்தில் நிறுத்துவேன். என்று கூறி அங்கிருந்து கிளம்பினான் அஜாமிளன்.

பகவத் பார்ஷதர்களின் தர்சன விசேஷத்தால்‌ அவனது உடல் ஆரோக்யம்‌ பெற்றிருந்தது. கண நேர சத்சங்கத்தால் உலக விஷயங்களில் வெறுப்புற்று கங்கைக் கரையான ஹரித்வாரத்தை அடைந்தான்.

அத்தலத்தில் அமர்ந்து மனத்தை ஒன்றுபடுத்தி,புலன்களை அடக்கி நாராயண நாமத்தையே எப்போதும்‌ ஸ்மரித்தான். பின்னர் அங்கேயே உடலை விடுத்து, சாரூப்ய முக்தியை அடைந்தான்.

அவனை விஷ்ணு பார்ஷதர்கள் தங்கமயமான விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

ஸ்ரீ சுகர் கூறினார்.
அரசே! வெறுக்கத்தக்க, ஒழுங்கீனமான செயல்களால் அறநெறிகளைக் காற்றில் பறக்கவிட்டு நரகம்‌செல்லவிருந்த அஜாமிளன் பகவானது நாமத்தால் பாவங்களிலிருந்து விடுபட்டான். இக்கதையை பக்தியுடன் கேட்பவர்களை யமதூதர்கள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, December 29, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 184 அஜாமிளன் - 2

தன் கடைசிப் பையனின் மேல் வைத்த அளவற்ற பாசத்தால் எப்போதும் அவனையே நினைந்து அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான் அஜாமிளன். எண்பத்தெட்டு வயதில் காலன் அழைத்தபோதும் மகனையே அழைத்தான். மகன் அலட்சியம் செய்தாலும், பகவானால் அவன்குரலை அலட்சியம்‌ செய்ய முடியவில்லை.

விஷ்ணுவின் பார்ஷதர்கள் நால்வர் ஓடோடி வந்தனர்.

பாசக்கயிற்றைப் போட்டு அஜாமிளனின் உயிரை இழுக்கும் யமதூதர்களைத் தடுத்தனர்.

யமதூதர்கள் கேட்டனர்.

யமதர்மராஜனின் தூதர்களாகிய எங்களைத் தடுக்கும் நீங்கள் யார்? எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள்‌ யாருடைய தூதர்கள்?

மிகவும் அழகாக இருக்கிறீர்கள். பொன்னாடை, கிரீடம், குண்டலங்கள், தாமரை மாலை, வில், கத்தி, சங்கு, சக்கரம், கதை ஏந்திய நீங்கள் தேவர்களா? ஒளி மிகுந்தவர்களாக இருக்கிறீர்களே..

விஷ்ணுபார்ஷதர்கள் இடி இடியென்று சிரித்தனர்.

யமதூதர்களே! உண்மையில் நீங்கள் தர்மராஜனின் தூதுவர்களாயின், தர்மத்தின் லக்ஷணங்களைக் கூறுங்கள். தண்டனை எப்படித் தரப்படுகிறது? யாரைத் தண்டிக்கலாம்? பாவம் செய்யும் அனைவரையுமே தண்டிக்கலாமா? அல்லது சிலர் மட்டுமா?

யமதூதர்கள் கூறினர்.

வேதம் சொல்வதே தர்மம்.அதற்கு விலக்கானவை அதர்மம். வேதமே பகவானின் மூச்சு. ஜீவன் இவ்வுடலாலோ, மனத்தாலோ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சிகள் உண்டு. சூரியன், பஞ்ச பூதங்களின் அபிமான தேவதைகள், தேவர்கள், சந்திரன், சந்தியாகால தேவதை, இரவு பகலின் அபிமான தேவதைகள், காலதேவதை, தர்மதேவதை ஆகியோர்.

இவர்களின் மூலம் ஒருவன் செய்யும் தீய செயல்களை அறிந்து, அவற்றின் அளவுக்கேற்ப தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது.

பாவம் செய்தவர் அனைவரும் தண்டனைக்குரியவர்கள்.

அனைவரிடமுமே பாவமும் புண்யமும் கலந்தே இருக்கும். செயலின்றி ஒருவரும் இருக்க இயலாது.

இப்பிறவியில் ஒருவன் செய்யும் பாவ புண்யச் செயல்களின் தன்மையை அறிந்து அவனது அடுத்த பிறவி வாழ்வை ஊகிக்கலாம்.

எங்கள் தலைவரான யமதர்மராஜன் அனைத்தும் அறிந்தவர். மனத்தாலேயே ஒரு ஜீவனின் செயல்பாடுகளை நன்கு அறிகிறார்.

கனவில் தன்னைக் காண்பவனுக்கு தன் உடல் நினைவிருப்பதில்லை. கனவில் காணும் தன் உடலையே உண்மை என்று நம்புகிறான். அதுபோலவே ஜீவன் முற்பிறவியின் உடல்கள் பற்றி அறியமாட்டான்.
காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் ஆகிய ஆறு பகைவர்களை வெற்றி கொள்ளாதவன் விரும்பாவிட்டாலும்கூட மனத்தின் வாசனைகளுக்கேற்ப பிறவி எடுத்து உழல்கிறான்.

அவனது மன இயல்புகள் அவனைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன.

சில சமயம் ஆணாகவும், சில சமயம் பெண்ணாகவும் பிறக்கிறான்.

உண்மையில் இந்த அஜாமிளன், பல நல்ல விஷயங்களை அறிந்தவன், நல்லொழுக்கமும் நற்குணங்களும் கொண்டிருந்தவன், வணக்கமுள்ளவன், புலனடக்கமுள்ளவன், வாய்மை நிரம்பியவன், வேதம் கற்றறிந்தவன், குரு, அக்னி, விருந்தாளி, மூத்தோர் ஆகியவர்க்குப் பணிவிடை செய்தவன், எப்போதும் நன்மையே நினைப்பவன், பொறாமையற்றவன்.

ஒரு சந்தர்ப்பத்தில் காமவயப்பட்டுக் கட்டுப்படுத்த இயலாமல் அனைத்தையும் விட்டான். தீயவழிச் சென்றான். தர்மங்களை அறிந்திருந்தும், பற்பல பாவங்களைத் துணிந்து செய்து, குடும்பத்தைக் காக்க முற்பட்டான்.

இதுவரை இவன் செய்த பாவங்களுக்கு ப்ராயசித்தம்‌ செய்துகொள்ளவில்லை. எனவே, இவன் தண்டனைக்குரியவன். தண்டனைகளைப் பெற்றால்தான் சுத்தமாவான்.
என்றனர்.

விஷ்ணுதூதர்கள் இவற்றைக் கேட்டு பின்வருமாறு கூறினர்.
அடடா! எவ்வளவு அறநெறி மிகுந்திருப்பினும், எப்படியோ மறநெறி மனத்தைக் கலைத்துவிடுகிறதே! சான்றோர்கள் செய்வதைத்தானே பாமரமக்கள் பின்பற்றுவர்?

பாமரமக்கள் விலங்குகளைப்போல் ஒன்றுமறியாமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவரே.

ஆனால், இவன் எவ்வளவு பாவங்கள் செய்தால் என்ன? கோடி ஜென்ம பாவங்களுக்கும் ப்ராயசித்தம் செய்துவிட்டான்.

தன்னிலை மறந்திருப்பினும் இவன் செய்த அறம் இவனைக் கைவிடவில்லையே. நாராயணா என்ற நான்கெழுத்துக்களைக் கூறி அனைத்துப் பாவங்களுக்கும் பரிஹாரம் தேடிக்கொண்டான்.

திருடன், குடிப்பவன், நம்பியவர்க்கு துரோகம் செய்தவன், அந்தணனைக் கொன்றவன், அரசன், பெற்றோர், பசு ஆகியவரைக் கொலை செய்தவன், இன்னும் பல கொடூரமான பாவங்களைச் செய்தாலும் அனைத்தையும் விட உயர்ந்த ப்ராயசித்தம் பகவன் நாமமே. ஒருவன் பாவமே செய்வேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு ஜென்மா முழுதும் பாவங்கள் செய்தாலும், அவனால், ஒரே ஒரு பகவன் நாமத்தால் தீர்க்கக்கூடிய அளவு பாவங்களைச் செய்ய இயலாது.

பகவன் நாமம் சொல்பவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பகவத் சிந்தனை ஏற்பட்டு, பாவ வாசனைகள் அழிந்துவிடுகின்றான.

நாராயணா என்ற ஒரே ஒரு பகவன் நாமம் பகவானையும், அவனது கல்யாண குணங்களையும் வேதத்தையும் நினைவூட்ட வல்லது. நாமம் சொல்பவனால் தீச்செயல்களில் ஈடுபட இயலாமல் போகும்.

ப்ராயசித்தங்கள் பாவத்தைப் போக்கலாம். சித்த சுத்தி தராது.

நாராயண நாமமோ சித்த சுத்தி தருகிறது. அதனால்‌ பாவ வாசனைகள் அழிந்துபோகின்றன. நாமம் சொல்பவனை இறைவன் பார்த்து விடுவதால், அவனால் அதற்குமேல் தீய செயல்களில் ஈடுபட இயலாது.
ஸர்வ பாவங்களுக்கும் ஒரே பரிஹாரம் நாராயண நாமமே.

இவனது பாவங்கள் அனைத்தும் இப்போது பொசுங்கிவிட்டன. இவனை அழைத்துச் செல்லவேண்டாம். விட்டுவிடுங்கள். இவன் தண்டனைக்குரியவன் அல்லன்
என்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, December 28, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 183 அஜாமிளன் - 1

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறினார்.
இறைவனது நாமத்தை இறக்கும் தருவாயில் சொல்பவனின் அனைத்து பாவங்களும் பொசுங்குகின்றன. அவனுக்கு அக்கணமே சித்த சுத்தி ஏற்படுகிறது.

கான்யகுப்ஜம் எனும் நாட்டில் அஜாமிளன் என்றொரு அந்தணன் இருந்தான். அவன் வேதங்கள் கற்று, நல்வழியில் ஒழுகிவந்தான்.

ஒருநாள் காட்டிற்கு ஸமித் (வேள்விக்கான அரசமரக் குச்சி), தர்பை இவற்றை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றான்.

வெகுநேரம் அலைந்ததில் தாகம்‌மேலிட்டது. அப்போது ஒரு மரத்தடியில் யாரோ வேடன் விட்டுச் சென்ற கள்குடுவை இருந்தது.

தாகத்திற்கு நீர் கிடைக்காததால்
அவசரத்திற்கு பரவாயில்லை என்று அந்தக் குடுவையிலிருந்த கள்ளைக் குடித்துவிட்டான்.

புத்தி தடுமாறி அலையத் துவங்கினான். அப்போது, ஒரு மரத்தடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் காணத்தகாத காட்சியைக் கண்டான்.

ஏற்கனவே குடித்த கள்ளினால் தடுமாறிய புத்தியில் இப்போது காமவிகாரம் ஏற்பட, தன்னிலை மறந்தான். அந்த வேடன் சென்றதும், அப்பெண்ணோடு உறவு கொண்டான்.

உத்தமகுலத்தில் பிறந்து, பலதர்ம நெறிகளைக் கடைப்பிடித்தும், கணநேரத் தடுமாற்றம் அவனது வாழ்வைத் திருப்பிப் போட்டது.

அவனது ஒழுங்கீனத்தால் வேள்வி செய்வதற்கான தகுதிகளை இழந்தான். மறுபடி அவன் கிராமத்தில் வாழ இயலாமல் போ‌னது. எனவே, காட்டிற்கு வந்து ஏற்கனவே கண்ட பெண்ணுடன் வாழத் துவங்கினான்.

நிறைய குழந்தைகள் பிறந்தன.
அவர்களைக் காப்பாற்றுவதற்காக வழிப்பறி, கொள்ளை, கொலை ஆகியவற்றில் ஈடுபட்டான் அஜாமிளன்.

காலம்‌ உருண்டோடியது. அவனது மக்கள் வளர்ந்தனர். பத்தாவதாகப் பிறந்த தன் கடைசிக் குழந்தைக்கு பூர்வ வாஸனையால் நாராயணன் என்று பெயரிட்டான்.

அப்பெயரிட்டதாலோ என்னவோ அஜாமிளனுக்குத் தன் கடைசி மகன் மீது அளவற்ற பாசம் உண்டாயிற்று.

என்ன செய்தாலும் நாராயணா நாராயணா என்று மகனை அழைத்த வண்ணமே இருந்தான்.

அஜாமிளனுக்கு அந்திம காலம் வந்தது. 3 யமதூதர்கள் மிகவும் கோரமான உருவத்துடன் வந்து அவன் கழுத்தில் பாசக் கயிற்றைப் போட்டனர்.

உடலின் அத்தனை மர்மஸ்தானங்களிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி ஏற்பட தன் சக்தி முழுவதையும் திரட்டி, தூரத்தில் விளையாடிக்கொண்டிருத மகனைப் பார்த்து நாராயணா என்று அலறினான்.

நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுவனோ, காதில் வாங்காமல் விளையாட்டைத் தொடர்ந்தான். இன்னொரு சிறுவன், அப்பா கூப்பிடறார்டா.. என, இவனோ,
அவருக்கு வயசாயிடுச்சுடா.. அப்படித்தான் கூப்பிட்டுட்டே இருப்பாரு. கண்டுக்காதே என்று மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டான்.

வைகுண்டத்திலிருந்த பகவானுக்கு அஜாமிளனின் குரல் கேட்டது. உடனே அவர் நான்கு பார்ஷதர்களை விமானத்தோடு அனுப்பினார்.

அவர்கள் வந்ததும் யமதூதர்கள் செய்வதறியாது திகைத்தனர். யமதூதர்களும், விஷ்ணு பார்ஷதர்களும் இதுவரை சந்தித்ததே இல்லை. எனவே, விவாதம்‌ செய்யத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, December 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 182

ஆறாவது ஸ்கந்தம்

ப்ராயசித்தம்

பாவங்களுக்காகச் செய்யப்படும் ப்ராயசித்த கர்மாக்கள் பாவங்களைப் போக்கும். ஆனால், மீண்டும் பாவம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தைப் போக்காது. இன்னும் சொல்லப்போனால், ப்ராயசித்தம் இருக்கிறதே என்ற தைரியத்தில் பாவம் செய்யத் தூண்டுகோலாகிவிடக்கூடும் அபாயம் உள்ளது. என்றார் ஸ்ரீ சுகர்.

ஸமர்த்த ராமதாசர் என்ற மஹாத்மா மஹாராஷ்ட்ர தேசத்தில் வசித்துவந்தார். ராமபக்தரான இவர் ஞானியாவார். பெரியோர்கள் இவரை ஹனுமானின் அவதாரம் என்று சொல்கின்றனர். சத்ரபதி சிவாஜியின் குருவாவார்.

இவர் ஒரு சமயம் கோதாவரி நதிக்கரையில் நடந்து கொண்டிருந்தார். இடுப்பில் கோமணம், தோளில் ஒரு பை. அவ்வளவுதான் அவரது உடைமை.

மஹாத்மாக்கள் செய்வதனைத்தும் பகவானின் லீலையே தவிர, வேறொன்றுமில்லை. அவர் சிற்சிறு கற்களைப் பையிலிருந்து எடுத்து வானத்தில் பறக்கும் பறவைகளைக் குறிவைத்து அடித்தார்.

அடிபட்டுக் கீழே விழும் பறவைகளைப் பிடித்துப் பையில் போட்டுக்கொண்டே போனார்.

பார்த்தவர்கள் அனைவர்க்கும் வியப்பு, கோபம். ஆனாலும் அவரிடம் கேட்க பயம்.

அங்கே நதிக்கரையில் சில அந்தணர்கள் இருந்தனர். இவரது செயலைப் பார்த்துக் கோபமுற்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

பெரிய மஹாத்மாவாம். பண்ற காரியத்தைப் பார்த்தியா?
இதெல்லாம் தப்புன்னு தெரியாதா?
இப்படியெல்லாம் பண்றவர் எப்படி மஹாத்மாவா இருக்கமுடியும்?

சத்தமா பேசாத. ராஜகுரு. ராஜாவுக்குத் தெரிஞ்சா நம்ம தலையை வாங்கிடுவான்.
இருந்தாலும் இவரை இப்படியே விடக்கூடாது.

நாம என்ன பண்ணமுடியும்?

இப்ப பாருங்கோ..
சொன்னவர் ராமதாசரிடம் வந்தார்.

ஸ்வாமி, இப்படி உயிக்கொலை பண்றேளே. தப்பில்லையா?

தப்பா?

என்ன ஸ்வாமி இப்படிக் கேக்கறேள். தப்பு மட்டுமில்ல. மஹாபாவம்.

அப்படியா? பாவமா? தெரியாம பண்ணிட்டேனே. இப்ப நான் என்ன பண்றது?

நான் ப்ராயசித்தம் பண்ணிவெக்கறேனே.

ஓ.. ப்ராயசித்தம் பண்ணினா பாவம் போயிடுமா?

போயிடும் ஸ்வாமி..

சரி. பண்ணி வைங்கோ.

அந்த அந்தணர் இன்னும் சிலரைச் சேர்த்துக்கொண்டு உயிர்க்கொலைக்கான ப்ராயசித்த ஹோமங்களை நதிக்கரையிலேயே பண்ணி வைத்தார்.

ஸ்வாமி.. ப்ராயசித்தம் ஆயிடுத்து.

அப்படியா.. சரி..

ஸ்வாமி.. தக்ஷிணை..

என்கிட்ட ஒன்னுமே இல்லியே..

நீங்க ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கோ. நாங்க ராஜாகிட்ட வாங்கிக்கறோம்.

சீட்டா.. சரி‌ எழுதித்தரேன். ஆனா, பாவம் போயிடுத்தா..

போயிடுத்து ஸ்வாமி..

பைக்குள் பார்த்தார்.
இந்தப் பறவையெல்லாம் பறக்கலையே..

செத்துப்போன பறவை எப்படிப் பறக்கும் ஸ்வாமி..

பறக்காதா?

பறக்காது ஸ்வாமி..
பாவம் மட்டும் பறக்குமாக்கும்..
...
அவர் ஏதோ வம்பு செய்கிறார் என்று உறைத்தது அவர்களுக்கு.
ஸ்வாமி. இது விதண்டாவாதம்.. நீங்க சீட்டு எழுதிக்கொடுங்கோ..

பறவை பறக்காம சீட்டு எப்படி தரது? இப்ப நான் ஒரு ப்ராயசித்தம் பண்ணவா?

அந்தணர்களின் கோபம் அதிகரித்தது.

ஓஹோ.. பண்ணுங்கள் பார்க்கலாம். நீங்கள் ப்ராயசித்தம் செய்தால் பறவை பறக்குமோ..

பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
என்று சொல்லி சொல்லி பைக்குள்ளிருந்து ஒவ்வொரு பறவையாய் எடுத்து வானில் விட, அத்தனை பறவைகளும் சிறகடித்துப் பறந்தன.

அந்தணர்களின் முகம் பயத்தால் வெளியது. இவரிடம் வம்பு செய்தால் ராஜ தண்டனை கிடைக்கும் என்று அஞ்சினர்.

அவர் காலில் விழ, ராமதாசர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

நீங்கள் செய்யும் ஹோமங்களை அதன் தாத்பர்யம் புரிந்துகொண்டு லோக க்ஷேமத்திற்காகப் பண்ணுங்கள்.

தக்ஷிணைக்காகச் செய்தால் பலன் குறையும். உங்களுக்கும் பாவம் வந்து சேரும்.
என்று சொல்லிவிட்டு நடந்தார்.

ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம் ஓம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம்
என்ற ஒலி கம்பீரமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, December 26, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 181

ஆறாவது ஸ்கந்தம்



 ஸ்ரீ மத் பாகவதம் ஒரு அழகிய மாலை என்று வைத்துக் கொண்டால் அதன் மத்தியில் விளங்கும் பதக்கம் போன்றது ஆறாவது ஸ்கந்தம்.

பகவன் நாம மஹிமையை வலியுறுத்தும் வண்ணம் அஜாமிளன் கதை சொல்லப்படுகிறது. தக்ஷனைப் பற்றியும், புகழ் பெற்ற ஸ்ரீ நாராயண கவசம், வ்ருத்ராசுரனின் கதை, சித்ரகேதுவின் கதை, பும்ஸுவன விரதத்தின் செயல்முறை ஆகியவை இந்த ஸ்கந்தத்தில் விவரிக்கப்படுகின்றன.

பரீக்ஷித் கேட்டார்.

ப்ரபோ! முன்பு (இரண்டாவது ஸ்கந்தத்தில்) நிவ்ருத்தி மார்கம் பற்றிச் சொன்னீர்கள். ஜீவன் அதன் வழியாகப் படிப்படியாகச் சென்று ப்ரும்ம லோகத்தை அடைகிறான். பின்னர் ப்ரும்மதேவருடன் முக்தியடைகிறான்.

மேலும்‌ (மூன்றாவது ஸ்கந்தத்தில்) ப்ரவ்ருத்தி மார்கம் பற்றி விளக்கிக் கூறினீர்கள். 

மறநெறியைப் பின்பற்றுபவன் அடையும் பயனான நரகங்கள் பற்றியும் கூறினீர்கள். 
மேலும் ப்ரியவ்ரதன், உத்தானபாதன் ஆகொயோரின் வம்சம் பற்றியும், மூன்று லோகங்களைப்‌ பற்றியும், அவற்றை பகவான் படைத்ததைப் பற்றியும் விரிவாகக் கூறினீர்கள்.

ஆனால், நரகங்களுக்குச் செல்லாமல் இருக்க வழி உள்ளதா? அதனை விளக்கமாகக் கூறுங்கள் என்றார்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்! உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யும் பாவங்களுக்கு மனிதன் அந்தப் பிறவியிலேயே ப்ராயசித்தம் செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் நரகங்களுக்குச் செல்லத்தான் வேண்டும்.

நோயின் தன்மையறிந்து சிகிச்சையை உடனே துவங்குவதுபோல், இறப்பதற்கு முன்பே செய்த பாவங்களின் தன்மையை உணர்ந்து ப்ராயசித்தம் செய்யவேண்டும். 

பரீக்ஷித் கேட்டான்.

பாவம் செய்வதால் நரகம் கிட்டும் என்று நன்றாக அறிந்தபோதும், மனிதன் தன் மனப் பழக்கத்தினால் (வாஸனை) பாவத்தைச் செய்கிறான். ப்ராயசித்தம் செய்தாலும் மீண்டும் அதே பாவத்தைச் செய்கிறானே. எனில், பாவங்கள் எப்படிப் போகும்?

பல மணிநேரங்கள் செலவழித்து பாகன்‌ நதியில் யானையைத் தேய்த்து தேய்த்துக் குளிப்பாட்டுவான். யானையோ குளித்துக் கரையேறியதுமே, தும்பிக்கையால்  சேற்றை அள்ளித்தலையில் போட்டுக்கொள்ளும். அதுபோலாகிவிடாதா? 

மேலும் ஒரு பாவத்தினால் மனிதனுக்கு ஒரு லட்சரூபாய் கிடைக்கும் என்பதாக வைத்துக்கொள்வோம். ப்ராயசித்த கர்மா செய்வதற்குப் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்றால், மீதி தொண்ணூறாயிரம் லாபம் என்றுதானே அவன் மனம் கணக்கிடும். ஒவ்வொரு முறையும் பாவத்தையும் ப்ராயசித்ததையும் சேர்த்தே செய்வது வாடிக்கையாகிவிடாதா? அவ்வாறு செய்தால் ப்ராயசித்த கர்மாக்கள் பாவச் செயலை ஊக்குவிப்பது போலாகிவிடுமே.

இந்தக் கேள்வியால் ப்ரும்ம ஞானியான சுகர் மிகவும் மகிழ்ந்தார்.

ஆம், பரீக்ஷித். ப்ராயசித்தகர்மாக்கள் பாவத்தைப் போக்குமே தவிர, பாவம் செய்யும் எண்ணத்தை இயலாது. உண்மையான பாவ பரிகாரம் பகவானை உணர்தலே ஆகும். அஞ்ஞானம் நீங்கியவன் மீண்டும் பாவம் செய்யமாட்டான்.

ஒருவன் தன் கடைமைகளை முறைப்படி ஒழுங்காகச் செய்தாலே பாவ வாசனைகளிலிருந்து விடுபட்டுவிடுகிறான்.

அறநெறிகளின் தத்துவம் அறிந்தவர்கள் தவம், ப்ரும்மசர்யம், மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தானம், உண்மை பேசுதல், உள்ளும் புறமும் தூய்மை காத்தல், கொல்லாமை, ஜபம் ஆகியவற்றால் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் தூய்மைப்படுத்தி, பெரிய பெரிய பாவங்களையும் சாம்பலாக்குகிறார்கள். பகவத் பக்தர்கள் பக்தியினாலேயே பாவம் நீங்கப் பெறுகிறார்கள்.

 பாவம் செய்தவனுக்கு அடியார்களுக்குச் செய்யும் சேவையாலும், பகவானிடம் தன்னை அர்ப்பணிப்பதாலும் விடுதலை  கிடைக்கும்.

பெரிய பெரிய ப்ராயசித்தங்களாலும், மனத்தூய்மையைக் கொடுத்து விட முடியாது.
ஒரே ஒருமுறையேனும் பகவன் நாமத்தை உணர்ந்து கூறுவதாலும், க்ருஷ்ணனின் திருவடித் தாமரைகளை நினைப்பதாலும் பாவங்கள் ஓடும்.

இவ்விஷயம் தொடர்பாக ஸமர்த்த ராமதாசரின் சரித்ரத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, December 22, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 180 நரக வர்ணனை - 2

இருபத்தெட்டு நரகங்களைப் பற்றியும் மிகமிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் வியாஸர்.

அந்தணர்கள், மற்றும் சிலருக்கு நாய், கழுதை ஆகியவற்றை வளர்க்கவோ, விலங்குகளை வேட்டையாடவோ அனுமதி இல்லை. 
வரம்பை மீறிச் செயல்படுவனை 
பிராணரோதம்
விசஸனம் ஆகிய நரகங்களில் தள்ளி பலவிதமாகத் துன்புறுத்துகிறார்கள்.

லாலபக்ஷம்

மனைவியிடம் காமவயப்பட்டு
முறையற்றுத் துன்புறுத்துபவனை தண்டிக்கும் இடம்‌ இது. 

ஸாரமேயாதனம்

இம்மையில் களவு செய்பவர்கள், தீ வைப்பவர்கள், விஷத்தைக் கலந்து கிராமங்களையோ, மக்கள் கூட்டத்தையோ அழிப்பவனை இவ்விடத்தில் கூர்மையான பற்களுடைய எழுநூற்றிருபது நாய்கள் கடிக்கும்.

அவீசி

பொய் சாட்சி சொல்பவன், வியாபாரம் மற்றும் தானத்தில் பொய் சொல்பவனை இந்நரகத்தில் மலை உச்சியிலிருந்து கீழே தள்ளுகிறார்கள். இங்கு தரை தண்ணீர்போலிருப்பினும் பாறை போல் கேட்டியாக இருக்கும். 

விழுபவனின் உடல் எள்ளுப்பொடிபோல் சிதறினாலும் உயிர் போகாது. மீண்டும் அவனைச் சேர்த்து உச்சிலிருந்து தள்ளுவார்கள்.

அயப்பானம்

அந்தணனோ, அவன் மனைவியோ, விரதமிருப்பவனோ தவறுதலாகவேனும்கூடக் கள்ளைக் குடிப்பானாகில், இந்நரகத்தில் தள்ளப்பட்டு அவனை நெஞ்சில் மிதித்துக் காய்ச்சிய இரும்பை வாயில் ஊற்றுவார்கள்.

க்ஷாரகர்தமம்

எவனொருவன் தன்னை மிக உயர்வாக எண்ணிக்கொண்டு மற்றவர்களை அவமதிப்பானோ அவனை இந்நரகத்தில் தலைகீழாகத் தள்ளிவிடுவார்கள்.

ரக்ஷோகணபோஜனம்

பைரவர், யக்ஷர், ராக்ஷஸர் முதலியவர்களை நரபலியிட்டு வழிபட்டு நரமாமிசம் உண்பவர்கள் இந்நரகத்தில் வீழ்வர். பலியிடப்பட்டவர்கள் ராக்ஷஸர்களாகி அவர்களை கசாப்புக் கடைக்காரன்போல் துண்டுதுண்டாக வெட்டி உதிரத்தைக் குடிக்கின்றனர்.

சூலப்ரோதம்

எவனொருவன் ப்ராணிகளை தன் வயப்படுத்தி பின் அவற்றை குத்தி, கயிற்றினால் கட்டி துன்புறுத்துகிறானோ அவனை இங்கு சூலத்தால் குத்துகிறார்கள். அந்த விலங்குகளும் அந்நேரத்தில் அவனைத் தாக்கும்.

தந்தசூகம்

பாம்பைப்போல் கொடிய இயல்பு கொண்டவனை இந்நரகத்தில் ஐந்து /ஏழு தலை கொண்ட நாகங்கள் விழுங்குகின்றன.

அவடநிரோதனம்

மற்ற ஜீவராசிகளை இருண்ட கிடங்கில் போட்டு துன்புறுத்துபவனை இங்கு இருண்ட குகையில் தள்ளி விஷப்புகையால் வாட்டுவார்கள்.

பர்யாவர்தனம்

எவன் வீட்டுக்கு வந்த விருந்தினரை எரிப்பவன்போல் பார்க்கிறானோ அவனது கண்களை இவ்விடத்தில் கழுகு, வான்கோழி முதலியவை தோண்டி எடுக்கின்றன.

சூசீமுகம்
பணம் இருக்கும் செருக்கினால் பிறரை ஏளனமாகப் பார்ப்பவன், பணத்தை செலவழிக்காமல் பூதம்போல் காப்பவன், பணத்தை சம்பாதிக்க துணிந்து பாவம் செய்பவன் ஆகியோர் இந்நரகத்தில் தள்ளப்படுவர். இங்கு யமதூதர்கள்  அவனது அங்கங்களை நெசவாளிபோல் நூலைவிட்டுப் பின்னுவார்கள்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷித், இவ்வகையான நரகங்ககள் யமலோகத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளன. பாவம் செய்வர்கள் அனைவரும் வரிசை வரிசையாக இங்குதான் வருகின்றனர். தங்கள் பாவ கர்மாக்களின் தண்டனை முடிந்தபின், புண்யகர்மாக்களுக்கான பலனை ஸ்வர்கத்தில் அனுபவித்து விட்டு, மீண்டும் இப்பூவுலகில் பிறக்கிறார்கள்.

அறநெறி, மறநெறி, துறவறம் ஆகியவை பற்றி முன்பே விளக்கினேன். 
புராணங்களில் பதினான்கு வகையாகத் தொகுக்கப்பட்ட ப்ரும்மாண்டகோசத்தின் தொகுதி இவ்வளவுதான். இது பகவானின் ஸ்தூல ரூபமேயாகும். யார் இதை ஈடுபாட்டுடன்  கேட்கிறார்களோ அவரது மனம் தூய்மைப்பட்டு பக்தி உண்டாகிறது. பின்னர் மற்ற உபாயங்களால் பகவானின் ஸூக்ஷ்ம ரூபத்தையும் அறிகிறார். 

பரீக்ஷித்! பூமி, அதன் தீவுகள், வர்ஷங்கள், நதிகள், மலைகள், ஆகாயம், ஸமுத்ரம், திசைகள், நரகங்கள், ஒளி மண்டலம், மற்றும் உலகங்களின் அமைப்பு ஆகியவையே பகவானின் ஸ்தூல ரூபம். இவையே அனைத்து ஜீவராசிகளும் குடியிருக்கும் கோவில்.

ஐந்தாவது ஸ்கந்தம் முற்றிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, December 21, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 179 நரக வர்ணனை - 1

பரீக்ஷித் கேட்டான்
மஹரிஷியே! நரகங்களைப் பற்றிக் கூறப்போவதாய்ச் சொன்னீர்கள். அவை இவ்வுலகிலேயே ஏதாவது தனிப்பட்ட இடமா? மூவுலகிற்கும் அப்பாற்பட்டவையா? அல்லது இடைப்பட்டவையா?

ஸ்ரீ சுகர் பதில் சொல்ல த் துவங்கினார்.

பாண்டுகுல விளக்கே! நரகங்கள் மூவுலகங்களுக்குள்தான் இருக்கின்றன. தென் திசையில் பூமிக்கடியில் தண்ணீருக்கு மேல் உள்ளன. இந்த தென் திசையில் அக்னிஷ்வார்த்தர்கள் முதலான பித்ருகணங்கள் வசிக்கிறார்கள்.

சூரிய பகவானின் மகனான யமதர்மராஜன் இந்த நரகத்தில்தான் தன் சேவகர்களோடு வசிக்கிறார். பகவானின் கட்டளைப்படி ஜீவன் இறந்தபின்பு யமதூதர்களைக் கொண்டு நரகத்திற்கு அழைத்துவந்து அந்த ஜீவராசிகளின் தீய செயலுக்கேற்ப பாவத்தின் பயனான நரக தண்டனை அளிக்கிறார்.

நரகங்கள் மொத்தம் இருபத்தெட்டு. 
அவை

தாமிஸ்ரம்
பிறரின், செல்வம், குழந்தைகள், பெண்களை அபகரிப்பவன் இந்த நரகத்தில் தள்ளப்படுவான். அவனுக்கு நீரும் தராமல் தடியால்‌அடித்து பயமுறுத்துவார்கள்.

அந்ததாமிஸ்ரம்

பிறரை ஏமாற்றி அவனுடைய மனைவியை அனுபவிப்பவ்னுக்கு இந்த நரகம் கிட்டும். அங்கு அவனுக்குப் பலவிதமான துன்பங்கள் நேரும்.

ரௌரவம்

தன்னையும், தன் குடும்பத்தையும் காக்க, பிறரைத் துன்புறுத்துபவன் இந்த நரகத்தில் வீழ்வான்.

ஒருவன் எந்த ஜீவனை எவ்விதமாகத் துன்புறுத்துகிறானோ, அந்த ஜீவன் ரௌரவத்தில் (ருரு என்னும் பாம்பைக்காட்டிலும்  கொடிய ஜீவனாக) அதே விதமாக அவனைத் துன்புறுத்தக் காத்திருக்கிறது.

மஹாரௌரவம்
இதுவும் ரௌரவம் போன்றது. இதில் பச்சை மாமிசம் உண்ணும் ருருக்கள் அவனைக் கடித்துக் குதறும்.

கும்பீபாகம்

இரக்கமின்றிப் பறவைகளையும் விலங்குகளையும் வதைப்பவனுக்கு இந்த நரகம் உண்டு. இங்கு அவனைக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுப்பார்கள்.

காலஸூத்ரம்

எவன் பெற்றோரையும், வேதத்தையும் பகைக்கிறானோ அவன் இந்நரகத்திற்கு வருவான். இது அடிப்பாகத்தில் தாமிரத்தால் ஆனது. கொதிக்கும் நடுப்பாகம் கொண்டது. எல்லாப் பக்கமும் சூடு பொசுக்கிவிடும். நிற்கவோ, நடக்கவோ, உட்காரவோ, படுக்கவோ முடியாமல் பசிதாகத்தால் துன்புறுத்தப்படுவான்.

அஸிபத்ரவனம்

எந்த ஒரு ஆபத்தும் இல்லாத அமைதியான காலத்திலும், எந்த நிர்பந்தமும் இன்றி நாத்திக வழியைத் தேர்ந்தெடுப்பவனுக்கு இந்த நரகத்தில் சவுக்கடி கிடைக்கும். கூர்மையான பனைமட்டைகளால் அவன் உடல் கிழிக்கப்படும்.

ஸூகரமுகம்

எவன் பதவியில் இருக்கும் நண்பன், அல்லது உறவுக்காரனைப் பயன்படுத்தி தண்டிக்கத்  தகாதவர்களைத் துன்புறுத்துகிறானோ, அவனை இங்கு யமதூதர்கள் ஆலையில் இட்ட கரும்பாகப் பிழிந்தெடுக்கிறார்கள்.

அந்தகூபம்

இருள் சூழ்ந்த பாழும்கிணறுபோல்‌ உள்ள இவ்விடத்தில் ஜீவனால் துன்புறுத்தப்பட்ட பசுக்கள், விலங்குகள், ஊர்வன, கொசு, மூட்டைப்பூச்சி, பறவை, பாம்பு முதலியன எல்லாப் பக்கங்களிலிருந்தும் கடிக்கின்றன.

கிருமிபோஜனம்

பிறருக்கு எதையாமல் தான் மட்டும் உண்பவன், தேவ, பித்ரு, மனுஷ, பூத, ப்ரும்ம யக்ஞங்களைச் செய்யாமல் சுகங்களில்‌உழல்பவன் இங்கு புழுவாய் இருந்து புழுக்களால் கடிக்கப்பட்டு புழுக்களையே உண்கிறான்.

ஸந்தம்சம்

பிறருடைய தங்கம், ரத்தினங்களைத் திருடுபவன் இங்கு இரும்புக்கோலால் சூடு போடப்படுகிறான்.

தப்தஸூர்மி

தகாதவர்களுடன் புணர்பவன்/ள் இந்நரகத்தில் தள்ளப்பட்டு  பழுக்கக் காய்ச்சிய ஆண் சிலையைப்‌ பெண்ணையும், பழுக்கக் காய்ச்சிய பெண் சிலையை ஆணையும் கட்டியணைக்கச் சொல்லப்படுவார்கள்.

வஜ்ரகண்டக சால்மலி

விலங்குகளைப் புணர்பவனை இந்த நரகத்தில் தள்ளி முட்கள்‌ நிறைந்த மரத்தில்‌ ஏற்றிக்‌கீழ் நோக்கி இழுப்பார்கள்.

வைதரணி

நற்குலத்தில் பிறந்தும், அறநெறிகள் நன்றாகத் தெரிந்தும் வரம்புகளை மீறுபவன் வைதரணி என்ற நதியில் வீழ்வான். இந்நதி ரத்தம், எலிம்பு, மஜ்ஜை, கொழுப்பு, மாமிசம் ஆகியவற்றால் நிறைந்தது‌. இதிலுள்ள நீர்வாழ் பிராணிகள் கடித்துக் குதறும். ஆனால், உயிர் போகாது.

பூயோதம்

ஒழுக்கத்தையும், குல நியமங்களையும் விட்டு காமத்தால் தகாதவர்களுடன் உறவு கொள்பவன், பூயோதம் எனும் கடலில் நிரம்பியுள்ள சீழ், மலம், கபம், எச்சில் ஆகியவற்றை உண்ண நிர்பந்திக்கப்படுகிறான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, December 20, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 178 புவனகோச வர்ணனை - 9

ஸங்கர்ஷணர்


பாதாள  உலகின் கீழ் முப்பதாயிரம் யோஜனை தூரத்தில் அனந்தன் என்ற பெயருள்ள பகவானின் அம்சம் உள்ளது.

இந்தக் கலை நான் என்ற அஹங்கார ரூபமாக இருக்கிறது. பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் இரண்டையும் இணைக்கிறது. பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றும் பக்தர்கள் இதை ஸங்கர்ஷணர் என்றழைக்கின்றனர்.

ப்ரளய காலம் வரும்போது அவர் தன்  புருவங்க்களை‌ நெறித்து  பஞ்சபூதங்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு ப்ரபஞ்சத்தை அழித்துவிடுகிறார்.

அழகான சிவந்த பளபளக்கும்  நகங்களை உடையவர். பல நாக கன்னிகைகள் அவருக்கு சேவை செய்கிறார்கள்.

எல்லையற்ற நற்குணங்கள் கொண்ட ஸங்கர்ஷண பகவான், உலகங்களின் நன்மைக்காக தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறார்.

தேவர்கள், முனிவர்கள், நாகர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள் அனைவரும் இவரை தியானம் செய்கின்றனர்.

அடியார்கள் மீது கொண்ட அன்பினால் அவர் கண்கள் கலங்கிச் சிவந்து காணப்படுகிறது. அன்பு மிகுந்த சொற்களால் அனைவரையும் மகிழ்விப்பவர். நீலப்பட்டாடை அணிந்தவர். காதுகளில் ஒரே ஒரு குண்டலம் மட்டும் அணிந்தவர். கையில் கலப்பை வைத்திருக்கிறார். கழுத்தில் என்றைக்கும் வாடாத, வண்டுகள் முரலும்  வைஜயந்தி மாலை. 

தன்னைத் துதிப்பவர் மனத்தில் உள்ள மாயையை அக்கணமே அகற்றுபவர்.
நாரதரும், தும்புருவும் இவர் புகழை கானம் செய்கின்றனர்.

அளப்பரிய பெருமைகள் வாய்ந்த அனந்த பகவான் தன் தலையில் இப்பூமண்டலத்தைத் தாங்கி நிற்கிறார்.

பரீக்ஷித்! மனிதர்களின் கர்ம பலனாக அவர்கள் அடையும் அத்தனை லோகங்கள் பற்றியும் உனக்குக் கூறிவிட்டேன். மேலும், என்ன அறியவேண்டுமோ,  வேண்டுமோ கேள். என்றார் ஸ்ரீ சுகர்.

கேள்வியின் நாயகனான பரிக்ஷித் மீண்டும் கேட்டான். அவனது கேள்விகளாலேயே இத்தனை சுவையான பாகவதப் பழம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

மஹரிஷி! மக்கள் அடையும் பயன்களில் இவ்வளவு வேறுபாடுகள் எப்படி உண்டாகின்றன?

அன்றலர்ந்த தாமரைபோல்  மலர்ந்த முகம் கொண்ட ஸ்ரீ சுகர் கூறலானார்.

அரசே! ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களுக்கேற்ப ஒரு செயலில் மனிதனுக்கு ஈடுபாடு அதிகரிக்கவோ குறையவோ செய்கிறது. ஏற்கனவே உள்ள கர்ம வாசனைப்படியும், முக்குணங்களின் மாறுபாட்டாலும் அவன் செய்யும் செயலும் அமைகிறது.
அதற்கேற்பவே பலன்களும் உண்டாகின்றன.

செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களால் தடை செய்யப்பட்ட பாவச் செயல்களானாலும்கூட அவனது ஈடுபாட்டைப் பொறுத்தே பாவம் விளைகிறது.

 பன்னெடுங்காலமாக அஞ்ஞானத்திற்கு ஆட்பட்டு செய்யப்படும் பாவச் செயல்களின் பயனாகக் கிடைக்கும் நரகங்கள் பற்றிக் கூறுகிறேன் கேள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, December 19, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 177 புவனகோச வர்ணனை - 8

ஸ்ரீ சுகர் மேலும் தொடர்ந்தார்.

வாமன பகவானுக்கு பூமிதானம் கொடுக்க வேண்டி தன்னையே ஆத்ம ஸமர்ப்பணம் செய்தான் பலி. அவனுக்கு கைம்மாறாக இறைவன் போகங்களைக் கொடுத்திருந்தால் அருள் புரியவில்லை என்றாகும்.

பகவான் அவனது உயிரைத் தவிர அனைத்தையும் இரந்து பெற்றுக்கொண்டபின் அவனை வருணபாசத்தால் கட்டி மலைக் குகையில் தள்ளினார். அந்நிலையிலும் பலி என்ன சொன்னான் தெரியுமா? 

இந்த இந்திரன் அறிவாளிதான். அனைத்துச் செல்வங்களையும் பெற்றிருந்தும் தனக்கு நன்மையளிப்பது எது என்று தெரிந்துகொள்ளவில்லையே. ப்ருஹஸ்பதியை அலட்சியம் செய்துவிட்டு, பகவான் விஷ்ணுவிடம் அவரது பதத்தை வேண்டாமல், அழியக்கூடிய செல்வத்தை வேண்டினானே. 

பகவானது கரங்களால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டபோதும் என் பாட்டனாரான ப்ரஹ்லாதன் பகவானின் சேவையை வேண்டிப் பெற்றார்.

 அனைத்துலகையும் அவர் தர விரும்பியபோதும் போகங்கள் இறைவனிடமிருந்து தள்ளிவிடுமோ என்று அஞ்சினார். 

ஆனால், இப்போது நான் பகவானாலும் தள்ளப்பட்டேனே. விருப்பு வெறுப்புள்ள நான் அவரது கருணைக்குத் தகுதியற்றவன். என்று வேண்ட, பகவான் அவனை சுதல லோகத்தில் விட்டு தானே கைகளில் கதையேந்தி வாயிற்காவலனாக நிற்கிறார்.

பகவானின் கருணைக்குப் பாத்திரமான 
இந்த பலியின் கதையை பின்னால் (எட்டாவது ஸ்கந்தத்தில்) விரிவாகச்  சொல்கிறேன். 


சுதல லோகத்தின் கீழுள்ள தலாதலத்தில் முப்புரங்களின் தலைவனான அசுர மன்னன் மயன் வசிக்கிறான். உலகின் நன்மைக்காக முப்புரங்களையும் பரமேஸ்வரன் எரித்தார். ஆனால், பின்னர் அவர் அருளாலேயே பதவியைப் பெற்றான் மயன். அவனே மாயாவிகளுக்கெல்லாம் குருவும் ஆவான்.

இவன் பரமேஸ்வரனால் காக்கப்படுகிறான். அங்குள்ளவர்கள் மயனை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

இதற்கும் கீழே மஹாதலத்தில் கத்ருதேவியின் மக்களான நாகங்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இவை மிகவும் கோபமுடையவை.

 இவற்றுள் குஹகன், தக்ஷகன், காளியன், ஸுஷேணன் ஆகிய சர்ப்பங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. இவையும் கருடனுக்கு அஞ்சி வாழ்கின்றன.

அதன் கீழுள்ள ரஸாதலத்தில் திதியின் மக்களான  அசுரர்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் எப்போதும் தேவர்களுடன் பகை பாராட்டுவர்.
மிகவும் உடல் வலிமையும், துணிவும் கொண்டவர்கள். ஆனால், பகவான் ஸ்ரீ ஹரியிடம் பயந்து ஒளிந்து வாழ்கிறார்கள்.

ரஸாதலத்துக்குக் கீழ் பாதாள லோகம் உள்ளது. இங்கு வாசுகி தலைவனாக இருக்கிறான். 

சங்கன், குளிகன், மஹாசங்கன்,சுவேதன், தனஞ்ஜயன், த்ருதராஷ்ட்ரன், சங்கசூடன், கம்பளன், அசுவதத்தன், தேவதரன் முதலிய நாகங்கள் வசிக்கின்றன. இவையும் மிகுந்த கோபமுள்ளவை. தங்கள் முடிகளில் உள்ள ரத்தினங்களால் பாதாள உலகின் இருளை அகற்றுகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, December 18, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 176 புவனகோச வர்ணனை - 7

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.

ராகு கிரகம் சூரியனிலிருந்து பத்தாயிரம் யோஜனைக்குக் கீழ் மேருவைச் சுற்றுகிறான்.

இயற்கையாகவே தீயவனான இவன் சிம்ஹிகையின் மகன். இவனுக்கு தேவனாகும் தகுதி கிடையாது. ஆனாலும்  மோஹினி அவதாரம் எடுத்த பகவானின் கருணையால், கிரகங்களில் ஒருவன் ஆனான். 

இவனைப் பற்றி விரிவாகப் பின்னால்‌ பார்ப்போம்.


ஓளிரும் சூரிய மண்டலம் பதினாயிரம் யோஜனை பரப்புள்ளது. சந்திர மண்டலம் பன்னிரண்டாயிரம் யோஜனை அளவுள்ளது. பகவான் அமுதத்தைப் பகிர்ந்து கொடுத்த போது, ராகு சூரிய சந்திரர்களுக்கு நடுவில் வந்தமர்ந்தான். அவர்கள் அவனைக் காட்டிக் கொடுத்ததால் அவர்களிடம்‌ பகைமை கொண்டு அமாவாசை, பௌர்ணமி காலங்களில் சில சமயம் அவர்களை மறைக்கிறான்.

இதைப் பார்த்த பகவான் ஒளி பொருந்திய தன் சுதர்சனத்தை அவர்கள் அருகில் வைத்தார். அதன் தேஜஸுக்கு பயந்து சற்று நேரம் நின்றுவிட்டு உடனே திரும்பிவிடுகிறான். இதைத்தான் மக்கள் கிரகணம் என்கிறார்கள்.

ராகுவின் இடத்திலிருந்து பத்தாயிரம் யோஜனை கீழே சித்த சாரண, கந்தர்வர்களின் இடம் உள்ளது.

அதற்குக் கீழே வாயுவின் சஞ்சாரம், மேகங்கள் தெரியும் அளவில் யக்ஷ, ராக்ஷஸ, பிசாச, பூத ப்ரேதங்களின் இடம் உள்ளது.

அதற்கும்‌ நூறு யோஜனை கீழே இந்த பூமி உள்ளது.

அன்னம், கழுகு, கருடன் ஆகியவை எவ்வளவு உயரம் பறக்குமோ அதுதான் பூமியின் எல்லை.

பூமியின் அளவை முன்பே பார்த்தோம். பூமிக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பதினாயிரம் யோஜனை தூரத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றின் நீள அகலங்களும் பத்தாயிரம் யோஜனை. 

அதலம், விதலம், சுதலம், தலாதலம், மஹாதலம், ரஸாதலம், பாதாலம் ஆகியவை கீழ் ஏழு லோகங்கள்.

ஏழும் ஒருவிதத்தில் ஸ்வர்கம் போன்றவை. இவற்றில் விண்ணுலகைக்‌ காட்டிலும் காமம், ஐச்வர்யம், மகிழ்ச்சி, மக்கட்செல்வம், ஆகியவை மிக அதிகம்.

 மாயையினால் ஆட்பட்ட நாகர்கள், தைத்யர்கள், தானவர்கள் ஆகியோர் மிகவும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் குடும்பத்துடன்  பல்வேறு வகையான கேளிக்கைகளில் ஈடு்பட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இங்கு அசுர சிற்பி மயனால் கட்டப்பட்ட பற்பல அழகான நகரங்கள் உண்டு. அவை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டவை.

இங்குள்ள மக்கள் சிறந்த மூலிகைச் சாறுகளை அருந்தி, நல்லுணவு உண்டு, நன்னீரில் நீராடுவதால், இவர்களுக்கு உடல் நோய், மனநோய், முடி நரைத்தல், மூப்பு, உடல் வியர்வை, துர்நாற்றம், சோர்வு, ஆயுளுக்கேற்ப உடலின் சக்திக் குறைபாடு ஆகிய மாறுபாடுகளே இல்லை. எப்போதும் அழகோடும் இளமையோடும், வலிமையோடும் வாழ்பவர்கள்.

பகவானின் சுதர்சன சக்கரத்தைத் தவிர வேறெதற்கும் பயப்படாதவர்கள்.

அதலத்தில் மயனின் மகன் பலன் என்பவன் வசிக்கிறான். இவன் தொண்ணூற்றாறு வகையான இந்திர ஜாலங்களை உருவாக்கியிருக்கிறான். அவற்றுள் சிலவற்றை இன்றும்கூட சில செப்படி வித்தைக்காரர்கள்  பயன்படுத்துகின்றனர்.

அதற்குக் கீழே உள்ள விதலத்தில் பகவான் பரமசிவன் ஹாடகேச்வரர் என்னும் திருநாமத்துடன் தன் பூதகணங்களுடன்  வசிக்கிறார். 

ஸுதலத்தில் மிகவும் புகழ் பெற்றவனான பலி வசிக்கிறான். இங்கு அவன் பெற்ற செல்வச் செழிப்பு இந்திர லோகத்தில்கூட இல்லை.

 பகவானின் கருணைக்குப் பாத்திரமானவன்.
இவன் எப்போதும் பகவன் நாமத்தையே ஜபிப்பவன். ஆழ்ந்த பக்தி உடையவன். 

தும்முதல், கீழே விழுதல், கால் இடறுதல், முதலிய சமயங்களிலும் தனது உண்மை நிலை மறந்து உணர்வற்று இருக்கும் நிலையிலும்கூட தன்னையறியாமல் பகவானின் திருப்பெயரைக் கூறுபவன் இவ்வுலகத் தளைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடுகிறான்.

ஆனால், முக்தி பெற விழையும் பல பெரியோர்கள் பற்பல யோக சாதனைகளையும் உபாயங்களையும் கைக்கொண்டு தங்களை‌ மிகவும் வருத்திக்கொண்டு என்றோ ஒருநாள் கரையேறுகிறார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, December 17, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 175 புவனகோச வர்ணனை - 6

சிம்சுமார சக்ரம்


நக்ஷத்ர மண்டலங்கள் அனைத்தும் மேருவை வலமாகச் சுற்றுகின்றன. இவற்றிலிருந்து இரண்டு லக்ஷம் யோஜனை உயரத்தில் சுக்கிரன் இருக்கிறார். இவர் சூரியனின் வேகத்தை அனுசரித்து முன்னும் பின்னுமாகவோ, இணைந்தோ செல்கிறார். இவர் மழையருளும் கிரகம். பெரும்பாலும் நன்மையே செய்பவர். மழையைத் தடை செய்யும் கிரகங்களைக்கூட சாந்தப்படுத்துபவர்.

சுக்ரனும் புதனும் சமமான நடையை உடையவர்கள். 

சந்திரனின் மகனான புதன் சுக்ரனுக்கு மேல் இரண்டு லக்ஷம் யோஜனை தூரத்தில் இருக்கிறார். இவரும் அநேகமாக நன்மையே செய்பவர். ஆனால், சூரியனிடமிருந்து விலகிச் செல்லும்போது அதிகமான மழை, அல்லது மழையின்மை பற்றிய பயத்தை விளைவிக்கிறான்.

இதற்கு இரண்டு லக்ஷம் யோஜனைக்கு மேல் செவ்வாய் உள்ளது. இவர் வக்ர நடையில் செல்லாமல் நேராகச் சென்றால் ஒவ்வொரு ராசியிலும் மூன்று மூன்று பட்சங்கள்  (45 நாள்கள்) தங்கிச் செல்வார். இவர் தீய விளைவுகளை உணர்த்தும் கிரகம் ஆவார்.

அதற்கு இரண்டு லக்ஷம் யோஜனைக்கு மேல் ப்ருஹஸ்பதி பகவான்  இருக்கிறார். இவரும் வக்ர கதியில் செல்லாமல் நேராகச் சென்றால் ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் தங்குவார்.

குருவிற்கு இரண்டு லக்ஷம் யோஜனைக்கு மேல் சனி பகவான் விளங்குகிறார்.

அவர் ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் தங்குவார். இவர் பன்னிரண்டு ராசிகளையும் கடக்க முப்பது வருடங்கள் ஆகும். பெரும்பாலும் தீமையை விளைவிப்பவர்.

இவை அனைத்திற்கும்‌ மேல் பதினோரு லக்ஷம் யோஜனை உயரத்தில் கச்யபர் முதலிய ஸப்தரிஷிகள் உள்ளனர். இவர்கள் உலக மக்களின் நன்மை வேண்டி, பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் துருவ பதத்தை வலம் வருகின்றனர்.

ஸப்தரிஷி மண்டலத்திற்கு மேல் பதிமூன்று லக்ஷம் யோஜனை உயரத்தில் துருவ மண்டலம் உள்ளது. இங்குதான் உத்தானபாதனின் மகனான துருவன் இருக்கிறார். கல்ப காலம் முடிந்து ப்ரளயம் வரும் வரை ஸப்தரிஷிகளும் இவரை வலம் வருகின்றனர்.
இவரது பெருமையை நான்காவது ஸ்கந்த்ததில் பார்த்தோம்.

கிரகங்கள், ஒளி மண்டலங்களை ஆளும் காலதேவன் அவை அனைத்திற்கும் ஆதாரமாக இந்த துருவ மண்டலத்தை நியமித்துள்ளார். ஆகவே அது சுற்றாமல் ஒரே இடத்தில் நிலையாக நின்று ஒளிர்கிறது.

அனைத்து கிரகங்களும் முளையில் கட்டிய மாடுகள் போல் ஒரே ஆதாரத்தைக் கொண்டு தத்தம் நடையில் சுற்றுவதால் விழாமல்‌ இருக்கின்றன.

பகவானது யோகமாயையின் ஆதாரத்தில் இருப்பதால் இந்த ஒளி மண்டலத்தை சிம்சுமார (திமிங்கலம்) வடிவில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த சிம்சுமாரம் சுருண்ட வண்ணம் தலைகீழாக உள்ளது. இதன் வால் நுனியில் துருவன் இருக்கிறார். வாலின் மத்தியில் கச்யபர், அக்னி, இந்திரன், தர்மதேவதை ஆகியோரும், வாலின் அடியில் தாதா, விதாதா என்ற  இருவரும் உள்ளனர். 

இடுப்பில் ஸப்தரிஷிகள் உள்ளனர். வலமாகச் சுருண்டிருக்கும் இந்த சிம்சுமாரத்தின் வலப்புறம் வலமாகச் சுற்றும் 14 உத்தராயண நக்ஷத்ரங்கள்‌ (அபிஜித் முதல் புனர்வசு வரை) உள்ளன. 
தக்ஷிணாயண நக்ஷத்ரங்கள் பதினான்கும் ( பூசம் முதல் உத்திராடம்) இடது புறம் உள்ளன. இதன் பின்புறம் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய நக்ஷத்ரங்கள் கொண்ட அஜவீதியும், வயிற்றில் ஆகாய கங்கையும் உள்ளன.

மேல் முகவாய்க்கட்டையில்  அகஸ்தியர், கீழ் முக வாய் க் கட்டை யில் யமன், முகத்தில் செவ்வாய், கழுத்தில் குரு பகவான், மார்பில்‌சூரியன், ஹ்ருதயத்தில் பகவான் நாராயணன் மனத்தில் சந்திரன், தொப்புளில் சுக்கிரன் இன்னும் சிம்சுமாரத்தின் உருவம் முழுவதும் மற்றும் பல தேவர்களும் உள்ளனர்.

இந்த சிம்சுமார ஸ்வரூபம் அனைத்து தேவர்களின் உருவமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருவடிவம். இவ்வுருவை தினமும் சந்தி வேளையில் நீராடித் தூய்மையாக தியானிக்கவேண்டும். இவ்வாறு தியானிப்பவனின் பாவங்கள் உடனே அழிந்து விடுகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 16, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 174 புவனகோச வர்ணனை - 5

சூரியப்பாதை -2

சூரிய ரதத்தின் ஒரு சக்கரம் பன்னிரண்டு மாதங்கள் என்னும் பன்னிரண்டு ஆரக்கால்கள்‌ கொண்டது. ஆறு பருவங்களான ஆறு நேமிகளைக்‌ கொண்டது. ஒரு குடத்திற்கு நான்கு மாதங்கள் வீதம் மூன்று குடங்களைக் கொண்டது. அதன் அச்சின் ஒரு நுனி மகாமேருவின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 
மற்றொரு நுனி மானஸோத்தர மலையில் கட்டப்பட்டுள்ளது.


இந்த அச்சில் கோக்கப்பட்ட சூரிய சக்கரம் எண்ணெய் செக்கின் சக்கரம் போல் சுழன்று கொண்டே மானஸோத்தர மலையின் மேல் சுற்று வருகிறது.

அச்சின் மேல்முனை எண்ணெய்ச் செக்கின் அச்சுபோல் துருவ மண்டலத்தின் வாயு பாசத்தினால் கோக்கப்பட்டுள்ளது.

இந்த ரதத்தின் தேர்த்தட்டு முப்பத்தாறு லட்சம் யோஜனை நீளமானது. அதன் கால்பங்கான ஒன்பது லட்சம் யோஜனை அகலமுடையது. 

இதன் நுகத்தடியியும் முப்பத்தாறு லட்சம் யோஜனை அளவுள்ளது. இந்த நுகத்தடியில்  காயத்ரி, உஷ்ணீக், அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ரிஷ்டுப், ஜகதீ என்ற சந்தஸ்ஸுகளின் பெயர்கள் கொண்ட குதிரைகள் கட்டப்பட்டுள்ளன. 

சூரிய பகவானின் தேரோட்டியின் பெயர் அருணன்.
அவர் ப்ரும்மதேவரால் இப்பணியில் அமர்த்தப்பட்டவர்.

சூரியனுக்கெதிரில்  ஸ்வஸ்தி வசனம் (நல்வாக்கு) கூறுவதற்காகவே ஒரு கணு அளவு உயரமுள்ள வால்கில்யர்கள் என்ற அறுபதாயிரம் மஹரிஷிகள் ப்ரும்மாவால்‌ நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணி சூரியனைத் துதிப்பதே..

இவர்களைத்தவிர 
ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், தேவதைகள் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருடன் சூரியனைப் பூஜிக்கிறார்கள்.

பரீக்ஷித் கேட்டார்

ரிஷிஸ்ரேஷ்டரே! சூரியன் மேஷம் முதலிய ராசிகளின் வழி செல்லும்போது மேரு, த்ருவமண்டலம் இரண்டிற்கும்  வலப்புறமாய்ச் செல்வதாகத் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறல்ல என்று கூறினீர்களே. அது எவ்வாறு?

ஸ்ரீ சுகர் கூறினார் - குயவன் சுற்றும் சக்கரத்தின் மேல் அமர்ந்து சுற்றும் எறும்பின் பாதை வேறு. ஆனால் சக்கரத்தின் மேலும்‌ அது ஒரே இடத்தில் இல்லாமல்‌ நகரும். 

அதுபோலவே நக்ஷத்ரங்கள்,  ராசிகள், மற்றும் சூரியன் ஆகியவை தனித்தனியே தத்தம் பாதையில் வெவ்வேறு வேகத்தில் சுற்றுகின்றன. அவற்றின் காலமும் மாறுபடுகிறது.

வேதங்களும் சான்றோர்களும் சாக்ஷாத் ஸ்ரீ மன் நாராயணனே ஆன சூரிய பகவானின் வழியை அறிந்து அவரது சஞ்சாரத்தின்படி தங்கள் கர்மங்களை வகுத்துக்கொள்கிறார்கள்.

மேலும்,அனைத்து உலகங்களின் ஆன்மாவாகிய சூரிய பகவான் பூமிக்கும், விண்ணுலகிற்கும் இடையே உள்ள ஆகாய மார்கத்தில் காலச் சக்கரத்தில் நின்றுகொண்டு மேஷம்‌ முதலிய ராசிகளில்‌ தங்கி பன்னிரண்டு மாதங்களையும்‌ அனுபவிக்கிறார்.


இதில் மாதம் என்பது சந்திரனின் பயணத்தின்படி வளர்பிறை‌, தேய்பிறை என்று இரு பாகங்கள் கொண்டது. பித்ருக்களின் கணக்குப்படி பகல் இரவு எனவும் சூரியனின் கணக்குப்படி இரண்டேகால் நக்ஷத்திரங்கள் எனவும் கூறப்படுகிறது. சூரியனின் வருடத்தில் ஆறில் ஒரு பங்கு, இரண்டு மாதங்கள் ஒரு ருது (பருவம்) எனப்படும்.

ஆகாய மார்கத்தில் சூரியனின் சரிபாதி பாதையைக்  கடப்பதற்கு ஆகும் நேரம் (ஆறு மாதம்) அயனம் என்கின்றனர்.

சூரியனுக்கு மேல் ஒரு லட்சம் யோஜனை தூரத்தில் சந்திரன் இருக்கிறார். இவருடைய வேகம் அதிகம் என்பதால் நக்ஷத்திரங்களுக்கும்‌ முன்னால் இருக்கிறார். ஸூரியன் ஒரு வருடத்தில் கடக்கும் பாதையை இவர் ஒரு மாதத்தில் கடக்கிறார். ஒரு பட்சத்தின் பாதையை ஒரு நாளில் கடக்கிறார்.

வளர்பிறையில் வளரும் கலைகளால் தேவர்களுக்கும்,  தேய்பிறையில் தேயும் கலைகளால் பித்ருக்களுக்கும் பகல் இரவு ஆகியவற்றை ஏற்படுத்துகிறார்.

பதினாறு கலைகள் கொண்ட சந்திரன் மனத்திற்கு ஆதாரமாவார். மனத்திற்கு ஆதார்மானதால் மனோமயன் என்றும், தானியங்களின் செழிப்பிற்குக் காரணமானதால் அன்னமயன் என்றும் அமுத கிரணங்கள் உடையதால் அம்ருதமயன் என்றும், அனைத்து ஜீவராசிகளின் செழுமைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமானதால் ஸர்வமயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சந்திரனுக்கு மேல் மூன்று லக்ஷம் யோஜனை தொலைவில் அபிஜித் என்னும் நக்ஷத்ரத்தையும் சேர்த்து இருபத்தெட்டு நக்ஷத்ர மண்டலங்கள் உள்ளன. இவையும் மேருவை வலமாகச் சுற்றி வருகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..