Monday, December 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 617

பகவான் தொடர்ந்தான்.

கர்மாக்கள் துக்கத்தைத் தரும் என்று ஞானம் பெற்று அவற்றைக் கைவிடுபவன், புலன்களை வெல்லவேண்டும்‌. மனத்தை மற்ற விஷயங்களிலிருந்து திருப்பி ஆத்மாவில் நிலை நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தும்போது மனம் அங்குமிங்கும் செல்லத் துடிக்கும்‌. அப்போது விழிப்புடன் அதைத் தவிர்த்து, அறிவுரை கூறி, தன்வசப்படுத்தவேண்டும்

புலன்களையும் ப்ராணனையும் தன்வசப்படுத்த வேண்டுமாகில் மனத்தைச் சுதந்திரமாக விடக்கூடாது.
ஸத்வகுணத்தினால் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

முரட்டுக் குதிரையில் பயணம் செய்ய விரும்புபவன், ஒரேயடியாக அதை அடக்க‌முயன்றால்‌ நடவாது. முதலில் அதன் போக்கில் சற்று விட்டுப் பின்னர் தன் வழிக்குக் கொண்டுவருவது போல மனத்தின் போக்குப்படி சில‌சமயம்‌ அனுமதித்துப் பின்னர் அறிவுரை கூறி கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

ஸாங்க்ய சாஸ்திரத்தில் ப்ரபஞ்சத் தோற்றம் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் படியே சிந்தித்தல் நலம். அதே வரிசையில் உடல் முதல் அனைத்தும் ப்ரக்ருதியில் லயப்படுவதை சிந்திக்க வேண்டும். மனம் ஒரு நிலையில் வசப்படாத வரை இந்தச் சிந்தனை உதவி செய்யும்.

உலகப் பற்று நீங்கியவன் ஆசார்யனின் வாக்கை எண்ணிப் பார்த்து உணர்ந்து ஆத்மஸ்வரூபத்தில் நிலைக்கவேண்டும். இவ்விதமான பயிற்சி தேகப்பற்றை அறுக்கும்.

யம நியமங்கள் முதலான யோகவழியில் என்னை அடையலாம். அல்லது ஆத்ம அனாத்ம என்று வஸ்துவின் மூலத்தை ஆராய்ந்து என்னைப் பூஜை செய்யலாம். அல்லது என் உருவச்சிலையை வழிபடுவது, அதற்கு உபசாரங்கள் செய்வதன் மூலம் என்னை தியானிக்கலாம். அதாவது கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் இவையே ப்ரதானமான வழிகள்.

யோகி எப்போதாவது தவறி, ஒரு தீய செயலைச் செய்ய நேர்ந்தால் அந்தப் பாவத்தை யோகத்தீயிலேயே பொசுக்கிவிடலாம். தனியாக ப்ராயசித்தம் தேவையில்லை.

எவ்வெவர்க்கு எந்தெந்த மார்கம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பின்பற்றுவதே சுலபம். குண தோஷம், விதி நிஷேதங்கள் ஆகியவை எவ்விதமாகவாவது உலகப்பற்று நீங்குவதற்காகவே ஆகும்.

பிறப்பிலிருந்தே கர்மாக்களால் வினைப்பயன் அதிகரிக்கும். அவை அசுத்தமானவை. அவற்றை ஒரு வரம்பில் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதே சாஸ்திரங்களின் அபிப்ராயம். உலகப் பற்றைக் குறைப்பதே உண்மை நோக்கம்.

என் லீலைகளினால் சிரத்தை ஏற்பட்டு எல்லா சுகங்களும் துக்கத்தின் வாசல் என்பதை அறிந்திருந்தாலும் அவற்றை முற்றிலும் விலக்க இயலவில்லை எனில் இந்த இன்ப நுகர்வு துக்கம் தரும் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த இரண்டும் கெட்டான் நிலை நீங்க என்னை வழிபடவேண்டும்.

இவ்விதமாக பக்தி நெறியைப் பின்பற்றுபவர்களின் இதயமே என் இருப்பிடம். நான் தோன்றியதும் அவனது மன மாசுக்கள் அனைத்தும் பொசுங்குகின்றன‌.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 616

உத்தவா! முன்பே ஞான, பக்தி, கர்ம யோகங்கள் பற்றி விளக்கினேன். கர்மாக்களிலும், அவற்றின் பலன்களிலும் விரக்தி அடைந்து‌ அவற்றை விட்டு விட்டவர்கள் ஞானயோகத்திற்கு அதிகாரிகள் ஆவர். கர்மபலனில் ஆசை உள்ளவர்க்கு கர்மயோகமே சரி. 

கர்மபலனை முற்றிலுமாகத் துறக்காமல் முன்வினைப் புண்ணிய பலனால் என் கதைகளில் ஈடுபாடு வந்துவிட்டால் அவனுக்கு பக்தியோகம் பொருந்தும். 

எதுவரையில் கர்மாவில் போதும் என்ற நிறைவு ஏற்படவில்லையோ அதுவரை கர்மயோகம் செய்யவேண்டும். அவரவர்க்கான தர்மத்தில் நிலை பெற்று என் மீது பக்தியுடன் கர்மாக்களைச் செய்து பலனை எனக்கு அர்ப்பணிப்பது மிகவும் சுலபமான வழி.

செய்யத்தகாதன என்று அறிவுறுத்தப்படும் கர்மாக்களை விலக்கி விதிக்கப்பட்டவற்றை பக்தியுடன் செய்தால் ஸ்வர்கமும் இல்லை, நரகமும் இல்லை. வினைப்பயன் ஒட்டாமல் போவதால் கர்மத்தளை அகன்றுவிடுகிறது.

சுவர்கத்தில் இருப்பவராயினும், நரகத்தில் இருப்பவராயினும் அவர்கள் ஆசைப்படுவது மனிதப் பிறவிக்குத்தான்.

ஏனெனில் மனித உடல்தான் யோக சாதனமாக இருக்கிறது. புண்ணிய பலனால் கிடைக்கும் தேவ உடல் பெற்று ஸ்வர்கம் செல்கிறான். பாவ பலனால் யாதனா (நிழல்) உடல் பெற்று நரகம்‌செல்கிறான். இவை இரண்டும் எந்த சாதனைக்கும் பயன்படாது. விவேகமுள்ளவன் இரண்டு உடலுக்கும் ஆசைப்படக்கூடாது. உடலில் பற்று வைத்தால் பரமாத்மாவை அடையும் முயற்சி வெற்றி பெறாது.

இம்மானுட உடல் அழியும் தன்மையுடையதுதான். ஆனால் இதை வைத்துக்கொண்டு தான் பரமாத்மாவை அடைய இயலும். எனவே புத்திசாலியானவன் மரணத்திற்கு முன்பாக ஆத்ம சாதனைகளைச் செய்து பிறவிச் சுழலினின்று விடுபடும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

உடல் என்ற மரத்தில் கூடு கட்டிக்கொண்டு ஜீவன் என்ற பறவை வசிக்கிறது‌. யமதூதர்கள் ஒவ்வொரு விநாடியும் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். வெட்டிய மரத்தை விட்டு பறவை கிளம்புவதுபோல உடலின் மீது அபிமானம் இல்லாதவன் உடலை விட்டபின் மோக்ஷத்தை அடைந்துவிடுகிறான். உடலின் மீது பற்றுள்ளவனுக்கு துக்கம் மிஞ்சுகிறது.

இரவும் பகலுமாக ஒவ்வொரு நாளும்‌ ஆயுள்‌ கழிகிறது. இதை உணர்ந்து பயத்தால் பீடிக்கப்படும் மனிதன் பரமாத்ம தத்வ ஞானத்தை அடைகிறான். 

எல்லா விதமான நற்பலன்களையும் அடைவதற்கு உடல் உதவுகிறது. அது எந்த முயற்சியும் இன்றி தானாகக் கிடைத்துள்ளது. ஸம்ஸாரக் கடலை பகவானுடைய எல்லையற்ற அருளால் கடக்க உதவுவது உடல். இந்தக் கடலில் படகைச் செலுத்துவதற்குச் சிறந்த மாலுமிகளாக இருப்பவர்கள் குருமார்கள். என்னை நினைத்தால் நான் அனுகூலமான காற்றாக வந்து என் அருளால் படகைச் செலுத்துகிறேன். இவ்வாறு அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஸம்ஸாரத்தை வெற்றி கொள்ளாதவன் தன் ஆன்மாவைத் தானே கொன்றவன் ஆவான்.

நரஜென்மம் அரிதானது - இதை
மறுக்காமல் மறக்காமல்
கருத்தினில் கொண்டு செயலாற்றுவாய் 
-மதுரகீதம்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, December 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 615

பகவான் தொடர்ந்தான்.

எந்த ஜீவனுக்கும் தீமை நினைக்காமல் இருப்பதும், தானம் மற்றும் கர்மங்களை விட்டு விடுவதே தவமாகும்.

ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் சமமாக நினைப்பது ஸத்யம், உண்மையாகவும் இனிமையாகவும் பேசுவது ரிதம் எனப்படும்‌‌. கர்மாவில் பற்றற்று இருப்பது சௌசம், கர்மங்களை விட்டுவிடுவது ஸந்நியாசம்.

தர்மம்தான் உயர்ந்த செல்வம். பரம்பொருளான நானே யக்ஞம். ஞானோபதேசம் செய்வதே தக்ஷிணை. ப்ராணாயாமம் சிறந்த பலமாகும்.

என்னுடைய ஐஸ்வர்யம் பகம். என்னிடம் பக்தி செலுத்துவதே லாபம். ஜீவன்களிடம் பேத புத்தியை நீக்குவதே வித்யை. விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய அஞ்சுவது நாணம்.

 எதற்கும் ஆசைப்படாமல்‌ இருப்பது ஸ்ரீ. சுகதுக்கத்தைக் கடப்பது சுகம். இன்பங்களில் மனத்தைச் செலுத்துவது துக்கம். பந்தம் எது, முக்தி எது என்றறிபவன் பண்டிதன்.

சரீரத்தில் நான் என்ற பற்று‌கொள்பவன் முட்டாள். சம்சாரச் சுழலினின்று விலக்கி என்னை நோக்கிச் செலுத்தும் பாதை எதுவோ அதுவே நல்வழி.

ஸத்வகுணம் மிகுந்திருப்பது ஸ்வர்கம். தமோகுணத்தின் மிகுதியே நரகம். குருவே உண்மையான உறவினர். குருவும் நானும் வெவ்வேறல்ல. 

இம்மனித உடலே‌ இல்லம். நற்குணங்களே செல்வம். கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையாதவன் தரித்திரன். புலன்களை வசப்படுத்தாததவன் க்ருபணன் (கஞ்சன்)

விஷயப் பற்றில்லாதவன் ஈஸ்வரன்‌. 
உத்தவா! நீ கேட்டவற்றிற்கு மிகத் தெளிவாக விடை கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும் குண தோஷங்கள் பற்றிப் பேசுவதால் ஒரு பயனுமில்லை.

தோஷங்களில் மனத்தைச் செலுத்துவதே குற்றம். குணம் தோஷம் ஆகியவற்றைக் கடந்து ஆத்ம ஸ்வரூபத்தில் பார்வையை நிறுத்துவதே குணமாகும். என்றான்.

உத்தவர் அடுத்த கேள்வி கேட்டார். கண்ணா! வேதங்கள் தங்கள் ஆணைகளாகும்‌. அவற்றில் செய்யத் தகுந்த, மற்றும் தகாத கர்மாக்கள் பற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளதே. எனில் கர்மாக்களின் குண தோஷம் பற்றிச் சிந்திக்காமல் அவற்றை எவ்வாறு செய்ய இயலும்? குண தோஷங்களைப் பார்க்காமல்  கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவது எவ்வாறு? இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துவீர்களா? என்று கேட்டார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, December 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 614

உத்தவா! பக்தியோகம் பற்றி உனக்கு முன்பே கூறியிருப்பினும் நீ ஆர்வத்துடன் கேட்பதால் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறேன். 

என் கதைகளைக் கேட்கவேண்டும் என்ற பேராவல்,
எப்போதும் என் லீலைகளைச் சொல்வது,
என்னைப் பூஜை செய்வதில் உறியான நம்பிக்கை,
தோத்திரங்களை ஆசையுடன் சொல்வது,
பூஜை செய்வதில் ஈடுபாடு,
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது,
என்னை விடவும் என் அடியார் மீது அதிக அன்பு,
அவர்களைப் பூஜிப்பது,
எல்லா ஜீவன்களிடத்திலும் என்னையே காண்பது,
எல்லா நிகழ்வுகளையும் என் செயலாகவே காண்பது,
மனத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்வது,
மற்ற எல்லா விருப்பங்களையும் விட்டுவிடுவது,
என் பொருட்டு பொருள், சுகம், போகங்கள் அனைத்தையும் விடுவது,
தானம், வேள்வி, யாகம், ஜபம், விரதம் அனைத்தையும் என் த்ருப்திக்காகச் செய்வது,
இவற்றையெல்லாம் பின்பற்றி ஒருவன் மனத்தை என்னிடம் செலுத்துவானாகின் அவனுக்குத் தூய்மையான அன்புமயமான பக்தி ஏற்படும். என்னிடம் பக்தி ஏற்பட்டபின் அடையவேண்டிய வஸ்து ஒன்றுமில்லை.

இவ்வுலகம் வெறும் வெளித் தோற்றமாகும். உண்மையில் இல்லை. மனம் உலகப் பொருள்களில் ஈடுபட்டால் புலன்கள் அலையத் துவங்கும். மனத்தில் ரஜோ குணம் தலை தூக்கி அசுத்தமடையும். இந்நிலையில் பக்தி, தர்மம், வைராக்யம் ஆகியவை அழிந்துபோகும்.

எதனால் என்னிடம் பக்தி வருமோ அதுவே தர்மம். எல்லாவற்றிலும் என்னைக் காண்பது ஞானம். புலனுகர் பொருள்களில் மயங்காமல் இருப்பது வைராக்யம். சித்திகள் அனைத்தும் ஐஸ்வர்யம் ஆகும்.

என்று முடித்தான் பகவான்.

உத்தவன் அடுத்த கேள்வியைத் தயாராக வைத்திருந்தார். 

கமலக் கண்ணா! தானம், தவம், சாதுர்யம், ஸத்யம், ரிதம், தியாகம், நீங்காத செல்வம், யக்ஞம், தக்ஷிணை இவற்றின் பொருள் என்ன? எது பலம்? பலம் என்றால் என்ன? லாபம் என்பதென்ன? உயர்ந்த கல்வி, நாணம், வளமை, சுகம், துக்கம் இவற்றைப் பற்றிக் கூறுங்கள்.

எவன் பணக்காரன்? ஏழை என்பவன் யார்? ஈஸ்வரன் யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை பகருங்கள்.
என்றார்.

கண்ணன் உத்தவரை தீர்கமாகப் பார்த்தான். பின்னர் பேசத் துவங்கினான்.

உத்தவா! யமம் என்பது 12 வகைப்படும். அஹிம்சை (பிறரைத் துன்புறுத்தாமை), ஸத்யம், திருடாமை, எதிலும் ஒடாமல் தனித்து விளங்குவது, நாணம், பொருள்களைத் தேவைக்கு அதிகமாகச் சேர்க்காமை, சாஸ்திரங்களிடத்தும், என்னிடத்தும் நம்பிக்கை, ப்ரும்மச்சர்யம், மௌனம், நிலையான புத்தி, பொறுமை, அச்சமின்மை ஆகிய பன்னிரண்டும் யமம் ஆகும்.

சௌசம் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் சேர்ந்த தூய்மை), ஜபம், தவம், ஹோமம், சிரத்தை, விருந்தோம்பல், எனக்குப் பூஜை செய்வது, பிறர்க்குதவி, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வது, கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது, குரு சேவை, ஆகியவை நியமம் ஆகும். 
மனத்தை என்னிடம் செலுத்துவது சமம். புலன்களை அடக்குவது தமம். துன்பங்களைச் சகித்துக் கொள்வது திதிக்ஷா, நாவையும், காமத்தையும் வெற்றிகொள்வது திருதி எனப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 613

ஞானிக்கு மிகவும் பிரியமானவன் நானே. எனக்கும் ஞானி மிகவும் இஷ்டமானவன். ஞானி என்னை எப்போதும் இதயத்தில் தாங்குகிறான். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் புனிதத்தை வேறெந்த சாதனையும் தர இயலாது. 

ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையால் இவ்வுடல் ஏற்படுகிறது. பூர்வ கர்மா இல்லையெனில் உடல் உருவாகாது. முதலில் உடல் இருப்பதில்லை. கடைசியிலும் இருக்கப்போவதில்லை. பிறப்பு, இருப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு, மறைவு எதுவுமே உங்களோடு சம்பந்தப்படவில்லை. 

உத்தவர் கேட்டார்.
கண்ணா! எல்லா உலகங்களுக்கும் அதிபதியே! தூய்மையான இந்த ஞானத்தை ப்ரும்மா உள்பட அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஏற்படும் விதமாக உங்களிடம் பக்தி செய்வது எப்படி?

பாமர மக்கள் இருண்ட பாழுங்கிணற்றில் விழுந்திருக்கிறீர்கள். காலம் என்ற பாம்பினால் தீண்டப் பட்டுள்ளார்கள். அப்படியும் புலன் இன்பங்களில் ஆழ்ந்திருக்கிறார்கள். இவற்றிலிருந்து விடுவிக்கக்கூடிய இன்சொற்களைக் கூறுங்கள். 

என்றார். 

கண்ணன் மீண்டும் பதிலுரைக்கத் துவங்கினான். இதே கேள்விகளை ஒரு சமயம் யுதிஷ்டிரர் பீஷ்மரைக் கேட்டார். 

பாரத யுத்தம் முடிந்து மனம் கலங்கியிருந்தார் தர்மபுத்திரர். உற்றார் உறவினர் அனைவரும் யுத்தத்தில் மாண்டுபட்டதால் அவர் மனம் மிகவும் வாட்டமுற்றது.

அவர் பீஷ்மரிடம் சென்று பல விதமான தர்மங்களைக் கேட்டு அறிந்தார். அதன் பின் பிதாமகர் அவருக்கு முக்தியின் வழியையும் விளக்கினார்‌.

பீஷ்மர் கூறியவற்றின் சாரத்தை உனக்குச் சொல்கிறேன் உத்தவா! கவனமாகக் கேள்! என்று துவங்கினான் கண்ணன்.

மீண்டும் ப்ரக்ருதி புருஷன், ஆத்மா, ச்ருஷ்டி, ஸ்திதி, பஞ்ச பூதங்கள், தன்மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறினான் கண்ணன். 
அவை அனைத்திலும் பரமாத்மாவே இருக்கிறார் என்றறிவது ஞானம். 

இவ்வுலகம் பலவகையான பொருள்களால் ஆனது என்றெண்ணாமல் ஒரே பொருளால் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்வது விஞ்ஞானம். 

நூல்களைப் படித்து அறிவது பரோக்ஷ ஞானம் (விஞ்ஞானம்) என்றும், அனுபவத்தால் அறிவது அபரோக்ஷ ஞானம் (மெய்ஞானம்) என்றறியப்படுகிறது.

உற்பத்தி, இருப்பு, ஆகியவற்றில் உள்ளோட்டமாக பின்னியிருப்பது, அனைத்தும் அழிந்தாலும் அழியாத சத்ய வஸ்து எதுவோ அதுவே ஸத் எனப்படும். 

ஒரு விஷயத்தை ஆராய வேதம், ப்ரத்யக்ஷம், மேலோர் வாக்கு, அனுமானம் ஆகிய நான்கு ப்ரமாணங்கள் உண்டு. அவற்றின்படி பார்த்தாலும், கண்களால் காணப்படும் பொருள் அனைத்துமே மாறுதலுக்குட்பட்டது என்பதால் சத்யம் இல்லை என்பது தெளிவாகும். விவேகியாக இருப்பவன் அவற்றைத்தள்ளி வைராக்யம் கொள்ள வேண்டும். 

சுவர்கம், யாக யக்ஞங்களால் அடையப்படும் உலகங்கள், ஸத்யலோகம் உள்பட அனைத்தும் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அழியக்கூடியவையே. அதனால் மெய்ப்பொருளை உணர்வது ஒன்றே எப்போதும் சாந்தி தரக்கூடியது. 

பக்தியோகத்தின் விளக்கத்தை உனக்கு முன்பே விரிவாகக் கூறினேன் உத்தவா! இருப்பினும் உன் ஆர்வத்தின் காரணமாக மீண்டும் விளக்குகிறேன்.

என்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, December 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 612

கண்ணன் அதன் பின் ஒவ்வொரு ஆசிரமத்திலிருப்பவரின் கடைமைகளையும் விளக்குகிறான். 

ப்ரும்மச்சாரி, இல்லறத்தான், வானப்ரஸ்தம் மற்றும் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாக விளக்குகிறான். நைஷ்டிக ப்ரும்மச்சர்யம், உஞ்ச வ்ருத்தி தர்மம், ஒவ்வொரு நிலையிலும் செய்யத் தக்கன எவை, தகாதன எவையெவை என்பதெல்லாம் கூறும் கண்ணன் அதே சமயம் பக்தியை விட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறான். 

பக்தனானவன் விதிக்கப்பட்ட குடும்பக் கடைமைகளைச் செய்துகொண்டு என்னை ஆராதிக்கலாம். அல்லது காட்டுக்குச் செல்லலாம். புதல்வன் இருப்பின் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஸந்நியாசியும் ஆகலாம். எந்த நிலையிலும் அவனது பக்தியை அவன் கைவிடாமல் இருப்பானானால் என்னால் காப்பாற்றப் படுகிறான். 

நான் ஈஸ்வரனாக இருந்தபோதிலும் கர்மாக்களை லீலையாகச் செய்கிறேன். அதே போல பக்தனும் விதிகளுக்கு அடிமையாகிச் செய்ய வேண்டியதில்லை. பலனளிப்பவன் நானே என்பதால் என் ப்ரீதிக்காக கர்மாக்களை ச்ரத்தையாகவும், சுமையாகக் கருதாமலும், அவற்றின் பிடிகளில் மாட்டிக்கொள்ளாமலும் செய்ய வேண்டும். 

ஞானிக்கு வேற்றுமை என்பதே இல்லை.

எப்போதாவது பேத புத்தி ஏற்பட்டாலும் அது மறைந்துவிடுகிறது. 

அனுபவிக்கும்போது மகிழ்ச்சி தரும் பொருள்கள் பின்னர் துன்பங்களை விளைவிக்கின்றன. 
என்னை அடையும் வழி அறியாவிடின் ப்ரும்மநிஷ்டரான ஒரு ஆசார்யரிடம் சரணாகதி செய்யவேண்டும். குருவிடம் திடமான பக்தியும் சிரத்தையும் வைக்கவேண்டும். அவரிடம் குற்றம் காணலாகாது. குருவும் நானும் ஒன்றே என்று எண்ணி பக்தி செய்யவேண்டும்.

காமத்தை அடக்காமல், புலன்களை வெல்லாமல், ஞான வைராக்யம் இல்லாமல் ஸந்நியாச ஆசிரமத்தில் இருப்பவன், மூங்கில் தண்டத்தைச் சுமந்து வயிற்றைப் போஷிப்பவன் ஆவான். அவன் ஸந்நியாச தர்மத்தை அழிப்பதோடு தனக்குள் ஆத்மாவாக விளங்கும் என்னை ஏமாற்றுகிறான். உடை மட்டும் காவியாக இருந்து உள்ளத் தூய்மை இல்லையெனில் இகத்திலும் பரத்திலும் சௌக்கியம் இல்லை.

துறவிகளின் முக்கியமான தர்மம் சாந்தியும், அஹிம்சையுமாகும்‌. வானப்ரஸ்தனின் முக்கிய தர்மம் தவமும் பக்தியும். இல்லறத்தானின் முக்கிய தர்மம் மற்ற ஜீவன்களைக் காப்பாற்றுவது, ப்ரும்மச்சர்யம், அனைவரிடத்தும் அன்பு, ஆகியவை. ப்ரும்மச்சாரியின் முக்கிய தர்மம் குரு சேவை செய்வதே‌.

இவ்விதமாக வேறு விஷயங்களில் மனத்தைச் செலுத்தாமல் எனக்குச் சேவை செய்து வருபவன், எல்லா ஜீவன்களிடமும் என்னையே காண்பவன் ஆகியோருக்கு என்னிடம் அசைக்க முடியாத பக்தி உண்டாகிறது.

அதன் காரணமாக உள்ளத் தூய்மையடைந்து தெள்ளறிவு பெற்று என்னையே அடைந்துவிடுவான்.
தன் இயல்பான கர்மாக்களுடன் பக்தியைச் சேர்த்து செய்வதே போதும். வேறு முயற்சிகள் இல்லாவிடினும் முக்திப் பாதை திறக்கும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, December 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 611

கண்ணன் தொடர்ந்தான். 
அந்தணர்களிடம் பக்தியுடன் இருப்பவர்களுள் நான் பலிச் சக்ரவர்த்தி. 

நடக்கும்‌ laசக்தி, ஜீரண சக்தி, பேசும் சக்தி, கைகளின் சக்தி, சுகங்கள் அனைத்தும் நானேயாவேன். தோலின் தொடு உணர்ச்சி, கண்களின் பார்வை, நாவின் ருசி, கேட்கும் திறன், வாசனையை உணர்தல் ஆகிய ஐந்து ஞானேந்திரியக் கர்மாக்களாகவும் நானே இருக்கிறேன். 

பூமி, வாயு, அக்னி, ஆகாயம், நீர் ஆகியவற்றின் தன்மாத்திரைகள், அஹங்காரம், மஹத் தத்துவம், ஜீவன், ப்ரக்ருதி, ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய விகாரங்களாக இருப்பவனும் நானே. 

தத்துவங்களின் எண்ணிக்கை, அவற்றின் லட்சணங்கள், உணரும் அறிவு, பயன் அனைத்தும் நானே. நானே ஈஸ்வரன், நானே ‌ஜீவன், நானே குணம், நானே எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறேன். என்னைத் தவிர வேறெந்தப் பொருளும் இங்கு இல்லை உத்தவா. 

பரமாணுக்களைக் கூட எண்ணிவிடலாம். என் விபூதிகளை எண்ண இயலாது. 
எங்கெல்லாம் தேஜஸ், செல்வம், புகழ், ஐஸ்வர்யம், தியாகம், அழகு, பொறுமை, பராக்ரமம், விஞ்ஞானம் ஆகியவை உள்ளனவோ அனைத்தும் என் அம்சங்களே. 

உத்தவா! நீ கேட்டபடி என் விபூதிகளை சுருக்கமாகச் சொன்னேன். ஆனால் இவையனைத்தும் மனோவிகாரங்கள். மனத்தால் சிந்திக்கத் தக்கதும், பேசத் தக்கதுமான எப்பொருளும் மெய்யாகாது. 

நீ ப்ராணனை வசப்படுத்தி ப்ரபஞ்சத்தை நோக்கிச் செல்லும் புத்தியை அடக்கவேண்டும். அப்போதுதான் பிறவிச் சுழலினின்று விடுபட இயலும். 

வாக்கையும் மனத்தையும் அடக்காமல் எவ்வளவு பூஜை, தியானம், விரதம் தானம் ஆகியவற்றைச் செய்தாலும் பயனில்லை. அவை பச்சை மண் குடத்தில் பிடித்த நீராக வீணாகும். 

என்னிடம் பக்தியுடன் மனம், வாக்கு, ப்ராணன் ஆகியவற்றை தன்வயப்படுத்தினால் வினைகள் முடிவடையும்.

அவரவர் எவ்வெந்த நியதியில் இருக்கிறார்களோ அதைப் பின்பற்றி என்னிடம் பக்தி செய்து பயனை எனக்கு அர்ப்பணிக்கவேண்டும்‌. அனைவரும் என் அம்சங்களே என்பதை மனத்தில் கொண்டால் துவேஷபுத்தி வராது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 610

உத்தவர் கேட்டார். கண்ணா! நீயே ப்ரும்மம் ஆவாய். எதனாலும் மறைக்க இயலாத மறை பொருள் நீயே. எல்லா பொருள்களிலும் வியாபித்திருக்கிறாய். நீ யார் யாருக்கு எவ்வெவ்வாறு காட்சி கொடுத்து முக்தி அளித்தாயோ அதையெல்லாம் நான் அறியலாமா? என்றார்.

கண்ணன் சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கூறலானான். உன் ஆர்வம் என்னை மகிழ்வூட்டுகிறது உத்தவா. இதே கேள்வியை முன்பொரு சமயம் அர்ஜுனன் போர்முனையில் நின்றுகொண்டு கேட்டான். 

அரசுரிமைக்காக உறவினரைக் கொல்வது பாவம். அதர்மம். என்று கூறி போரிலிருந்து விலக எண்ணினான். அப்போது நான் அவனுக்குப் பல விஷயங்களை எடுத்துக்கூறி ஞானத்தை போதித்தேன். 

நானே எல்லா உயிர்களின் ஆன்மா, நண்பன், தலைவன். அனைத்து பொருள்களின் தோற்றம், இருப்பு, அழிவு ஆகியவற்றின் காரணமும் நானே. நானே நற்கதி. காலமும் நானே. படைப்புக்கு முன்னும் பின்னும் இருப்பவன் நானே. ஜெயிக்க முடியாத பொருள்களில் என் ஸ்வரூபம் மனமாகும். வேதத்தை முழுமையாக அறிந்தவர்களுள் நான் ஹிரண்யகர்பன். மந்திரங்களுள் ப்ரணவம் நானே. அக்ஷரங்களில் நான் அ காரமாவேன். சந்தங்களில் காயத்ரியாவேன். தேவர்களுக்குள் இந்திரனும் அஷ்ட வசுக்களில் அக்னியும், பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஷ்ணுவும், பதினோரு ருத்ரர்களுள் நீலலோஹிதனும் நானே.

சித்தர்களில் கபிலர், பறவைகளில் கருடன், ப்ரஜாபதிகளில் தக்ஷன், பித்ருக்களில் அர்யமா, அசுரர்களில் ப்ரஹ்லாதனாக இருக்கிறேன். நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன் நானே. யக்ஷர்களில் குபேரன் நான். மனிதர்களில் அரசனாக இருக்கிறேன். குதிரைகளுள் உச்சைஸ்ரவஸ், உலோகங்களுள் தங்கம், தண்டிப்பவர்களுள் யமன், பாம்புகளில் வாசுகி. நாகராஜர்களுள் ஆதிசேஷன், கொம்பும், தெற்றுப்பல் உடைய விலங்குகளுள் சிங்கம் நான். நால்வகை ஆசிரமங்களில் சந்நியாசம் நான். வர்ணங்களுள் ப்ராமணன். புண்ணிய தீர்த்தங்களுள் கங்கை. நீர்நிலைகளுள் கடலாவேன்.

ஆயுதங்களுள் வில். வில்லேந்தியவர்களுள் பரமேஸ்வரன் நானே. உயர்ந்த ஸ்தானங்களுள் மேரு. பெரு முயற்சிக்குப் பின் அடையும் இடங்களுள் ஹிமாசலம், மரங்களில் அரசமரம், தானியங்களில் யவம் (நெல்).
புரோஹிதர்களில் வஸிஷ்டர். வேதம் அறிந்தவர்களுள் ப்ருஹஸ்பதி, படைத்தலைவர்களுள் ஸ்கந்தன், நன்னெறி பரவச் செய்பவர்களுள் ப்ரும்மா ஆவேன்.

ஐம்பெரும் வேள்விகளில் வேதம் ஓதுதல் என்னும் ப்ரும்ம யக்ஞம் நான்,‌ விரதங்களுள் அஹிம்சையாக இருக்கிறேன். தூய்மைப் படுத்துபவர்களுள் வாயு, அக்னி, சூரியன், நீர், வாய்ச்சொல் மற்றும் ஆன்மா அனைத்தும் நானே. அஷ்டாங்க யோகங்களுள் ஸமாதி, ஜெயிக்கும் ஆலோசனைகளுள் ரகசிய ஆலோசனை. அறிவு பூர்வமான வாதங்களுள் ப்ரும்ம வித்தை. தத்துவங்களில் எண்ணிக்கையில் அறிய இயலாத விகல்பமாக(infinity) இருக்கிறேன்.

பெண்களுள் சதரூபை, ஆண்களுள் ஸ்வாயம்புவ மனு, மாமுனிவர்களுள் நாராயண ரிஷி, ப்ரும்மச்சாரிகளுள் ‌‌ஸனத்குமாரர். ரகசியங்களுள் மௌனம், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்களுள் காலமாவேன். ருதுக்களில்‌ வசந்தம், மாதங்களில்‌ மார்கழி. நட்சத்திரங்களுள் அபிஜித்.

நான்கு யுகங்களில்‌ க்ருதயுகம் நான். அறிவாற்றல் மிக்கவர்களுள் தேவலர், அஸிதர். வியாஸர்களுள் க்ருஷ்ணத்வைபாயனர். பேரறிவாளர்களுள் சுக்ராச்சாரியார். 
என்னிடம் ப்ரேம பக்தி செலுத்துபவர்களுள் நீயாக இருக்கிறேன் உத்தவா. கிம்புருஷர்களுள் ஹனுமான். வித்யாதரர்களுள் சுதர்சனன். ரத்தினங்களுள் பத்மராகம். மலர்களுள் தாமரை. புல்வகைகளுள் குசம் எனப்படும் தர்ப்பை. வேள்விகளில் ஆஹுதிகளுள் பசு நெய் நான். நன்முயற்சி செய்பவர்களின் செல்வம், கபடர்களுள் சூதாடி. துன்பங்களைப் பொறுப்பவர்களின் பொறுமை. ஸாத்வீக குணமும் நானே. 

பலம் மிக்கவர்களின் பலம், பக்தர்களின் பயன் பாராக் கர்மம் நான். விஷ்ணு மூர்த்தங்களில் வாசுதேவன். கந்தர்வர்களில் விசுவாவஸு. அப்ஸரஸ்களில் பூர்வசித்தி. மலைகளின் அசையாத் தன்மையும், புவியின் மணமாகவும் இருக்கிறேன். நீரின் நீர்மை என்பது நானே. ஒளிபொருந்தியவைகளுள் அக்னி. சூரிய சந்திரர்களின் கிரணங்கள் நான். ஆகாயத்தில் அதன் குணமான சப்தம் நான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, December 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 609

கண்ணன் தொடர்ந்தான். மனம், உடல், வாயு ஆகியவற்றுடன் சேர்ந்து என்னை தியானிப்பவனுக்கு மனோஜவம் என்ற சித்தி கிடைக்கும். அதனால் அவனால் அவன் விரும்பும் இடத்திற்கு நினைத்த கணமே செல்லமுடியும். 

மனத்தைக் காரணமாக வைத்து வேறு வடிவத்தை அடைய விரும்பினால் அது கிடைக்கும். அதற்கு அவன் சித்தத்தை முழுவதுமாக என்னிடம் ஊன்றி மாற விரும்பும் வடிவைச் சிந்திக்கவேண்டும். 
ஒரு யோகி மற்றொரு உடலில் ப்ரவேசிக்க விரும்பினால் அவன் செய்யவேண்டியது யாதெனில், அடைய வேண்டிய உடலில் தான் இருப்பதாகச் சிந்திப்பது. அப்படிச் செய்தால் சூக்ஷ்ம ரூபமான ப்ராணன் வாயுவுடன் சேர்ந்து மலருக்கு மலர் தாவும் வண்டைப்போல் தாவிவிடும். 

தான் விரும்பும் நேரத்தில் மரணம் அடைய விரும்புபவன் குதிகாலினால் மலத்துளையை மூடிக்கொண்டு ப்ராணனை இதயம், மார்பு, கழுத்து, தலை என்ற வரிசையில் எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர் உச்சந்தலையில் உள்ள ப்ரும்மரந்திரத்தில் வெளியேற்றி ப்ரும்மத்தில் லயிக்கச் செய்து உயிரை விடவேண்டும்.

ஒருக்கால் மேலுலகங்கள் சென்று விளையாட ஆசை இருப்பின் என்னுடைய ஸகுண ரூபத்தை தியானிக்க வேண்டும். அப்போது ஸத்வகுணமுள்ள அப்ஸரஸ்கள் வந்து அவனை விமானத்தில் ஏற்றி மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்வர்.

சத்ய சங்கல்பனான என்னிடம் சித்தத்தை நிறுத்துபவனின் எண்ணங்கள் யாவும் சத்யமாகும்.   
ஈஷித்வமும், வசித்வமும் என் இயல்புகள். அதனால் என் ஆணையை எவராலும் மீற இயலாது. எல்லோரும் என் ஆதிக்கத்திற்குப் பணிவார்கள். என்னைத் தியானிப்பவனின் ஆணையையும் எவராலும் மீற இயலாது.

என்னிடம் காரணமற்ற பக்தி செலுத்தி மனத்தூய்மை பெற்று தாரணையைத் தெரிந்து கொண்டால் 
பிறப்பு, இறப்பு, முற்கால விஷயங்கள் அனைத்தும் புலப்படும். 

நீர்வாழ் பிராணிக்கு நீரால் அழிவு ஏற்படாது. அதுபோல் என்னிடம்‌ ஒன்றிய சித்தமுடையவன் யோகமயமாகிவிடுகிறான். நீரும் நெருப்பும் அவனை ஒன்றும் செய்யாது.

ஸ்ரீவத்ஸம், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றுடன் என்னை தியானிப்பவரை எவராலும் வெல்ல இயலாது. 

எல்லா வகையான சித்திகளும் என்னை தியானிப்பது ஒன்றினாலேயே கிடைக்கும். ஆனால் உத்தவா! என்னிடமே ஒன்றுபவர்களுக்கு இவையெல்லாம் இடையூறுகள் என்று சொல்கிறார்கள். இவை என்னை அடையத் தாமதப்படுத்தும். 

பிறப்பு, தவம், மந்திரம் ஆகியவற்றால் என்னென்ன சித்திகள் கிடைக்கிறதோ அவையனைத்தும் யோகத்தினாலேயே கிடைப்பவை. ஆனால் அவற்றால் யோகத்தின் பயனான நான் கிடைக்கமாட்டேன். 

அத்தனை விதமான யோகங்கள், ஸாங்க்யம், தர்மம் அனைத்திற்கும் நானே தலைவன். 

எல்லா ப்ராணிகளுக்குள்ளேயும் வெளியேயுமாய் முழுவதுமாக வியாபித்திருப்பவன் நானே என்று சொல்லி கண்ணன் சிரித்தான்.
உத்தவர் திருதிருவென்று விழித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, December 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 608

யோகதாரணையால் அடையப்படும் சித்திகளைப் பற்றிக் கூறினேன். இவ்வகை சித்திகள் எவ்வாறு கிடைக்கின்றன என்பதைக் கூறுகிறேன் கேள் உத்தவா! என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களின் ஆதார வடிவம் தன்மாத்திரை எனப்படும். அதுவும் என் ஸ்வரூபமே. அவைகளின் சூட்சும ஸ்வரூபம் நான்தான். தன் மனத்தை தாரணை செய்து தியானிப்பவர்க்கு அணிமா ‌சித்தி கிடைக்கும்.

மஹத் என்னும் தத்துவமும் நானே. அந்த தத்துவத்தில் மனத்தை நிலைநிறுத்துபவனுக்கு மஹிமா சித்தி கிடைக்கிறது.

நான் அணுவுக்கும் அணுவாக அத்தனை இடத்திலும் நிறைந்திருக்கிறேன். அந்தப் பரமாணு ரூபத்தில் லயிப்பவன் லகிமா என்னும் சித்தியை அடைகிறான். 

மனம் எல்லாப் புலன்களையும் ஆட்டிப் படைக்கிறது. அஹம் என்னும் தத்துவத்தின் ஸத்வகுண மாறுபாட்டினால் தோன்றுகிறது. என் அஹங்கார தத்துவத்தில் மனத்தை நிறுத்தி புலன்களை அடக்கி ஆளும் யோகிக்கு ப்ராப்தி என்ற சித்தி கிடைக்கும்.

பிறப்பற்ற நானே மஹத் ஆவேன். நானே அனைத்திற்கும்‌ காரணமான சூத்ராத்மா அதாவது மூலாத்மா. என்னிடம் மனத்தை நிறுத்துபவர் ப்ரகாம்யம்‌ எனும் சித்தியை அடைவார். அவர் ப்ரும்மாண்டம் முழுவதையும் ஆளும் சக்தி பெறுவார்.

எங்கும் வியாபித்த பொருள் நான். முக்குணத்தைத் தூண்டும் மாயையை ஆள்பவனும் நானே. ப்ரம்மாண்டத்தை அழிக்கும் சக்தி படைத்த காலன் நான். க்ஷேத்ரமாகிய உடல், க்ஷேத்ரக்ஞனாகிய ஜீவாத்மா இரண்டையும் தூண்டுபவன் நான். இப்படியாக எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் என் விஷ்ணு வடிவத்தில் லயிப்பவன் ஈஷித்வம்‌ என்ற சித்தியைப் பெறுகிறான்.

பகவான் என்ற சொல்லுக்குப் பொருள் நாராயணன் எனப்படும் நானே. விராட், ஹிரண்யகர்பன், காரணம் என்ற நிலைகள் தாண்டி நான்காவதாக நிற்கும் என்னிடம் மனத்தைச் செலுத்தும் யோகிக்கு வசித்வம் கைவரப்பெறும்.

நிர்குணப்ரும்மமாக என்னை உபாசிக்கும் யோகிக்கு எல்லா விருப்பங்களும் அழிகின்றன. அவன் காலவசாயிதா என்ற சித்தியை அடைகிறான். 

ச்வேத த்வீபத்தின் தலைவனான என்னை தியானிப்பவன் பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம் ஆகிய ஆறு துன்பங்களையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறான்.

அனைத்துப் ப்ராணன்களின் ஸ்வரூபமான ஆகாசம் நானே. இவ்வடிவில் என்னை தியானம்‌செய்து அநாஹத ஒலியை தியானம் செய்பவன் ஆகாயத்திலுள்ள எல்லா உயிர்களின் ஒலிகளையும் கேட்கும் சக்தி பெறுகிறான்.

தன் கண்களில்‌ சூரியனையும் சூரியனை நானாகவும் தியானம் செய்பவன் மிக நுட்பமான பார்வையைப் பெறுவான். அவன் இருக்குமிடத்திலிருந்தே உலகம் முழுவதையும் காணும் சித்தியை அடைவான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 607

பகவான் தொடர்ந்தான். உடலுக்குள் இதயத்தாமரை தண்டு மேலாகவும் மொட்டு கீழாகவும் அதன் எட்டு தளங்களும் மேல் நோக்கி மலர்ந்திருப்பது போலவும் நடுவில் ஒரு காய் இருப்பது போலவும் பாவனை செய்யவேண்டும். அந்தக் காயில் சூரியன் சந்திரன் அக்னி ஆகியவை ஒன்றன்மேல் ஒன்றாக இருப்பதாகக் கொண்டு அதன் மேல் என்னுடைய இந்த உருவத்தைப் பார்க்கிறாயல்லவா? இதை தியானம் செய்யவேண்டும்.

அழகாக அளவாக அமைந்த உறுப்புகள், அமைதி கொண்ட அழகிய முகம்,‌ நீண்ட நான்கு கைகள், அழகிய கழுத்து, செவ்வரியோடும் கன்னங்கள், மனம் மயக்கும் புன்னகை, மின்னும் மகர குண்டலங்கள், பட்டாடை, கார்மேக வர்ண மேனி, மார்பில் ஸ்ரீ வத்ஸம், சங்கு, சக்ரம், கதை, வனமாலை பாதங்களில் நூபுரம், கழுத்தில் கௌஸ்துபம், கிரீடம், கங்கணம், அரைஞாண், தோள்வளை, அழகிய பார்வை, இத்தகைய மனம் மயக்கும் வடிவத்தின் ஒவ்வொரு அங்கமாக தியானம் செய்யவேண்டும். புலன் நுகர் பொருள்களிலிருந்து மனத்தைத் திருப்பி என்னிடம் செலுத்த வேண்டும். பூரண வடிவத்தியானம் கைகூடியபின், ஏதேனும் ஒரு அங்கத்தில் மனத்தை நிறுத்தவேண்டும்.

வேறு அங்கங்களை விட முகத்தில்‌ நிறுத்துவது சிறந்தது. முகத்தில் நிலைபெற்ற சித்தத்தை ஆகாயத்தில் செலுத்தி, பின்னர் எதைப் பற்றியும் நினைக்காமல் இருக்கப் பழகவேண்டும்.

என்னிடம் மனத்தைச் செலுத்தும் யோகிக்கு மற்ற எல்லாவற்றின் மேலுள்ள பற்று விட்டுவிடும்.

இவ்வாறு தியானம் கைகூடி சித்தத்தை என் மேல் நிறுத்தி அதை வெற்றி கொண்டவுடன் அவனுக்கு எல்லா சித்திகளும் கைவரப்‌பெறும்.

உத்தவர் இடைமறித்தார். கண்ணா! சித்தி என்றால் என்ன? எந்த விதமான தாரணையினால் (மனப்பயிற்சியால்) சித்தி வரும்? சித்திகள் எத்தனை? உன்னால்தான் தெளிவாகக் கூற இயலும். ஏனெனில் நீதான் யோகிகளுக்குப் பலனைக் கொடுப்பவன்.

பகவான் பொறுமையுடன் பதில் கூறத் துவங்கினான்.

உத்தவா! யோகத்தில் முழுமை பெற்ற யோகிகள் சித்திகள் பதினெட்டு வகைப்படும்‌ என்கிறார்கள். அவைகளுள் எட்டு சித்திகள் என்னை மையமாகக் கொண்டவை. மீதி பத்தும் ஸத்வகுணத்தினால் அடையத் தக்கவை. 

அணிமா, மஹிமா, லஹிமா ஆகிய மூன்றும் உடலைச் சார்ந்தவை. விரும்பியதை அடையும் சித்தி ப்ராப்தி ஆகும். அது பொறிகளைச் சார்ந்தது. நேரில் பார்த்ததும் கேட்டதுமான விஷயங்களை அனுபவிப்பது பிராகாம்யம் எனப்படும். மாயையும் அதன் காரியங்களையும் கையாளுவது ஈஷிதா எனப்படும். புலன் இன்பங்களில் பற்றற்று இருப்பது வஶிதா எனப்படும். தான் விரும்புவதின் எல்லை வரை சென்று அனுபவிப்பது எட்டாவது சித்தி. இவை எட்டும் என்னிடம் இயற்கையாகவே உள்ளவை. 
இவைகளைத் தவிரவும் பல சித்திகள் உண்டு.

பசி, தாகம், காமம், குரோதம் ஆகியவை இல்லாமல் இருப்பது, தூரத்திலுள்ள பொருளைப் பார்ப்பது, ஒலிகளைக் கேட்பது, மனம்போல் வேகமாகச் செல்வது, விரும்பிய வடிவம் எடுப்பது, பிற உடலில் நுழைவது, விரும்பிய நேரத்தில்‌ மரணம், தேவர்களைப் பார்ப்பது, மனத்தில் நினைத்ததை அடைவது, தன் எண்ணம் ஒருபோதும் தடைபடாமல் இருப்பது, ஆகியவை பத்து சித்திகள். 

இவை தவிர யோகதாரணையால் உண்டாகும் சித்திகள் ஐந்து. அவை, மூன்று காலங்களில் நடப்பவற்றையும்‌ அறிவது, விருப்பு, வெறுப்பு, தட்ப வெப்பம், சுக துக்கம், ஆகியவற்றை வெல்வது, மற்றவர் நினைப்பதைத் தெரிந்துகொள்வது, அக்னி, சூரியன், தண்ணீர், விஷம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, எவராலும் வெற்றிகொள்ள இயலாமல் இருப்பது ஆகியவையாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. .

Saturday, December 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 606

பகவான் தொடர்ந்தான்.
உத்தவா! உத்தம பக்தனின் மனம் முழுவதும் தூய்மையானது. அவனுக்கு என்னை எண்ணுங்கால் உடலில் புல்லரிப்பு, மனம் உருகுதல், ஆனந்தக் கண்ணீர், ஆகியவை ஏற்படும்‌. சொல் தடுமாறும். சில சமயம் அழுவான், சில சமயங்களில் சிரிப்பான். வெட்கம் விட்டு உரத்த குரலெடுத்து என் பெயரைப் பாடுவான். அவனால் இவ்வுலகம் புனிதமடையும். 

என் பக்தனுக்கு என்னைப் பற்றிய சிந்தனை ஒன்றினாலேயே கர்ம வாசனைகள் அனைத்தும் நீங்கும். தன் இயல்பு வடிவான என்னை அப்பிறவியிலேயே அடைந்துவிடுவான்.

புலநுகர் பொருள்களை நினைக்கும்‌ மனம் அவற்றில் மாட்டிக்கொள்ளும். அதேபோலவே என்னை நினைக்கும்‌ மனம் என்னிடம் லயமாகிவிடும்.

கனவில் ஒருவனின் விருப்பம் நிறைவேறினால் அது மெய்யாகுமா? அதுபோலவே பொய்யான விஷயங்களை நினைப்பதால் என்ன பயன்?

ஆன்ம சாதனை செய்பவன் பெண்ணாசையை விடவேண்டும். அதனால் பெருந்துன்பம் விளையும். 

உத்தவன் கேட்டார். முக்தியை அடைய விரும்புபவன் உன்னை எப்படி தியானிக்கவேண்டும்‌ கண்ணா?

கண்ணன் உத்தவனைப் பார்த்து ஒரு மந்தஹாசம் செய்தான்.

பின்னர் கூறத் துவங்கினான். 

அதிக உயரமாகவும் இல்லாமல் மிகவும் தாழ்ந்தும் இல்லாமல் சமமாக உள்ள இருக்கையில் அமரவேண்டும். வளைவில்லாமல் நேராக உடலை வைத்துக்கொண்டு சௌகர்யமாக ஒரு ஆசனத்தில் அமரவேண்டும். இரண்டு கைகளையும் மடியில் வைத்துக்கொண்டு கண்பார்வையை மூக்கின் நுனியில் நிறுத்தவேண்டும். பின்னர் ப்ராணாயாமத்தினால் சுவாசப் பாதையை சுத்தம் செய்யவேண்டும். 

இதயத்தில் தாமரைத்தண்டு போல, தைல தாரை போல, தொடர்ந்து மெலிதாகக் கேட்கும் ஓங்காரத்தில் கவனம் செலுத்தவேண்டும். ப்ராணன் மூலமாக அதை மெல்ல மெல்ல மேலே கொண்டுவந்து மணி போன்ற நாதத்தில் நிறுத்தவேண்டும். 

இம்மாதிரியாக ஓங்காரத்துடன் ப்ராணாயமத்தைப் பயிற்சி செய்ய வெகு சீக்கிரம் சுவாசம் வசப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே

Tuesday, December 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 605

பகவான் தொடர்ந்தான். 

சிலர் தினசரி கர்மாக்களை‌ மோக்ஷ சாதனம் என்றெண்ணுகின்றனர். சிலர் புகழை ஆன்ம வழியென நம்புகிறார்கள். இன்னும் சிலர் புலன்டக்கம், ஸத்யம் ஆகியவற்றை மோக்‌ஷத்திற்கான வழி என்கிறார்கள்.சிலர் தன்னலத்தையும், செல்வத்தையும் தியாக‌ம் செய்தால் முக்தி கிட்டும் என்று நம்புகிறார்கள்.

கர்ம யோகிகள், வேள்வி, தானம், விரதம், நியமம், யமம் ஆகியவற்றால் முக்தி கிட்டும் என்கிறார்கள். இவைகளால் அந்தந்த கார்மாக்களுடைய மேலுலகங்கள் கிட்டும். ஆனால் அவற்றின் பலனுக்கேற்பவே அவ்வுலக வாசம். அந்த ஆனந்தம் குறுகிய காலம்தான். அதன் பின் மீண்டும் அஞ்ஞான இருள்தான். 

என்னிடம் மனத்தை ஈடுபடுத்தி வேறெதிலும் நாட்டமின்றி என்னுள் ரமிப்பவர் அடையும் ஆனந்தமே எல்லையற்றது.

அதை போகங்களில் ஈடுபடுபவனால் அனுபவிக்க இயலாது. பொறிகளை அடக்கி, விருப்பமற்று, சாந்தமாக சமபுத்தியுடன் இருப்பவனுக்கு என்னிடம் சுலபமாக மனம் லயிக்கும். அவனுக்கு எந்த இடமானாலும் சுகமே. 

என்னிடம்‌ ஈடுபடுபவனுக்கு ஸ்வர்க‌ லோகமோ, அரச பதவியோ, யோக சித்திகளோ, முக்தியோ‌ கூட இரண்டாம் பட்சம் தான். அவன் அவற்றை விரும்புவதில்லை.

இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று என் பச்சை மாமலைத் திருமேனியில் ஈடுபடுவான். 

பக்தனிடம் நான் வைக்கும் அன்பு அளவு கடந்தது. அவ்வளவு அன்பை ப்ரும்மா, லக்ஷ்மி, சங்கர்ஷணன், ஏன் என்னிடம் கூட நான் வைக்கவில்லை.

எவன் எல்லாவற்றையும் வாசுதேவனின் வடிவம் என்று பார்க்கிறானோ அவனே மஹாத்மா. அவனுடைய பாத தூளியால் என்னுள் விளங்கும் அண்டமெல்லாம் புனிதமடையட்டும் என்று நான் அவன் பின்னாலேயே எப்போதும் செல்கிறேன்.

என்னிடம் புத்தியை செலுத்தி எந்த பொருளிலும் விருப்பமற்று, நிலையான மனம் கொண்டு மன அமைதியுடன் விளங்கும் சாதுக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை வேறெவரும் அறியக்கூட இயலாது. 

என் பக்தன் புலனுகர் பொருள்களில் ஈடுபட்டாலும் அவற்றில் மயங்குவதில்லை. என்னிடம் உள்ள நிலையான இச்சையால் அவனதில் மயங்காமல் தப்பித்துக் கொள்கிறான். மயங்கினாலும் விரைவில் விடுபடுவான்.

என்னிடம் கொண்ட பக்தி அக்னி போன்றது‌. அனைத்துப் பாவங்களையும் எரித்து சாம்பலாக்கிவிடும்.

பக்தி செலுத்துவதால்‌ ஏற்படும் சௌக்கியம் வேறெந்த மார்கங்களிலும் கிடைக்காது.

சான்றோர்களின் ஹ்ருதயம் நான். அவர்களது ஆன்மாவாவேன். எக்குலத்தில் பிறந்தாலும் என் பக்தியினால் தூய்மையடைந்துவிடுகிறான்.

நேர்த்தியான சீருடை அணிந்து, மிகுந்த ஒழுக்கம் கடைப்பிடித்து, ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்தாலும் படிக்கவில்லை என்றால் எப்படிப் பயனில்லையோ, அதுபோல மிகுந்த ஆசார அனுஷ்டாங்களுடனும் நியமங்களுடனும், தவம், நற்கல்வி, எல்லாம் இருந்தும் என்னிடம் பக்தி இல்லையென்றால் முக்தி கிடைக்காது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 604

உத்தவா! இவ்வுலகம்‌ மனத்தினாலேயே தோற்றுவிக்கப்படுகிறது. உண்மை போலிருந்தாலும் அப்படி அல்ல. இவ்வுடல் மூவகை குணங்களால் வந்த பேதமாகும். மாயை கனவு போன்றது‌. 

மது அருந்துபவனுக்கு போதையால் உடல் பற்றிய உணர்வு இருக்காது. அதுபோலத்தான் ஞானிக்கும். உடலைக் கொண்டு ஆன்மாவை அறிந்தபின் உடல் பற்றிய உணர்வு இருக்காது. 
அதைப் பற்றிக் கவலையும் படமாட்டான். 

உடல் கர்மாவினால் ஏற்படுகிறது. கர்மா இருக்கும் வரை உடல்‌  இருக்கும். அதனால் ஞானி அதன் மீதுள்ள பற்றை ஒழித்துவிடுகிறான்‌.

இவ்வாறு கூறிய நான் பின்னர் ஸனகாதியரிடம், நான் தான் பகவான், தத்துவ ஞானத்தை போதிக்க வந்தேன் என்பதைக் கூறினேன். 

நானே எல்லா விதமான குணங்களுக்கும் ஆதாரம். ஆனால் நானோ குணங்கள் அற்றவன். எல்லோரிடமும் சமமாக இருப்பவன், ஒட்டுத்தல் அற்றவன் ஆகியவை என் குணங்கள். இவை என்னிடம்‌ எப்போதும் உள்ளவை. ஸத்வ ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் பரிமாணங்கள் அல்ல. அனைவர்க்கும் பிரியமான ஆத்மா நானேதான்.

இவ்வாறு நான் உபதேசம் செய்தபின் ஸனகாதியர் என்னைப் பலவாறு துதித்தனர். அதன்பின் அங்கிருந்து மறைந்துவிட்டேன்.

என்றான் கண்ணன்.

உத்தவர் அடுத்த கேள்வியைத் தயாராக வைத்தார்.

கண்ணா! உன்னை நன்கறிந்த சான்றோர் உன்னை அடையப் பல வழிகளைக் கூறுகிறார்கள். அவை அனைத்துமே பின்பற்றப்பட வேண்டியவையா? அல்லது முக்கியமான வழி ஏதாவது ஒன்று உள்ளதா?

கண்ணன் கூறத் துவங்கினான்‌

உத்தவா! ப்ரளயம் முடிந்து வெகுகாலம் ஆனதால் மறைஞானம் முற்றிலுமாக அழிந்துபோயிருந்தது. மீண்டும் படைப்பைத் துவங்கியபோது நான் ப்ரும்மாவிற்கு ஞானத்தை உபதேசம் ‌செய்தேன். ப்ரும்மா தன் மூத்த மகனான மனுவிற்கு உபதேசம் செய்தார். அப்போது ஸப்தரிஷிகளும் உடன் கேட்டு அறிந்துகொண்டனர்.

அவர்களுடைய புதல்வர்களான தேவர்கள், கிம்புருஷர்கள், தானவர்கள், குஹ்யகர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், நாகர்கள், அரக்கர்கள் ஆகியோர் அவரவர் குண விசேஷத்திற்கேற்ப வேதத்தை ரிஷிகளிடமிருந்து அறிந்துகொண்டனர்.

அவரவர் இயல்பு, யுக்திகளுக்கேற்ப பற்பல வாதங்கள் தோன்றின. சிலர் அவற்றை ஏற்கிறார்கள். சிலர் வேதத்திற்குப் புறம்பான பாஷண்ட மதத்தை ஏற்கிறார்கள்.

அவர்களது மனம் எந்தக் கர்மாவில் மயங்குகிறதோ அதையே மோக்ஷ ஸாதனம் என்று கூறத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, November 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 603

கண்ணா! ஸனகருக்கு நீதானே உபதேசம் செய்திருக்க வேண்டும்? எப்போது செய்தாய்? என்று கேட்டார் உத்தவர்.

கண்ணன் உத்தவனின் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தான். 

ஹிரண்யகர்பனாகிய ப்ரும்மாவின் மனத்திலிருந்து ஸனகர் ஸனந்தனர், ஸநாதனர், ஸனத்குமாரர், ஆகியோர் தோன்றினர்.

நால்வரும் ஒரு சமயம் தந்தையான ப்ரும்மாவிடம் யோக சூட்சுமங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள்.

தந்தையே! மனம் இயல்பாகப் புலன் இன்பங்களில்தான் ஈடுபடுகிறது‌. அவற்றையேதான் சிந்திக்கிறது. ஆனால் அதே சமயம் முக்தியின் மீதும் ஆசை கொண்டுள்ளது. இந்நிலையை எப்படிக் கையாள்வது? புலன் இன்பங்களை வெல்லும் வழிதான் என்ன? 

ப்ரும்மா அனைத்து தேவர்கட்கும் மேலானவர். ஆனாலும் அவர் கர்மங்களிலேயே மூழ்கியிருந்தார். அவரால் இக்கேள்வியின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

அதனால் சற்று திகைத்தார். பின்னர் அதற்கு பதில் தேடி என்னை தியானம் செய்தார். நான் ஒரு பெரிய ஹம்ஸ வடிவம் எடுத்து அவர் அருகில் சென்றேன்.

என்னைப் பார்த்ததுமே அவர்கள் ஐவரும் வந்து என்னைப் பணிந்து தாங்கள் யார் என்று வினவினர்.

உண்மையான ஆன்ம வேட்கை கொண்ட அவர்களுக்கு நான் பதிலிறுக்கத் துவங்கினேன்.

தாங்கள் யார்? என்று கேட்டீர்கள். இந்தக் கேள்வி ஆத்மாவைப் பற்றியதா? என்றால் ஆத்மா என்பது இரண்டல்லவே. எப்போதும் ஒன்றே ஒன்றுதான்.

ஆத்மாக்கள் பல என்றானால் தான் நீங்கள், நான் என்றெல்லாம் பிரிக்க இயலும். ஆத்மாவைத் தவிர வேறொன்று இல்லாததால் இக்கேள்விக்கு பதில் கூற இயலாது. 

பஞ்ச பூதங்கள் எல்லா உடல்களிலும் இருக்கின்றன. எனவே அவை அனைத்தும் சமம்மானவை. தாங்கள் யார் என்பவை வெற்றுச் சொற்களே தவிர, அவற்றிற்குப் பொருள் இல்லை.

மனம், வாக்கு, கண், மற்றும் பிற பொறிகளால் ஆகியவற்றால் எவையெல்லாம் உணரப்படுகின்றனவோ, பார்க்கப்படுகின்றனவோ, கேட்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் நான்தான். என்னைத்தவிர இங்கு வேறெதுவுமே இல்லை.

மனம் புலன் இன்பங்களில்‌ மூழ்குவதால் குணத்தைப் பதிய வைத்துக் கொள்கிறது. குணங்களற்ற சித்தமாகவும் குணங்களாகவும் ஜீவன் இரு உடல்களைக் கொள்கிறது. 

ஜீவன் ஆத்மஸ்வரூபம் என்பதை உணர்ந்தால் இவற்றைத் துறந்துவிடும். 

விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்றும் புத்தியின் செயல்கள். ஜீவன் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது‌. அந்த நான்காவதான துரீய நிலையில்‌நின்று பரமாத்ம ஸ்வரூபத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும். பொருட்பற்று, மனம் இரண்டையும் உதறித்தள்ளவேண்டும். நான் எனது என்ற எண்ணங்கள்தாம் உண்மையை உணரத் தடையானவை. ஞானி அவ்வெண்ணங்களைத் துறந்து நான்காவது நிலையான நான் பரமாத்மாவின் வடிவம் என்பதில் உறுதிப்பாட்டுடன் நிற்கவேண்டும். 

பொருள்கள் பல என்பதை ஆத்மவிசாரத்தின் மூலம் விலக்காதவனுக்கு, ஞானத்தின் வாசல் திறவாது. ஆனால் ஞானிக்கும் உலக வாழ்வு நடக்கிறதே என்று வினவலாம். ஞானிக்கு இவ்வாழ்வு கனவு நிலை போன்றது. கனவு எப்படி விழிப்பில் நடப்பவைகளைப் பாதிக்காதோ அதுபோல் ஞானிக்கு இவ்வுலக வாழ்வு பாதிப்பதில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, November 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 602

கண்ணன் தொடர்ந்து கூறலானான்.

உத்தவா! ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் புத்தியினுடையவை. ஆத்மாவினுடையவை அல்ல. ஸத்வ குணத்தினால் மற்ற இரு குணங்களையும் அழித்து விட வேண்டும். பின்னர் ஸத்வ குணம் முழுவதுமாக வியாபிக்கும் நிலையில் அதையும் கடந்து குணங்களற்று நிற்கவேண்டும். 

ஸத்வகுணம் அதிகரிக்கும்போது பக்தி வளரும். ஸாத்வீகப் பொருள்களை ஏற்பதால் ஸத்வகுணமும் தர்ம சிந்தனையும் வளரும்.

சாஸ்திரம், நீர், சந்ததி, வாழும் தேசம், காலம், கர்மா, பிறப்பு, தியானம், மந்திரம், கர்ம வாசனை ஆகிய பத்தும் குணங்கள் அமையக் காரணிகளாகின்றன. 

சுலபமாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், 
எவைகளைப் பற்றி சான்றோர் புகழ்கிறார்களோ அவை ஸாத்வீகம் எனவும், எவற்றைத் தள்ளுகிறார்களோ அவை ராஜஸம் எனவும், எவற்றை இழித்துப் பேசுகிறார்களோ அவற்றை தாமஸம் எனவும் கொள்ளலாம். 

மூங்கில் காட்டில், மூங்கில்கள் உராய்வதாலேயே நெருப்பு உண்டாகும். அது காட்டையே அழித்துவிடும். அதுபோல் குணக் கலவைகளினால் தோன்றிய இவ்வுடலைக் கொண்டு விசாரம் செய்து ஞானம் பெற்றதும் அந்த ஞானாக்னியாலேயே அழிந்துபோகும்.

உத்தவன் இடை மறித்தான்.

கண்ணா! புலன்களால் நுகரப்படும் விஷயங்கள் தீமை விளைவிக்கும் என்பதை அறியாத மனிதர்களே இல்லை எனலாம். தீய செயல்களைச் செய்யும்போதே அதைத் தீமை என்று அறிந்தேதான் இருக்கிறார்கள். இருப்பினும் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து, நாய், கழுதை, மற்றும் ஆடு போல துன்பத்தைத் தாங்கிக்கொண்டு புலன் இன்பத்திலேயே குறியாக இருக்கிறார்களே. அதன் காரணம் என்ன?

கண்ணன் உத்தவனை வாஞ்சையுடன் பார்த்தான். 
உத்தவா! நான், எனது என்ற அஹங்காரம்தான் காரணம். மனம் ஸாத்வீக அஹங்காரத்திலிருந்துதான் தோன்றுகிறது. ஆனால் நான், எனது என்று பற்று கொண்டு மெல்ல மெல்ல ரஜோகுணம் தோன்றி‌ முழுதுமாக ஆக்ரமிக்கிறது.

ரஜோகுணத்தினால் சங்கல்பங்கள் தோன்றுகின்றன. விருப்பு, வெறுப்புகள் பெருகி, தீய குணமும் வளர்கிறது‌.

அது தாங்கமுடியாத அளவு பெருகும்போது காம சிந்தனை ஆக்ரமிக்கும். அதிலிருந்து விடுபடுவது மிகக் கடினம். காமவயப்பட்ட மனிதனால் எந்தப் புலனையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாது. அதற்குத் தீனி போடுவதற்காகப் பல்வேறு காரியங்களைச் செய்து மேலும் மேலும் மாட்டிக்கொள்கிறான். அவற்றின் விளைவு துன்பம்தான் என்று அவன் நன்கறிந்தபோதிலும் அவனால் நிறுத்த இயலாது. 

மெய்யறிவு பெற்றவர்களும் கூட சில சமயம் ரஜோ குணத்தினால் தடுமாறுவார்கள். ஆனால், ஞானத்தின் பயனாக பெருமுயற்சி எடுத்து மனத்தைத் திருப்பி மீண்டுவிடுவார்கள். 

ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமானால் சோர்வில்லாத பயிற்சியும் முயற்சியும் செய்து மனத்தை என்னிடம் வைக்கவேண்டும். அலுப்பின்றிச் செய்யப்படும் முயற்சியால் ஆசனமும் சுவாசமும் வசப்படும். இவற்றால் மனம் மற்ற விஷயங்களிலிருந்து விடுபடுவது சுலபம். இந்த யோகம் ஸனகரால் உபதேசிக்கப்பட்டதாகும். 

உத்தவர் அடுத்த கேள்விக்குத் தயாரானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 601

கண்ணன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்ட உத்தவன் கேட்டான்.

கண்ணா! யோகேஸ்வரன் நீ. என்னதான் சொல்ல வருகிறாய்? நான் கர்மாக்களைச் செய்யவேண்டுமா? அல்லது வேண்டாமா?

குழந்தையைப் போல் கேட்ட உத்தவனைப் பார்த்துக் கண்ணனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

கண்ணன் மீண்டும் யோக தத்துவங்களை விளக்கத் துவங்கினான்.

உத்தவா! ஒரு உடலில் தங்கும் ஜீவன் மூலாதாரத்தில் நாதப்ரும்மமாக பரா என்ற பெயரில் இருக்கிறது‌. பின்னர் மணிபூரக சக்ரம் வந்து பஸ்யந்தி என்று பெயர் பெறுகிறது. அதன் பின் கழுத்துப் பகுதியில் விசுத்தி சக்ரத்தில் மத்யமா என்ற பெயர் பெறுகிறது. பின்னர் வாய் வழியாக வெளிப்படும்போது மாத்ரை, ஸ்வரம், வர்ணம் ஆகிய வடிவங்களை ஏற்று வைகரீ என்ற பெயரைக் கொள்கிறது. ஆகாயத்தில் மின் சக்தியாக விளங்குகிறது‌. சின்னஞ்சிறு பொறியாகத் தோன்றும் நெருப்பு பஞ்சு போன்றவற்றில் பற்றிக்கொள்ளும்போது பெரிய அக்னியாக மாறுகிறது‌.

அது போலவே சப்த ப்ரும்மம் சிறு வடிவெடுத்து பின்னர் பெரிய உருவம்‌ கொள்கிறது. இவை அனைத்துமாக நானே வெளிப்படுகிறேன்.

இவ்வாறே பேசுவது, சிரிப்பது, நடப்பது, வேலை செய்வது, கழிவை வெளியேற்றுவது, நுகர்வது, உண்பது, தொடுவது, கேட்பது, சிந்திப்பது, அகங்காரம் கொள்வது, அறிந்துகொள்வது அனைத்துச் செயல்களும் ஸத்வ ரஜஸ், தமஸ் குணங்களின் சேர்க்கையால் நிகழ்வது. அனைத்தும் என் வெளிப்பாடுகளே என்றுணர்வாயாகில் இந்த சந்தேகம் வராது. பரமாத்மாதான் முக்குணக் கலவையான ப்ரும்மாண்ட வடிவிலான தாமரையைத் தோற்றுவிக்கிறார்.

அவரேதான் பல்வேறு சக்திகளாகப் பிரிந்து பல்லாயிரம் வடிவங்களாக வெளிப்படுகிறார். 

குறுக்கும் நெடுக்குமாகப் பாவப்பட்ட நூலில்தான் துணி உருவாகிறது.

அதே போல இவ்வுலகம் பகவானில் விளங்குகிறது. கர்மாக்கள் மலர் போன்ற உலகியங்களையும், பழம் போன்ற முக்தியையும் வழங்க வல்லவை.

உலக வாழ்வு என்பது மரம் என்று கொண்டால், பாவம், புண்ணியம் ஆகியவை இரண்டு விதைகள், கர்ம வாசனைகளே நூற்றுக்கணக்கான வேர்கள், முக்குணங்களே தண்டுகள், ஐந்து பூதங்கள் ஐந்து பெருங்கிளைகள், ஐந்து புலனின்பங்கள் ஐவகை சாறுகள், பத்துப் புலன்களுடன் மனம் சேர்த்து பதினோறு சிறு‌கிளைகள், ஜீவன், ஈஸ்வரன் ஆகிய இரு பறவைகளின் கூடுகள், வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று பட்டைகள், சுகம் துக்கம் ஆகிய இரண்டு பழங்கள் என்று ஸம்ஸார வ்ருக்ஷம் சூரிய மண்டலம் வரை விரிந்து பரவியுள்ளது.

விஷய சுகங்களில் ஈடுபடுபவர்கள் கழுகு போன்றவர்கள். அவர்கள் புலன்களின் கூட்டான உடலால் துன்பப் பழத்தைப் புசிக்கிறார்கள். பற்றற்ற வாழ்வை மேற்கொள்பவர்கள் சுகம் என்ற பழத்தை உண்கிறார்கள்.

பரமஹம்ஸர்களான ஞானிகள் இவற்றை உணர்ந்துகொண்டு அனைத்தையும் மாயை என்று தள்ளுகிறார்கள். குருவிடம் உபதேசம் பெற்று மெய்ஞானம் என்ற கத்தியைத் தீட்டி நான் ஜீவன் என்ற எண்ணத்தை வெட்டி எறியவேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்ததும் ஞான வடிவான கத்தியையும் துறக்கவேண்டும். பரமாத்ம ஸ்வரூபத்தில் கலந்து எல்லைகளற்ற வெளியில் திளைக்கலாம்.

என்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, November 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 600

கண்ணன் மேலும் தொடர்ந்தான்.

பூமியில் வேதிகை அமைத்து ஆராதனம் செய்யலாம். என்னுள் விளங்கும்‌ பரமாத்மாதான் இவ்வுணவை உண்கிறார் என்ற எண்ணத்துடன் உண்பதாலும், எல்லாப் பொருளிலும் விளங்கும் ஜீவன் பரமாத்மாவின் அம்சமே என்ற என்ற எண்ணத்தாலும் சமத்ருஷ்டி உண்டாகும்.

சங்கு சக்ரம் கதை பத்மம், நான்கு திருக்கரங்கள், கொண்ட பகவான் எல்லாப் பொருளிலும் மன அமைதியின் உருவமாக விளங்குகிறார். இவ்வாறு மன ஒருமைப்பாட்டுடன் எந்தக் காரியம் செய்தாலும் அது என்னை வழிபடுவதே ஆகும்.
சொந்த விஷயமான கர்மாக்கள், பொதுச்சேவை அனைத்தையும் என்னிடம் அர்ப்பணமாகச் செய்பவனுக்கு என்னை உணர்தல் எளிது. சாதுக்களுக்கு சேவை செய்வதால் என்னுடைய நினைவு ஏற்படும்.

உத்தவா! பக்தி யோகம், சத்சங்கம் ஆகிய இரண்டு வழிகளைத் தவிர இந்த சம்சாரக்‌கடலைக் கடக்க வேறு வழியில்லை.
சான்றோர்களின் புகலிடம் நானே.

நான் உனக்கு இன்னுமொரு ரகசியத்தைச் சொல்ல விழைகிறேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அணுக்கமான சேவகன். மேலும் சத்விஷயங்களைக் கேட்பதில் உனக்கு‌ மிகுந்த ஆர்வம் இருக்கிறது.

கவனமாகக் கேள் உத்தவா! யோகம், சாங்க்யம், தர்மம், தவம், தியாகம், விரும்பியதற்காகச் செய்யும் கர்மா, சுய ஒழுக்கம், தட்சிணை (பணம்) ஆகிய எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது.

விரதங்கள், நியமங்கள், வேதமந்திரங்கள், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றையெல்லாமும் விட என்னை மிகவும் வசப்படுத்துவது ஒன்றுண்டு. அது யாதெனில் சத்சங்கம். மஹான்களின் சேர்க்கை.

கலியுகத்தில்‌ மட்டுமல்ல, நான்கு யுகங்களிலுமே சத்சங்கத்தினால் என்னைச் சுலபமாக அடைந்தவர் பலர். அசுரர்கள், ராட்சஸர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாக, சித்த, குஹ்ய, வித்யாதரர்கள், பெண்கள் ஆகியோர் வெவ்வேறு யுகங்களில் சத்சங்கத்தினால் என்னை அடைந்திருக்கிறார்கள்.

வ்ருத்திராசுரன், ப்ரஹ்லாதன், வ்ருஷபர்வா, பலி, பாணாசுரன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வைசியன், தர்மவியாதன், குப்ஜை, கோபிகைகள், யக்ஞ பத்னிகள், மற்றும் பலரும் சத்சங்கம் வாயிலாக என்னை அடைந்தார்கள்.

கோபிகள், பசுக்கள், மரங்கள், வ்ரஜ பூமியின் மான்கள் முதலிய ஜீவன்கள், இவர்களைத் தவிர மந்த புத்தியுடைய காளியன் முதலிய பாம்புகள் ஆகியவர்கள் பக்தியாலும் ப்ரேம பாவத்தாலும் என்னை அடைந்தார்கள்.

கடும் முயற்சி செய்து யோகம், சாங்க்யம், தானம், விரதம், தவம், வேள்வி, வேத அத்யயனம், சுய ஒழுக்கம், துறவு ஆகியவற்றைப் பழகினாலும் என்னை அடைவது சுலபமன்று. அவற்றால் சித்த சுத்தி ஏற்படும். 

அக்ரூரர் என்னையும் பலராமனையும் மதுராவிற்கு அழைத்துச் சென்றபோது ஆழங்காண இயலாத அன்பினால் கோபிகளின் இதயம் தளும்பியது. என்னுடைய பிரிவால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதன் பின் என்னைத் தவிர வேறெதையும் நினைக்க இயலாதவர்கள் ஆனார்கள்.

என்னுடன் பல இரவுகள் ராஸக்ரிடையில் ஆழ்ந்திருந்தார்கள்‌. அப்போதெல்லாம் நீண்ட இரவுகள் அவர்களுக்கு நொடி போல் கடந்தன. என்னைப பிரிந்ததும் அவர்களது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கல்ப காலம் போல் கழிந்தது.

முனிவர்கள் சமாதி நிலையில்‌ உடல் உணர்வை இழந்து என்னுடன் ஒன்றுவார்கள். அதேபோல கோபிகள் ப்ரேமையினால் சரீர உணர்வை இழந்துவிட்டார்கள். 
அவர்கள் என் பரமாத்ம வடிவை முழுமையாக அறிந்தவர்கள் அல்லர். வெறும் அளவுகடந்த ப்ரேமையினால் என்னை அடைந்தார்கள்.

எனவே உத்தவா! இவ்வுலகம், அவ்வுலகம், வாழ்க்கை, கேட்பது, சொல்வது என்ற ஆராய்ச்சிகளை யெல்லாம் விட்டுவிட்டு முழுமையாக ஒன்றிய மனத்துடன் என்னைச் சரணடைவாய். அப்போது உனக்கு எதைப் பற்றியும் பயம் ஏற்படாது. உன் செயல்கள் அனைத்தும் எனதாகிவிடும்.
என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 599

கண்ணன் கூறியதைக் கேட்ட உத்தவன் மீண்டும் கேட்டார்.

நீங்கள்தான் பரப்ப்ரும்மம். உங்கள் சொந்த சங்கல்பத்தின்படி உருவம் ஏற்றிருக்கிறீர்கள்.சாதுக்களின் லட்சணம் என்ன? பக்தி செய்யும் முறை என்ன? உங்களையே நம்பியிருக்கும் எனக்கு விளக்குங்கள் என்றான்.

கண்ணன் உத்தவனைக் கருணையுடன் பார்த்தான்.

உத்தம பக்தன் எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளவன். நன்றி மறவாதவன். உடலுக்கேற்படும் துன்பங்களை லட்சியம் செய்ய மாட்டான்.

உண்மையே பேசுவான். தூய்மையான உள்ளத்துடன் அனைவரிடத்தும் சமமாகப் பழகுவான். அனைவர்க்கும் உதவி செய்வான். தனிப்பட்ட விருப்பங்கள் அற்றவன்‌. மிகவும் மென்மையானவன். செல்வத்தில் ஆசையற்றவன். அளவாக உண்பவன். எப்போதும் மன அமைதியோடு இருப்பவன். நிலையான எண்ணம் கொண்டவன். என்னை எப்போதும் நம்புபவன்‌. அவனிடம் மனத் தடுமாற்றம் இருக்காது.

ஆறு பகைவர் எனப்படும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யங்கள் அற்றவன். இழிவுகளைப் பொருட்படுத்தாதவன். பிறரை மனமார வாழ்த்துபவன். தெள்ளிய ஞானம் உடையவன். 

நலம் விளைவிக்கும் நற்செயல்களைக் கூட பக்திக்குத் தடையாக இருப்பின் தியாகம் செய்துவிடுவான். 

என்னைப் பற்றி அறிந்தோ அறியாவிட்டாலுமோ கூட முழு மனத்துடன் என்னை நம்பி பக்தி செலுத்துவான். என் உருவச் சிலைகள், என் பக்தர்கள் ஆகியவற்றைக் காண்பதில் பேராந்தம் கொள்வான்.

  • வழிபாடு, துதித்தல், வணங்குதல்,
  • என் லீலைகளையும் குணங்களையும் சிரத்தையாகக் கேட்டல், பாடுதல், என்னை எப்போதும் நினைத்தல்,
  • தான் உள்பட எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்தல். 

  • என் அவதாரங்களையும் லீலைகளையும் பேசி பேசி மகிழ்தல்,
  • என் அவதார தினங்களைக் கொண்டாடுதல்,
  • இசை, நாட்டியம், வாத்யங்கள், ஆகியவற்றைத் தனியாகவும், கோஷ்டியாகவும் வீட்டிலும் கோவில்களிலும் பாடி உற்சவங்கள் நடத்துதல்,
  • ஆண்டுதோறும் தீர்த்த யாத்திரை,
  • தலங்களுக்குச் செல்லுதல்,
  • என் தொடர்புடைய விரதங்களை அனுஷ்டிப்பது,
  • என் அர்ச்சாமூர்த்தி களை நிறுவுதல்,
  • தோட்டம், சோலைகள், மைதானம், நகரம், கோவில் ஆகியவற்றைக் கட்டுதல்,
  • முதலிய பொதுச் சேவைகளைத் தனியாகவோ கூட்டாகவோ செய்தல்,
  • ஒரு அடிமை போல் கோவில் சேவகம் செய்தல்,
  • கர்வமில்லாமல் இருத்தல்,
  • எவரையும் ஏமாற்றாமல் இருந்த்தல்,
  • தான் செய்த நற்காரியங்களைப் பறை சாற்றாமை,
  • தனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு அர்ப்பணம் செய்தல்,
ஆகியவை மிகுந்த பலனைத் தரக்கூடியவை.

சூரியன், அக்னி, ப்ராமணன், பசு, வைஷ்ணவன், ஆகாயம், வாயு, தண்ணீர், பூமி மற்றும் எல்லா ப்ராணிகள் ஆகியவற்றில்‌ என்னை உருவகமாக எண்ணி வழிபடலாம்.

மூன்று வேத மந்திரங்களால் சூரியனை நானாக வழிபடவேண்டும். அந்தணர்க்கு விருந்தளிப்பதும், அக்னியில் ஆஹூதி கொடுப்பதும், பசுவுக்குப் புல்லைக் கொடுப்பதும் என்னைப் பூஜிப்பதே ஆகும்.
என் அடியார்களை சகோதரர் போல் நேசிக்கவேண்டும். தியானத்தின் மூலம் மனம் எனும் ஆகாயத்திலும், ப்ராணன் என்ற வாயுவிலும் தண்ணீரிலும் என்னை ஆராதிக்கலாம். பூக்களால் வழிபடுவது சிறந்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 598

கண்ணன் மேலும் கூறலானன்.

உத்தவா! இவ்வுடல் தெய்வாதீனமாகக் கிடைக்கிறது. முன் வினைப் பயனுக்கேற்ப குணங்கள் தூண்டுவதால் செயல் புரிகிறது. அறிவற்றவன் எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணுகிறான்.

இவ்வுலகின் அனைத்து நியமங்களையும் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் ஞானி அவற்றில் ஒட்டுவதில்லை. ஆகாயம், பூமி, சூரியன் போல் அவனும் சாட்சியாக நிற்கிறான். 

கனவிலிருந்து விழிப்பவன் போல் ஞானியின் எல்லா மயக்கங்களும் விலகிவிடுகின்றன. யாருடைய புலன், புத்தி, மனம் ஆகியவை முழுமையடைந்து கட்டுப்பாடுகளிலிருந்து விலகுகிறதோ, உலகாயத கர்மத் தளைகள் அகன்றனவோ, அவன் ஒரு உடலில் இருந்தாலும் குணங்களற்றவனாக விளங்குகிறான். 

யாராவது துன்பம் இழைத்தாலும், கௌரவம் அளித்தாலும் அவை அவனைப் பாதிப்பதில்லை. 
அவதூறுகள், புகழுரைகள் எதையும் அவன் பொருட்படுத்தமாட்டான்‌.

அப்படிப் பேசுகிறவர்கள் மீதும் விருப்போ வெறுப்போ இன்றி சமத்ருஷ்டியுடன் இருப்பான். எதையும் பேசாமல், செய்யாமல் நினைக்காமல் ஜடம் போல் சுற்றுவான். 

எவ்வளவு உயர்ந்த கல்வி கற்றாலும் ப்ரும்மத்தை அறியவில்லை எனில் அவை வீண். கற்கும் வித்தை அனைத்தும் தன்னை உணர்த்தவேண்டும்.

இவ்வுலகைப் படைத்து காத்து அழித்துப் பல லீலைகள் செய்யும் என்னைக் கூறாத உரைகள் பயனற்றவை. அவை பிறவிச் சுழலில் அழுத்தக்கூடியவை.

என்னிடமே மனத்தை முழுமையாக அர்ப்பணித்து மற்ற செயல் சிந்தனைகளிலிருந்து விடுபடவேண்டும். மனம் ஒருமைப்படவில்லை எனில், செய்யும் அனைத்து செயல்களின் பலன்களையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

என் கதைகளை அடிக்கடி கேட்கவேண்டும். என் அவதார தினங்களைக் கொண்டாடி உற்சவங்கள் செய்யவேண்டும். 

என்னையே புகலாகக் கொண்டு என் பொருட்டே அனைத்து செயல்களையும் செய்பவன் என்னிடம் அசைக்க முடியாத பக்தியைப்‌ பெறுகிறான். நல்லோர் சங்கத்தினால் பக்தி உண்டாகும். அவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும்.

இவ்வாறு நடப்பவர் விரைவில் என்னையே அடைகிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 597

கண்ணன் கூறியதனைத்தையும் செவி மடுத்த உத்தவர் கேட்டார்.

கண்ணா!
கர்மாக்களுடன் ஜீவனுக்குத் தொடர்பில்லையா?
அப்படியெனில் குணங்களுக்குக் கட்டுப்படுவானா? குணங்களுக்கு ஆட்பட்டவன், குணங்களை ஆள்பவன் இருவருக்கும் என்ன வித்தியாசம்? 
எவ்வாறு அவனுக்கு இன்பம் கிட்டும்? அவனுடைய அடையாளங்கள் என்ன? எதை அனுபவிக்கிறான்? எதை விடுவான்? எத்தகைய தோற்றம் அவனுடையது? எப்படிப் படுப்பான்? அமர்வான்? உண்பான்? ஒரு ஞானியை எவ்வாறு அடையாளம் காண்பது?

முகத்தில் விழுந்த குழற்கற்றையை ஒற்றை விரலால் ஒயிலாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே பேசத் துவங்கினான் கண்ணன்.

உண்மையில் ஆத்மா கட்டுப்படுவதே இல்லை. குணம் என்பதே மாயையின் தோற்றம். ஆத்மா தனிப்பட்டது. அதற்கு விடுபடுதல், கட்டுப்படுதல் ஆகிய ஒன்றும் இல்லை. 

இன்பம், துன்பம், சரீரம், சோகம், மோகம் ஆகிய அனைத்தும் மாயையால் ஏற்படும் தோற்றம். பிறப்பு, இறப்பு ஆகிய அனைத்துமே கனவு போன்றது. அஞ்ஞானத்தினால் அவை சத்யம் போல் தோன்றும்.

என்னுடைய அம்சமேதான் ஜீவன். அவன் அஞ்ஞாத்தால் மாட்டிக்கொள்கிறான். ஞானம் வந்த கணமே அனைத்து கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ஜீவன் என்னைப் போன்றவனே. ஒரே உடலில் உறையும் ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் வெவேறு சுபாவம் உடையவை. ஜீவாத்மா துன்பத்தை இயல்பாகக்‌ கொண்டது. ஆளப்படுபவது. பரமாத்மாவின் இயல்போ ஆனந்தம். ஆள்வது. 

ஜீவனும் ஈஸ்வரனும் ஒரே மரத்தில் கூடு கட்டும் பறவைகள் போல் சரீரத்தினுள் வசிக்கிறார்கள். சமமானவர்கள். நட்புக் கொண்டவர்கள். ஒன்று மரத்தில் பழுக்கும் கர்மாவாகிய பழத்தை உண்டும் பலமின்றி இருக்கிறது. மற்றொன்று பழத்தை உண்ணாமலே பலமாக இருக்கிறது‌. பழத்தை உண்ணாதவன் தன்னையும் மற்றவனையும் முழுமையாக அறிகிறான். உண்பவனோ தளையினால் கட்டுப்பட்டவன்‌. பழத்தை உண்ணாதவனுக்கு மரத்தின் மீது பற்றில்லை. அவன் நித்ய முக்தன்.

சரீரத்தில் தங்கி கர்மாக்களில் ஈடுபட்டாலும் ஞானம் வந்தவுடன் திரை விலகி அனைத்தும் பொய்யென்று உணர்கிறான்.

ஜீவனோ ஆத்மாவுக்கு உடல், உருவம் ஆகியவை இல்லை என்றுணராதவனாக உடலைத் தான் என்றெண்ணி கனவில் வருவதையெல்லாம் உண்மையென்று நம்புபவன் போலிருக்கிறான்.

ஞானி அனைத்தையும் குணவிகாரம் என்றுணர்வதால் உண்பது, உறங்குவது, நடப்பது, சுற்றுவது, குளிப்பது என்று எதைச் செய்தாலும் அதை உடலுக்கான செயலாகப் பார்ப்பானே தவிர, தன்னுடன் அதைத் தொடர்பு படுத்துவதில்லை.

கண்ணாடியில் இருக்கும் அழுக்கு, பிம்பத்தில் தெரியுமே தவிர பார்ப்பவனை ஒட்டாது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 596

ஜீவன் சுதந்திரமானது அல்ல. அதற்கு சுதந்திரம் இருக்குமானால் துக்கத்தை விரும்புமா என்ன? ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் தலையீடு இல்லாமலேயே முன்கர்ம வினைப்பயனின்படி சுகமும் துக்கமும் ஏற்படுகிறது.

ஸத்வகுணம் அதிகமுள்ள தேவதைகளை ஆராதனை செய்வதால் மனிதனுக்கும் ஸத்வகுணம் அதிகமாகிறது. அவனுடைய புத்தி, குணங்களுக்கேற்பவே செயல்படுகிறது.

அனைத்துமே உடலுடன் ஜீவனைத் தொடர்பு படுத்துவதால் நிகழ்கிறது. எல்லா ஜீவன்களுமே கால வெள்ளத்தில் ஒவ்வொரு நாளும் தம் அழிவை நோக்கியே நகர்கின்றன.

உடல் எடுத்தவன் பெரிய அறிவாளியானாலும் சரி, முட்டாளாயினும் சரி. அவனுக்கு அகங்காரம் உள்ளவரை சுகமில்லை. மரணம் நிகழாமல் தடுக்க என்ன வழி என்று அவர்கள் ஆராய்வதில்லை. 

தூக்கு தண்டனைக் கைதிக்கு எந்தப் பொருள்தான் சுகம் தரும்? அதுபோல் மரணம் தன்னை விழுங்கத் துரத்துகிறது என்று உணரும் ஞானிக்கு எப்பொருளும் சுகம் தராது.

இவ்வுலகைப் போலவே தேவலோகத்திலும் போட்டி, பொறாமை, சண்டை, வெறுப்பு ஆகியவை உள்ளன. புண்யபலனுக்கேற்ப‌ அவர்களின் சுகமும் தேய்கிறது. சுவர்கத்திற்குப் போனாலும் ஆனந்தம்‌ சாஸ்வதமில்லை.

நிறைய யாகங்கள் செய்பவன் தேவர்களைத் த்ருப்தி செய்து ஸ்வர்கம் செல்கிறான். அங்கு விருப்பம் போல் செல்லும் தேவவிமானத்தில் ஏறிக்கொண்டு தேவமாதர்களுடன் கூடிக் குலவுகிறான். இன்பமாகப் பொழுதைக் கழிக்கும் அவன் புண்யபலன் தேய்வதை அறிவதில்லை. புண்யபலன் முற்றுமாக அழிந்த நிலையில், ‌காலம் அவனை மீண்டும் கீழே தள்ளுகிறது. 

அதர்மங்கள் செய்பவன், பிறரைத் துன்புறுத்துபவன், தீய செயல்கள் செய்பவன் ஆகியோர் இருள் சூழ்ந்த கோரமான நரகங்களை அடைகின்றனர். பாவ கர்மாவின் பலன் தீரும் வரை நரகத்தில் துன்புறுத்தப்பட்டு, பிறகு கீழே தள்ளப்படுகிறார்கள்.

இருவருமே மீண்டும் புவியில் பிறந்து,‌ அழியும் உடல் கொண்ட பிறவியை அடைகின்றனர். 

வெகு நீண்ட காலமான இரண்டு பரார்தம் ஆயுள் பெற்ற ப்ரும்மா முதல் அனைவரும் காலனான எனக்கு பயப்படுகிறார்கள்.

முக்குணங்களின் சேர்க்கையே கர்மா செய்யத் தூண்டுகிறது. அவை ஒருக்கும் வரை ஆத்மா பலவனாது என்றெண்ணத் தூண்டும்.

பரமாத்மாவான என்னை குணங்களுடன் தொடர்புள்ளவனாக எண்ணுவதால் காலம், ஆத்மா, ஆகமம் (விதிகள்) உலகம், இயற்கை, தர்மம் என்று பலவாறாக அழைக்கிறார்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 595

கண்ணன் உத்தவனைப்‌ பார்த்து மேலும் கூறத்துவங்கினான்.

உத்தவா என்னையே புகலாகக் கொண்டவன், என்னால் உபதேசிக்கப்பட்ட விஷயங்களை மிகுந்த கவனத்துடன் பின்பற்றவேண்டும். கனவில் காணும் விஷயங்கள் எப்படி பொய்யானவையோ அதுபோல் விழித்திருக்கும் போது காண்பவையும் பொய்யே. ஒன்றேயான பரமாத்மாதான் எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருக்கிறது. 

என்னிடம் நிலைபெற விரும்புபவன் உலகாயத வேலைகளைத் துறந்து ஆன்ம மேம்பாட்டிற்கான பணிகளைச் செய்யவேண்டும். கர்மாவை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடலாகாது. 

என் பக்தன் அஹிம்சை, ஸத்யம், திருடாமை, ப்ரும்மசர்யம், தேவைக்கதிகமாகப் பொருள் சேர்க்காதிருத்தல் ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும். 

குரு ஸேவை செய்பவன் பொறாமை, அகந்தை, மமதை ஆகியவை இல்லாமல் இடுக்கவேண்டும். திட்டமிட்டுச் செயலாற்றும் தன்மை கொண்டு அதே சமயம் பரபரப்பின்றி இயங்க வேண்டும். எப்போதும் எல்லோரிடத்தும் அன்பு பாராட்டவேண்டும். தத்துவத்தை அறியும் வேட்கையுள்ளவனாக இடுக்கவேண்டும். மனைவி, உற்றார், உறவினர், செல்வம் ஆகியவற்றில் ஒட்டுதலின்றி இருக்கவேண்டும். அவன் தன்னுடைய நலன் போலவே பிறரின் நலனையும் காண்பவன் ஆகிவிடுகிறான்.

ஆத்மா தன்னொளி கொண்டது. எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குவது. பாஞ்சபௌதிகமான மற்றும் சூக்ஷ்ம உடலினின்று மாறுபட்டது. எரியும் பொருளில் பொருள் வேறு, நெருப்பு வேறு. அதுபோல் ஆத்மா உடலினின்று வேறானது.

இவ்வுடல் மூன்று குணங்களின் கலவை கொண்டு மாயையால் ஆக்கப்பட்டது. பிறப்பும் இறப்புமற்ற ஆன்மாவின் மேல் ஒரு போர்வை போல மாயை மூடியிருக்கிறது.‌ஞானம் ஏற்பட்டால் இந்த பிரமை அகன்றுவிடும்.

எனவே மற்ற பொருள்களின்மேல் இருக்கும் அபிமானத்தை விட்டொழித்து தனிப்பரம்பொருளாகத் தனக்குள்ளேயே ஒளிந்திருக்கும் ஆன்மாவைக் கண்டுபிடிக்கவேண்டும்.

தூய்மையடைந்த புத்தி, மாயையின் செயல்பாடுகளைச் சரியாக இனம் கண்டு உதறித்தள்ளிவிடும். கட்டை முழுவதும் எரிந்தபின் அக்னி தானே அடங்கும். மாயையின் குணங்களை எரித்தபின் புத்திக்கு விஷயமில்லாமல் போகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, November 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 594

பகவானிடம் நிலை பெற்ற மனத்துடையவர்களிடமிருந்து கர்ம வாசனைகள் விலகும். ஸத்வகுணம் வளர வளர, ரஜோ, மற்றும் தமோ குணங்கள் விலகும். அமைதி கிட்டும். நன்றாக ஆத்மாவில் நிலைபெற்றவர்க்கு சூழலில் நடைபெறுவது எதுவும் தெரியாது. பாதிக்காது.

முனிவன் எப்போதும் தனித்திருக்கவேண்டும். கூட்டத்தோடு சேரக்கூடாது. சொந்தமாக இருப்பிடம் வைத்துக்கொள்ளக் கூடாது. எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். தன் ஆசார அனுஷ்டானங்களை விளம்பரம் செய்யக்கூடாது. குறைந்த அளவு பேசவேண்டும்.

சிலந்தி தன் வாயிலிருந்து ஒரு நூலை வெளியே விடும். அதைக் கொண்டு முழு க் கூட்டையும் கட்டும். ஏதாவது சரியாக வரவில்லை என்றால் அந்த நூலை உள்ளிழுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் விடும்‌. இதனால் அதன் உடம்பு இளைப்பதோ குண்டாவதோ இல்லை. அதன் இயல்பு மாறாமல் அப்படியே இருக்கும். அதே போல பகவான் தனக்குள்ளிருந்து இப்பிரபஞ்சத்தை வெளியே விடுகிறார். பிறகு மீண்டும் தனக்குள்ளேயே ஒடுக்கிக்கொள்கிறார்.

மனிதன் அன்பினாலோ, வெறுப்பாலோ, பயத்தாலோ எதைப் பற்றி எப்போதும் நினைக்கிறானோ அதன் குணங்கள் அவனுக்கு வந்துவிடும். மெதுவாக அவன் நினைக்கும் பொருளின் உருவத்தை அடைந்துவிடுவான்.

குளவி தான் கட்டும் கூட்டினுள் ஒரு புழுவை அடைத்துவைத்துவிட்டு மூடும்போது அதைக் கொட்டிவிடும். உள்ளிருக்கும் புழு தன்னைக் கொட்டிய குளவியை நினைத்து நினைத்து பயந்துகொண்டே இருக்கும். பின்னர் அதுவும் குளவியாகவே மாறிவிடும். பகவானையே எண்ணிக்கொண்டிருக்கும் பக்தன் பகவத் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.

இவ்வாறு இருபத்து நான்கு ஜீவன் களிடமிருந்து பற்பல பாடங்களைக் கற்றேன்.
வைராக்யத்திற்கும் விவேகத்திற்கும் காரணம் இவ்வுடலே. இதைப் பார்க்கும்போதே இது அழியக்கூடியது என்ற எண்ணம் உண்டாகிறது. அதனால் இவ்வுடல் நானல்ல என்று புரிகிறது‌. இவ்வுடல் எனக்கானது அல்ல என்றெண்ணும்போது உடல்மீதுள்ள‌ பற்று அழிந்துபோகிறது.

மனைவி, மக்கள், வீடு, செல்வம் என்று சுகத்தை எதிர்பார்த்து இவைகளைப் போஷித்தாலும் முடிவில் அவற்றால் துக்கமே. பற்றினால் அடுத்த பிறவிக்கான விதை விதைக்கப்படுகிறது‌. 

பல மனைவிகள் கொண்ட ஒருவன் அவர்களால் அலைக்கழிக்கப்படுவான். அதுபோல் புலன்கள் மனிதனை அலைக்கழிக்கின்றன. அதனால் அவனது நிம்மதி பறிபோகிறது.

எல்லா ஜீவன்களையும் படைத்த பகவானுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதனால் மனிதப் பிறவியை, சிந்தித்து முக்தியடையும் வழியைக் காண்பவனாகப் படைத்து மகிழ்ச்சியடைந்தார். 

இந்த நரஜென்மம் மிகவும் அரிதானது. இது நிலையற்றதென்றாலும் இப்பிறவியில்தான் முயற்சி செய்து ஞானத்தை அடைய இயலும். எந்த ஜந்துவாகப் பிறந்தாலும் சிற்றின்பங்கள் கிடைக்கும். மனிதப்பிறவியால் மட்டுமே பேரின்பத்தின் கதவைத் திறக்க இயலும். எனவே கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறவியை வீணாக்கலாகாது. நல்ல சமயமிதை நழுவவிடாதே.

இவ்வாறு யதுவிற்கு உபதேசம் செய்தார் தத்தாத்ரேயர். யது மன்னன் அவரை கௌரவித்து வணங்கினான். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

என் முன்னோரான யது மஹாராஜா அவரது உபதேசத்தால் பற்றுக்களை நீக்கி ஞானத்தை அடைந்தார் என்று உத்தவரிடம் கூறினான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 593

தத்தாத்ரேயர் தொடர்ந்தார்

அடுத்ததாக பிங்களை என்னும் பொதுமங்கை ஒரு காலத்துக்குப் பிறகு, தன்னைத் தேடி எவரும் வராதது கண்டு துயருற்றாள். பின்னர் அவளது சுகமான வாழ்வு பறிபோக, ஏழ்மையில் அவளுக்கு வைராக்யம் பிறந்தது. பாவச் செயல்களுக்காக வருந்தி இறைவனைச் சரணாகதி செய்தாள்.

அதன் பின் மனத்துன்பம் அனைத்தும் நீங்கி நிம்மதியாக பவித்ரமான வாழ்வை வாழ்ந்தாள்.

புலன்களுக்கு பிரியமானவற்றிற்காக மனம் ஏங்கும் வரை துன்பம் பெருகுகிறது. வாழ்விற்கு அவசியமான அளவு மட்டும் பொருளை வைத்துக்கொண்டு வாழ்பவனுக்கு நீங்காத செல்வமான நிம்மதி கிடைக்கிறது. 

அடுத்த குரு ஒரு குர்ரப் பறவை. ஒரு நாள் அதற்கு ஒரு மாமிசத்துண்டு கிடைத்தது. ஆனால் அதை நிம்மதியாக உண்ணமுடியவில்லை. ஏனெனில் மாமிசம் கிடைக்காத மற்ற பறவைகள் அதைக் கடுமையாகத் தாக்கின. தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக அது மாமிசத்துண்டைக்‌கீழே போட்டுவிட்டது. மற்ற பறவைகள் குர்ரப் பறவையை விட்டுவிட்டு மாமிசத்தின் பக்கம் ஓடின. பொருளின் மீதுள்ள பற்றினால் துன்பம் என்பதே கருத்து.

எனக்கோ‌ மான அவமானங்கள், வீடு மக்கள், எதுவும் இல்லை. ஒரு குழந்தையைப் போல் ஆனந்தமாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன்.

உலகில் கவலையற்றவர் இருவர். ஒன்றுமறியாத குழந்தை மற்றும் அனைத்தும் அறிந்த ஞானி.

அடுத்த பாடத்தை ஒரு பெண்ணிடமிருந்து கற்றேன். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்தார்கள். அவளது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவளே விருந்தாளிகளை உபசரித்தாள். அவர்களுக்கு சமைப்பதற்காக அரிசி எடுக்க நெல்லைக் குத்தத் துவங்கினாள். பணியாளர்கள் இன்றி தானே நெல்லைக் குத்துவதால் வந்திருப்பவர்கள் தன்னை ஏழை என்று எண்ணக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. எனவே நெல்‌குத்தும் சத்தம் வந்தவர்களுக்குக் கேட்காமல்‌ இருக்க கைகளில் இருந்த வளையல்களில் இரண்டைத் தவிர மீதி எல்லாவற்றையும் ‌கழற்றிவிட்டுக் குத்தினாள். அப்படியும் இரண்டு வளையல்கள் உராய்ந்து சத்தம் கேட்டது. பின்னர் அதிலும் ஒன்றைக் கழற்றிவிட்டுக்‌ குத்தினாள்.

சமுதாயத்தின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களுள் ஒருவராகத்தான் வாழவேண்டும். 

மேலும் பலர் இருந்தால் வீண்பேச்சு, சண்டை வரும். எனவே அப்பெண்ணின் வளையலைப்போல ஓசையற்று தனித்திருக்கவேண்டும். மனத்தை ஒருமுகப் படுத்த அமைதியாக இருத்தல் அவசியம். 

யோகி ஆசனம், சுவாசம் ஆகியவற்றை வெல்லவேண்டும். வைராக்யம் பயின்று மனத்தை ஓரிடத்தில் நிறுத்துதல் வேண்டும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 592

தத்தாத்ரேயர் அடுத்ததாக கடலை விளக்குகிறார்.

ஒரு பெருங்கடலைப்போல யோகியானவன் மகிழ்ச்சியுடனும் கம்பீரத்துடனும், ஆழம் காண முடியாதவனாகவும், கடந்து செல்ல அதாவது அவனை இழிவுபடுத்த இயலாதவனாகவும், அலட்சியம் செய்ய இயலாதவனாகவும், கலங்காதவனாகவும், எப்போதும் அமைதியுடனும் இருக்கவேண்டும்.

நதிகள் வந்து கலப்பதால் கடல் பெருகுவதில்லை. நீர் வரத்து நின்று விட்டாலும் குறைவு படுவதில்லை. யோகியும் ஆன்மாவை பரம்பொருளில் நிறுத்தி விடுவதால் மாறுபாடுகளுக்கு உட்படமாட்டான்.

புலன்களை வெல்லாதவன் விட்டில்பூச்சி போல் அவற்றால் இழுக்கப்பட்டு நரகத்தில் விழுகிறான். (பதினோராவது குரு)

மலருக்கு சிரமம் கொடுக்காமல் தேனீ தேனை எடுக்க்கும். அதேபோல யோகி இல்லறத்தார்க்கு சிரமம் கொடுக்காமல் அவர்கள் தரும் உணவை சிறிதளவு ஏற்கவேண்டும்.

மலர் சிறியதோ பெரியதோ தேனீ அதன் சாரமான தேனை மட்டும்தான் எடுக்கும். அதைப்போல பல்வகைப்பட்ட சாஸ்திரங்களிலிருந்து யோகி சாரத்தை மட்டும் கிரஹித்துக் கொள்ளவேண்டும்.

தேனீயைப்போல் சேர்த்து வைக்கக் கூடாது. யோகி பிக்ஷை ஏற்ற உணவை இரவுக்கு, நாளைக்கு என்றெல்லாம் சேர்த்துவைக்கக்கூடாது. சேர்த்தால் அழிவு வரும். கைகளே பிக்ஷைக்கான பாத்திரம். வயிறு கொள்ளும் மட்டுமான உணவை ஏற்றல் வேண்டும்.

அடுத்ததாக பதிமூன்றாவது குருவான ஆண்யானை பற்றிக் கூறுகிறார்.

பெண்யானையைக் கண்டு மயங்கி அருகில் செல்லும் ஆண்யானை அதைப் பிடிக்க வெட்டப்பட்டிருக்கும் குழிக்குள் விழும். அதுபோல யோகி மனத்தினாலும் பெண்ணைத் தீண்டலாகாது.
அது அவனது தவம் அனைத்தையும் அழித்து நரகத்தில் தள்ளும்.

தேன் எடுப்பவன் அடுத்த குருவாகச் சொல்லப்படுகிறான். தேன் எடுப்பவன் ஒருக்காலும் எடுத்த தேனை அனுபவிப்பதில்லை. அதை யாருக்காவது கொடுத்துவிடுவான். அதேபோல இல்லறத்தானின் பொருள் துறவிகளுக்கும் சாதுக்களுக்கும் செலவிடுவதற்காகவே.

அதிவேகமாக ஓடக்கூடிய மான் வேடனின் ஊதும் கொம்பு இசையில் மயங்கி நின்று பிடிபடும். அதுபோல யோகி உலகியல் இன்பங்களைத் தூண்டும் இசையைக் கேட்கலாகாது. 

மான்வயிற்றில் பிறந்த ரிஷ்யச்ருங்கர் உலகாயத ஆடல் பாடல்களில் மயங்கி மாட்டிக் கொண்டார்.

தூண்டில் முள்ளில் செறுகப்பட்ட உணவுத்துளிக்கு ஆசைப்பட்டு மீன் மாட்டிக்கொள்ளும். அதுபோல் சுவையான உணவுக்கு மயங்கி நாவிற்கு அடிமையாகக் கூடாது.

ஆகாரத்தை நிறுத்தினால் இந்திரியங்கள் வசப்படும்‌. மற்ற புலன்களைக்கூட அடக்கிவிடலாம். நாவை அடக்குவது மிகவும் கடினம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 591

புறாவைப் பற்றிக் கூறும்போது தத்தாத்ரேயர் ஒரு சிறிய நிகழ்வைக் கூறுகிறார்.

புறாவைப்போல் சம்சாரத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிறார்.

ஒரு காட்டில் ஒரு ஜோடிப்புறாக்கள் கூடு கட்டிக்கொண்டு வசித்துவந்தன. இரண்டும் ஒன்றன்மேல் ஒன்று ‌மிகுந்த அன்பு வைத்திருந்தன. பெண்புறா எதையெல்லாம் விரும்பிற்றோ அனைத்தையும் ஆண்புறா சிரமம் பார்க்காமல் கொண்டுவந்தது. இரண்டும் ஒன்றாகக் காட்டில் சுற்றித் திரிந்தன. விளையாடின. பேசி மகிழ்ந்தன. உணவு உண்டன. 

பெண்புறா கருவுற்று முட்டைகள் இட்டது. காலம் செல்ல செல்ல முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வந்தன. அவை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருந்தன. அவற்றின் மீது அன்பு கொண்டு சீராட்டிப் பாராட்டி வளர்த்தன. அவைகளின் அகவல் பெரிய புறாக்களுக்கு உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. 

மாயையினால் மயங்கி குஞ்சுகளின் அழகில் மயங்கித் திரிந்தன. ஒரு நாள் பெரிய புறாக்கள் இரண்டும் இரை தேட வெளியே சென்றிருந்தன. அவ்வமயம் ஒரு வேடன் வந்தான். கூட்டின் அருகே இன்னும் பறக்கத் தெரியாமல் தத்தி தத்தி நடந்து கொண்டிருந்த குட்டிப்புறாக்களை வலைவீசிப் பிடித்தான். 

பின்னர் அவற்றை எடுத்துச் செல்லாமல் வலையோடு அங்கேயே போட்டுவிட்டு ஒளிந்துகொண்டான். முதலில் கூடு திரும்பிய தாய்ப்புறா தன் குஞ்சுகள் வலையில் அகப்பட்டுக்கொண்டதைப் பார்த்து மிகுந்த துயருடன் அரற்றிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிற்று. பறந்தது. 

மிகவும் தீனமாக சக்தியற்று குஞ்சுகள் எழுப்பும் அகவலை கேட்க கேட்க, அதனால் அதன் குட்டி இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் தானும் வலையில் விழுந்தது. இப்போதும் வேடன் வலையை எடுத்துப் போகவில்லை. 

சற்று நேரத்தில் அங்கே வந்த ஆண்புறா அதிர்ந்தது. கதறிற்று. 

நான் துர்பாக்யசாலி! துர்மதியுள்ளவன். எனக்கு இன்னும் இல்லறம் அலுக்கவில்லை. இவளோடு நான் இன்னும் இன்பமாகப் பல காலம் வாழ இச்சை கொண்டுள்ளேனே. மனைவி போன பின்பு, மற்ற மூன்று புருஷார்த்தங்கள் எப்படிக் கிட்டும். அவளது தெய்வம் நான். என்னை மிகவும் நம்பினாள். என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லையே. இந்தப் பாழடைந்த கூட்டில் தனியாக என்னை விட்டு அவள் மட்டும் குஞ்சுகளுடன் மேலுலகம் செல்வாள்.

எனக்கு மட்டும் இனி இவ்வுலகில் என்ன வேலை? யாருக்காக வாழப்போகிறேன். என்றெல்லாம் அரற்றி மதி கெட்டுப்போய்த் தானும் வலையில் விழுந்தது. 

இப்போது கொடூரமான அந்த வேடன் வந்து எல்லாவற்றையும் சுருட்டி வலையோடு கொண்டுபோனான்.

குடும்ப வாழ்க்கை நடத்துபவனின் நிலையும் இதுவே. பரமார்த்திகம் பற்றிய சிந்தனையே இல்லாமல் எப்போதும் மனைவி, மக்கள், அவர்களின் சுகம், மனமகிழ்ச்சி, கேளிக்கை என்று அலைகிறான்.

 மனித சரீரம் முக்தியின் வாசலைத் திறக்கும் கதவு.

 பல கோடி பிறவிகளுக்குப் பிறகு அபூர்வமாக ஒருவனுக்கு மனிதப்பிறவி வாய்க்கிறது. 

அதை இறையறிவு இன்றி முக்தி அடைய முயற்சியும் இன்றி வீணாக்குபவர் இந்தப் புறாக்களைப் போன்றவர் ஆவர்.

புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்கள் அனைத்தும் சுவர்கம் மற்றும் நரகத்தில் கூடக் கிடைக்கும். துன்பம் வருவதற்கு மனிதன் எப்படி முயற்சி எடுப்பதில்லையோ அதே போல இன்பம் வருவதற்கும் முயற்சி தேவையில்லை. எனவே அவற்றின் மேல் பற்று கொள்ளலாகாது.

யோகியானவன் தானாக எது கிடைக்கிறதோ அதில் த்ருப்திகொள்ளவேண்டும். கிடைக்கும் உணவு சுவையானதோ, சுவையற்றதோ, நிறையவோ, குறைவானதோ மலைப்பாம்பைப் போல் அப்படியே ஏற்கவேண்டும்‌. மலைப்பாம்பு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும். வாயில் எது விழுகிறதோ அதை அப்படியே ஏற்கும். இதற்கு அஜகர வ்ருத்தி என்று பெயர். அதை யோகியும் கைக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து பல நாள்களுக்கு உணவே கிட்டாவிடிலும் முயற்சி செய்யலாகாது‌.

 வினைப்பயன் என்றெண்ணி அமைதி காக்கவேண்டும்.

 மனோபலம், உடல் பலம், சாமர்த்தியம் அனைத்தும் இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு தன் க்ஷேமத்தைப் பற்றிய கவலையின்றி இருக்கவேண்டும்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, November 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 590

தத்தாத்ரேயர் தொடர்ந்தார்.

அக்னியில் விழும் பொருளின் குணத்தை அது பார்ப்பதில்லை. நல்லதோ கெட்டதோ எதுவாகினும் சாம்பலாக்கிவிடும். ஞானியும் எந்த ஒரு விஷயத்திலும் குணம் தோஷம் என்று பிரித்துப் பார்த்து ஒதுக்கலாகாது. அவருடைய ஞானத்தீயில் அனைத்தும் சாம்பலாகிவிடும்.

ஞானி சிலரிடம் தன்னை மறைக்கிறார். சிலரிடம் தன் உண்மை ஸ்வரூபத்தைக் காட்டுகிறார். ஆனால் தனக்கு உணவளிப்பவர் எவராயினும் அவரது முன்/ பின் வினைகளை எரித்து விடுகிறார்.

ஒரு மரக்கட்டை எரியும்போது அக்னியின் வடிவம் அந்தக் கட்டை வடிவில் தென்படும். அதைப் போலவே ஆன்மாவும் உடல்களினுள் புகுந்துகொண்டு அவற்றின் வடிவமாகவே தோன்றுகிறது‌.

எப்படித் தேய்கிறது? எப்படி வளர்கிறது என்று அறியமுடியாத வேகத்தில் சந்திரனின் கலைகள் வளர்கின்றன. அதே போல பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உடல் வளர்ந்தும் தேய்ந்தும் மாறுபடுகிறது. ஆனால் அதன் வளர்ச்சியையோ தேய்மானத்தையோ ஒருவரும் அறியமுடிவதில்லை. ஆனால் அதற்கும் ஆத்மாவுக்கும் தொடர்பில்லை.

 அக்னியின் ஜுவாலைகளுக்குத் தோன்றுமிடமும் மறையும் இடமும் தெரியாது.

அதுபோல உயிர்களின் தோற்றுவாயும், மறைவும் கால மாற்றத்தில் கண்ணுக்குத் தெரிவதில்லை.

சூரியன் நீரை உறிஞ்சி அதையே மழையாகப் பொழிந்துவிடுகிறான். அதுபோல யோகியும் பொருளைப் பெறுவதிலும் வழங்குவதிலும் பற்றின்றி இருக்கவேண்டும்.

ஒரே சூரியன் பல்வேறு நீர்த்தேக்கங்களில் ப்ரதிபலித்து வெவ்வேறாகத் தோன்றும். அதுபோல் உண்மையில் இருப்பது ஒரே ஒரு ஆன்மாவே. பல்வேறு உடல்களில் பலவாகப் ப்ரதிபலிக்கிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..