Friday, August 7, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 535

சமந்த பஞ்சகத்தில் கண்ணனின் மனைவிகள் அனைவரையும் சந்தித்து அளவளாவினாள் திரௌபதி.

அஷ்ட லட்சுமிகளான அவர்களை வணங்கிப் பின் அனைவரையும் பார்த்து,

நீங்கள் ஒவ்வொருவரும் கண்ணனை மணந்த வரலாற்றை நீங்களே எனக்குக் கூறுங்கள் என்றாள்.

முதலில் திருமகளான ருக்மிணி திருவாய் மலர்ந்தாள்.

என்னை சிசுபாலனுக்குத் திருமணம் முடிப்பதாக நிச்சயம் செய்துவிட்டார்கள். அப்போது ஜராசந்தன் முதலிய எண்ணற்ற வீரர்கள் எதிர்த்தனர். சிங்கம் ஆட்டு மந்தையிலிருந்து தன் இரையைக் கொண்டுபோவதுபோல, கண்ணன் தனியொருவராக அனைவரையும் வென்று என்னைத் தூக்கிக்கொண்டுவந்தார். அவரது திருவடி எனக்கு எல்லாப் பிறவிகளிலும் கிடைக்கவேண்டும். அவரது சேவை ஒன்றே நான் எப்போதும் விரும்புவது என்றாள்.

ஸத்யபாமா, 
என் சிற்றப்பா இறந்துபட்டதால் பகவான் கண்ணன் மீது பழிச்சொல் பரப்பினார் என் தந்தை. அதைப் போக்க ஜாம்பவானை வென்று ஸ்யமந்தக மணியைக் கொணர்ந்து என் தந்தையிடம் கண்ணன் கொடுத்தார். வீண்பழி பரப்பியதற்காக அஞ்சி பிராயசித்தம் செய்ய எண்ணினார் என் தந்தை. வேறொருவர்க்கு நிச்சயம் செய்திருந்த போதிலும் என்னை பிரபுவான கண்ணனுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டார். என்றாள்.

ஜாம்பவதி பேசத் துவங்கினாள்.
தான் வணங்கும் தெய்வமான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இவரே என்றறியாமல் என் தந்தை ஜாம்பவான் கண்ணனுடன் 27 நாள்கள் போரிட்டார்‌. பின் இந்நிலவுலகில் தன்னால் வெல்லமுடியாத ஒருவர் இருப்பாராகில் அது தன் தெய்வமான ராமனே என்றுணர்ந்தார். சண்டையில் அவரைக் கடுமையாக அடித்ததற்காக மிகவும் பச்சாதாபப்ப்ட்டு வருந்தினார். பின்னர் ஸ்யமந்தக மணியுடன், என்னையும் காணிக்கையாக அளித்துவிட்டார். அன்று முதல் நான் பகவான் கண்ணனின் பணிப்பெண்ணாவேன். எப்போதும் அவரது சேவையையே விரும்புகிறேன். என்றாள்.

நான் அவரது திருவடிகளை எப்போதும் தழுவ விரும்பும் யமுனாதேவியின் அம்சமாவேன். அதற்காக வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த என்னை அர்ஜுனனுடன் வந்து கைப்பிடித்தார். எப்போதும் பகவான் கண்ணன் உறையும் வீட்டைத் தூய்மை செய்வதையே விரும்புகிறேன். என்றாள் காளிந்தி.

என்னை சுயம்வரத்தில் வந்து கரம் பிடித்தார் பகவான். அங்கு கூடியிருந்த அத்தனை அரசர்களையும் துவம்சம் செய்து, நாய்க் கூட்டத்தின் நடுவே சிங்கம் தன் பங்கை எடுத்துச் செல்வதுபோல் வீரக் காணிக்கையாக என்னை அழைத்துவந்தார்.
கங்கை தோன்றும் அவரது திருவடிகளைச் சுத்தம் செய்யும் பணியையே ஒவ்வொரு பிறவியிலும் வேண்டுகிறேன் என்றாள் மித்ரவிந்தா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment