Sunday, August 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 539

வசுதேவர் முனிவர்களை வணங்கிக் கேட்டார்.
 In 
அனைத்து தெய்வங்களின் வடிவங்களும் தாங்களே. கர்மாக்களைச் செய்வதே வினை தீரும் வழி. எவ்வெந்தக் கர்மாக்கள் வினைகளைத் தீர்க்கவல்லவை?
தயை கூர்ந்து தெளிவுபடுத்துங்கள் என்றார்.

நாரதர் பதில் கூறலானார்.

முனிச்ரேஷ்டர்களே! இதுவல்லவோ வியப்பு! இந்த வசுதேவரைப் பாருங்கள். ஸாக்ஷாத் பகவானான கண்ணனைக் குழந்தையென்று எண்ணிக்கொண்டு நம்மிடம் வினை தீரும் வழியைக் கேட்கிறார்.

கங்கைக் கரையிலேயே குடிலமைத்து வசிப்பவன் ஸ்நானத்திற்கு வேறு நதியைத் தேடிச் செல்வதுபோலிருக்கிறது. கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கலைவதுபோல் இருக்கிறது. அருகிலேயே இருப்பதால் அருமை தெரியவில்லை.

கண்ணன் காலத்தால் மாறாதவர். வெவ்வேறு சரீரம் எடுப்பதால் பகவானது அனுபூதி தேய்வதில்லை. எந்தக் காரணங்களாலும் அழிவென்பதே இல்லாதவர்.

பகவானின் திருமேனி ஞான மயமானது. அறியாமை, துவேஷம், விருப்பு, வெறுப்பு, ஈடுபாடு ஆகியவை, அவற்றால் வரும் துன்பங்கள், பாவ புண்ணியங்கள், ஆகியவற்றால் பாதிக்கப்படாதது.

தன் சக்திகளால் 
தன்னைத்தானே மறைத்துக்கொள்கிறார். அறிவிலிகள் அவரை மனிதன் என்றெண்ணுகின்றனர். கிரஹணத்தால் சூரியன் மறைக்கப்படுவதுபோல் மறைந்திருக்கிறார்.
என்றார்.

பின்னர் கண்ணன், பலராமன், மற்ற அரசர்கள் அனைவரின் முன்னிலையில் முனிவர்கள் வசுதேவரை அழைத்து,

பகவான் விஷ்ணுவை வேள்விகளால் ஆராதிப்பதே கர்மத்தைக் கொண்டு கர்மாவை அழிக்கும் வழியாகும்.

இவ்வழி மனத்திற்கு அமைதி தரவல்லது. முக்தியும் கிடைக்கும். அரச வம்சத்தினரின் கடைமையும் ஆகும். 

இல்லறத்திலுள்ளவர்க்கு அறநெறி தவறாமல் வாழ்வதும், தூய்மையான வழியில் ஈட்டிய பொருளைக்கொண்டு பகவானை வழிபடுவதும் நன்மை பயக்கும் வழிகளாகும்.

வேள்விகளைச் செய்து பொருளின் மேலுள்ள ஆசையைத் துறக்கவேண்டும். மனைவி மக்கள் மீது கொண்ட பற்றையும் துறந்து இல்லறத்தில் இருந்துகொண்டே ஸத்காரியங்களைச் செய்து பின்னர் வனத்திற்கு ஏகவேண்டும்.

தேவ, ரிஷி, பித்ரு கடன்கள் இருபிறப்பாளர்களான மாந்தர்க்கு உண்டு. வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், மக்களைப் பெறுதல் ஆகிய கர்மங்கள் கடன்களை அடைக்கும் வழிகளாம்.
 வசுதேவரே! நீங்கள் ரிஷிகளின் கடனையும், பித்ருகடனையும் தீர்த்து விட்டீர். இனி தேவர்க்கான கடனைத் தீர்க்க முயலுங்கள். தேவர்களைத் திருப்தி செய்ததும் வானப்ரஸ்தம் ஏகி முக்தி பெறலாம். 

தாங்கள் செய்த அளவற்ற புண்ணியத்தின் காரணமாகவே பகவான் தங்களுக்கு இரண்டு வடிவங்களில் மகன்களாகப் பிறந்துள்ளார்

என்றனர். அவர்களை வணங்கிய வசுதேவர் அவர்களையே யாகம் நடத்திக் கொடுக்கும் ரித்விக்குகளாக இருக்கும்படி வேண்டினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

No comments:

Post a Comment