Thursday, October 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 341

பிரபஞ்சத்தின் ஆதார சக்தி, ஆதியஞ்சோதி உரு இப்போது அழகிய குழந்தை உருவில்.

பெற்றெடுத்த பாக்யசாலிகளுக்கு வளர்க்கும் பேறு இல்லை. அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு, ப்ரேமையில் நனைவதற்காகக் கிளம்பினான் இறைவன்.

இறைவனின் சொற்படி குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார் வசுதேவர்.

ச்ருஷ்டியின் தலைவன் அவன். மாயையே அவனது சக்தி. அவன் கிளம்பினால் தடையேது.

உயிர்த்திருக்கும் பொருள்களை ஜடமாகவும், ஜடப் பொருள்களுக்கு உயிரூட்டவும், எண்ணிய மாத்திரத்தில் அதை செயலாக்கவும் வல்லவன்.
அவனளித்த ஞானத்தினால், இங்கு வசுதேவர் மிளிர்கிறார்.

ஐந்தடுக்குக் காவலில், பாதாளச் சிறையில், கம்சனுக்குத் தெரியாமல் காற்று கூட புக முடியாத இடத்தில் இருக்கிறார். இறைவனோ தன்னைக் கொண்டுபோய் கோகுலத்தில் விடுமாறு கூறுகிறான்.

இங்கு எழும் கேள்விகள் ‌ஆயிரம்.
அத்தனை காவலைத் தாண்டி எப்படிச் செல்வது?
வசுதேவர் தேவகி இருவரின் கைகளும் கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. பெரிய பெரிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் சாவிகள் காவலாளிகளிடத்தில்.

இத்தனையும் தாண்டிச் சென்றாலும் வெளியில் அடை‌மழை பெய்துகொண்டிருக்கிறது. அப்போதுதான் பிறந்த பச்சிளங்குழந்தையை எப்படிக் கொண்டு செல்வது?

வழியில் பெருவெள்ளத்தோடு யமுனை கரை புரண்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது. கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடப்பது எப்படி?

படகில் சென்றால், படகோட்டி கம்சனிடம் கூறமாட்டானா?
ஆற்றங்கரையிலும் காவல் உண்டே.

அங்கு கோகுலத்தில் நந்தகோபர் என்ன சாதாரண ஆளா? அவர் அங்கு சிற்றரசராயிற்றே.
அவரது அரண்மனையில் காவல் இருக்குமே.

பல ஆண்டுகள் கழித்து அவரது மனைவிக்கு செல்வமாய் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதை மாற்றிக்கொள்ள யார் அனுமதிப்பார்?

ஞானம் பெற்ற வசுதேவர், ஒரே ஒரு கேள்விகூட கேட்கவில்லை. அவ்வளவு ஏன்? இத்தகைய கேள்விகளில் ஒன்றுகூட அவர் மனத்தில் எழவே இல்லை.

ஞானத்தின் அடையாளம் பூரண சரணாகதி. இறைவன் சொல்லியிருக்கிறான். நடக்கும். எப்படி என்ற கேள்வி எதற்கு? நடப்பதை வேடிக்கை பார்ப்பதும், அதில் தனக்கான பங்கை சரிவரச் செய்வதுமே சரணாகதனின் லக்ஷணம்.

கையில் குழந்தையை எடுத்துக்கொண்டதும் அவரது சங்கிலிகள் பட் பட்டென சிதறின.
அங்கொரு கூடை தோன்றியது. தேவகி, தன் பழம்புடைவைகளில் ஒன்றைப் போட்டு பீதாம்பரதாரிக்கு கூடைக்குள் ஒரு மஞ்சம் செய்தாள். பெற்ற குழந்தையை அக்கணமே பிரியும் அளவிற்கு ஞானத்தினால் முதிர்ச்சி பெற்றிருந்தாலும், தாயுள்ளத்திற்கும் முன் எதுவும் எடுபடுவதில்லை.

குழந்தையைக் கூடையில் வைத்து, கூடையைத் தலையில் வைத்துக் கிளம்பினார் வசுதேவர்.
இறைவன் பூமியில் அவதாரம் செய்ய ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லாம் வல்லவன் பிறந்துதான் காரியங்களைச் செய்ய வேண்டுமா? சங்கல்ப மாத்திரத்தில் செய்ய வல்லவனாயிற்றே என்ற கேள்வி எழாமல் இல்ல.
எனில், எதற்குப் பிறக்கிறான்?

தன் பெயரை நிறுத்த, அதன் மூலம் பாமரரையும் எண்ணற்ற உயிர்களையும் கரையேற்ற.
கலியுகத்தின் மக்களுக்கு எந்த உபாசனையும் செய்யப் பொறுமையோ நேரமோ இல்லை எனும்போது, கதியில்லை என்று தள்ளிவிடக்கூடாதே என்ற கருணை.

அவன் வெண்ணெய் திருடினால்தானே நவநீதசோரன் என்ற பெயரிட்டு அழைக்க இயலும். மாடு மேய்த்தால்தானே கோபாலா என்று ஆசையாய்க் கூப்பிட இயலும். மலையைத் தூக்கினால்தானே கிரிதாரி என்று கொண்டாடலாம்.

எத்தனை எத்தனை லீலைகள். அத்தனையும் பெயர்கள். பெயரைச் சொன்னாலே போதும், லீலையும், மகிமையும் விளங்கும்‌.

தன் பெயரை நிலைநிறுத்தவும், தன்னைக் கொண்டாடும் வழிமுறைகளை காலத்திற்கேற்ப‌ மாற்றி அமைக்கவுமே இறையின் அவதாரம்.

அவதார காலத்தில் தன்னைக் காணும் உயிர்களைக் கரையேற்றுகிறான் என்றால், அவதாரம் முடிந்தபின், தன் பெயரை வைத்துக்கொண்டே கோடிக்கணக்கான உயிர்களைக் கரையேற்றுகிறான்.

கோவில்களில் உற்சவங்கள் என்றால் ஸ்வாமி புறப்பாடாகி வருவதைக் காண்கிறோம். தென்னிந்தியாவின் அழகு இந்த உற்சவங்கள். அதைத் தான் பிறந்ததுமே துவங்கினான் இறைவன். கோகுலத்தை நோக்கி வசுதேவர்‌மீதேறி புறப்பாடு நடக்கிறது. பின்னாலேயே போவோம் வாருங்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, October 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 340

அப்போதுதான் பிறந்த, மனம் மயக்கும் அழகுடைய சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்து தேவகி பேசினாள்.

இறைவா! தங்களுக்கு பிறப்பு, இறப்பு, வளர்தல், குறைதல், பாவம், புண்ணியம், விருப்பு, வெறுப்பு, சோகம், மோகம் ஆகியவை இல்லை. தன்னொளி கொண்டவர். எங்கும் நிறைந்தவர்.

புலன்களுக்கெட்டாதவர். இதுதான் என்று காட்ட இயலாதவர். தாங்களே பரம்பொருள். தங்கள் பாத கமலத்தில் சரணடைந்தவனுக்குக் காலபயம் இல்லை.
எனவே, கொடிய கம்சனிடம் பயந்த எங்களைக் காக்கவேண்டும்.

தங்களுடைய இந்த வடிவம் ஞானக் கண்களால் காணத் தக்கது. இதை மறைத்துக் கொண்டு சாதாரணக் குழந்தையாகத் தோன்றுங்கள்.

உலகனைத்தையும் தாங்கும் தாங்கள் கருப்பையினுள் ஒடுங்கியது மிகவும் வியப்பு.

தாயான தேவகி ஞானியைப் போல் பேசுகிறாள். அதுவரை மனக் கலக்கமுற்றிருந்த தேவகிக்கு இறைவன் தன் ஒரே காட்சியினால் ஞானத்தை அளித்தார். ஏனெனில், தொடர்ந்து வரப்போகும் பல வருடங்களுக்கு பிறந்த பச்சிளங்குழந்தையைப் பிரிந்து சிறையில் வாழப்போகும் தேவகிக்கு பிள்ளைப்பாசம் வந்தால் தாங்க இயலாதல்லவா? ஞானத்தைக் கொடுத்து அவளது துக்கத்தை மறக்கச் செய்கிறான் இறைவன். எங்கும் நிறைந்த பரம்பொருள் தன் குழந்தை என்றுணர்ந்தால் பிரிவேது? துக்கம்தான் ஏது?

இருப்பினும் தாயல்லவா? எனவே அற்புதக் குழந்தை என்று காட்டிக்கொண்டால் ஆபத்து வருமோ என்று அஞ்சி சாதாரண உலகக் குழந்தையைப் போல் மாறச் சொல்கிறாள்.

பிறப்பற்ற இறைவன் தாய் சொல்லைத் தட்டாமல் உடனே கேட்கிறான்.

செப்பு வாயைத் திறந்து குட்டி இறைவன் பேசத் துவங்கினான்.

தாயே! நீங்கள் முந்தைய காலத்தில் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் உங்கள் பெயர் ப்ருச்னி. உங்கள் கணவரான இவர் ஸுதபஸ் என்ற பிரஜாபதியாக இருந்தார்.

ப்ரும்மதேவர் உங்கள் இருவரையும் பிரஜைகளைப் படைக்கக் கட்டளையிட்டார்.

நீங்கள் இருவரும் தூய்மையான மனத்துடன், புலன்களை அடக்கி என்னை வழிபட்டீர்கள். பன்னிரண்டு தேவ ஆண்டுகள் கடுந்தவம் செய்தீர்கள். அப்போது உங்கள்முன் தோன்றிய நான், நீங்கள் விரும்புவதைக் கூறும்படி கேட்டேன். நீங்கள் என்னைப் போல் ஒரு குழந்தை வேண்டுமெனக் கேட்டீர்கள்.

எனக்கு ஒத்தார் மிக்கார் எவருமில்லாததால் நானே உங்கள் இருவருக்கும் ப்ருச்னிகர்பன் என்ற பெயருடன் பிறந்தேன்.

மறுபடி அதிதி - கச்யபராக நீங்கள் பிறந்தபோது நானே உங்களுக்கு உபேந்திரன் என்ற பெயருடன் வாமனனாகப் பிறந்தேன். முன் எடுத்த பிறவிகளைத் தங்களுக்கு நினைவூட்டவே இவ்வடிவில் உங்களுக்குக் காட்சியளித்தேன். நீங்கள் இருவரும் என்னை பரம்ப்பொருள் என்றும், புதல்வன் என்றும் எண்ணி எண்ணி என்மீது அன்பு செலுத்தி, இப்பிறவியின் முடிவில் முக்தியடைவீர்கள்.
என்று கூறியபின், மேலும் சில விஷயங்களைச் சொல்லிவிட்டுச் சிறு குழந்தையாக ஆனார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, October 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 339

தன்னொளியாலே அகிலத்தை ஒளிரச் செய்யும் சிசு பரம்பொருளே என்பதை உணர்ந்தார் வசுதேவர். உடனே அஞ்சலி செய்து தொழலானார்.

தாங்களே அகில உலகத்திற்கும் ஆதாரப் பொருள். அனுபவத்தினால் வரும்‌ ஆனந்தமும் நீங்களே. மாயையைக் கொண்டு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண வடிவான இவ்வுலகைப் படைத்துப் பின் அதனுள் நுழைந்தவர்போல் இருக்கிறீர்.

மாறுபாடற்ற மஹத் தத்துவம் ப்ரக்ருதி என்ற நிலையில் மாறுபாடாகத் தெரிவதுபோல் தாங்களும் பல்வேறு மாறுபாடுகளுடன் காணப்படுகிறீர்கள். ஆனால், உண்மையில்‌ மாறாதவர் தாங்கள்.

பிரகிருதியின் பதினாறு தத்துவங்களும் தனித்தனியாகப் பிரிந்து பல சக்திகள் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றை இணைத்து மாறுபாடுகளுடன் கூடிய இந்த ப்ரும்மாண்டத்தைத் தோற்றுவித்திருக்கிறீர்.

(பதினாறு தத்துவங்களாவன
ஐந்து கர்மேந்திரியங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மற்றும் மனம்)

அவை காரண நிலையில் உலகம் தோன்றுவதற்கு முன்னமே ப்ரும்மாண்டத்தில் வைத்துவிட்டீர்கள். காரிய ரூபமாக பிரபஞ்சம் தோன்றும் சமயம், அவை எதுவும் புதிதாகத் தோன்றாமல் செயல்பாட்டில் அமைந்தன.

கண் முதலியவைகளுக்குப் புலப்படும் பொருளாகக் காட்சியளிக்கும் தாங்கள் எப்புலனாலும் அறியமுடியாதவராகவும் விளங்குகிறீர்கள்.

இரு நிலைகள் ஒரே சமயத்தில் எப்படி சாத்தியம்?
உருவம் மேற்கொண்டு ஸகுண பிரம்மமாகவும், உருவமற்ற நிர்குணப் பொருளாகவும் ஒரே சமயத்தில் எவ்வாறு இருக்க இயலும்?

என்றால்
நீர் என்பது நீர், நீராவி, பனிக்கட்டி என்று பல நிலைகள் கொண்டது. நீராக இருக்கும்போது கண்களுக்குப் புலப்படுகிறது. அதைத் தாங்கும் பாத்திரத்திற்கேற்ப வடிவம் பெருகிறது. தொடு உணர்வும் தரும்.
நீராவியானால் வடிவமும் இல்லை. கண்களுக்கும் புலப்படாது. தொடு உணர்வும்‌ இல்லை.
பனிக்கட்டியாக மாறும்போது குறிப்பிட்ட வடிவமும் உண்டு, கண்களுக்கும் புலப்படும். தொடு உணர்வையும் தரக்கூடியது.

ஐம்பெரும் பூதத்தில் ஒன்றான நீருக்கே மாறும் தன்மை, மாறாத தன்மை இரண்டும் உண்டெனில், ஐந்தையும் அடக்கி ஆளும் பெரும் சக்திக்கு ஐந்துபூதங்களின் அத்தனை குணங்களும் உண்டல்லவா?

வசுதேவர் தொடர்கிறார்
தன்னைக் காட்டிலும் வேறொன்று உள்ளது என்று எவன் நினைக்கிறானோ அவன் அறிவாளி ஆகமாட்டான். உடல் முதலான அனைத்து ஸ்தூலப் பொருள்களும் தனித்தனியாகத் தெரிகின்றனவே தவிர, உண்மையில் தனி அல்ல.

எங்கும் நீக்கமற நிறைந்த இறைவா! தங்களுக்கு எல்லா நிலைகளுமே‌ பொருந்துகின்றன.
குணங்களின் செய்கையே தங்கள் செய்கையாகப் பேசப்படுகிறது.

தாங்கள்‌மூவுலகையும் படைக்க, ரஜோ‌குணத்தால் செந்நிறத்தையும், காக்கும் சமயம் ஸத்வ குணத்தினால் வெண்மை நிறத்தையும், அழிக்கும் சமயம் தாமச குணத்தை ஏற்று கருமை நிறத்தையும் ஏற்கிறீர்கள்.

எல்லா உலகையும் காக்கவே நீங்கள் என் வீட்டில் அவதாரம் செய்திருக்கிறீர்கள். பண்பாடற்ற கம்சன் உங்களுக்கு முன்னால் இங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் இரக்கமின்றிக் ‌கொன்றுவிட்டான். இப்போது நீங்கள்‌ பிறந்திருப்பதை அறிந்தால் ஆயுதமேந்தி ஓடி வருவானே.

என்றார்.
என்னதான் ஞானத்தினால் இறைவன் என்று தெரிந்தபோதும், கடைசியில் தந்தையாக மாறிக் கவலைப் படுகிறார் வசுதேவர்.

தேவகி என்ன சொன்னாள்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 338

தம் அத்புத பாலகம் என்று அழைக்கிறார் ஸ்ரீ சுகர். அத்புத பாலகன் அங்கு தோன்றியதை வசுதேவர் பார்த்தார்.

கர்பவாசம் இருந்தாரே தவிர யோனி வழியான அவதாரமில்லை. வயிற்றில் மறைந்து கண்ணெதிரே தோன்றினார்.

ஐந்து லிட்டர் பாலை அரைக் கரண்டியாகச் சுண்டக் காய்ச்சினால், அதன் சுவை எப்படி இருக்கும்?
அப்படியாக அகிலத்தையே படைத்து, அதற்கு ஆதாரமாகவும் விளங்கும் பகவான், ஒரு அடி உயரத்தில் , அத்தனை அழகையும் திரட்டிக்கொண்டு குட்டியாக அத்புத பாலகனாக வந்திருக்கிறான்.

உலகத்துச் சிசுக்கள் பிறந்ததும் அழும். அம்மா சமாதானப் படுத்துவாள். ஆனால் இங்கே,
வந்திருக்கும் குழந்தைக்கு கம்சனால் ஆபத்து வருமோ என்று அஞ்சி அம்மா அழப்போகிறாள். அற்புதக் குழந்தை சமாதானப்படுத்தப்போகிறது.

பிறந்த குழந்தை பேசுமா? பிறந்ததுமே இந்த அற்புதக் குழந்தை பேசப்போகிறது.

உலகிலுள்ள குழந்தை தவறு செய்தால், பிரம்மா உன்னை இப்படி படைத்தாரே என்று திட்டுவார்கள். ஆனால், இந்த அற்புதக் குழந்தைதான் பிரம்மாவையே படைத்ததாம்.

தன்னைக் கொண்டுபோய் மற்றொரு வீட்டில் விட்டு வரும்படி சொல்லப்போகும் அற்புதக் குழந்தை. எந்தக் குழந்தையாவது சொல்லுமா?

குழந்தை பிறந்ததும் பெற்றோரும், உற்றாரும் ஆடை, அணிகலன்கள் பூட்டுவர். அப்படி எதற்கும் அவசியமில்லாமல், பிறக்கும்போதே எல்லா ஆடை அணிகலன்களுடனும், ஆயுதங்களுடனும் வந்த அற்புதக் குழந்தை.

அற்புதமான தெய்வக் காட்சியைப் பிறந்ததுமே தாய் தந்தையர்க்குக் கொடுத்த குழந்தை. சாதாரணக் குழந்தையாக மாறு என்று பெற்றவளால் வேண்டப்பட்ட அற்புதக் குழந்தை.

தன்னை நினைப்பவர், தன் பெயர் சொல்பவர், தன்னைக் காண்பவர் அனைவரையும் ஸம்சாரச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக பாதாளச் சிறையில் அவதரித்த அற்புதக் குழந்தை.

ஸர்வ சக்தனாக இருந்தும் குழந்தைபோல் அன்புக்குக் வசப்படுவேன் என்று நிரூபிக்க‌வந்த அற்புதக் குழந்தை.

அற்புதக் குழந்தையாக பகவான் பூவுலகில் தோன்றியதை வசுதேவர் பார்த்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..