Wednesday, August 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 547

ச்ருததேவனுக்கும் பஹுளாச்வனுக்கும், 
வேதங்கள் ப்ரும்மஸ்வரூபத்தைக் கூறுகின்றன என்று கண்ணன் உபதேசம் செய்தான் என்று கூறியதைப் பிடித்துக்கொண்டான் பரீக்ஷித்.

மஹரிஷி! வேதங்கள் தமக்குத் தாமே ப்ரமாணமாக நிற்பவை. ப்ரும்மமோ ஸத், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களினின்றும் விலகி நிற்பது. இதுதான், இப்படித்தான், என்று விளக்க இயலாதது. அப்படியிருக்க ஏற்கனவே அறிந்த ஏதோவொன்றைக் காட்டித்தான் ப்ரும்மத்தை விளக்க இயலும். ஆனால் அவ்வாறு விளக்கினால் அது முழுமையாகாது. வேதங்கள் எப்படி விளக்கியிருக்கின்றன? ப்ரும்மம் வேதத்திற்கும் எட்டாக் கனிதானே. சொல், பொருள், செயல் ஆகிய எவ்வடிவமும் அற்ற ப்ரும்மத்தை வேதங்களால் மட்டும் எப்படித் தெளிவாகச் சுட்ட இயலும்? என்றான்.

நமது அறிவிற்கு எட்டாத உயர்ந்த விஷயத்தை சுலபமாகக் கேட்டுவிட்டான் பரீக்ஷித்.

ஒரு ஆரம்பப் பள்ளி மாணவனுக்கு உயர்கல்விப் படிப்பிலுள்ள ஒரு சூத்திரத்தை விளக்குவதுபோல, மஹான்களுக்கே இது கடினமான செயலாகும்.‌

சுகப்ரும்மம் சிரித்தது.
தன்னைப்பற்றியே எப்படி விளக்குவது என்று யோசித்ததோ என்னவோ. ஆனால் ப்ரும்மத்தைப் பற்றி ப்ரும்மத்தை உணர்ந்தவர், ப்ரும்மமாகவே இருப்பவர் கூறுவதுதானே பொருத்தம்? அதுதானே விளங்கும்? எட்டாத உயர்ந்த ஆனந்த அனுபவத்தில் திளைக்கும் ஸ்ரீ சுகர், பரீக்ஷித்தின்பாலிருந்த கருணையால் தன்னை மிகவும் இறக்கிக்கொண்டு வாய் திறந்து பேச வந்தார். இப்போது ப்ரும்மம் பற்றிய விளக்கமும் சொல்கிறார்.

பகவான் ஜீவன்களுக்கு இன்பங்களை நுகரப் புலன்களைத் தந்திருக்கிறார். அவற்றை அனுபவிக்க மனத்தைக் கொடுக்கிறார். பின்னர் கர்மாக்களைச் செய்ய புத்தியைக் கொடுக்கிறார்.
முக்தி பெறுவதற்கு ஒரு மார்கமாக அமைவதற்காக ப்ராணனைக் கொடுக்கிறார்.

புத்தி முதலியவற்றால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் பெறவேண்டும். உடலின் சுகங்களை அனுபவித்து, படைப்பின் சங்கிலியைத் தொடரச் செய்து, கர்மங்களைச் செய்துகொண்டே வந்து, பின்னர் அனைத்தும் அழியும் தன்மையுடையவை என்ற ஞானத்தைப் பெற்று, ஆன்மாவை உணர்ந்து, தளைகளை அறுத்து முக்தி பெறுவது ஒரு வகை.

மற்றொரு வகை யாதெனில், புலன்களின் மூலமாக மஹாவாக்கியங்களின் பொருளைக் கேட்டு, மனத்தால் பலமுறை சிந்தித்து, பின்னர் புத்தியால் ஆராய்ந்து, ப்ரும்ம ஸாக்ஷாத்காரம் அடைவது.

நிர்குணமாக இருக்கும் ப்ரும்மம், படைக்கும்போது, மாயையின் துணையுடன் ஸத்வ குணத்தை ஏற்கிறது. அந்தக் கணத்தில் வேதங்கள் துதி செய்வதால் அது குணங்களை வர்ணிக்கிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment