Saturday, August 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 536

கோசல ராஜகுமாரியான ஸத்யா தன்னைக் கண்ணன் கரம் பிடித்த விதத்தை விளக்கினாள்.

என் தந்தை கூரிய கொம்புகளும் அளப்பரிய வலிமையும் உடைய ஏழு காளைகளை வளர்த்துவந்தார். அவைகளை அடக்குபவர்க்கே என்னைத் திருமணம் செய்து கொடுப்பதாக நிபந்தனை வைத்து சுயம்வரம் வைத்தார். பகவான் கண்ணன் அந்தக் காளைகளை ஏழு உருவம் எடுத்து ஆட்டுக் குட்டிகளைக் கட்டுவதுபோல் விளையாட்டாக அடக்கிக் கட்டினார்‌. திருமணம் முடித்து, சீர்வரிசையுடன் கிளம்பிய எங்களை வழியில் எதிர்த்த அத்தனை அரசர்களையும் வென்றார். இவ்வாறு என்னை அழைத்து வந்த பகவானுக்கு நான் எப்போதும் அடிமையாக இருக்க விரும்புகிறேன்‌.

பத்ரா கூறத் துவங்கினாள்.

கண்ணன் என் மாமாவின் மகனாவார். இளவயதுமுதலே இவரிடம் நான் காதல் கொண்டிருந்தேன். அதை அறிந்த என் தந்தை தானே அவரை அழைத்து என்னை மணம் முடித்து வைத்தார்‌.
என்னுடைய எல்லாப் பிறவிகளிலும் அவரது திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்றாள்.

லக்ஷ்மணா பேசத் துவங்கினாள். 
எங்கள் அரண்மனைக்கு நாரதர் அடிக்கடி வருவார். கண்ணனின் லீலைகள், அவதாரம் அனைத்தையும் பற்றி அடிக்கடி உபன்யாசம் செய்வார்.

மஹாலக்ஷ்மியே இவரைக் கணவராக வரித்த விஷயங்களை அடிக்கடி கேட்டு நன்கு ஆராய்ந்து நானும் கண்ணனையே காதலிக்கத் துவங்கினேன். இதை அறிந்த என் தந்தை ஒரு ஏற்பாடு செய்தார். திரௌபதி! உன் திருமணத்தில் சுழலும் மீனை வைத்து ஒரு யந்திரம் அமைக்கப்பட்டதல்லவா? அதுபோலவே என் தந்தையும் ஒரு யந்திரம் அமைத்தார். அது கண்ணுக்குப் புலப்படாது. அந்தரத்தில் சுழலக்கூடியது. அதன் பிம்பம் கீழே உள்ள நீரில் மட்டுமே தெரியும். 
அதை அடிப்பவர்க்கே என்னைத் திருமணம் செய்துகொடுப்பதாக அறிவித்து சுயம்வரம் ஏற்பாடு செய்தார். 

எல்லா தேசங்களிலிருந்தும் அஸ்திர சஸ்திர விற்பன்னர்கள், ஆயிரக்கணக்கான அரசர்கள் அனைவரும் வந்தனர். என் தந்தை அனைவரையும் நன்கு உபசரித்தார். வந்திருந்த ஒவ்வொரு வீரரும் என்னை அடையும் ஆசையில் அந்த யந்திரத்தை அடிக்க முற்பட்டனர்‌. ஆனால், சிலரால் வில்லையே ஏந்த இயலவில்லை. சிலர் நாணேற்ற இயலாமல் திரும்பினர். சிலர் நாணேற்றும் தருவாயில் அதைக் கட்ட இயலாமல் வில்லால் அடிபட்டு விழுந்தனர். ஜராசந்தன், அம்பஷ்டன், சிசுபாலன், பீமன், துரியோதனன், கர்ணன் ஆகியோர் வில்லில் நாணேற்றிய போதும் மீன் இருக்கும் இடத்தை அறியாமல் திணறினர்.

அர்ஜுனன் ஒருவரே மீனைக் கண்டார். பெருமுயற்சி செய்து அம்பையும் எய்தார். ஆனால் அம்பு மீனைத் தொட்டுச் சென்றது. அறுத்துத் தள்ளவில்லை.

நிறைய அரசர்கள் அவமானப்பட்டுத் திரும்பினர். பகவான் கண்ணன் விளையாட்டாக வில்லை எடுத்து நாணேற்றி ஒரே ஒரு முறை மீனைப் பார்த்துவிட்டு அபிஜித் வேளையில் யந்திரத்தை அடித்து மீனைக் கீழே தள்ளினார்.

அப்போது ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது. தேவர்கள் பூமாரி பெய்தனர்.

நான் மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு ரத்தின மாலையுடன் அரங்கத்தில் வந்து அவருக்கு மாலையிட்டேன். 

அதைக் கண்டதும் பல அரசர்களுக்குக் கோபம் வந்தது. 

பகவான் நான்கு திருக்கரங்கள் கொண்டு வேகமாகச் செயல்பட்டார். என்னை ரதத்திலேற்றிக்கொண்டு கிளம்பினார். சார்ங்கத்தினால் எதிர்த்த அத்தனை அரசர்களையும் துவம்சம் செய்தார். எல்லோரு பார்க்கும்போதே தங்கரதத்தைத் தாருகன் துவாரகைக்கு செலுத்தி வந்து விட்டார்.

பின்தொடர்ந்த அத்தனை அரசர்களையும் கொன்றார். 

என் விருப்பம் நிறைவேறியது கண்ட என் தந்தை மிகவும் மகிழ்ந்து ஏராளமான சீர்வரிசைகளையும், செல்வங்களையும் பக்தியுடன் கண்ணனுக்கு சமர்ப்பித்தார்.

ஆத்மாராமனான கண்ணனுக்கு நாங்கள் பணிப்பெண்ணானதன் காரணம் முற்பிறவிகளில் பற்றுகளை அறுத்து நாங்கள் செய்த தவமே ஆகும். என்றாள்.

மற்ற மனைவிகள் அனைவரும், தன்னிறைவு பெற்ற கண்ணன் எங்கள் அனைவரையும் நரகாசுரனைக் கொன்று விவாஹம் செய்துகொண்டார். 

திக் விஜயத்தில் எங்கள் தந்தையரை வென்று எங்களை சிறைபிடித்து வந்தான் நரகன். கண்ணன் எங்களை விடுவித்ததும் நாங்கள் அவர் மீது காதல் கொண்டதால் திருமணம் செய்துகொண்டார். விருப்பு வெறுப்பற்ற அவர், எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுபவராவார்.

திரௌபதி! இவ்வுலகிலோ, மற்ற லோகங்களிலோ எங்களுக்கு எந்த செல்வமும் வேண்டாம். ப்ரும்மா, இந்திரன் முதலான பதவிகளையும் நாங்கள் விரும்பவில்லை. அணிமா, லஹிமா, முதலிய ஸித்திகளும், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் போன்ற முக்திகளும் கூட வேண்டாம். நாங்கள் எப்போதும் கண்ணனின் திருவடித் தாமரைகளை எங்கள் நெஞ்சில் தாங்குவதையே விரும்புகிறோம். எப்போதும் அந்த திருவடிகளை ஆராதனம் செய்ய விரும்புகிறோம்.

என்றனர்.

கண்ணனின் மனைவிகள் கூறியதைக் கேட்ட குந்தி, காந்தாரி, திரௌபதி, சுபத்திரை, கோபிகள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அனைத்துலகங்களுக்கும் பதியான கண்ணனைக் கணவனாகப் பெற்றும் அவனது மனைவிகள் துளியும் கர்வமின்றி எப்போதும் சரணாகதி செய்யும் நிலையிலேயே இருப்பதைப் பார்த்து அவர்களின் கண்களில் நீர் மல்கிற்று. 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment