Monday, August 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 545

கண்ணனின் பாதங்களை மடியில் வைத்து வருடிக்கொண்டே பஹுளாச்வன் செய்த அழகிய ஸ்துதி இதோ.

அனைத்துயிரின் ஆன்மாவாக விளங்குபவரே! சாட்சிபூதரே! ஸ்வயம் ப்ரகாசரே! உமது திருவடிகளையே எண்ணிக்கொண்டிருந்த எனக்கு தயை செய்த ப்ரபுவே! என் முன் தானே வந்து காட்சியளித்த தெய்வமே!

தன்னிடம் பக்தி கொண்டவனை விடவும் தனக்கு திருமகளோ, ஆதிசேஷனோ, ப்ரும்மாவோ கூட நெருங்கியவரில்லை என்பதை மெய்ப்பிக்க இன்று என் இல்லம் தேடி வந்தீரா?

இவ்விஷயத்தை அறிந்த எவரேனும் தம்மை ஒதுக்குவரா?

மக்களைப் பிறவிச் சுழலினின்று காக்க தாங்கள் யது வம்சத்தில் பிறந்தீரா?

குறைவற்ற ஞானரூபரே! உமக்கு நமஸ்காரம். பத்ரியில் நாராயணராக விளங்குபவரே உமக்கு நமஸ்காரம்!
பகவான் கண்ணனே! உமக்கு நமஸ்காரம். எங்கும் நிறைந்த தாங்கள் தங்களுடன் வந்த ரிஷிகளுடன் சில நாள்கள் என் மாளிகையில் தங்கவேண்டும். 

இவ்வாறு பஹுளாச்வன் அன்பாக வேண்டினான். அவன் சொல்லைத் தட்ட முடியாமல் கண்ணன் அங்கு சிலகாலம் தங்கினான்.

அங்கே ச்ருததேவர் வீட்டிற்கு மற்றொரு உரு எடுத்துச் சென்ற கண்ணன் தன்னுடன் வந்த முனிவர்களுக்கும் மற்றொரு உரு வழங்கி அழைத்துச் சென்றான்.

அவர்களைக் கண்டதும் விழுந்து விழுந்து வணங்கிய ச்ருததேவர், பெருமகிழ்ச்சியால் தன் வஸ்திரங்களை வீசிக்கொண்டு வீதியிலேயே நடனமாடத் துவங்கினார்.

பாய்கள் பலகைகள் எல்லாவற்றையும் எடுத்து வந்து போட்டு அவர்களை அமரச் செய்து அனைவரின் பாதங்களையும் தூய நீரால் சுத்தம் செய்து தலையில் தெளித்துக்கொண்டு மனைவிக்கும் தெளித்தார்.

மஹாபாக்யவானான அவர் மகிழ்ச்சியினால் அடிக்கடி தன்னை மறந்து காரியங்களை மாற்றி மாற்றிச் செய்து கொண்டிருந்தார்.

பழங்கள், சந்தனம், விளாமிச்சை மணமிக்க நீர், துளஸி, தர்ப்பை, தாமரை மலர்கள் போன்ற சுலபமாகக் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு விமரிசையாகப் பூஜை செய்தார். இனிய சுவை மிக்க ஸத்வ உணவு வகைகளை அவர்கட்குப் படைத்தார்.

இல்லறமாகிய பாழுங்கிணற்றில் விழுந்து அல்லாடும் எனக்கு இத்தகைய உயர்ந்த பேறு எப்படிக் கிடைத்தது என்று எண்ணி எண்ணி மறுகினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment