Thursday, August 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 543

பரீக்ஷித் கேட்டார். 
மஹரிஷி! என் பாட்டியான சுபத்ரைக்கும், தாத்தாவான அர்ஜுனனுக்கும் எப்படித் திருமணமாயிற்று? அதை விவரமாகக் கூறுவீர்களா? என்றார்.

ஸ்ரீ சுகர் பதில் கூறலானார். ஒரு சமயம் உன் தாத்தா அர்ஜுனன் ப்ரபாஸ தீர்த்தத்திற்கு யாத்திரையாகச் சென்றார்.

அங்கே தன் மாமன் வசுதேவரின் மகள் சுபத்ராவை துரியோதனனுக்கு மணம் செய்துவிக்க பலராமன் நிச்சயித்திருப்பதைக் கேள்வியுற்றார். ஆனால் வசுதேவருக்கும் கண்ணனுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதையும் அறிந்தார். சுபத்ராவைத் தான் மணக்கலாம் என்ற ஆசை வந்ததும், ஒரு சன்யாசி வேடம் தரித்து துவாரகை சென்றார்.

அப்போது சாதுர்மாஸ்யம் வந்ததால் அக்காலம் முழுவதும் துவாரகையில் தங்கினார். அவரை அடையாளம் காணாத பலராமனும் நகர மக்களும் நன்கு உபசரித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

ஒருநாள் பலராமன் அர்ஜுன ஸன்யாசியை பிக்ஷைக்கு அழைத்தார். அப்போது சுபத்ரையைக் கண்டதும் அர்ஜுனனின் காதல் பெருகிற்று. அவரை சுபத்திரை அடையாளம் கண்டுகொண்டாள். கண்டவுடன் காதல் கொள்ளும் வசீகரம் பெற்ற அர்ஜுனனின் அழகில் மயங்கினாள்.

இருவரும் திருமணம் பற்றிப் பேச தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தனர்.

ஒரு நாள் தேர்த் திருவிழாவிற்காக அரண்மனையை விட்டு சுபத்ரை வெளியே வந்தாள். அவ்வமயம் வசுதேவர், தேவகி மற்றும் கண்ணன் மூவரும் சம்மதிக்க அவளைத் தேரிலேற்றிக் கவர்ந்து சென்றார்.
தாக்க வந்த அத்தனை படைவீரர்களையும் அடித்து விரட்டினார்.

அதைக் கண்டு பிரளய காலக் கடலைப் போல் கோபத்தால் பொங்கினார் பலராமன்.
கண்ணன் அவரது திருவடிகளில் விழுந்து சமாதானப் படுத்தி அண்ணனான பலராமனின் கோபத்தை அடக்கினான்.

பெரியவர்களின் கோபத்தை சமாதானப்படுத்தும் வழியை எவ்வளவு அழகாகச் சொல்லித் தருகிறான்.

பின்னர் பலராமன் தங்கையின் மேலிருந்த பாசத்தால் மகிழ்வுடன் ஏராளமான சீர் வரிசைகளையும், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை அனுப்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment