Wednesday, August 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 542

தான் வசிக்கும் ஸுதல லோகத்திற்கு எழுந்தருளிய கண்ணனையும் பலராமனையும் வணங்கி பலி துதித்தார்.

உலகைத் தாங்கும் பலராமரே! உமக்கு நமஸ்காரம். உபநிடதங்கள் கொண்டாடும் பரம்பொருளே உமக்கு நமஸ்காரம். காண அரிதான காட்சி எனக்கு இன்று கிட்டியது. ரஜோ குணமும் தமோ குணமும் நிரம்பிய எங்களுக்கு தங்களது தரிசனம் மிகவும் அரியதாகும். தைத்யர்கள், தானவர்கள், ஸித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், யக்ஷ கின்னரர்கள், ராட்சசர்கள், பிசாசர்கள், ஆகிய பலரும் சுத்த ஸத்வ வடிவமாகிய தங்களிடம் விரோதம் பாராட்டுபவர்களே.

ஆனால் சிசுபாலன் போன்றோர் பகையாலும் ப்ரஹலாதன் முதலியோர் பக்தியாலும் தங்கள் ஸாயுஜ்யத்தை அடைந்துள்ளனர். ஸத்வ குணம் படைத்த தேவர்கள் தங்கள் அருகிலேயே இருந்தும் ஸாயுஜ்ய பதவியைப் பெறுவதில்லை.

ஐயனே! எனக்கு எப்போதும் தங்களது திருவடி தியானம் வேண்டும். மன நிம்மதி தருவது தங்கள் சரணங்களே. தங்கள் உபதேசங்களை ச்ரத்தையுடன் பின்பற்றுபவன் கர்மாக்களிலிருந்து விடுதலை பெறுகிறான். தாங்கள் எங்கள் பாவங்களைப் போக்கியருளுங்கள். என்றார். 

பலியின் உபசரிப்பில் மிகவும் மகிழ்ந்த கண்ணன் பேசத் துவங்கினான். 

ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் மரீசி என்ற மஹரிஷிக்கும் ஊர்ணை என்பவளுக்கும் ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் ப்ரும்மாவைப் பரிஹாசம் செய்தனர். அச்செயலால் சபிக்கப்பட்டு ஹிரண்யகசிபுவின் மகன்களாக அசுரர்களாகப் பிறந்தனர்.

பின்னர் அவர்கள் யோகமாயையால் கொண்டுவரப்பட்டு தேவகியின் வயிற்றில் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டனர். அவ்வறுவரையும் எண்ணி தேவகி மாதா கலங்குகிறாள். இதோ உங்கள் பக்கத்தில் நிற்கிறார்களே. இவர்கள்தான் அந்த அறுவர். எங்கள் தாயின் துயரம் நீங்க, நாங்கள் இவர்களை அழைத்துச் செல்கிறோம். பின்னர் சாபம் நீங்கபெற்று தேவலோகம் செல்வார்கள்.

ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், க்ஷுதப்ருத், க்ருணி என்ற அறுவரும் என்னால் நற்கதியடைந்து முக்தி பெறுவர்
என்றான்.

பலி சம்மதிக்க அவர்களை அழைத்துக்கொண்டு துவாரகை வந்தனர் கண்ணனும் பலராமனும்.

தேவகி தன் புத்திரர்களைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டாள். அவளுக்குப் பால்‌ சுரந்தது. தன் மக்கள் அறுவரையும் தன் பாலைக் குடிக்கச் செய்தாள் தேவகி. அதை உண்டதும் அவர்களுக்கு ஞானம் சித்தித்தது. அனைவரும் பார்க்க அவர்கள் அங்கிருந்து கிளம்பி தேவலோகம் சென்றனர்.

தேவகி அனைத்தையும் கண்ணனின் மாயையென்று நினைத்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment