Thursday, August 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 534

கோகுலத்திலிருந்து கண்ணன் மதுரா கிளம்பிய அன்று அவனைக் கடைசியாகக் கண்ட கோபிகள், பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் கண்டனர். விழிவிரியக் கண்ணனைக் கண்டு உள்ளத்தால் அணைத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கண்ணாரக் காண இயலாமல் தடை செய்த இமைகளைப் படைத்த பிரம்மனை சபித்தனர்.

கண்ணனும் பலராமனும் அவர்களைத் தனியிடத்தில் சந்தித்தார்கள்.

என் அன்புக்குரிய பெண்களே! எனக்காக அனைத்தையும் தியாகம் செய்த உங்களை விட்டுவிட்டு, என்னைச் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்வதற்காகச் சென்றுவிட்டேன். அதன் பின் கடைமைகளில் மூழ்கிவிட்ட என்னை நீங்கள் நினைப்பதுண்டா?
நன்றிகொன்றவன் என்று என்மீது கோபப்பட்டீர்களா?

எல்லாம் வல்ல இறைவன் ஜீவன்களை ஒன்றாகச் சேர்க்கிறார். மற்றொரு சமயம் பார்த்துப் பிரிக்கிறார். காற்றில் எப்படி புழுதியும் பஞ்சும் அலைக்கழிக்கப்படுகின்றனவோ அவ்வாறே ஜீவன்களும் தன்னிச்சையின்றி இறைவனால் சேர்த்தும் பிரித்தும் வைக்கப்படுகின்றன.

ஐம்பெரும் பூதங்களின் மூலமான நீர், காற்று, ஆகாயம் ஆகியவை உள்ளும் புறமுமாக எங்கும் நிறைந்துள்ளன. அதுபோலவே நானும் அனைத்துப் பொருள்களின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளேன்.

அனைத்து உயிரினங்களுக்கும் பஞ்சபூதங்களே ஆதாரமாகும்‌. அந்த ஜீவன்களின் ஆத்மாவாக விளங்குபவன் நானே. பிறப்பு இறப்பு போன்ற மாறுபாடுகள் அற்ற நானே அனைத்திற்கும் மூலகாரணமாவேன். என்னிடத்தில் அனைத்து சராசரங்களும் விளங்குவதைப் பாருங்கள். ஜீவனும், உலகமும் என்னுள்ளேயே அடக்கம் என்பதைக் காணுங்கள்.

இவ்வாறு கண்ணன் அனைத்து கோபிகளுக்கும் ஞானோபதேசம் செய்தான். அவனது திவ்ய காட்சியைக் கண்ட அப்பெண்களுக்கு அக்கணமே ஞானம் சித்தித்தது.

கண்ணா! எங்கள் இறைவா! யோகீஸ்வரர்களும் உன் திருவடியை இடைவிடாமல் தியானிக்கின்றனர். ஸம்ஸாரமாகிய பாழுங்கிணற்றில் விழுந்தவர்களுக்கு உன் திருவடி இணையே பற்றுக்கோடு. இல்லறத்தில் ஆழ்ந்த பற்றுள்ள எங்களுக்கு உன் திருவடி தியானம் நீங்காமல் எப்போதும் இருக்க அருள் செய்வாயாக. என்றார்கள்.

நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறே உங்கள் ஹ்ருதய கமலத்தில் எப்போதும் என்னைக் காணலாம்‌ என்று கோபியர்க்கு வரமளித்தான் கண்ணன்.

அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த கோபிகள், தங்களை மறப்பதலேயே இவ்வுடல் ஏற்படுகிறது. ஸாதுக்கள் எப்போதும் தங்களது லீலைகளையே நினைக்கின்றனர். வியாஸர் போன்றவர்களின் ஹ்ருதயத்திலிருந்து தங்களது லீலைகள் அமுதமாகப் பொங்கி, அவர்களது திருவாக்கால் கதாம்ருதமாக வருகின்றது. அவற்றை ஒரு முறை கேட்டாலும் அவனுக்கு ஸம்ஸாரத் தொல்லைகளே இல்லை.

எங்கும் நீக்கமற நிறைந்த, மாறுபாடற்ற, பூரணரான தம்மை வணக்குகிறோம் என்று கூறினர்.

பின்னர் அவர்கள் அஞ்ஞானத்தை ஒழித்து, தங்கள் மீதி வாழ்க்கையை கண்ணனின் தியானத்திலேயே கழித்து ஜீவகோசமாகிய உடலைக் களைந்து அவனையே அடைந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment