Wednesday, August 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 533

ஸமந்த பஞ்சகத்தில் குந்தி தன் சகோதர சகோதரிகளையும் அவர்களின் குடும்பங்களையும் வெகு நாள்களுக்குப் பின் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தாள்.

வசுதேவரிடம், அண்ணா, நான் மிகவும் அபாக்யசாலி. என் துன்பங்கள் எல்லை மீறியபோதும் நீங்கள் என்னை நினைக்கவே இல்லையே என்றாள்.

நாம் அனைவரும் இறைவனின் விளையாட்டுப் பொருள்கள் குந்தி. நாங்களும் கம்சனுக்கு பயந்து பலகாலம் வாழ்ந்திருந்தோம். இப்போதுதான் எங்களுக்கான இடத்தை அடைந்து நிம்மதியாக இருக்கிறோம் என்றார்.

பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன் , காந்தாரி, அவர்களது புதல்வர்கள், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மனைவியர், குந்தி, நக்னஜித், விதுரர், க்ருபர், குந்திபோஜர், த்ருஷ்டகேது, விராடர், பீஷ்மகன், நக்னஜித், புருஜித், துருபதன், சல்யன், த்ருஷ்டகேது, காசிராஜன், தமகோஷன், விசாலாக்ஷன் அனைவரையும் வசுதேவர் மற்றும் மற்ற யாதவர்கள் உபசரித்தனர். (இந்நிகழ்வு பாரத யுத்தத்திற்கு முன்பாக நிகழ்ந்திருக்கவேண்டும். சுவாரசியமான சம்பவங்களை ஸ்ரீ சுகர் நினைவுபடுத்தி சொல்வதால் வரிசை மாறியிருக்கலாம்)

கண்ணனின் வடிவழகை முதன்முதலில் நேரில் கண்ட பல அரசர்கள் மிகவும் வியந்தனர்.

அவர்கள் உக்ரசேனரிடம், நீங்கள்தான் மிகபவும் பேறு பெற்றவர். யோகிகளும் சுலபத்தில் காண இயலாத இந்த கண்ணனின் அழகை நீங்கள் எப்போதும் பருகுகிறீர்கள். இவனது திருவடித் தீர்த்தமே பவித்ரமான கங்கையாக ஓடுகின்றது. வேதங்களும் சாஸ்திரங்களும் இவன் புகழையே பாடுகின்றன.

உங்களுக்கோ பகவானுடன் கோத்ர சம்பந்தமும், திருமண உறவுமுறையும் உள்ளது. அவனைக் காண்பது, பேசுவது, தொடுவது, அவனோடு உலாவுவது உறங்குவது, உண்பது, என்று பல விதங்களிலும் உறவாடும் பேறு பெற்றிருக்கிறீர்கள்.
என்று கூறி மகிழ்ந்தனர்.

நந்தகோபர் கோபர்களுடன் கண்ணனைப் பார்க்க வந்தார்.

கண்ணனைக் கண்ட யாதவர்கள் இறந்தவன் உயிர் பெற்றதுபோல் மகிழ்ந்து ஆரத் தழுவிக் கொண்டனர்.

வசுதேவரும் நந்தரும் பேச்சை மறந்து கண்ணீர் உகுத்து கட்டிக்கொண்டனர்.

கண்ணனும் பலராமனும் நந்தனையும் யசோதையையும் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யசோதை கண்ணனை மடியில் அமர்த்திக் கொண்டாள். அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். தாய்க்கும் சேய்க்கும் கண்ணீரே மொழியானது.

தேவகி, ரோஹிணி ஆகியோர் நந்தனையும் யசோதாவையும் புகழ்ந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment