Wednesday, August 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 538

முனிவர்கள் கண்ணனைத் துதித்தனர்.

ப்ரபோ! ப்ரஜாபதிகளுக்கும் மேலாக எங்களை நினைத்துக் கொண்டிருக்கிற நாங்கள் அனைவரும் தங்களது மாயையில் மயங்கியவர்களே ஆவோம்.

 வேதங்களாலேயே இதுதான் என்று காட்ட இயலாத பரம்பொருளே! தங்களது அனைத்து வைபவங்களையும் மறைத்துக்கொண்டு ஒரு சாதாரண மனிதனைப்போல் லீலை புரிகிறீர்களே! இது மாபெரும் விந்தையாகும். செடி, கொடி, கல், எனப் பெயர்கள் பல பெற்றிருந்தபோதும் அனைத்தும் நிலத்தின் பரிமாணங்களே.

அனைத்திற்கும் காரண வஸ்துவாக விளங்கும் தாங்கள் பற்பல திருவுருவங்களையும், திருநாமங்களையும் ஏற்று தங்கள் விருப்பம் போல் இவ்வுலகைப் படைத்து காத்து அழிக்கிறீர்கள்.

 தங்களுக்கு தான், உங்களைச் சேர்ந்தவர், பிறர், பகை கொண்டவர் என்ற வேறுபாடுகள் இல்லை. எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கிறீர்கள். 
ப்ரும்மஸ்வரூபமாக இருப்பினும் பக்தரைக் காக்கவும், தீயோரை மாய்க்கவும் ஸத்வகுணமேற்றுத் திருமேனி தாங்குகிறீர்கள்.

சாஸ்திரங்கள் மூலமாகத் தங்களை உணரலாம். சாஸ்திரங்களுக்கு அச்சாணியாக விளங்குபவர் அந்தணர்கள். ஆகவேதான் நீங்கள் அந்தணர்களை மதிக்கிறீர்கள்.

இன்று எங்கள் பிறப்பும், கல்வியும் பயனுற்றன. அடையவேண்டிய பொருள் தாங்களே.

மேலான குணங்கள் நிறைந்தவரும், பூரண ஞானமுள்ளவரும், யோகமாயையால் தன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டவரும், பரமாத்மாவுமான தங்களை வணங்குகிறோம். 

கால வடிவினரான தங்களை, தங்களுடன் எப்போதும் தங்கி உண்டு உறங்குபவர்களும் கூட அறிவதில்லை.

மாயையினால் மனம் மயங்கிய ஜீவன், மனக்கலக்கத்தால் தங்களைப் பற்றிய உண்மைகளை மறந்து தங்களை உணரும் சக்தியையும் இழக்கிறான்.

எல்லா விதமான பாவங்களையும் களையும் கங்கையின் தோற்றுவாய் தங்கள் திருவடிகளே. யோகிகள் அவற்றை ஹ்ருதயத்தில் காண்கிறார்கள். நாங்கள் இப்போது நேராகக் காணப்பெற்றோம். தங்களையே அண்டியுள்ள எங்களுக்கு அருள் புரிவீராக 
என்றனர்.

முனிவர்களின் வேண்டுதலைக் கேட்ட கண்ணன் கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்து ஆமோதித்து அவர்களுக்கு விடை கொடுத்தான்.

பகவானின் திருவுள்ளத்தை அறிந்து அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பிய முனிச்ரேஷ்டர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களின் திருவடிகளில் விழுந்தார் வசுதேவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment