Sunday, January 31, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 626

யதுகுலம் முழுதும் அழிந்தபின் பலராமன் ஸமுத்திரக் கரையில் சென்று அமைதியாக அமர்ந்தான். ஆத்மாவைத் தன்னிலையில் நிறுத்தி தியானம் செய்து மனித உடலைத் துறந்தான். பரமாத்மாவை அடைந்தான்.


பலராமன் கிளம்பிவிட்டதைக் கண்ட கண்ணன் ஒரு அரசமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான். பின்னர் ப்ரகாசிக்கும் அக்னியின் வண்ணத்தின் ஒளிமயமான உடலைக் கொண்டான். நான்கு கரங்கள், ஸ்ரீ வத்ஸம், மஞ்சள் நிற பட்டாடை, மகர குண்டலம், தலையில் கிரீடம், கைகளில் கங்கணங்கள், புஜங்களில் தோள்வளை, மாலை, பாதங்களில் நூபுரம், கழுத்தில் கௌஸ்துபம், மங்கல வடிவம்‌கொண்டு புன்சிரிப்புடன் கூடிய திருமுகத்துடன் அமர்ந்திருந்தான். சங்கு, சக்கரம், கதை ஆகியவை அருகில் இருந்தன. தன் இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைத்து அமர்ந்திருந்த கோலம் அழகே உருவாக அமைந்திருந்தது.

அப்போது ஜரன் என்ற வேடன் தூரத்திலிருந்து கண்ணனின் பாதத்தை மட்டும் பார்த்தான். அவனுக்கு வேறெதுவும் தெரியவில்லை. கண்ணனின் சிவந்த பாதம் மானின் முகம் போல் தெரிந்தது‌.

மான் என்றெண்ணி அதை நோக்கி ஒரு அம்பைச் செலுத்தினான். அந்த அம்பின் நுனியில் உலக்கையின் ஒரு துண்டு செருகப்பட்டிருந்தது‌.

அம்பை எய்துவிட்டு அடிபட்ட மானைத் தேடி வந்தவன் நான்கு கரங்களுடன் அழகே உருவான ஒரு புருஷன் அமர்ந்திருப்பதைக் கண்டு பயந்துவிட்டான்.

தவறு செய்துவிட்டேன் என்று கதறிக்கொண்டு ஓடிவந்து அடிபணிந்தான்.

ஐயா! தாங்கள் பகவான் கண்ணன் அல்லவா! பெருந்தவறு செய்துவிட்டேன். அறியாமல் செய்த என் குற்றத்தை மன்னிக்கவேண்டும். உங்களை நினைத்தாலே எல்லாப் பாவங்களும் அழிந்து ஞானம் பிறக்கும்‌. அப்படிப்பட்ட உங்கள்‌ மீது அம்பெய்துவிட்டேனே.
என்னை இப்போதே கொன்றுவிடுங்கள். நான் ஒரு மாபாவி என்று அரற்றினான்.

கண்ணன் அவனைத் தேற்றினான்.
ஜரனே! பயப்படாதே. இது என் சங்கல்பமே. நான் உனக்கு புண்ணிய லோகமான ஸ்வர்கத்தைத் தருகிறேன்‌.
என்று கூறினான்.

ஜரன் அழுதுகொண்டே கண்ணனை மும்முறை வலம் வந்து வணங்கினான். அப்போது ஸ்வர்கலோகத்திலிருந்து அவனுக்கான விமானம் வந்தது. அதிலேறி விண்ணூலகம் சென்றான்.

கண்ணனின் தேரோட்டியான தாருகன் கண்ணனைக் காணாமல் தேடிக்கொண்டு வந்தான். துளசியின் நறுமணத்தை வைத்து கண்ணன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

பேரொளியுடன் திகழும் கண்ணனைப் பார்த்ததும் கிளம்பப்‌போகிறான் என்று புரிந்துகொண்டு பெருங்குரல் எடுத்து அழத் துவங்கினான்.

ப்ரபோ! தங்களைக் காணாமல் எப்படி வாழ்வோம். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று அவன் கதறும்போதே கண்ணனின் திவ்யமான தேர் கிளம்பி ஆகாயத்தை நோக்கிச் சென்றது. பின்னர் கதை, சங்கு, சக்ரம் ஆகியவையும் மேலே சென்றன.

கண்ணன் தாருகனைப் பார்த்து நீங்கள் இனி துவாரகையில் இருக்கவேண்டாம். நான் சென்றதும் துவாரகை கடலில் மூழ்கிவிடும். அங்கிருக்கும் பெண்களும், முதியோரும் உடனே கிளம்பி இந்திரப்ரஸ்தம் செல்லட்டும். என் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு அர்ஜுனனிடம் செல்லுங்கள். தாங்கள் பாகவத தர்மத்தை அனுசரித்து ஞானம்‌ பெற்று என்னை வந்தடையுங்கள். இவை அனைத்தும் மாயையின் லீலை என்பதை உணர்வீர்களாக என்றான். கண்ணன் அவசரப்படுத்தவும், பகவானை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு தாருகன் கிளம்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, January 23, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 625

பரீக்ஷித் கேட்டான்.

உத்தவர் பதரிக்குச் சென்ற பின் கண்ணன் என்ன செய்தார்? அவர் எவ்வாறு தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்? அவருடைய ரூப வர்ணனையைக் கேட்ட மாத்திரத்தில் அவரது திருவுருவம் நெஞ்சில் வந்து குடிகொள்ளுமே.

அவருடைய திருமேனியழகைப் பாடி பாடி காவியங்கள் உயர்வு பெறுகின்றன. அந்த நீலமேகத் திருமேனியைப் பார்த்துக் கொண்டே குருக்ஷேத்திரத்தில் உயிரை விட்ட லட்சக் கணக்கான வீரர்கள் சாரூப்ய முக்தியை அடைந்தனரே‌. அந்தத் திருமேனியை எவ்வாறு மறைத்துக்கொண்டார்?

ஸ்ரீ சுகர், தீர்கமான பெருமூச்சுடன் கூறத் துவங்கினார்.
ஹே பரீக்ஷித்! வானம், பூமி, எல்லா இடங்களிலும் பல்வேறு துர்நிமித்தங்கள் தோன்றலாயின. அதைக் கண்ட கண்ணன், துவாரகையின் சுதர்மா என்ற அரசவையில் அனைவரையும்‌ கூட்டினான்.

மேலோரே! நன்றாகப் பாருங்கள். துவாரகையில் நிறைய உற்பாதங்கள் தோன்றுகின்றன‌. இவை யமனின் வருகையின் அறிகுறிகளாகும். இனியும் நாம் இங்கு ஒரு முஹூர்த்தம் கூட தாமதிக்கலாகாது. விரைந்து புறப்படுங்கள். பெண்களும் குழந்தைகளும், முதியோரும் சங்கத்வாரம் செல்லட்டும். நாம் அனைவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் செல்வோம். அங்கே நீராடி உபவாசம் இருந்து பூஜைகள் செய்யலாம். வேத விற்பன்னர்களை அழைத்து தானங்கள் அளிப்போம்.

தேவதைகள், வேத விற்பன்னர்கள், பசுக்கள் ஆகியவற்றைக் கொண்டாடுவது நன்மை அடைவதற்கான சுலபமான வழியாகும்.‌ என்றான்.

அதைக் கேட்டதும் அனைவரும்‌ ஆமோதித்து அக்கணமே கிளம்பி ஒரு ஓடத்தில் ஏறிக்கொண்டு கடலைக் கடந்தனர். பின்னர் பிரபாஸத்தை நோக்கிச் சென்றனர்.

ப்ரபாஸத்தை அடைந்ததும் கண்ணன் உத்தரவுப்படி ஏராளமான மங்களகரமான செயல்களைச் செய்தனர். அதே சமயம் காலதேவனின் கட்டளைப்படி மைரேயம் என்றழைக்கப்படும் மதுவைக் குடிக்கத் துவங்கினர்.

குடித்தவுடனேயே புத்தியை மழுங்கடித்துவிடும் அம்மதுவை அளவுமீறிக் குடித்து குடித்து அனைவருமே மதி மயங்கிப் போனார்கள். நிலைதடுமாறி அடாவடிகளில் இறங்கி, சண்டையில் முடிந்தது. அவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தையும் கொண்டு ஒருவர்க்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

மிகுந்த வலிமை படைத்த அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது யானைகள்‌ மோதிக்கொள்வதைப் போல் இருந்தது. ப்ரத்யும்னன்- சாம்பன், அநிருத்தன் - ஸாத்யகி, ஸுபத்ரன் - ஸங்க்ராமஜித், கதன் - கதன், சுமித்ரன் - சுரதன் இவர்களுக்குள் நிகழ்ந்த கடும்போரால் அவ்விடமே ரணகளமாகியது.

இவ்வளவு நாள்களாக உயிருக்குயிராய்ப் பழகிய பந்துக்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு படுகாயமடைந்தனர்.

அத்தனை பாணங்களும் ஆயுதங்களும் தீர்ந்துபோயின. கை முஷ்டிகளால் அடித்துக்கொள்ளத் துவங்கினர். பின்னர் சமுத்திரக் கரையில் உயரமாக வளர்ந்திருந்த நாணல்களைப் பிடிங்கி அடிக்கத் துவங்கினர். அவை பார்க்கத்தான் நாணற்புற்களே தவிர அவர்கள் பறித்ததும் இரும்புத்தடிபோலாகிவிட்டன.

அவர்கள் சண்டையிடுவதைப் பார்க்கச் சகியாத கண்ணனும் பலராமனும் தடுக்க வந்தனர். அவர்கள் மதியிழந்து தம்மைக் காத்த தெய்வத்தையும் கொல்லும் எண்ணத்துடன் தாக்கத் துவங்கியதும் கண்ணனும் பலராமனும் கோபம்‌கொண்டு மீதமிருந்த நாணல்களைப் பிடுங்கி அவர்களை அடித்தனர்.

ஒருவர் கூட மிச்சமின்றி அனைவரும் அழிந்துபோயினர்.

பூமிக்கு பாரமாக இருந்த அனைத்து அரசர்களும் அழிந்த பிறகு, இந்த யாதவ சேனை பெரும் பாரமாக இருந்தது. அவர்களும் ப்ராம்மண சாபம் என்னும் காரணத்தைக் கொண்டு அழிந்ததும் கண்ணன் தன் எல்லாக் காரியங்களும் முடிவடைந்தது என்று மன நிறைவடைந்தான்.

அடுப்பு நன்றாக எரிவதற்காக ஒரு குச்சியை வைத்து கிளறிக்கொண்டிருப்பார்கள். கடைசியில் அந்தக் குச்சியையும் அடுப்பிலேயே போட்டு விடுவார்கள். அதுபோல் பகவான் யாதவ சேனையைக் கருவியாகக் கொண்டு பூபாரத்தைக் குறைத்த பின்பு பெருவீரகள் நிரம்பிய கணக்கிலடங்காத யாதவ சேனையையும் அழித்துவிட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, January 19, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 624

உத்தவர் மெதுவாகப் பேசலானார்.

கண்ணா! நீங்கள்தான் அனைத்திற்கும்‌ மூலகாரணம். என்னுள் இருந்த மோகங்கள் அனைத்தும் தங்கள் காட்சியினாலே நீங்கிவிட்டன‌. நெருப்பின் அருகில் இருப்பவனுக்கு குளிர், மற்றும் இருள் பற்றிய அச்சம் ஏது?
எம் குலத்தவருடன் எனக்குச் சிறிய பிடிப்பு இருந்தது. தாங்கள் அதையும் ஞானம் என்ற கத்தியால் அறுத்துவிட்டீர்கள். தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். தங்கள் சரணத்தில் எனக்கு குறைவிலாத பக்தி எப்போதும் இருக்கட்டும்‌.

என்றார். கண்ணன் தொடர்ந்து கூறினான்.

உத்தவா! இனி நீ இங்கிருக்கவேண்டாம். பதரிவனம் சென்றுவிடு. அங்கு என்னை தியானம் செய்துகொண்டு கங்கையில் ஸ்நானம் செய்துகொண்டு புனிதமடைவாய். அளகநந்தா நதியைப் பார்த்தாலே போதும். மனமாசுகள் அனைத்தும் அகன்றுவிடும். மரவுரி அணிந்து காட்டில் கிடைக்கும் வேர், கிழங்கு, பழங்கள் ஆகியவற்றை உண்டு எந்த வசதிக்கும் ஆட்படாமல் வாழ்வை நகர்த்து.

குளிர், சூடு போன்ற இரட்டைகளைச் சகித்துக்கொண்டு இனிய இயல்புடன் புலன்களை வசப்படுத்தி ஞானத்தை அடைவாயாக. தனியாக இருந்து நான் உபதேசம் செய்தவற்றை மனத்தில் இருத்தி ஆராய்ந்துகொண்டிரு. என்னையே எப்போதும் எண்ணுவாய். பாகவத தர்மத்தைக் கடைப்பிடி. கடைசியில் என் ஸ்வரூபத்தை அடையலாம். என்றான்.

கண்ணனின் ஆணையை மீற இயலாத உத்தவர், கண்களில் நீருடன் நடை தளர்ந்தவராய், கண்ணனை வலம் வந்தார். பின்னர் அவன் திருப்பாதங்களில் தம் தலையை வைத்து வணங்கியெழுந்தார். கண்ணனின் பாதுகைகளைத் தலைமேல் சுமந்துகொண்டு பிரிந்து சென்றார்.

மெல்ல‌ மெல்ல அடிவைத்து எப்படியோ பதரியை அடைந்தார்‌‌. கண்ணனின் வாக்கின்படி வாழத் துவங்கினார். பின்னர் காலக்கிரமத்தில் பகவானை அடைந்தார்.

உத்தவ கீதை எனப்படும் இந்த ஆத்மதத்துவத்தை சிரத்தையுடன் சேவிப்பவர்க்கும், கேட்பவர்க்கும் கண்ணனின் திருவடித் தொடர்பு ஏற்பட்டு முக்தியடைவர்.

வண்டு பலவகை மலர்களிலிருந்து தேனைச் சேகரிப்பதுபோல, வேதங்களிலிருந்தும் பல்வேறு புராணங்களிலிருந்தும் ஞான விஷயங்களை சேகரித்து பக்தர்களுக்காக அளித்தார். பாற்கடலிலிருந்து அம்ருதத்தைக் கடைந்தெடுத்தார். கிழத்தன்மை மரணம் ஆகியவற்றிலிருந்து விடுபட தேவர்க்கு அம்ருதத்தையும், உத்தவன் போன்ற உத்தம பக்தர்க்கு ஞானாம்ருதத்தையும் அளித்தார். இத்தகைய உத்தம புருஷனான கண்ணனை வணங்குகிறேன். என்றார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, January 18, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 623

உத்தவர் கேட்டார்.

கண்ணா! பெரும் யோகிகளும் உம்மிடம்‌ மனத்தை ஒருமைப்படுத்த இயலாமல் தோல்வியைத் தழுவுகின்றனர். தங்கள் திருவடித் தாமரைகளில் சரணடைபவர்களை மாயை மயக்குவதில்லை.

தம்மைச் சரணடைந்த பக்தரிடம் தாங்கள் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிறீர்கள். அடைக்கலம் புகுந்தவர்க்கு நால்வகைப் புருஷார்த்தங்களையும் வழங்குகிறீர்கள்.

எல்லா உயிர்களிடத்தும் அந்தர்யாமியாகவும் வெளியில் குருவாகவும் இருந்து எல்லா விதமான தாபங்களையும் போக்கி தங்களின் ஸ்வரூபத்தைக் காட்டுகிறீர்கள்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்கிறீர்கள். தங்களை எண்ணி எண்ணி ஆனந்தக் கடலில் மூழ்குவது தவிர வேறென்ன செய்ய இயலும்? ப்ரும்மாவின் ஆயுள் காலம் வரை உயிரோடிருப்பினும் தங்களின் இந்த உதவிக்கு நன்றி செலுத்த இயலாது.
என்றார்.

கண்ணன் மிகுந்த அன்புடனும் புன்முறுவலுடனும், பதில் சொல்லத் துவங்கினான்.

உத்தவா! எந்தக் காரியம் செய்தாலும் என் ப்ரீதிக்காகச் செய்கிறேன் என்ற எண்ணத்தை உள்ளோட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். மனத்தை என்னிடம் நிறுத்தி என்னிடமே ரமிக்கவேண்டும்.

என் பக்தர்களான சாதுக்கள் வசிக்குமிடத்திலேயே வசிக்கவேண்டும். தேவ, அசுர, மனிதர் எவராயினும் என்னிடம் உத்தம பக்தி செலுத்துபவரைப் பார்த்து அவர்களது ஒழுக்கத்தை மேற்கொள்ளவேண்டும்.

தனியாகவோ, பிறருடன் சேர்ந்தோ என் புகழ், நாமங்கள் ஆகியவற்றைப் பாடுதலும், ஆடுதலும், ராஜோபசாரங்களும், ஆண்டுவிழாக்களும் உற்சவங்களும் செய்யவேண்டும். எல்லா ப்ராணிகளிடத்தும் என்னையே பார்க்கவேண்டும். தூய்மையான ஞானத்தைக் கொண்டு ப்ராமணன், மற்ற குலத்தவன், திருடன், உயர்ந்த சீலமுள்ளவன், சூரியன், சிறு சுடர், தயை உள்ளவன், கொடுமைக்காரன், என்றெல்லாம் எவரிடமும் வேறுபாடின்றி அனைவரையும் சமம்மாக நோக்கவேண்டும்.

எல்லா ப்ராணிகளிடத்தும் பரமாத்மா விளங்குகிறார் என்பதை உணர்ந்து விட்டதால் தன்னைப் பரிஹாசம் செய்பவனையும் நல்லவன், கெட்டவன் என்ற உணர்வுகளை விட்டு வணங்கவேண்டும். அவ்வாறு உணரும் வரை, எல்லாப் பிராணிகளிடத்தும் நான் இருப்பதாக மனம், மொழி, காயம் ஆகியவற்றால் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு பயிற்சி செய்பவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஞானம் வந்துவிடும். இதுவே பாகவத தர்மம் ஆகும். இதைப் பின்பற்றுபவனுக்கு கடுகளவும் கெடுதல் நேராது. பயன் கருதாத, குணங்களற்ற இந்த தர்மம் மிகவும் உயர்ந்தது.

பாகவத தர்மத்தை மேற்கொண்டுள்ள சாதகன், பயம், சோகம், அழுதல், விழுதல் ஆகிய வீண் விஷயங்களைக் கூட எனக்கு அர்ப்பணம் செய்வானாகில் அவையும் தர்மமாகிவிடும்.

அழியும் தன்மை கொண்ட இவ்வுடலைக் கொண்டுதான் அழியாத் தன்மையை அடைய இயலும். ப்ரும்மவித்யையின் ரகசியத்தை உனக்கு மிக சுருக்கமாகக் கூறினேன் உத்தவா! இதை அறிந்துகொள்பவனின் அனைத்து சந்தேகங்களும் நீங்கிவிடும். நமது இவ்வுரையாடலை நினைப்பவர் ப்ரும்மத்தை அடைவார். யார் இதை என் பக்தர்க்கு விளக்கமாகக் கூறுகிறாரோ அவர்க்கு நான் என்னையே கொடுக்கிறேன். இது மிகவும் புனிதமானது‌. படிப்பவர், பிறர்க்குச் சொல்பவர் அனைவரும் ஞானதீபத்தால் என்னை தரிசிப்பதோடு பிறர்க்கும் தரிசித்துவைக்கும் புண்ணியத்தை அடைகிறார்.

பக்தியோகமாகிய ஞானத்தை அடைந்து விட்டவனுக்கு அதற்கு மேல் அறிவதற்கு ஒன்றுமில்லை. மற்ற யோகங்களால் அனைவரும் நால்வகைப் புருஷார்த்தங்களையும் அடைவர். ஆனால் உம்மைப்போன்ற உத்தம பக்தர்க்கு எல்லாப் புருஷார்த்தங்களும்‌ நானே ஆவேன்.

எவன் என் பொருட்டு எல்லா செயல்களையும் செய்கிறானோ அவனுடைய அத்தனை காரியங்களுக்கும் நான் துணை நிற்கிறேன். அவனுக்கு இன்னும் என்ன நன்மை செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பேன்.
அனைத்தையும் கேட்ட உத்தவர், கண்களில் நீர் பெருக அசையாமல் நின்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, January 12, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 622

கண்ணன் தொடர்ந்தான்.

உத்தவா!
உற்சவங்கள், தினசரி பூஜைகள், ஆகியவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள், நிலம், கடைகள், கிராமங்களை எனக்கு அர்ப்பணம் செய்பவர்க்கு எனக்கு நிகரான செல்வச் செழிப்பு ஏற்படும். என் மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வதால் மண்ணுலக ஏகாதிபத்யமும், கோவில் கட்டினால் மூவுலக ஆட்சியும், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்வோர்க்கு ப்ரும்ம லோகமும், இம்மூன்றையுன் செய்தால் எனக்கு நிகரான நிலையும் கிட்டும்.

இவற்றின் பலன்களை எனக்கு அர்ப்பணம் செய்பவன் பக்தியோகத்தை அடைந்து என்னை அடைந்துவிடுவான்.

தன்னாலோ பிறராலோ அந்தணனுக்கு அளிக்கப்பட்ட சொத்துக்களைக் கவர்பவன் லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக மலம் தின்னும் புழுவாகவும், பன்றியாகவும் பிறந்து துன்புறுவான்.
உலக விவகாரத்தில் தான் படைப்பு, ப்ரக்ருதி, புருஷன், பார்ப்பவன், பார்க்கப்படும் வஸ்து ஆகியவை வேறுபடுகின்றன‌.ஆனால் உண்மையில் அனைத்தும் வேறுபாடற்ற பரமாத்ம ஸ்வரூபமேயாம். அதனால் யாருடைய இயல்பையும், அதை ஒட்டி வரும் நடவடிக்கைகள், பழக்கங்கள் ஆகியவற்றையும் இகழக்கூடாது.

கர்மாக்களை உயர்த்திப் பேசுபவன், இகழ்பவன் இருவருமே ஞானத்திற்கான அதிகாரத்தை இழக்கிறார்கள்.

இரண்டாவதாக ஒரு பொருளே இல்லை என்னும்போது இந்த வஸ்து நல்லது அல்லது இவ்வளவு நல்லது, இவ்வளவு கெட்டது என்றெல்லாம் கூற இயலாது. இவ்வுலகிலுள்ள எப்பொருளாயினும் அதைச் சொல்லவோ, காட்டவோ முடியும். எனவே அது ஸத்யமல்ல.

ப்ரதிபிம்பம், எதிரொலி, முத்துச் சிப்பி ஒளிரும்போது வெள்ளியாகத் தெரிவது அனைத்தும் மயக்கமே. ஆனால் இவை தொடர்பாக மனத்தில் ஏற்படும் உணர்வுகள் ஸத்யம்‌. எனவே சரீரம் பொய் என்றாலும் அதனால் வரும் உணர்வுகளால் அக்ஞானம் விலகி வைராக்யம் ஏற்பட்டு, ஞானத்திற்கு வழிகோலும்.

ஞானத்தை அடைந்தவன் இவ்வுலகில் எவரையும் புகழவோ, இகழவோ மாட்டான்.

உத்தவர் கேட்டார்.
எனில் பிறப்பு இறப்பு ஆகியவை யாருக்கு ஏற்படுகிறது கண்ணா?

கண்ணன் சிரித்தான். உத்தவா! உண்மையில் ஸம்சாரம் என்பது இல்லவே இல்லை. கனவு காணும்போது வரும் ஆபத்துகள் விழிப்பு நிலையில் இல்லை. கனவு முடியும்வரை கனவென்பது தெரியாது. கனவில் சிங்கம் வந்தால் பயந்துகொண்டு அலறுகிறான்‌. உணர்வு வந்துவிடுகிறது. பொருள் இல்லை. இல்லாத பொருளில் கிடைக்கும் சுகத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவனுக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலையே இல்லை.

கனவு காணும் வரை கனவில் வரும் ஆபத்துகளும் உண்டு. விழித்துக் கொண்டால் எதுவுமே இல்லை.
சோகம், மகிழ்ச்சி, மோகம், லோபம், தாபம் போன்ற உணர்வுகள் ஆத்மாவுக்கில்லை. அவை சரீரத்தினுடையவை. ஆழ்ந்த உறக்கத்தில் எந்த உணர்வும் இல்லை

உடல், பொறிகள், ப்ராணன், மனம் ஆகியவற்றுடன் ஆத்மா தன்னைத் தொடர்புள்ளதாக எண்ணும்போது ஜீவன் என்று அழைக்கப்படுகிறது‌. தன்னை ஜீவன் என்றெண்ணும் வரையில் பரமேஸ்வரனின் காலச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு சுழல்கிறான்.

ஞானம் என்ற கத்தியால் இந்த மயக்கத்தை வெட்டவேண்டும். அதற்கு ஒரு ஸத்புருஷனான ஆசார்யனை நாடி ஞானோபதேசம் பெறவேண்டும். அப்படிச்செய்தால் சுதந்திரமாக இரண்டற்றவனாக ஆனந்தமாகச் சுற்றலாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

Friday, January 8, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 621

கண்ணன் தொடர்ந்தான்.

அஞ்ஞானம் என்பது தோற்றமுதலே ஜீவனை ஆக்ரமிக்கிறது. ப்ரக்ருதியின் காரண காரிய வடிவமான இருபத்து நான்கு தத்துவங்களுடன் புருஷனும் பரமாத்மாவும் சேர்ந்து இருபத்தாறு தத்துவங்கள் ஆகின்றன.

புருஷன், ப்ரக்ருதி, மஹத் தத்வம், அஹங்காரம், ஆகாயம், வாயு, தேஜஸ், தண்ணீர், பூமி, கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம், ஞானேந்திரியங்களுடைய ஐந்து விஷயங்கள், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவரவர் யுக்திக்கு ஏற்ப எண்ணிக்கையை நிறுவுகின்றனர். அதனால் தத்துவ ஞானிகள் எந்தக் கொள்கையிலும் தவறு காணமாட்டார்கள்.

இன்னும் ப்ரக்ருதி, புருஷன் ஆகியவற்றின் ஜடத்தன்மை, மற்றும் உயிர்த்தனமை பற்றிய விளக்கங்களை உத்தவர் கேட்க அனைத்தையும் கண்ணன் பொறுமையாக விளக்கினான்.

அதன் பின் ஜீவன் எவ்வாறு ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுள் புகுகின்றது? அதன் சூட்சுமங்கள், லிங்க சரீரம், ஒவ்வொரு மனிதனின் ஆயுள் நிலைகள், சரீரத்தின் ஒன்பது நிலைகள், கர்பம் முதல் வயோதிகம் வரை ஜீவனின் சம்சாரச் சுழல், புத்தியின் குணங்கள், சாதாரண மனிதனின் இயல்பு, பக்தனின் இயல்பு ஆகியவற்றை விளக்கினான்.

பின்னர் அவந்தி தேசத்து பெருஞ்செல்வந்தனான அந்தணன் மிகவும் கஞ்சனாக இருந்து, அனைத்து செல்வங்களையும் இழந்த பின் விவேகம் வந்து பகவானை தியானிக்கத் துவங்கினான். அவன் மனம் திருந்தி பகவத் தியானத்தில் வைராக்யத்துடன் வாழத் துவங்கியதும் ஊர் மக்களும் சுற்றமும் அவனை எள்ளி நகையாடி, கட்டிப்போட்டு, துன்புறுத்தினர். அவர் அனைத்தையும் கர்மவினை என்பதாகச் சகித்துக்கொண்டு மிக உறுதியுடன் தன் வழியில் நின்றார்.

அவ்வப்போது அவர் கூறிவந்த கருத்துக்களின் தொகுப்பு பிக்ஷு கீதம் எனப்படுகிறது.
அதன் சாரம் பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்தினால் இந்த ஸம்சாரக் கடலை அநாயாசமாகத் தாண்டிவிடலாம் என்பதே.

அவர் கதையிலிருந்து நாம் அறியவேண்டிய விஷயம் யாதெனில் புத்தியை எப்படியாவது வசப்படுத்தி பகவானிடம் நிலை நிறுத்தவேண்டும் என்பதே.

அதன் பின் கபிலர் உபதேசித்த சாங்க்ய தத்துவம் முழுவதையும் உத்தவருக்கு விளக்கினான் கண்ணன். பின்னர் முக்குணங்களின் செயல்பாடுகளை ஏராளமான உதாரணங்களுடன் விளக்கினான்.

புரூரவஸ் என்ற இளாநந்தனின் கதையையும் அவன் ஞானம் பெற்ற வகையையும் விவரித்தான் கண்ணன்.

அதன் பின் கர்மகாண்டத்தில் கூறப்படும் க்ரியாயோகத்தைப் பற்றி விவரித்தான் கண்ணன். வைதீகம், தாந்த்ரீகம், மிஸ்ரம் ஆகிய உபாசனை முறைகளை விளக்கினான். பூஜை செய்யும் முறைகள், சங்கல்பம், விக்ரஹம் அல்லது மூர்த்தி பற்றிய விவரங்கள், தியானிக்கும் முறை, ரூப தியானம், மந்திரங்கள், நைவேத்ய முறைகள், ப்ரார்த்தனை, கோவில் எழுப்பும்‌ முறைகள், உற்சவங்கள், தினசரி பூஜை, ஆகியவற்றையும் மிக விவரமாகக் கூறினான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, January 6, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 620

கண்ணன் தொடர்ந்தான்.

ஜீவனுக்குள் ஹிரண்யகர்பனாக இருக்கும் நான் ப்ராணனை ஆதாரமாகக் கொண்ட ஓங்கார வடிவில் இருக்கும் அநாஹத ஒலியாக வெளிப்படுகிறேன்‌.

சிலந்தி இதயத்திலிருந்து வாய் மூலமாக நூலைக் கொண்டுவந்து வலை பின்னுகிறது. பின்னர் உள்ளுக்குள்‌ இழுத்துக்கொள்கிறது.

அவ்வாறே ஸ்பர்சம், ஸ்வரம், ஊஷ்மம், அந்தஸ்தம் என்ற ஒலிகளாக தானே வெளிப்படுகிறது. அதிலிருந்து சந்தஸ் உண்டாகிறது. பின்னர் மொழி வடிவில் வளர்கிறது.

காயத்ரி, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி, அதிச்சந்தஸ், அத்யஷ்டி, அதிஜகதி, விராட் ஆகியவை சந்தஸ்களின் சில வகைகளாகும்.

கர்ம காண்டம்,‌ ஞான காண்டம், உபாசனா காண்டம், ஆகியவற்றில் கூறப்பட்டிருக்கும் விதிகள், விலக்குகள் ஆகியவற்றின் மறைபொருளை அறியத்தக்கவர் எவருமிலர்.

எல்லா வேதங்களும் என்னைத்தான் பேசுகின்றன. உபாசனா காண்டம் இந்திராதி தேவர் வடிவில் என்னைக் காட்டுகிறது.

ஞானகாண்டம் ப்ரும்மத்திலிருந்து ஆகாயம் தோன்றியது என்று துவங்கி, ப்ரபஞ்ச ச்ருஷ்டியை விளக்குகிறது. பின்னர் இவ்வுலகமும் பரமாத்மாவும் ஒன்றே என்று என்மேல் மற்ற பொருள்களை ஏற்றிக் கூறுகிறது‌. இவ்வுலகம் என் வடிவமே என்று நிரூபித்துவிடுகிறது‌.

என்மேல் கற்பிக்கப்படும் பொருள்கள் அனைத்தும் மாயை. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு என்னிடம் அமைதியைக் காட்டுகிறது.

உத்தவன் இடை மறித்தான்.
கண்ணா! தத்துவங்கள் எவ்வளவு?

இருபத்தெட்டு என்று கூறினீர்களே. இருபத்தாறு, இருபத்தைந்து, ஏழு, நான்கு, ஆறு, பதினாறு என்றெல்லாம் பல்வேறாகக் கூறுகிறார்களே.
எதற்காக முனிவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்?
என்றார்.

கண்ணன் சிரித்தான். உத்தவா! வைதிக ப்ராம்மணர்கள் கூறுவதனைத்தும் சரிதான். ஏனென்றால் எல்லாத் தத்துவங்களும் ஒன்றுக்கொன்று உள்ளடங்கியவை. என் மாயையினால் அவர்களால் எவ்வளவு அறிய முடிந்ததோ அதைக் கூறுகிறார்கள்.

அதை வைத்து தாம் சொல்வதே சரி என்று வாதிடுகிறார்கள். என்னுடைய சக்தியே அனைவரிடமும்‌ பரிணமிக்கிறது. அவரவர் புத்திக்கு ஏற்றவாறு புரிந்துகொண்டு விவாதம் செய்கிறார்கள். என் மஹாமாயையே அனைத்திற்கும் காரணம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, January 4, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 619

கண்ணன் மேலும் விளக்கினான்.

உத்தவா! உலகப் பொருள்களில் ஒரு உயர்வைக் கருதினால் அவற்றிடம் ஒரு பற்று வந்துவிடும். பற்றினால் அதை அடையும் ஆசை எழுகிறது. கிடைக்கவில்லையென்றாலோ, கிடைப்பதில் தடை வந்தாலோ கலகம்தான். கலகத்தினால் கோபம் வரும். கோபம் வந்தால் அறிவு மழுங்கும். நல்லதெது தீயதெதுவெனப் பிரித்தறிய இயலாது. அறிவு அழிந்ததும் சிந்திக்கும் சக்தி குறைந்துவிடும்.

விவேகம் அழிந்தால் மனிதத்தன்மை குறைந்து விலங்காகிவிடுகிறான். அத்தகையவனுக்கு இவ்வுலக இன்பமும் இல்லை. அவ்வுலக இன்பமும் இல்லை.

புலனுகர் பொருள் பற்றிய சிந்தனையே எப்போதும் இருந்தால் அவனும் ஒரு போகப்பொருளாகிவிடுகிறான். கொல்லன் பட்டறையிலுள்ள துருத்தி போல் மூச்சு விடுகிறான். வீண் வாழ்க்கை நடத்துகிறான்.

கசப்பு மாத்திரையின் மேல் இனிப்பு தடவிக் கொடுப்பதுபோல வேதங்களில் ஸ்வர்கம் மற்றும் நல்லுலகங்கள் பற்றிய வர்ணனை அமைந்துள்ளது. ஆனால் அவைதான் உயர்ந்த இலக்கு என்று வேதம் குறிப்பிடவில்லை. கர்மாக்களின் நோக்கம் சித்த சுத்தி கொடுத்து முக்தியில் ருசி உண்டாக்குவதே.

வேதத்தின் உட்கருத்தை அறியாதவர்கள் மலர் போன்ற ஸ்வர்கம்‌ முதலியவைகளை பழம் போன்று கருதி வழிதவறுகின்றனர். ஆனால், ஞானிகள் இவ்வாறு அறிவுறுத்துவதில்லை.

கர்மாவில் மூழ்குபவர்கள், ஸ்வர்காதி லோகங்கள், புலன் வழி இன்பங்கள்‌ ஆகியவற்றில் மயங்கி படைப்பின் காரணமான மூலபுருஷனையோ, அவர் ஆத்மாவாகத் தமக்குள் விளங்குவதையோ உணர்வதில்லை.

ரஜஸ், தமஸ், ஸத்வம் ஆகிய முக்குணங்களில் ஊன்றியிருப்பவர்கள் இந்திரன் முதலான தேவர்களை மிகவும் ஆழமான ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். அதில் சிறிதளவு கூட என்னை உபாசிப்பதில் காட்டுவதில்லை.

வேதங்களில் மூன்று பாகங்கள் உள்ளன. கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் ஆகியவை. இவை மூன்றிலுமே ஆராய்ந்து முடிவாகச் சொல்லப்படும் விஷயம் ஜீவனும் ப்ரும்மமும் ஒன்று என்பதே. ஆனால், முனிவர்கள் அதை இலை மறை காயாகச் சுட்டுகிறார்கள். அப்படிக் கூறுவதே எனக்கும் விருப்பமாயிருக்கிறது.

சித்த சுத்தி ஏற்படும் வரை கர்மாக்களை செய்வதே சிறப்பு. மனத்தூய்மை இல்லாமல் கர்மாக்களை விடுவது பொறுப்பின்மை. அது பாவமாகும். அதனால் ஆத்ம ஞானம் தெள்ளறிவு படைத்தவர்க்கே புலப்படும்.

வேதங்களின் பெயர் சப்தப்ரும்மம் என்பதாம். அவற்றின் ஒலி வடிவாக விளங்குவது நானே. அது பெருங்கடலைப் போன்றது. அதன் ஆழத்தை அறிய இயலாது. முனிவர்களால்‌ கூட வேதத்தின் முடிவான அபிப்ராயத்தை தெளிவாகக் காட்ட இயலாது.

தாமரைத்தண்டினுள் காணப்படும் மெல்லிய நூலைப்போல் சரீரத்தில் மெல்லியதாக அநாஹத ஒலி கேட்கும். அதுவே ஸப்த ப்ரும்மத்தின் நுண்ணிய வடிவமாகும்.

வேதஸ்வரூபமாகவும், அமுதமயாமாகவும் இருக்கும் நான் அதே சமயத்தில் ஹிரண்ய கர்பனாகவும் இருக்கிறேன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, January 2, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 618

கண்ணன் உத்தவனிடம் தொடர்ந்து பேசலானான்.

உத்தவா! தத்தம் தகுதிக்கும், சக்திக்கும் ஏற்ப தர்மங்களைப் பின்பற்றுகிறார்கள். அதற்கு மாற்றாகச் செய்வது தோஷம். இந்த குண தோஷப் பிரிவினைகள் செய்பவனின் தகுதியை வைத்து நிர்ணயிக்கப்படுகிறதே தவிர செயலை வைத்து அல்ல.

சமமான பொருள்களிலும் குணம், தோஷம், சுத்தம், அசுத்தம், சுபம், அசுபம் ஆகியவை வகுக்கப்படுகின்றன. அந்தந்தப் பொருள்களைத் தேர்வு செய்து அதிலுள்ள குற்றங்களை கண்டறிவது தகுந்தது எது நிச்சயிக்கவே.

என் அருமை உத்தவா! விதிகள், மற்றும் விலக்குகளால் தர்மத்தைச் சரிவரச் செய்ய இயலும். சமூகம் சீர்படும். சொந்த வாழ்வும் அமைதி பெறும். மனிதன் கர்மவலையில் சிக்கிச் சீரழியாமல் காக்க கட்டுப்பாடுகள் பெரிதும் உதவும்.

வேகத்தடை இருப்பது வேகமாகச் செல்ல உதவும். கட்டுப்பாடு களுடன் கூடிய வாழ்க்கையால் மனத்தைத் தன் வசப்படுத்த இயலும். நானே மனு முதலியவர்களாகப் பிறந்து வாழ்க்கை முறைகளை எடுத்துக் காட்டினேன்.

ப்ரும்மா முதல்‌ அனைத்துப் பொருள்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை. அவற்றின் ஆத்மா நானே. எல்லாம் சமம் என்று சொன்னாலும் நடைமுறையில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றன. காரணம் கர்ம வாசனையினால் கட்டுப்பாட்டை இழக்கும் புலன்களை வசப்படுத்தி நால்வகை புருஷார்த்தங்களான தர்ம அர்த்த காம மோட்சத்தை அடையவேண்டுமென்பதே.

தேசம், காலம், பயன், பயனுறுபவன் ஆகியவற்றின் குணமும் குறைகளும் என்னால் விதிக்கப்பட்டுள்ளன. கர்மாக்களில் அலட்சிய எண்ணம் கூடாது. க்ருஷ்ணசாரம் என்ற மான் இல்லாத இடம், சாதுக்கள் இல்லாத இடம், உவர் நிலம், ஆகியவை அசுத்தமானவை. கர்மாவை நடத்த அனுகூலமாக இருப்பதும், அதற்கேற்ற பொருள்கள் கிடைக்கக்கூடியதுமான காலம் புனிதமானது. கர்மாவிற்கான பொருள்கள் கிடைக்காத காலம், தீட்டு முதலியவைகளால் கர்மா செய்ய இயலாத காலம் ஆகியவை அசுத்தமானவை.

பொருள்களின் சுத்தம் மற்றொரு பொருள், சொல், ஸம்ஸ்காரம், காலம், அளவு ஆகியவற்றால் உண்டாகும். நீர் விட்டுக் கழுவினால்‌ சுத்தம். சிறுநீர் பட்டால் அசுத்தம்‌ என்பது போல.

இயலுதல், இயலாமை,‌ புத்தி மற்றும் வளத்திற்கேற்பவும் சுத்தம் அமைகிறது. தானியம், மரப்பாத்திரம், யானை தந்தம் போன்ற எலும்பு வகை, நூல், எண்ணெய், தேன், நெய், பொன், பாதரசம், தோல், ‌மண்பாத்திரங்கள் அவ்வப்போது காலத்தாலும், காற்று, நீர், மண் ஆகியவற்றாலும் சுத்தமடைகின்றன.

ஸ்நானம், தவம், தவம், வயது, ஸம்ஸ்காரம், கர்மா, என்னை நினைப்பது ஆகியவற்றால் சித்த சுத்தி ஏற்படும். ஆசார்யரிடம் மந்திரோபதேசம் பெற்று இதயத்தில் நிறுத்தினால் மந்திரசக்தி ஏற்படும். மந்திரப்பயனை எனக்கு அர்ப்பணம் செய்தால் கர்ம சுத்தியாகும்‌. தேசம், காலம், பொருள், வினையாற்றுவோன், மந்திரம், கர்மா ஆகிய ஆறும் சுத்தமாக இருப்பின் அது தர்மம். அசுத்தமானால் அதர்மம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..