Tuesday, August 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 537

ஸமந்த பஞ்சகத்தில் கண்ணனையும் பலராமனையும் தரிசனம் செய்வதற்காகப் பல முனிவர்கள் வந்தனர். 

வியாஸர், நாரதர், சியவனர், தேவலர், அஸிதர், விஸ்வாமித்திரர், சதானந்தர், பரத்வாஜர், கௌதமர், பரசுராமர், பகவான் வஸிஷ்டர், காலவர், ப்ருகு, புலஸ்தியர், கச்யபர், அத்ரி, மார்க்கண்டேயர், பிருஹஸ்பதி, ஏகதர், த்விதர், த்ரிதர், ஸனகாதிகள், ஆங்கீரஸ், யாக்ஞவல்க்யர், வாமதேவர் இன்னும் பல முனிவர்கள் அங்கு குழுமினர்.

பாண்டவர்களும், வஸுதேவரும், க்ருஷ்ணனும் அவர்கள் அனைவரையும் வரவேற்று வணங்கினர். அவர்களுக்கு ஆசனம், பாத்யம், அர்க்யம், மாலை, தூப தீபங்கள், சந்தனம் ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தனர். 

அந்த அறிஞர் சபையில் கண்ணன் பேசத் துவங்கினான்.

மஹரிஷிகளே! அனைவர்க்கும் வணக்கங்கள். நாங்கள் பிறந்த பயனை இன்று பெற்றோம்‌. இறைவனின் தரிசனம் கூட ஒருவனுக்குக் கிட்டிவிடும். ஆனால் ஸாதுக்களின் தரிசனம் சுலபத்தில் கிடைக்காது.

அனைத்து உயிர்களிலும் இறைவன் நிறைந்திருப்பதை ஒருமுகமாய்க் காணாமல் உலகியலில் உழலும் அறிவிலிகளுக்கு புகலிடம் தங்களின் திடுவடிகளே ஆகும். தங்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கிடைத்தால் போதும். அந்த ஜீவன் கரையேறிவிடும். ஆனால் அது கிடைப்பது துர்லபம்.

எல்லா நதிகளும், நீர்நிலைகளும் புண்யதீர்த்தங்களாகா. எல்லா தெய்வச் சிற்பங்களும் வழிபடத் தக்கவையன்று. ஸாந்நித்யம் உள்ள சிற்பங்களே கருவறை நிறைக்கும். அவையும் தொடர்ந்து வழிபடுவதாலேயே மனத்தூய்மை தருகின்றன.

உண்மையில் மஹான்களே வழிபடத் தக்கவர்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் நமது உடலும் மனமும் தூய்மையடைகின்றன.

அக்னி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, ஜலம், ஆகாயம், வாயு ஆகியவை தொடர்ச்சியான வழிபாட்டினால் பலனளிக்கக் கூடியவை. அவற்றால் பேதபுத்தி நீங்குவதில்லை. அஞ்ஞானம் அழிவதில்லை.

வாதம், பித்தம், கபம் ஆகியவற்றாலான இவ்வுடலை ஆத்மா என்றும் பொருள்களையும் உறவுகளையும் என்னுடையது என்றும் எண்ணுபவன் அறிவிலியாவான். 

என்றான்.

தாங்கள் பகவானை வணங்கலாம் என்று வந்தால் அவன் இவ்வாறு நம்மை உயர்த்திப் பேசுகிறானே என்று குழம்பினார்கள் முனிவர்கள். பகவானின் உள்ள்ளக் கருத்தை அறியாததால் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். பின்னர், அவன் உலகோர்க்கு ஸாதுக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை உபதேசிப்பதற்காக இவ்வாறு பேசுகிறான் என்று தெளிவுற்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment