Tuesday, August 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 546

கண்ணன் விருந்துண்டபின்பு அவனது சரணங்களைப் பிடித்துக்கொண்டு பேசினார் ச்ருததேவர்.

தெரிந்தும் மறைந்தும் விளங்கும் பரம்பொருளான தாங்கள் என் கண்களுக்குப் புலப்படுகிறீர்கள். மூன்று குணங்களால் இவ்வுலகைப் படைத்து அதற்குள் ஸத் என்னும் சைதன்ய சக்தியாக உள் நுழைந்தீர்கள். அப்போது முதல் காணும் அனைத்துப் பொருள்களிலும் உமது அழகிய உருவம் தெரிகிறது.

உறங்கும் மனிதன் மாயையில் மயங்கி கனவில் வேறொரு உலகைப் படைத்து அதில் தானும் புகுந்து ஏதேதோ செயல்களைச் செய்கிறான். அதைப் போலவே தாங்கள் படைத்த உலகில் தாங்களே புகுந்து பற்பல காரியங்களைச் செய்கிறீர்கள்.

தங்கள் கதைகளைக் கேட்டு, பாடி, அதையே பேசிக் கொண்டிருப்பவர்களின் மனத்தில் உறைபவரே. உலகியலில் மாட்டிக்கொண்டு உழல்பவர்க்கு அருகிலேயே இருந்தும் தொலைவிலிருப்பதாகத் தெரிகிறீர்கள். தம் கதையைக் கேட்பவர் மற்றும் பாடுபவரின் உள்ளம் பண்படுகிறது. அவர்கள் தங்களை வெகு அருகிலிருப்பவராக உணர்கிறார்கள்.

ஆன்மாவை உணர்பவர்க்கு முக்தியளிக்கிறீர்கள். உடலையே ஆன்மா என்று எண்ணுபவர்க்கு காலனாய் நின்று மரணத்தை அளிக்கிறீர்கள்.

மாயையாகிய திரையைப் போடுபவர் தாங்களே. ஆதலால் உங்களை மயக்காமல், அது மற்றவர்க்கு தங்களை மறைக்கிறது. தங்கள் தரிசனம் பெற்ற ஒருவனுக்கு உலகியலால் துன்பமில்லை. நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்றார் ச்ருததேவர்.

கண்ணன் அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டான்.

அந்தணரே! இந்த முனிவர்கள் உங்களுக்காகத் தான் வந்துள்ளனர். இவர்களது பாத தூளியால் இப்புவனமே தூய்மையுறுகிறது. அதற்காகவே என்னுடன் சுற்றுகிறார்கள். 

தேவர்களும், புண்ணிய க்ஷேத்ரங்களும் தீர்த்தங்களும் தொடர்ந்து பலகாலம் வழிபடுவதாலேயே பலனளிக்கின்றன. ஆனால் சான்றோர்கள் தங்கள் பார்வையாலேயே தூய்மை செய்துவிடுகிறார்கள்.

தவமும், நற்கல்வியும், மனநிறைவும் கொண்ட அந்தணன் மிகவும் உயர்ந்தவன். எனக்கு மிகவும் பிரியமானவன். வேதங்களின் நடமாடும் கோவிலாக விளங்குபவன் அந்தணனே. வேதமே என் சுவாசம். இதை உணராத மக்கள் ப்ரதிமைகள் மட்டுமே தெய்வம் என்றெண்ணி குருவான என்னையும் என் ஆன்மாவான அந்தணர்களையும் மதிப்பதில்லை.

அசைவதும் அசையாததுமான இவ்வுலகம், அதன் செயல்கள், அதன் மூலகாரணமான ப்ரக்ருதி, மஹத் முதலிய அனைத்து தத்துவங்களும் என் வடிவமே.

இந்த ப்ரும்மரிஷிகள் அனைவரும் என் வடிவங்களே. இவர்களைக் கொண்டாடுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதைக் கேட்டு ச்ருததேவன் ரிஷிகளை மீண்டும் பூஜித்தான்.

இவ்வாறு பஹுளாச்வனும், ச்ருததேவனும் கண்ணனையும், சான்றோர்களையும் வழிபட்டு நற்கதியடைந்தனர்.

அவர்களுக்காக சில காலம் கண்ணன் மிதிலையிலேயே தங்கியிருந்துவிட்டு பின்னர் துவாரகை திரும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment