Tuesday, July 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 527

பீமனுக்கும் துரியோதனனுக்கும் சண்டை மூள்வதில் பலராமனுக்கு விருப்பமில்லை. துஷ்டனாக இருந்தாலும் துரியோதனன் பலராமனின் சீடன். அவனை விட்டுக்கொடுக்க மனமில்லை பலராமனுக்கு. 

கண்ணன், மற்றும் தருமர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள் ஐவரும் பலராமனை வணங்கி நின்றனர். அவன் என்ன சொல்வானோ என்று ஐயமிருந்ததால் ஒன்றும் பேசவில்லை.

சற்று தூரத்தில் மிகவும் ஆக்ரோஷமாக பீமனும் துரியோதனனும் கதாயுத்தம் செய்து கொண்டிருந்தனர். இருவரையும் பார்த்து பலராமன் பேசத் துவங்கினான். 

ஹே துரியோதனா! ஹே பீமா! நீங்கள் இருவரும் சம வலிமையுள்ள வீரர்கள். ஒருவன் பலத்தாலும் மற்றவன் பயிற்சியாலும் வலிமை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்குள் வெற்றி தோல்விக்கான வாய்ப்பில்லை. எனவே பயனில்லாத இந்தப் போரை நிறுத்துங்கள் என்றான்.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் இதுகாறும் பேசிய ஏசிய மொழிகளையெல்லாம் நினைவில் கொண்டுவந்து, கோபத்தினாலும் தீராத பகையாலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். பலராமன் பேசியதைக் காதில் வாங்கவில்லை.

தன் பேச்சைப் பொருட்படுத்தாமல் அவர்கள் யுத்தம் செய்வதைக் கண்ட பலராமன், மேலும் பேசி அவமானப்பட விரும்பாமல், விதிப்படி நடக்கட்டும் என்று கூறிக்கொண்டு அமைதியாக துவாரகைக்குச் சென்றுவிட்டான்.

உக்ரசேனர் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தீர்த்த யாத்திரையின் போது பல வேள்விகளைக் கண்டு வந்த பலராமன் தானும் வேள்வி புரிய ஆசைப்பட்டான். வேள்வியே உருவான அவன் விருப்பத்தை ஏற்று ரிஷிகள் மகிழ்ச்சியுடன் எல்லா வேள்விகளையும் நடத்திக்கொடுத்தனர்.
பலராமன் அவர்கள் அனைவர்க்கும் பூரண ஞானத்தை வழங்கினான்.

அதன் பயனாக ப்ரபஞ்சம்‌ முழுதும் நிரம்பியுள்ள ஆன்மாவை அவர்கள் தங்களுக்குள் கண்டனர்.

யாகங்கள் முடிந்து மனைவியுடன் அவப்ருத ஸ்நானம் செய்த பலராமன் சூரியனைப் போல் தன்னொளி மிகுந்து விளங்கினான். பலராமனின் லீலைகளைக் காலை மாலை இருவேளைகளிலும் நினைப்பவர் பகவான் விஷ்ணுவின் பேரன்புக்குரியவராவர்.

என்று ஸ்ரீ சுகர் கூற, பரீக்ஷித் மேலும் கேட்கலானான்.

அனைத்தும் அறிந்தவரே! அன்பும் முக்தியும் தரும் கண்ணனின் லீலைகள் எண்ணற்றவை. இதுவரை தாங்கள் கூறாத மற்ற லீலைகளைக் கேட்க விரும்புகிறேன். இறைவனின் லீலைகளைக் கேட்கும் விஷயத்தில் போதுமென்ற த்ருப்தியே வருவதில்லை.

பகவானின் சிறப்புகளைப் பேசுகின்ற வாயே வாய். கேட்கும் காதுகளே காதுகள்.
பகவானை நினைக்கின்ற மனமே மனம். அவனது திருவடியை வணக்குகின்ற தலையே தலை. அவனது திருமேனியைக் காண்கின்ற கண்களே கண்கள். அவனது பக்தர்களின் சரண தீர்த்தத்தை ஏற்கும் உடலே உடல். அவனது உடைமையாவதே பேறு.

என்று பேசிக்கொண்டே போன பரீக்ஷித்தை பெருமையுடன் நோக்கினார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment