Friday, July 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 524

சால்வனைக் கொன்றுவிட்டு கண்ணன் திரும்புவதற்குள் பூமி நடுங்கும் வண்ணம் ஒருவன் கதையுடன் ஓடிவந்தான். அவன் பெயர் தந்தவக்த்ரன் என்பது. 

தன் நண்பர்கள் கொல்லப்பட்டதற்குக் கோபம் கொண்டு பழி வாங்கும் எண்ணத்துடன் கண்ணனைத் தாக்க வந்தான். அவனைக் கண்டதும் கண்ணன் தன் கதையை எடுத்துக்கொண்டு ரதத்திலிருந்து குதித்தான்.

இன்று நீ என் கண்ணில் பட்டுவிட்டாய். இன்றோடு உன் கதை முடிந்தது. என் மாமன் மகன் ஆனாலும் நீ என் நண்பர்களுக்குத் துரோகம் இழைத்தாய். உறவினனான உன்னைக் கொன்று நண்பர்களுக்குப் பட்ட கடனை அடைப்பேன். என்று கத்திக்கொண்டு கண்ணனை ஓங்கி அடித்தான் தந்தவக்த்ரன்.

அடிக்கு அசையாமல் நின்ற கண்ணன், தன் கதையால் அவனை மார்பில் அடித்தான். அக்கணமே ரத்தம் கக்கிக்கொண்டு விழுந்தான் தந்தவக்த்ரன். அனைவரும் பார்க்கும்போதே அவனது உடலினின்று எழும்பிய ஒளி கண்ணனின் உடலில் ஐக்கியமாயிற்று. சிசுபாலன் போலவே இவனும் வைகுண்டத்தை அடைந்தான். ஜெயவிஜயர்களுள் ஒருவன் இந்த தந்தவக்த்ரன்.

அவன் இறந்ததும் அவனது சகோதரன், விதூரதன் என்பவன் கத்தியைத் தூக்கிக்கொண்டு கண்ணனைத் தாக்க வந்தான். 
அவன் கழுத்தை சக்ராயுதத்தால் அறுத்தான் கண்ணன். 

கண்ணனை தேவர்கள் பூமாரி பெய்து, துந்துபிகள் முழங்கிக் கொண்டாடினர்.

கண்ணனின் பார்வையால் மீண்டும் சீரமைக்கப்பட்டு துவாரகை புதுப்பொலிவுடன் முன்பை விடவும் அழகாக விளங்கியது.

சிலகாலம் சென்றதும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் மூளும் சூழ்நிலை உருவானது. கண்ணன் பாண்டவர்களுக்கு உதவி செய்யப்போவதை அறிந்த பலராமன், தான் நடுநிலை காக்க விரும்பி தீர்த்த யாத்திரை கிளம்பினான்.

ப்ரபாஸ க்ஷேத்ரத்தில் நீராடியபின், தேவ பித்ரு, மனுஷ்ய கடன்களைத் தீர்க்க தர்ப்பணம் செய்தான். அவனுடன் பல ஆன்றோர்கள் பயணித்தனர்.

அனைவரும் ஸரஸ்வதி நதியின் தோற்றுவாயை அடைந்தனர். மேலும்‌ பல க்ஷேத்ரங்களை தர்சனம் செய்து நைமிஷாரண்யத்தை அடைந்தான் பலராமன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment