Friday, July 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 518

அரசர்கள் கூறினர்.
இறைவா! தேவதேவா! அழிவற்றவரே! உமக்கு நமஸ்காரம். உலகியல் இன்பங்களில் மனம் வெறுத்துப் போன எங்களைக் காப்பாற்றுங்கள். இந்த ஜராசந்தனை நாங்கள் வெறுக்கவில்லை. அரசை இழப்பதும் தங்கள் அருளாலேயே. ராஜபோகம் நிலையான ஒன்றில்லை. நாங்கள் முன்பு பூமியை வெல்ல எண்ணி பல்வேறு போர்கள் புரிந்தோம். எங்களுக்குள் சண்டையிட்டு அப்பாவி மக்களைக் கொன்றோம். காலம் எங்களின் திமிரை அடக்கி செல்வச் செழிப்பையும் அழித்துவிட்டது. பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் எமக்கு தமது திருவடி நினைவு அகலாதிருக்கட்டும். உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

கருணைக்கடலான கண்ணன் அவர்களை தயையுடன் நோக்கினான்.

எல்லா உலகிற்கும் ஆத்மாவான என்னிடம் உங்கள் அனைவர்க்கும் நீங்காத பக்தி உண்டாகும்.
செல்வமும் ஆளுமையும் செருக்கைத் தருபவை. அழிவுப்பாதையில் அழைத்துச் செல்பவை. 

கார்த்தவீர்யார்ஜுனன், நகுஷன், ராவணன், நரகாசுரன் போன்றவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியிருந்தபோதிலும் செல்வச் செருக்கால் அழிக்கப்பட்டனர்.

நீங்கள் அனைவரும் என்னையே மனத்தில் நிறுத்தி வேள்விகளால் என்னை வழிபட்டு சமநோக்குடன் வாழ்வீராக. பின்னர் ஆத்மநிலையில் மனத்தைச் செலுத்தி என்னையே வந்தடைவீராக. என்றான்.

பின்னர் அவர்கள் அனைவரையும் நன்முறையில் நீராடச் செய்து, புத்தாடைகள் அணியச் செய்து, அவர்களுக்கு சேவகம் செய்ய பணியாள்களை அமர்த்தினான். பின்னர் சஹதேவன் அவர்கள் அனைவரையும் புகழ்ந்து பாராட்டி, வணங்கி தேர்களில் ஏற்றி அவரவர் நாடுகளுக்கு அனுப்பிவைத்தான்.

அவர்கள் கண்ணனையே நினைத்துக்கொண்டு தத்தம் நாட்டிற்குச் சென்றனர். கண்ணன் கூறியபடி சோம்பலின்றி நல்லாட்சி செய்தனர்.

கண்ணன் பீமன், அர்ஜுனன் மூவரும் சஹதேவனிடம் விடை பெற்றுக்கொண்டு இந்திரப்ரஸ்தம் திரும்பினர். அர்ஜுனனும், பீமனும் தர்ம புத்திரரிடம் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினர். கண்ணனின் கருணையால் ஜராசந்தன் மடிந்ததை அறிந்த தர்மபுத்திரர் செய்வதறியாமல் கண்களில் கண்ணீர் உகுத்து நின்றார்.

பின்னர் கண்ணனிடம், தாங்களே மூவுலகிற்கும் தலைவர். எனவே தங்கள் உத்தரவை ஏற்று அனைவரும் செயல்படுவதே சிறந்தது. அஹங்காரத்துடன் இருக்கும் நாங்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். எங்கள் ஆணையை நீங்கள் ஏற்பது தமக்குத் தகாது. தங்கள் பேராற்றல் உண்மையில் வளர்ச்சியோ தேய்மானமோ அற்றது. நிலையானது.
என்றார்.

பின்னர் கண்ணனின் அனுமதியுடன் ராஜசூய வேள்விக்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் திறம்படச் செய்தார் தர்மபுத்திரர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment