Wednesday, July 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 510

எப்போதும் வெற்றி ஒன்றையே பெறும் சாம்பன் ஒரு சமயம் துரியோதனன் பெண் லக்ஷ்மணாவை சுயம்வரத்தில் மற்ற அரசர்களை வென்று கொண்டுவந்தான்.

ஆனால், கௌரவர்களுக்கு லக்ஷ்மணாவை சாம்பனுக்குக் கொடுக்க விருப்பமில்லை. போயும் போயும் இடையர்களுக்குப் பெண்ணைக் கொடுப்பதா. அவனைக் கட்டிப் போட்டு விட்டு பெண்ணைத் தூக்கிவருவோம் என்றெண்ணினர். பெரியவர்களின் அனுமதியுடன் சாம்பனைத் துரத்திச் சென்றனர்.

கர்ணன் சலன், பூரிசிரவஸ், யக்ஞகேது, துரியோதனன் ஆகியோர் கிளம்பினார்கள்.

மஹாவீரனான சாம்பன், சிங்கம் போல் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான். 
அவனை எதிர்க்க முடியாமல் திணறினர் அனைவரும்.

பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரே சமயத்தில்‌சாம்பனின் குதிரைகள், தேர், சாரதி, வில், அனைத்தையும் முறித்தனர்.

தேரிழந்து நின்ற சாம்பனைக் கட்டி இழுத்துக்கொண்டு லக்ஷ்மணையுடன் ஹஸ்தினாபுரம் திரும்பினர். 

நாரதர் காற்றென வந்து துவாரகையில் செய்தி சொன்னார். கேட்டதும் வெகுண்டெழுந்தான் கண்ணன். மற்ற யாதவர்களும் போருக்குக் கிளம்பினர்.

பலராமனுக்கு அந்த யுத்தத்தில் விருப்பமில்லை. எனவே கண்ணனையும் மற்றவர்களையும் அடக்கிவிட்டு, நான் போய் சமாதானம் பேசி மகனையும் மருமகளையும் அழைத்து வருகிறேன் என்று கூறி உத்தவருடன் புறப்பட்டான். 


ஹஸ்தினாபுரம் சென்றதும் அவர்களது மனநிலையை அறிய உத்தவரை முதலில் அரசவைக்கு அனுப்பினான்.

திருதராஷ்ட்ரன், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோரிடம் பலராமன் வந்திருப்பதைத் தெரிவித்தார் உத்தவர்.

பலராமனின் வருகையைக் கேள்வியுற்றதும் அனைவரும் சட்டென்று எழுந்தனர். 
மங்கலப் பொருள்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு வந்து பலராமனை முறைப்படி வரவேற்று வணங்கினர்.

அனைவரின் நலனையும் விசாரித்த பலராமன், 
தெளிவான குரலில் உறுதியாகக் கூறினான்.

அரசருக்கரசரான உக்ரசேனரின் ஆணையை ஏற்று இவ்விடம் வந்துள்ளேன். அறவழியில் தனித்து யுத்தம் சென்ற சாம்பனை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கிய கயமைத்தனத்தை உறவின் ஒற்றுமையை எண்ணிப் பொறுக்கிறேன்.

என்றான்.

அதைக் கேட்ட துரியோதனாதியருக்கு மிகுந்த கோபம் வந்தது.

தலைக்குத் தலை பேசத் துவங்கினர்.

காலில் இருக்கும் செருப்பு தலைக்கு ஏற ஆசைப்படுகிறதோ.

குந்திதேவியால் உறவு ஏற்பட்டுவிட்டது. அதற்காக இடையர்களுடன் சமமாக அரச குலத்தவர் உட்காரவோ, உணவருந்தவோ இயலுமா

நாம் கருணையோடு விட்டுவைத்திருப்பதால் ராஜபோகங்களுடன் வாழ்கிறீர்கள் என்பது மறந்துவிட்டதா.

சிங்கத்திற்கும் ஆட்டிற்கும் சம்பந்தம் பேச வந்தீரா
என்று ஏளனம் செய்து கர்ஜித்தனர்.

பலராமனுக்குக் கோபம் தலைக்கேறியது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


No comments:

Post a Comment