Wednesday, July 22, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 522

அரசயோகியே! கண்ணன் செய்த இன்னொரு திருவிளையாடலைக் கூறுகிறேன் கேள்! என்று ஆரம்பித்தார் ஸ்ரீ சுகர்.

மிகவும் மகிழ்ந்து இன்முகத்துடன் கேட்கத்துவங்கினான் பரிக்ஷித்.

சிசுபாலனின் நண்பன் சால்வன். ருக்மிணியின் கல்யாணத்திற்காக சிசுபாலனுக்குத் துணை மாப்பிள்ளையாக வந்திருந்தான். அப்போது யாதவ சேனையால் அடித்து விரட்டப்பட்டான். அப்போது இப்புவியில் யாதவர்களே இல்லாமல் செய்வேன் என்று சபதமிட்டிருந்தான்.

அதற்காக தினமும் ஒரு பிடி மண்ணை மட்டும் உண்டு பரமேஸ்வரனை நோக்கி ஓராண்டு காலம் தவம் செய்தான்.

அவனது தவத்தில் மகிழ்ந்து ஓராண்டு முடிவில் அவனெதிரில் தோன்றி யாது வரம் வேண்டும் என்று கேட்டார் பரமேஸ்வரன். 

யாதவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் வண்ணம் எனக்கொரு விமானம் வேண்டும். அதற்கு தேவர், ராக்ஷஸர், கந்தர்வர், யக்ஷர், நாகர் போன்ற எவராலும் அழிவு வரலாகாது. அவ்விமானம் என் விருப்பம்போல் செல்லவேண்டும். என்று அடுக்கிக்கொண்டே போனான்.

தேவசிற்பியான மயன் சிவனின் கட்டளைப்படி இரும்பாலானதும், பலவித மாயச் சக்திகள் கொண்டதுமான ஸௌபம் என்ற விமானத்தை நிர்மாணம் செய்து கொடுத்தான்.

சால்வனின் விருப்பப்படி செல்லும் அவ்விமானம் இருள் சூழ்ந்ததாக இருந்தது. அதிலேறிக்கொண்டு துவாரகை சென்றான் சால்வன்.

கண்ணனும், பலராமனும் ஊரில் இல்லாதது சால்வனுக்கு சாதகமாயிற்று. துவாரகையை முற்றுகையிட்டு, அஸ்திரங்கள், சஸ்திரங்கள், கற்கள், இடி, பாம்புகள், ஆலங்கட்டிகள் ஆகிவற்றை மழைபோல் பெய்வித்தான். துவாரகை நகரத்தின் மாளிகைகள், தோட்டங்கள், மதில்கள், மைதானங்கள், காடுகள், அனைத்தையும் அழித்தான்.

சால்வனின் தாக்குதலால் துவாரகை தத்தளித்தது. 

அதைக் கண்ட பெருவீரனான ப்ரத்யும்னன் தேரிலேறிக்கொண்டு போர்க்களம் சென்றான்.

ஸாத்யகி, சாருதேஷ்ணன், சாம்பன், அக்ரூரர்,ஹார்திக்யன், பானுவிந்தன், சுகன், கதன், சாரணன், இன்னும் பல வில்லாளிகள், பெரும் படையுடன் சமருக்குக் கிளம்பினர்.

மயிர்க்கூச்செறியும் வண்ணம் மாபெரும் போர் நிகழ்ந்தது. 

ப்ரத்யும்னன் சால்வனின் மாயைகளை அழித்தான். சால்வன், அவனது வாகனங்கள், தளபதிகள் படைவீரர்கள் அனைவரையும் நூறு நூறு பாணங்களால் தாக்கினான்.

அந்த ஸௌப விமானமோ திடீரென்று தோன்றுவதும், மறைவதும், பல வடிவங்களில் தெரிவதும், ஒன்றாக காட்சி கொடுப்பதுமாக ஏமாற்றியது. விமானம் தென்படும் சமயத்தில் எல்லாம் அதைத் தாக்கினார்கள் யாதவர்கள். அவர்களது தாக்குதலால் நிலைகுலைந்துபோன சால்வன், இரும்பாலான கதையால் ப்ரத்யும்னனைத் தாக்கினான். ப்ரத்யும்னன் மூர்ச்சையாகி விழுந்தான். உடனே சாத்யகி அவனைப் போர்க் களத்திலிருந்து விலகி தனியிடம் அழைத்து வந்து மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினான்.

ப்ரத்யும்னனோ, என்னை ஏன் போர்க்களத்திலிருந்து தூக்கி வந்தீர்? இது பெரும் அவமானம். எல்லோரும் எள்ளி நகையாடுவர் என்று அரற்றினான்.

சாத்யகி, போர்க்களத்தில் தலைவனின் உயிர் காத்து ஆசுவாசப்படுத்துவதும் தேரோட்டியின் கடைமை. இப்போது மீண்டும் போருக்குச் செல்லலாம் வா. என்று கூறி அழைத்துச் சென்றான்.

புது உத்வேகத்துடன் போர்க்களம் புகுந்த ப்ரத்யும்னன் சிங்கத்தைப்போல் சால்வனின் படையை துவம்சம் செய்தான். இவ்வாறு யாதவர்களுக்கும் சால்வனின் படைகளுக்குமிடையே இருபத்தேழு நாள்கள் போர் நடைபெற்றது.

இதற்குள் இந்திரப்ரஸ்தத்தில் நிறைய துர்நிமித்தங்கள் தென்பட்டன. துவாரகைக்குதான் ஏதோ ஆபத்து என்று புரிந்துகொண்ட கண்ணன் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment