Monday, July 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 508

காசி நகரத்தின் அரண்மனை வாசலில் குண்டலங்களுடன்  ஒரு தலை போய் விழுந்தது. வெட்டப்பட்ட அந்தத் தலையைப் பார்த்து அனைவரும் பயந்தனர்.

பின்னர் அது அரசனின் தலை என்பதை அறிந்து அனைவரும்‌ கதறினர். அவனது மனைவிகளும் உறவுகளும் கதறினர். காசி மன்னனின் மகன் ஸுதக்ஷிணன் என்பவன் தந்தையின் ஈமச் சடங்குகளை முடித்ததும், அவரைக் கொன்றவரைப் பழி தீர்ப்பேன் என்று சூளுரைத்தான். 

தந்தைக்கான காரியங்களை முடித்துவிட்டு, காசி விஸ்வநாதரை புரோஹிதரை வைத்துக்கொண்டு மிகவும் ச்ரத்தையாக வழிபட்டான். 

உள்ளன்புடன் வழிபட்டதும் மிகவும் மகிழ்ந்த பரமேஸ்வரன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

ஸுதக்ஷிணன் தந்தையைக் கொன்றவனைப் பழிதீர்க்க உபாயம் சொல்லுங்கள் என்றான். வதைக்கவேண்டும் என்று அவனுக்குக் கேட்கத் தோன்றாததன் காரணம் மாயை அவன் கண்களை மறைத்துவிட்டிருந்தது. இதுபோல் தவறாக வரம் கேட்டு வீழ்ந்தவர் பலர்.

சிவனார் சிரித்தார்.

அந்தணர்களின் மூன்று அக்னிகளில் தென்புறமுள்ள தக்ஷிணாக்னியில் ஆபிசார முறைப்படி ஹோமம் செய். அக்னிதேவன் தமது கணங்களுடன் தோன்றுவார். அந்தணர் மீது பக்தியில்லாதவர்கள் மீது அவரை ஏவினால் உன் எண்ணம் ஈடேறும் என்றார்.

அவரும் அங்கே சாமர்த்தியமாக ஒரு கொக்கி போடுகிறார்.

ஸுதக்ஷிணன் பரமேஸ்வரன் சொன்ன படி ஆபிசார ஹோமம் செய்ய ஹோம குண்டத்திலிருந்து செம்பட்டையான முடியும், மீசையும் கொண்டு தீப்பொறி பறக்கும்   கண்களுடன் கோரமான உருவில் அக்னி தோன்றினார்.

கையிலுள்ள சூலத்தைச் சுழற்றிக்கொண்டு கோரைப் பற்களுடன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தார்.

அவரைத் தன் அழிவை நோக்கி,  துவாரகையை நோக்கி ஏவினான் ஸுதக்ஷிணன். 

ப்ரும்மாண்டமான உருவத்துடன் அக்னி தேவன் துவாரகையை நோக்கி ஓடினார்.

அவர் செல்லுமிடமெல்லாம் தீப்பொறி பறந்தது. அதைக் கண்ட மக்கள் மிகவும் அஞ்சி நடுங்கிக்கொண்டு ஓடிச் சென்று கண்ணனைச் சரணடைந்தனர்.

சொக்கட்டான் ஆடி க் கொண்டிருந்த கண்ணன் சிரித்துக்கொண்டே  மக்களைப் பார்த்து அஞ்சாதீர்கள், அபயம் என்றான்.
அவனது மலர்ந்த முகம் கண்டாலே பயம் போய்விடும். அபயம் என்று வாக்கினாலும் சொன்னான்.

 பின்னர் தன் சுதர்சனத்திற்கு ஆபிசார அக்னியை அடக்க உத்தரவிட்டான்.

சுதர்சனம் அந்த ஆபிசார அக்னியை பயங்கரமாகத் தாக்க, அது மிகவும் கோபத்துடன் திரும்பிச் சென்றது.

தவறான ஏவல் செய்து 
தன்னை அனுப்பிய சுதக்ஷிணனை சாம்பலாக்கியது. பின்னர் அந்த யாக சாலை, ரித்விக்குகள் அனைவரையும் பொசுக்கிற்று. 

அந்த அக்னியைத் துரத்திக்கொண்டு வந்த சுதர்சனம் காசி நகரத்தின் மாளிகைகள், அரண்மனைகள், கடைகள், தோட்டங்கள், கொத்தளங்கள், படைகள் அனைத்தையும் சாம்பற்குவியலாக்கிற்று.

ஸ்ரீ ருத்ரன் வசிக்கும் சாம்பற்காடாகவே காசி நகரத்தை ஆக்கிவிட்டு சுதர்சனம் துவாரகை திரும்பியது.


இந்த லீலையைக் கேட்பவர் அனைவரும் தீவினைகள்‌ அனைத்திலிருந்தும்‌ விடுபடுவர்.

பூஜை செய்ததும் மகிழ்ந்து தோன்றிய பரமேஸ்வரனிடம், தனக்கும் தந்தைக்கும் நற்கதியை வேண்டாமல் துர்புத்தியால் அழிவை வேண்டினான் அந்த ஸுதக்ஷிணன். கேட்கத் தெரியாமல் வரம் கேட்பதன் விளைவு இது. இறைவனிடம் எப்போதும் எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என்று வேண்டுவதே சிறந்ததாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment