Saturday, July 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 513

கண்ணனின் அன்றாட வேலைகளை விவரித்துக் கூறுகிறார் ஸ்ரீ சுகர்.

கோழி கூவும் ப்ரும்ம முஹுர்த்த நேரத்தில் அன்றாடம்  எழுவான் கண்ணன். அவனைப் பிரிய இயலாமல் அவனது மனைவிகள் கோழிகளைச் சபிப்பர்.

கை கால் கழுவி, ஆசமனம் செய்து, ஆத்ம ஸ்வரூபத்தை த்யானம் செய்வான்.


ஆத்ம ஸ்வரூபம் என்பது தான், பிறர் என்ற வேற்றுமையற்றது. எங்கும்‌ பரவி நிற்பது. தனித்து விளங்குவது. அழிவற்றது. புலன்களுக்கு எட்டாதது. தானே ஒளிர்வது. தொட இயலாதது. ஆனந்தமே வடிவானது. இன்னதென்று வர்ணிக்க இயலாதது. அதை ப்ரும்மம் என்கின்றனர். அதைத்தான் கண்ணன் தியானம் செய்கிறான்.

பின்னர் நீராடித் தூய வெண்ணாடை அணிந்து  ஸந்தியாவந்தனம் போன்ற கடைமைகளைச் செய்கிறான். 

பின்னர் சூரியனை வணங்கி தேவ ரிஷி, பித்ரு தர்ப்பணங்களைச் செய்கிறான். பின்னர் வயது முதிர்ந்த அந்தணர்களை வணங்கி அவர்களுக்கு பட்டால் அலங்கரிக்கப்பட்டு கொம்புகளில் வெள்ளிக் குமிழ் பொருத்திய எண்ணற்ற பசுக்களை தானம் செய்கிறான்.

தன் அம்சங்களான அனைவரையும் வணங்குகிறான். 
பின்னர் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறான்.

பின்னர் கண்ணாடியில் தன்னையும், பசு, ரிஷபம், அந்தணர்கள், தெய்வங்களின் விக்ரஹங்கள் ஆகியவற்றை தரிசனம் செய்கிறான். பின்னர் நகர, மற்றும் கிராம மக்களைக் கண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கிறான்.

அதற்குள் தேர் தயாராகி வரும்.
சாரதியின் கையைப் பிடித்துக்கொண்டு சூரியனைப்போல் ரதத்தில் ஏறுகிறான். உத்தவரையும் அழைத்துக் கொண்டு  ஸுதர்மா என்றழைக்கப்படும் தேவசபைக்குச் செல்கிறான்.

ஒளி பொருந்திய அச்சபையில் தனக்கான ஒரு உயர்ந்த ஆசனத்தில் அமர்கிறான்.

சபையில் விதூஷகர்கள், நடிகர்கள், நர்த்தகிகள் ஆகியோர் பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சில சமயம் அந்தணர்கள் வேதம் ஓதி, பொருளையும் விளக்குவார்கள். சிலர் குலப்பெருமைகளைக் ‌கூறுவார்கள். 
இவ்வாறு நாளட்கள் ஓட, ஒருநாள் ஒரு மனிதன் வந்தான். அனைவரையும் வணங்கி 'ஜராசந்தன் பல்வேறு அரசர்களை கிரிவிரஜம் என்னும் கோட்டையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறான். அவர்களைக் காத்தருளுங்கள்' என்று வேண்டினான்.

அவன் மேலும் கூறலானான்.
'நற்செயல்களில் கவனம் குறைந்தவன் வெகுகாலம் சௌக்கியமாக வாழ விரும்புவதைக் கண்டு கால வடிவான தாங்கள் அவனுடைய பாசத்தை அறுக்கிறீர்கள்.

நல்லோர்களைக் காப்பதும், தீயோரை அழிப்பதும் தமது விரதமாகும். தாங்கள் பூரண கலைகளுடன் அவதாரம்‌செய்திருக்கும்போது ஜராசந்தன் எங்களை எப்படித் துன்புறுத்தலாம்? அவனைக் கருவியாகக் கொண்டு எங்கள் தீவினைகளே எம்மைத் துன்புறுத்துகிறதென்று சமாதானம் அடைய இயலவில்லை. ஏனெனில் உம்மையே தியானிக்கும்‌ எங்களுக்குத் தீவினை ஏது? இவ்விஷயம் எங்களுக்குப் புரியவில்லை.

அடிமைகளாக இருந்து அரச வாழ்வை அனுபவிப்பது கனவு போன்றது. ஒவ்வொரு நிமிடமும் பயத்தினால் நடுங்குகிறோம்‌. தங்கள்‌ மாயையில் சிக்கித் தவிக்கிறோம்.

ஜராசந்தன் என்ற வினைப் பாசத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும். போரில் பதினெட்டு முறை தங்களிடம்‌ தோற்ற அவன் எங்களை ஒரே‌ ஒரு முறை வென்றதற்கு இறுமாப்பு கொண்டு அலைகிறான். எம்மைத் துன்புறுத்துகிறான். எம்மைக் காத்தருளுங்கள்' என்ற தூதுச் செய்தியைக் கூறினான்.

அதே சமயம் ஒளி பொருந்திய நாரதர் வான் வழியே அங்கு வந்தார். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment