Saturday, July 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 519

ராஜசூய யாகத்திற்கு தேவேந்திரன், திக்பாலர்கள், யக்ஷர்கள், ஸித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், முனிவர்கள், ராக்ஷஸர்கள், கருடன், கின்னரர்கள், சாரணர்கள், அரசர்கள், அவர்களின் குடும்பங்கள் அனைவரும் வந்திருந்தனர். வேள்விக்கான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

கண்ணனின் மேற்பார்வையில் யாகம் நன்கு நடந்ததில் வியப்பேதுமில்லை. அனைவரையும் தர்மபுத்ரர் மிகவும் சிறப்பாக உபசரித்தார்.

வேள்வியின் இறுதிநாள் ஸுத்யை என்றழைக்கப்படும். அன்று அக்ரபூஜைக்குத் தகுதியானவர் யாரென்ற கேள்வி எழுந்தது. எல்லோரும் விழிப்பதைக் கண்டு சஹாதேவன் கூறத்துவங்கினான்.

சாத்வீகரான பகவான் கண்ணனே முதல் பூஜைக்கு ஏற்றவர். எல்லா தேவர்களின் இருப்பிடமாவார். அனைத்து உயிர்களின் இருப்பிடமாவார். வேள்வி, மந்திரம், ரித்விக்குகள், செய்முறை, ப்ரசாதம் அனைத்தின் ஸ்வரூபமாகவும் கண்ணனே விளங்குகிறார்.

உலகமே இவரது வடிவம். பிறப்பற்றவர். ஆதாரமற்றவர். சிலந்தி தன்னிடமிருக்கும் பொருளைக் கொண்டே வலையைப் பின்னி அதில் நடமாடி பின் தனக்குள் இழுத்துக் கொள்வது போல் இவ்வுலகைப் படைத்து காத்து அழிப்பவர் கண்ணனே.

அனைவரையும் விடப் பெரியவர். கண்ணனுக்குச் செய்யும் மரியாதை உண்மையில் இங்குள்ளவர்கள் உள்பட உலகிலுள்ள அனைத்துயிர்க்கும் செய்யும்‌ மரியாதையாகும்.

நாம் செய்யும் தான தர்மங்கள் அளப்பரிய பலனைத் தரவேண்டுமாயின் எங்கும் நிறைந்த இறையான கண்ணனுக்கே தரப்படவேண்டும்.

என்று கூறிவிட்டு அமர்ந்தான் சஹதேவன். அதைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து ஆமோதித்தனர்.

அனைவரின் கருத்தையும் அறிந்த தர்மபுத்திரர் கண்ணனை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். கங்கை தோன்றும் திருவடியைத் தூய நன்னீரால் நீராட்டினார்.

 அந்நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு தம் குடும்பத்தவர், மந்திரிகள் அனைவர் தலையிலும் தெளித்தார். மஞ்சள் பட்டாடையும், ஏராளமான ஆபரணங்களும் அணிவித்து அவ்வழகனைக் காண இயலாமல் கண்களில் நீர் திரையிடச் செயல் மறந்து நின்றார். அனைவரும் பாராட்டி ஜெய கோஷமிட்டனர்.

இவையனைத்தையும் கண்டு அனைவரும் ஆனந்தமுற்றிருந்த வேளையில் ஒரே ஒருவனுக்கு மட்டும் கோபம் தலைக்கேறிக்கொண்டே சென்றது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment