Wednesday, July 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 305

தந்தையின் சொல்படி பரசுராமர் ஒரு வருட காலம் தீர்த்தயாத்திரை முடித்துத் திரும்பினார்.
ஒரு சமயம், பரசுராமரின் தாய் ரேணுகாதேவி தீர்த்தம் கொண்டுவருவதற்காக கங்கைக்குச் சென்றாள். அங்கு கந்தர்வராஜன் தன் மனைவிகளுடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துக்கொண்டே நேரம் போனது தெரியாமல் நின்றுவிட்டாள்.

வெகு நேரம் கழித்து, தன் நினைவு வந்து ஹோம வேளை தாண்டிவிட்டதை உணர்ந்தாள். வேக வேகமாக ஆசிரமம் திரும்பி நீர்க்குடத்தை வைத்துவிட்டுக் கணவன் முன் கைகூப்பி நின்றாள்.

தன் மனைவி நெறி தவறியதை அறிந்த முனிவர் மிகவும் கோபம் கொண்டு தன் மக்களை அழைத்து, இவளைக் கொல்லுங்கள் என்றார்.

மூன்று மகன்களும் தாயைக் கொல்வதற்குத் தயங்கி நின்றனர்.
தந்தை சொல்வதைக் கேட்டுவிட்டால், அவர் அருளாலேயே பிழைக்கவைத்துவிடலாம் என்றெண்ணிய பரசுராமர், ரேணுகாதேவியின் தலையை வெட்ட, மற்ற மகன்களையும் கொல்லும்படி ஏவினார் ஜமதக்னி.

தந்தையின் கோபத்திற்கு பயந்த பரசுராமர் அவர்களையும் வெட்டிவிட, மிகவும்‌ மகிழ்ந்த ஜமதக்னி, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

அவர் இந்த நால்வரையும் உயிருடன் எழுப்பித் தாருங்கள். மேலும் அவர்களுக்கு இச்சம்பவங்கள் அனைத்தும் மறந்துபோகவேண்டும் என்றார்.

ஜமதக்னி அவ்வாறே என வரமளிக்க, நால்வரும் உறக்கத்திலிருந்து எழுபவர்போல் எழுந்தனர்.
தந்தையின் தவ வலிமையையும், அவரது இளகிய மனத்தையும் நன்கறிந்திருந்ததாலேயே பரசுராமர் இச்செயலைத் துணிந்து செய்தார்.

இதற்கிடையில் கார்த்தவீர்யனின் புதல்வர்கள், பரசுராமரைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் வேள்விச் சாலையில் தனிமையில் தியானம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்று தலையை எடுத்துச் சென்றுவிட்டனர்.

துக்கத்தால் பீடிக்கப்பட்ட ரேணுகா, ராமா ராமா என்று புதல்வனைக் கதறி அழைக்க, தாயின் குரலை வெகு தொலைவில் தீனமாகக் கேட்டு ஆசிரமத்திற்கு ஓடி வந்தார்.

அங்கே தந்தையின் உடல் குருதிவெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு மயங்கி விழுந்தார்.
மயக்கம் தெளிந்து சினத்துடன் க்ஷத்ரியர்கள் அனைவரையும் அழிப்பேன் என்று சபதம் பூண்டு ஆயுதங்களுடன் மாஹிஷ்மதி நகரம் சென்றார்.

முனிவரைக் கொன்ற ப்ரும்மஹத்தி தோஷத்தால் களையிழந்து காணப்பட்ட மாஹிஷ்மதி நகரினுள் சென்று கார்த்தவீர்யனின் புதல்வர்களைக் கொன்று உடல்களை மலை போல் குவித்தார்.

அப்போதிருந்த க்ஷத்ரியர்கள் பலரும் மறநெறியில் வீழ்ந்திருந்தனர். எனவே, இதையே காரணமாக வைத்து இருபத்தோரு முறை அரசர்களைக் கொன்று பூமியில் க்ஷத்ரிய வம்சமே இல்லாமல் செய்தார்.

அவர்களின் உதிரத்தை குருக்ஷேத்ரத்தில் ஸ்யமந்தபஞ்சகம் என்ற இடத்தில் நீர் போல் நிரப்பி, ஐந்து மடுக்களைத் தோற்றுவித்தார்.

பின்னர் தன் தந்தையின் தலையை எடுத்துவந்து உடலோடு வைத்து, ஸ்ரீமன் நாராயணனை ஆராதித்து ஒரு வேள்வி செய்தார். அவ்வேள்வியின் முடிவில் பூமி முழுவதையும் பிரித்து ரித்விக்குகளுக்கு தானமாக அளித்தார்.

வேள்வியை முடித்து அவப்ருத ஸ்நானம் செய்ததும் பாவங்கள் அனைத்தும் விலகின. ஜமதக்னி சூக்ஷ்ம உடல் பெற்று, ஸப்தரிஷிகளுள் ஒருவரானார்.

அடுத்து வரும் மன்வந்தரத்தில் பரசுராமர் ஸப்தரிஷிகளுள் ஒருவராகி வேதத்தைப் பரப்பப் போகிறார்.
மன அமைதியுடன் இன்றும் மகேந்திரமலையில் அமைதியாகத் தவம் செய்துகொண்டிருக்கிறார்.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment