Saturday, July 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 293

குருவைச் சபிப்பது தவறு என்றுணர்ந்த ஸௌதாஸன் தன் காலிலேயே சாபத்திற்காகச் சங்கல்பித்த நீரை விட்டுக்கொண்டு கறுத்த கால்களை உடையவன் ஆனான்.
வஸிஷ்டரின் சாபத்தின்படி ராக்ஷஸனாகி 12 வருடங்கள் காட்டில் அலைந்தான். அப்போது வருவோர் போவோரைப் பிடித்து உண்ணத் துவங்கினான்.

ஒரு சமயம் காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது, காட்டிலேயே வசிக்கும் ஒரு அந்தண தம்பதியரைப் பார்த்தான். அவர்கள் இன்புறும் சமயத்தில், சற்றும் யோசிக்காமல், வாட்டசாட்டமாய் இருந்த அந்த அந்தணனைப் பிடித்துக்கொண்டான்.

தவித்துப்போனார்கள் அத்தம்பதிகள். அந்தணன் மனைவி, நீ ராக்ஷஸனல்லவே. நீ நாட்டின் மன்னன்தானே. உனக்கு இச்செயல் தகுமா? இன்பமாக வாழும்‌ இருவரில் ஒருவரைக் கொல்லுதல் முறையா
இவர் ஒரு வித்வான். அந்தணனைக் கொன்ற பாவம் ப்ரும்மஹத்தியாகும். இவர் பகவானை ஆராதிப்பவர். இவரை விட்டுவிடு.

பிள்ளைகள் போன்றவர்கள் பிரஜைகள். அரசனே அவர்களைக் கொல்லலாமா. நீ சான்றோரை பூஜித்ததெல்லாம் பொய்யா? இது உனக்கே தகுமா?
விழுங்கத்தான் போகிறாய் என்றால் இவரை விட்டு என்னால் வாழ இயலாது. என்னை முதலில் விழுங்கு
என்று அரற்றினாள்.

எதையும் காதிலேயே வாங்காமல், பசி வேகத்தில் ராக்ஷஸன் அந்தணனை விழுங்கிவிட்டான்.
கண்முன்னாலேயே கணவன் கொல்லப்பட்டதைக் கண்டு மனம் பொறாத அவ்வுத்தமி,
நீ பெண்ணுணர்வு கொண்டால் மரணமடைவாய்
என்று சாபமிட்டுவிட்டுக் கீழே விழுந்திருந்த தன் கணவனின் எலும்புகளைப் பொறுக்கி சிதையிலிட்டாள். பின்னர், தானும் அத்தீயிலேயே குதித்து தன் கணவன் அடைந்த உத்தமலோகத்தை அடைந்தாள்.

பன்னிரண்டு வருடங்கள் கழித்து அரக்கத் தன்மை நீங்கியதும், நாட்டிற்கு வந்தான் ஸௌதாஸன். ஆனால், மனைவியுடன் இன்புற நினைக்கும் சமயத்தில் அவனது சாபத்தைப் பற்றி அறிந்திருந்த மதயந்தீ தடுத்து நிறுத்தினாள்.

தன் நிலையை உணர்ந்த அரசன், பெண்ணின்பத்தை முற்றிலும் துறந்தான்.
தன் வினையாலேயே ஸௌதாஸனுக்கு மக்கட் பேறில்லாமல் போயிற்று.

பின்னர், குருவான வஸிஷ்டரிடம் சந்ததிக்காக வேண்டினான். அவர் மதயந்தீக்கு அருள்கொடையாக கர்பாதானம் செய்தார்.

அக்குழந்தை ஏழாண்டு காலம் வயிற்றிலேயே இருந்தது. பின்னர் வஸிஷ்டரே அவ்வுதரத்தைக் கல்லால் அடிக்க குழந்தை வெளிவந்தது. கல்லால் அடித்தபின் பிறந்ததால் கல் என்னும் பொருள்படும்படி அச்மகன் என்ற பெயர் பெற்றான்.

இந்த அச்மகனின் மகன் மூலகன். பரசுராமர் கோபம் கொண்டு உலகில் க்ஷத்ரியர்களே இல்லாமல் ஆக்குவதாகச் சபதம் ஏற்றபோது, இவன் பயந்துபோய் பெண்வேடம் பூண்டான். அதனால் நாரீகவசன் என்று பெயர் பெற்றான்.

க்ஷத்ரிய வம்சமே இல்லாமல் போனபோது இவன் ஒருவனே மிஞ்சியதால், அதன் பின் வந்த க்ஷத்ரிய வம்சத்திற்கு இவனே மூலகாரணமானான். எனவே மூலகன் என்று பெயர் பெற்றான்.

மூலகனின் மகன் தசரதன். அவனது மகன் ஜடபிடன். இவனது மகன் விச்வஸஹன்.
விவஹஸனின் மகன் கட்வாங்கன். இவன் பெரிய சக்ரவர்த்தியாகப் பெயரும் புகழும் பெற்று விளங்கினான்.

# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment