Friday, July 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 296

இராவணன் இறந்ததும், அவனது மனைவிகள் அனைவரும் ஓடி வந்து அவனது உடல் மீது விழுந்து கதறி அழுதனர்.

இராவணனின் காமத்தால் இப்படி ஆயிற்றே என்று புலம்பினார்களே தவிர, அவர்கள் ஒருவருமே தம் கணவனைக் கொன்ற இராமனைக் குறை சொல்லாதது ஆச்சர்யம்.

இராமனின் கட்டளைப்படி விபீஷணன் இறந்துபோன அத்தனை சுற்றத்தார்க்கும் விதிப்படி ஈமக்கடன்களைச் செய்தான்.

பின்னர் இராமன் சீதையை அழைத்துக்கொண்டு புஷ்பகவிமானம் ஏறி அயோத்திக்குத் திரும்பினான். பதினான்கு வருட வனவாசம் பூர்த்தியடைந்தது.

இதற்கிடையில் பரதன், பதினான்கு ஆண்டுகளாக மரவுரி தரித்து, கோமியத்தில் சமைக்கப்பட்ட யவம் என்னும் தானியத்தை மட்டும் உண்டு, ஜடை தரித்து, கட்டாந்தரையில் படுத்துறங்கினான் என்பதைக் கேட்டு இராமன் மிகவும் வருந்தினான்.

இராமன் வருவது கண்டு பரதன், அந்தணர்களை அழைத்துக்கொண்டு, தலையில் குருவான தமையனின் பாதுகையைத் தாங்கியபடி, வாத்தியங்கள் முழங்க எதிர்கொண்டழைத்தான்.

ஓரங்களில் தங்க ஜரிகை வைக்கப்பட்ட கொடிகள் நகர் முழுவதும் பறந்தன.
தங்கம் இழைக்கப்பட்ட வெண்கொற்றக்குடைகள், தங்கபூண்கள் அணிந்த குதிரகள் பூட்டிய தங்கத்தேர்கள், தங்கக்கவசம் அணிந்த போர் வீரர்கள், வெண்சாமரம் ஆகியவற்றுடன் பரதன் ராமனை வரவேற்றான். மனம் கரையும்படி ஆனந்தக் கண்ணீர் பெருக ராமனின் திருவடிகளில் விழுந்தான்.

இராமன் இருகைகளாலும் அவனை வாரித் தூக்கி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

வெகு காலம் கழித்து வந்த மன்னனைக் கண்டு ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பரதன் பாதுகைகளை ஏந்த, விபீஷணன் வெண்சாமரம் வீச, சுக்ரீவன் விசிறியால் வீச, அனுமன் வெண்கொற்றக்குடையை ஏந்தினான்.சத்ருக்னன் கோதண்டத்தையும் அம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டான். சீதை கமண்டலுவை எடுத்துக்கொண்டாள். அங்கதன் உடைவாளையும், ஜாம்பவான் தங்கக்கேடயத்தையும் ஏந்தியபடி புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி நகரை அடைந்தான் ராமன்.

மிகவும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த அயோத்திக்குள் சென்றதும், தன் தாய்களையும், குருவையும், வணங்கினான் இராமன். சிறியவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டான்.

சடைமுடியெல்லாம் திருத்தச் செய்து, மன்மதன் போல் அலங்கரிக்கப்பட்ட ராமனுக்கு
எல்லா பெரியோர்களும் கூடிய சபையில், பட்டபிஷேகம் செய்துவைத்தார் வசிஷ்டர்.

பின்னர் அழகின் எல்லையாக விளங்கிய இராமன் புத்தாடையும் அழகிய ஆபரணங்களையும் அணிந்து, சிங்காசனம் ஏறினான்.

இராமன் மக்களைத் தன் குழந்தைகள் போல் எண்ணினான். மக்களும் ராமனைத் தந்தையாகவே போற்றினர்.

இராமனின் ஆட்சியில் எவருக்கும் மனவருத்தமோ, நோயோ, கிழத்தனமோ, மனச்சோர்வோ ஏற்படவில்லை. எவர்க்கும் இறப்பும் இல்லை.

ஏகபத்தினி விரதனாக இருந்து ரிஷியைப் போன்ற ஒழுக்கத்துடன் தானும் விளங்கி குடிகளையும் நன்னெறியில் ஒழுகவத்தான் ஸ்ரீராமன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment