Friday, July 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 301

அந்தணர்கள் நிமியின் உடலைப் பாதுகாத்து வைத்துவிட்டு, யாகத்தைத் தொடர்ந்து செய்து பூர்த்தி செய்தனர். அந்த ஸத்ர வேள்வியின் முடிவில் வந்திருந்த தேவர்களிடம், நிமியை உயிர்ப்பித்துத் தரும்படி வேண்டினர். அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று இசைந்தனர்.

ஆனால், நிமி, எனக்கு இவ்வுடலுடன் கட்டுப்பட்டிருக்கும் நிலை வேண்டாம். அறிஞர்கள் எண்ணம் முழுவதையும் ஸ்ரீமன் நாராயணனிடம் செலுத்துகிறார்கள். இவ்வுடல் நிலையானதில்லை. என்றாவது ஒருநாள் மீண்டும் மரணம் வரத்தான் வரும். எனவே மரணபயம் தரும் இவ்வுடல் வேண்டாம். என்றான்.

தேவர்கள், சரி, உன் விருப்பப்படி ஆகட்டும். நீ உடலின்றி இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளின் கண்ணிமைகளில் வாசம் கொள். அங்கிருந்து கொண்டே பகவானை தியானிக்கலாம். இமைகள் மேலும் கீழும் அசைவதாலேயே நிலையாமை புலப்படும்.
என்றனர்.

அரசன் இல்லாத ராஜ்ஜியம் நாசமாகும் என்பதால், மஹரிஷிகள் நிமியின் உடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு குமாரன் தோன்றினான்.

அவன் வம்சத்தைத் தொடர வந்தமையால் ஜனகன் என்றழைக்கப்பட்டான். உயிரற்ற உடலிலிருந்து தோன்றியதால் விதேஹன் என்றும், கடைந்ததனால் பிறந்ததால் மிதிலன் என்றும் அழைக்கப்பட்டான். அவன் தோற்றுவித்த நகரமே மிதிலாபுரி.

ஜனகனின் மகன் உதாவசு. அவன்து மகன் நந்திவர்தனன். அவன் மகன் ஸுகேது. அவனது மகன் தேவரதன். அவனது மகன் ப்ருஹத்ரதன். அவனது பிள்ளை மஹாவீர்யன். அவனது மகன் ஸுத்ருதி. இவனது பிள்ளை த்ருஷ்டகேது. அவனது மகன் ஹர்யச்வன்.

ஹர்யச்வனின் மகன் மரு. மருவின் மகன் ப்ரதீபகன். அவனது மகன் க்ருதிரதன். இவனது மகன் தேவமீடன். அவனது பிள்ளை விச்ருதன். விச்ருதனின் மகன் மஹாத்ருதி. மஹாத்ருதியின் மகன் க்ருதிராதன். அவனது பையன் மஹாரோமா. இவனது குழந்தை ஸ்வர்ணரோமா. அவனுடைய மகன் ஹிரஸ்வரோமா. ஹிரஸ்வரோமாவின் மகன் ஸீரத்வஜன்.

இவன் யாகம் செய்யத் துவங்கும்போது, பூமியில் கலப்பையால் உழுதான். அப்போது பூமியிலிருந்து சீதாப்பிராட்டி தோன்றினாள். ஸீரம் என்றால் கலப்பை. இவன் ஜனகன் எனவும் அழைக்கப்படுகிறான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment