Monday, July 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 297

ஸ்ரீ ராமனின் ஆட்சியில் த்ரேதாயுகம், மீண்டும் க்ருதயுகத்தைப் போலவே மாறியது. கற்புக்கனலான சீதை இராமனின் மனத்தை நன்கறிந்து அன்பு, பணிவிடை, நல்லொழுக்கம், வினயம், நல்லறிவு, வெட்கம் ஆகிய குணங்களால் அவரது மனத்தைக் கவர்ந்தாள்.

ஸ்ரீ ராமன் ஸகலதேவதைகளின் ஸ்வரூபமாக இருந்தபோதிலும், உலகிற்கு உதாரண புருஷனாக வஸிஷ்டரை குருவாகக் கொண்டு பல வேள்விகளை மிகவும் சிறப்பாகச் செய்தான்.

அவ்வேள்விகளில் ஹோதா என்னும் ரித்விக்குகளுக்கு கிழக்குத் திசையிலுள்ள அனைத்து பகுதிகளையும் தானமாகக் கொடுத்தான். ப்ரும்மா என்ற ரித்விக்குக்கு தென்திசையிலுள்ள பகுதிகளையும், அத்வர்யுவுக்கு மேற்கு திசைப் பகுதிகளையும், ஸாமகானம் செய்யும் உத்காதாவிற்கு வடதிசைப் பகுதிகளையும் தானமாகக் கொடுத்தான்.

மத்தியிலுள்ள பகுதியை குலகுருவான வஸிஷ்டருக்குக் கொடுத்தான். இப்பூமி முழுவதும் ப்ரும்மஞானிகளுக்குரியது என்று எண்ணினான் ஸ்ரீராமன்.

அனைத்தையும் அளித்தபின் ஸ்ரீ ராமனிடம், அவன் அணிந்திருந்த ஆடை ஆபரணங்கள் மட்டுமே மிஞ்சின.‌ பட்டத்தரசியான சீதையிடமும் அவள் அணிந்திருந்த தீக்ஷா வஸ்திரமும், திருமாங்கல்யமும் மீதியிருந்தன.

அந்தணர்களும் குருமார்களும் இராமனின் அன்பினால் மனங்கசிந்து இராமன் அளித்த நாற்றிசைப் பகுதிகளையும் இராமனுக்கே திருப்பிக் கொடுத்தனர்.

அகில லோக நாயகனே! தாங்கள் எங்கள் மனத்திலிருக்கும் அஞ்ஞான இருளை அழித்து ஞானச் செப்வத்தை அளிக்கிறீர்கள். அப்படியிருக்க இந்த செல்வங்களால் எமக்கு யாது பயன்?

தாங்கள் ஞானஸ்வரூபம். புருஷோத்தமர். எவருக்கும் தீங்கு நினைக்காத
முனிவர்கள் அனைவரும் தங்கள் திருவடிக் கமலத்தையே ஹ்ருதயத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். நீங்களோ அந்தணர்களையே தெய்வமாகப் போற்றுகிறீர்கள். தங்களுக்கு வணக்கங்கள்.

என்று கூறிவிட்டு மனமகிழ்ச்சியுடன் கிளம்பினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment