Tuesday, July 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 304

ஒரு சமயம் கார்த்தவீர்யன் வேட்டையாடிக்கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக ஜமதக்னி முனிவர் இருக்கும் குடிலின் அருகில் வந்துவிட்டான்.

படையுடன் தன் குடிலுக்கருகில் வந்திருக்கும் அரசனை ஜமதக்னி கண்டார். காட்டில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கிறார்கள் என்றுணர்ந்து, அரசனை வரவேற்று, விருந்தளித்தார். அவனுடன் வந்திருந்த யானை, குதிரை, படைகள் அனைவற்றிற்கும் விருந்து படைத்தார்.

காட்டின் நடுவில் குடிலமர்த்தி வாழும் முனிவரால் எப்படி ஒரு படைக்கே விருந்து படைக்க முடிந்ததென்று ஆச்சர்யமுற்ற கார்த்தவீர்யன், அதன் காரணம் என்ன என்று ஆராய முற்பட்டான். ஜமதக்னி முனிவர் அக்னிஹோத்ரப் பசுவாகப் பூஜித்து வந்த காமதேனுவைக் கண்டான்.

காமதேனுவின் உதவியால் முனிவர் தன்னை விடச் செல்வச் செழிப்புடன் இருப்பதையும், ஆயிரக்கணக்கோருக்கு கணநேரத்தில் பெரிய விருந்தளிப்பதையும் கண்டு மனம் பொறாமல், அவரிடமிருந்து காமதேனுவைப் பறிக்க எண்ணம் கொண்டான்.

நகரம் திரும்பியபின், மீண்டும் வீரர்களை அழைத்துக்கொண்டு வந்து நைச்சியமாக காமதேனுவைப் பறித்துவரும்படி அனுப்பினான்.

அவர்கள் குடிலில் யாருமில்லாத சமயம் பார்த்து, கன்றுக்குட்டியுடன் சேர்த்து காமதேனுவைக் கதற கதறக் கவர்ந்து மாஹிஷ்மதி நகரம் கொண்டுசென்றுவிட்டனர்.

வெகுநேரம் கழித்து பரசுராமரும், ஜமத்க்னியும் குடிலுக்குத் திரும்பினர். நடந்ததனைத்தையும் ஞான த்ருஷ்டியால்‌ உணர்ந்து கடுஞ்சினம் கொண்டார் பரசுராமர்.

அடிபட்ட நாகம் போல் சீறிக்கொண்டு, கேடயம், அம்புறாத்தூணி, வில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிங்கத்தைப்போல் ஓடினார்.

அப்போதுதான் நகருக்குள் நுழைந்திருந்த கார்த்த வீர்யன், கையில் ஆயுதங்களுடன், சூரியன் போல் ஒளிவீசும் பரசுராமர் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டான். அவன் தன் நால்வகைப் படையையும் அவரை எதிர்த்துப் போர் செய்ய அனுப்பினான்.
தனியொருவராக நின்று பரசுராமர் படைகள் அனைத்தையும் அழித்தார்.

வளியினும் வேகமாகச் சுழன்று தாக்கும் பரசுராமர் சென்ற இடங்களில் எல்லாம் அறுபட்ட கைகளும், தலைகளும், கால்களும், உடைந்த தேர்களும், சக்கரங்களுமாகப் பறந்தன. அவ்விடம் முழுவதும் பிணக்காடாக மாறியது.

அக்காட்சி கண்டு மிகுந்த சினம்கொண்ட கார்த்தவீர்யன் தானே போருக்கு வந்தான். தன் ஐநூறு கைகளில் வில்லேந்தி, ஐநூறு கைகளில் பாணம் தொடுத்து ஒரே சமயத்தில் பரசுராமர் மீது எய்தினான்.

அஸ்திர சஸ்திரங்களின் எல்லயாக விளங்கிய பரசுராமர் அத்தனை அம்புகளையும் ஒரு சேர வீழ்த்தினார்.

கார்த்தவீர்யன் மலைகளையும், மரங்களையும் பிடுங்கி அவர்மீது எறிய, பரசுராமர் அவனது கரங்களை சரசரவென்று வெட்டலானார்.

பின்னர் கார்த்தவீர்யனின் தலையையும் வெட்டிவிட்டார். தந்தை இறந்துபட்டதைக்கண்ட கார்த்தவீர்யனின் புதல்வர்கள் பதினாறாயிரம் பேரும் பயந்து ஓடிவிட்டனர்.

காமதேனுவை மீட்டு வந்த பரசுராமர், அதைத் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, நடந்தவை அனைத்தையும் கூறினார்.

அது கேட்டு ஜமதக்னி பதறினார்.
பரசுராமா! பெரும் பாவம் செய்துவிட்டாயே! அரசன் ஸகல தேவர்களின் உருவமாவான். அரசனைக் கொன்றால் நாடே பாழாகிவிடும். அரசனில்லாத நாடு காலவலனற்ற நாடு. அந்தணர்களாகிய நம்மை இவ்வுலகம் நமது பொறுமைக்காகவே கொண்டாடுகிறது. பொறுமையினாலேயே அந்தணர்களின் தேஜஸ் வளர்கிறது. ஸ்ரீமன் நாராயணனும் பொறுமை காப்பவர்களை மிகவும் விரும்புகிறார். பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னனைக் கொல்வது மிகக் கொடியபாவம். இதைப் போக்கிக்கொள்ள நீ தீர்த்தயாத்திரை சென்று வா என்று பணித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment