Monday, July 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 303

ரிஷீகரின் மனைவியான ஸத்யவதியும் அவளது தாயும் ஹவியை மாற்றி உண்டனர். அதன் விளைவாக ஸத்யவதிக்கு தண்டிக்கும் தன்மை உடைய மகனும், அவளது தாய்க்கு ப்ரும்மஞானியும் பிறக்கும் நிலை ஏற்பட்டது. அதை அறிந்த ஸத்யவதி கணவரிடம் எப்படியாவது அந்நிலையை மாற்றும்படி அழுதாள்.

ரிஷீகரோ, நடந்ததை மாற்ற இயலாது. வேண்டுமானால், உன் மகனுக்குப் பதில் அவனது மகன் க்ஷத்ரியத் தன்மையுடனும் மற்றவர்களை தண்டிக்கும் அதிகாரத்துடனும் பிறப்பான். என்றார்.

சரியான காலத்தில் ஸத்யவதிக்கு ஜமதக்னி மகவாகப் பிறந்தார்.
அதன் பின் அவள் கௌசிகீ நதியாக மாறி ஓடத் துவங்கினாள்.

ஜமதக்னி ரேணு மன்னனின் மகளான ரேணுகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

அவருக்கு வசுமான், த்ருணதூமாக்னி, சுவேதன், பரசுராமர் ஆகிய நான்கு மகன்கள் பிறந்தனர். ஹைஹய வம்சத்தை அழிப்பதற்கென்றே பகவான் நாராயணன் தன் ஒரு அம்சத்துடன் பரசுராமராக அவதாரம் செய்திருந்தார்.

க்ஷத்ரியர்கள், பரசுராமருக்குச் செய்த குற்றம் சிறிதுதான். ஆனாலும் அவர்கள் அந்தணர்களிடம் பகை கொண்டவர்களாகவும், ரஜோ குணம் மிக்கவர்களாகவும், தமோகுணத்தால் தீய வழிச் செல்பவர்களாகவும் இருந்தனர். பூமிக்குப் பெரும் சுமையாக இருந்த அவர்களை அழித்து பூபாரத்தைக் குறைத்தார் பரசுராமர்.

பரீக்ஷித் இடைமறித்துக் கேட்டார்.
ரிஷியே! க்ஷத்ரியர்கள் புலனடக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வம்சமே இல்லாத அளவு அவர்களைத் தேடி தேடிக் கொல்ல என்ன காரணம்? அவர்கள் பரசுராமருக்கு என்ன தீங்கு செய்தனர்?

சுகர், சிரித்துக் கொண்டார்.
அப்போது ஹைஹய வம்சத்தின் தலைவனாக இருந்தவன் கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன். அவன் தத்தாத்ரேயரைப் பலவாறு பூஜித்து, அவர் அருளால் ஆயிரம் கைகளையும், எவராலும் வெல்லமுடியாத வலிமையையையும் பெற்றான். அளவற்ற திறன், வீரம், புகழ், அஷ்டமாசித்திகள், எண்வகைச் செல்வங்கள் அனைத்தும் இறையருளால் கைவரப் பெற்ற அவன், காற்றைப்போல் எங்கும் சுற்றி வரலானான்.

ஒரு சமயம் வைஜயந்தி மாலையைக் கழுத்தில் அணிந்து அழகிய பெண்களுடன் நர்மதை நதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தான். அப்போது தன் ஆயிரம் கைகளாலும் நதியின் பிரவாஹத்தைத் தடுத்தான்.

அவ்வமயம் தான் பெரும் வீரன் என்ற செருக்குக் கொண்டிருந்த இராவணன், மாஹிஷ்மதி நகரத்தின் அருகில், நர்மதை நதிக்கரையில் கூடாரம் அமைத்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான். நதி தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பிரவாஹத்தில் இராவணனது கூடாரம் மூழ்கிப்போனது.

திடீரென்று எதனால் இவ்வளவு வெள்ளம் என்று குழம்பிய இராவணன், கார்த்தவீர்யார்ஜுனன் நதியைத் தடுப்பதைக் கண்டான். அவனிடம் சென்று அச்செயலுக்காகக் கடிந்துகொண்டான்.

பல பெண்களின் முன்னிலையில் தன்னைக் கடிந்துகொள்ளும் இராவணனை விளையாட்டாக ஒரு பூச்சியைப் பிடிப்பதுபோல் பிடித்தான் கார்த்தவீர்யார்ஜுனன். தன் தலைநகரான மாஹிஷ்மதியில் கொண்டு போய் இராவணனைச் சிறை வைத்தான். பின் புலஸ்திய முனிவர் தன் மகனை விடுவிக்கும்படி அறிவுரை கூற, அதை ஏற்று இராவணனை விடுவித்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment