Thursday, July 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 292

இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதும், சாம்பலின் மீது நீர் பட்ட மாத்திரத்திலேயே நற்கதியை அடையலாம் என்றால், சிரத்தையாக கங்கையைப் பூஜிப்பவர்கள், மற்றும் கங்கையில் நீராடுபவர்கள் உத்தம கதியை அடைவார்கள் என்பதில் ஐயமேது?

பகவானின் திருவடி சம்பந்தம் பெற்ற எந்த ஒரு பொருளும் ஜீவனும், தான் கரையேறுவதோடு மட்டுமின்றி தங்களை அண்டுபவர்களையும் கரையேற்றிவிடுகிறது.

பகீரதனின் மகன் ச்ருதன். அவனது மகன் நாபன். நாபனின் மகன் ஸிந்துத்வீபன். அவனது புதல்வன் அயுதாயுஸ். இவனது மகன் ருதுபர்ணன். இவன் நளமஹாராஜனின் நண்பனாவான்.

இவன் சூதாட்டத்தின்போது பகடைக்காயின் ரகசியமான அக்ஷஹ்ருதயம் என்ற வித்தையை நளனுக்குக் கற்றுக்கொடுத்தான். பதிலாக, நளனிடமிருந்து குதிரைகளைச் செலுத்தும் அஸ்வஹ்ருதயம் என்ற ரகசிய வித்தையைக் கற்றுக்கொண்டான்.

ருதுபர்ணனின் மகன் ஸர்வகாமன். அவனது மகன் சுதாஸன். சுதாஸனின் மனைவி மதயந்தீ. இவனுக்கு ஸௌதாஸன், மித்ரஹாஸன், மற்றும் கல்மஷபாதன் என்னும் பெயர்களும் உண்டு. குருவான வஸிஷ்டரின் சாபத்தால் அரக்கனானான். இவனுக்கு மக்கட்செல்வம் இல்லை.

ஸ்ரீ சுகர் இவ்வாறு கூறியதும், உடனே பரீக்ஷித்,
பகவானே! ஸௌதாஸன் சான்றோன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவனுக்கு எதனால் சாபம் ஏற்பட்டது? என்று கேட்டான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
நீ சொல்வது உண்மைதான் பரீக்ஷித். நல்மனத்தானாகவும் சான்றோனாகவும் விளங்கிய ஸௌதாஸனை விதி பிடித்து ஆட்டியது. அவன் ஒரு முறை காட்டில் வேட்டையாடச் சென்றான். அப்போது ஓர் அரக்கனைக் கொன்றான். ஆனால், அவனது தம்பியைக் கொல்லாமல் விட்டான். பகையை வேரோடு அழிக்காமல், மிச்சம் வைத்ததால், அரக்கனின் தம்பி ஸௌதாசன் மீது வஞ்சம்‌ கொண்டு பழி தீர்க்க எண்ணினான்.

மிகவும் வலிமையுள்ள அரசனைப் போர் செய்து கொல்லமுடியாது என்றுணர்ந்த அவன், வேறு வழியில்‌ அவனை மாட்டிவிட்டு பாவியாக்க எண்ணம்‌கொண்டான். மனித உருவெடுத்து ஸௌதாஸனின் அரண்மனையில் சமையல் காரனாகப் பணியில் அமர்ந்தான்.

அவன் தக்க சமயம்‌ எதிர்பார்த்திருந்தபோது ஒருநாள் வஸிஷ்ட பகவான் விருந்துக்கு வந்தார். இதுதான் சமயம் என்று அவ்வரக்கன், நர மாமிசத்தைச் சமைத்து உணவாகப் போட்டான்.

பரிமாறப்பட்ட உணவைக் கண்டதும் சந்தேகம் கொண்ட வஸிஷ்டர், ஞானத்தினால் நடந்ததை அறிந்தார். பணியாள் செய்யும் தவறு எஜமானனையே சாரும்‌ என்பதால், நரமாமிசம்‌ படைத்த நீ அரக்கனாகக் கடவாய் என்று ஸௌதாஸனைச் சபித்தார்.

இத்தவறுக்கு அரசன் பொறுப்பல்ல என்று தெரிந்திருந்ததனால், பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் அரக்கத்தன்மை நீங்கும் என்று விமோசனமும் கொடுத்தார்.

தவறே செய்யாத தன்னை குரு சபித்துவிட்டதாகக் கருதிய ஸௌதாஸன், சினம் கொண்டு தானும் வஸிஷ்டருக்கு ஒரு சாபம் கொடுப்பதற்காக நீரைக் கையில் எடுத்து சங்கல்பம் செய்தான்.
அதை அறிந்த அவனது மனைவி மயதந்தீ ஸௌதாஸனைத் தடுத்தாள்.

குருவைச் சபிக்கலாகாது. குரு செய்யும் எந்த ஒரு செயலும் சீடனுக்கு நன்மை பயக்கும். அவர் அறியாமல் செய்த பாவத்திற்காக வரும் நரக தண்டனையிலிருந்து காக்க இப்போது சாபமளித்திருக்கிறார். தன் சீடனின் வினையைக் குறைத்து முக்தியில் சேர்க்க குருவானவர் சாம, தான, பேத, தண்டம் என்னும் எம்முறையை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்.

வஸிஷ்டர் மஹா ஞானி. அவரைச் சபித்து மீளாநரகத்திற்கு வழிகோலவேண்டாம். என்றாள்.

அவளது பேச்சிலிருந்த தர்மத்தைப் புரிந்துகொண்டு சபிப்பதை விட்டான் சௌதாஸன். அதனால் மித்ர ஹாஸன் என்றழைக்கப் பட்டான்.

ஆனால், சங்கல்பம் செய்த நீரை எங்கு விடுவதென்று தெரியாமல் திகைத்தான். உலகம்‌ முழுதும் ஜீவன்களால் நிறைந்திருப்பதைக் கண்டு நீரை எங்கு விட்டாலும் தீங்கு நேருமே என்று அஞ்சினான். எனவே சாபத்திற்காக சங்கல்பம்‌செய்த நீரைத் தன் காலிலேயே விட்டுக் கொண்டான். உடனே அவனது பாதங்கள் கறுத்தன. அதனால் ஸௌதாஸன் கல்மஷபாதன் என்றும் அழைக்கப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment