Saturday, July 27, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 302

நிமி வம்சத்தின் அனைத்து அரசர்களைப்‌ பற்றியும் கூறினார் ஸ்ரீ சுகர். அவர்கள் அனைவரும் மைதிலர்கள் எனப்பட்டனர். இவர்கள் அனைவருமே இல்லறத்தவர்களாக இருப்பினும் ஆன்ம வித்யையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். யாக்ஞவல்க்யர் போன்ற மஹரிஷிகளின் அருளால் பற்றற்று விளங்கினர்.

அடுத்ததாக புனிதமான சந்த்ர வம்சத்தின் வர்ணனையைக் கூற ஆரம்பித்தார் வியாஸ புத்ரர்.

பகவான் நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியவர் ப்ரும்மா. அவரது திருமகன் அத்ரி மஹரிஷி. அத்ரியின் கண்களிலிருந்து சந்திரன் தோன்றினான். அவனது மகன் புதன். புதனின் மகன் புரூரவஸ். இவர்களின் கதையை முன்பே பார்த்தோம்.

புரூரவஸ் தேவமாதான ஊர்வசியை மணந்தான். அவனே ஆஹ்வனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி ஆகிய மூன்றுவித அக்னிகளைத் தோற்றுவித்தவன். புரூரவஸ் காலத்தில்தான் தேவர்கள், அக்னி வருணங்கள் ஆகியவை மூன்று மூன்றாகப் பிரிந்தன.

ஊர்வசியின் வயிற்றில் ஆறு புத்திரர்கள் பிறந்தனர். ஆயு, ச்ருதாயு, ஸத்யாயு, ரயன், விஜயன், மற்றும் ஜயன் என்பது அவர்களது பெயர்கள்.

ச்ருதாயுவின் மகன் வசுமான். ஸத்யாயுவின் மகன் ச்ருதஞ்ஜயன். ரயனின் மகன் ஏகன். ஜயனின் பிள்ளை அமிதன். விஜயனின் மகன் பீமன். அவனது பிள்ளை காஞ்சனன். மேலும், ஹோத்ரகன், ஜஹ்னு, புரு, பலாகன், அஜகன், குசன் ஆகியோர் வம்சத்தில் வரிசையாக வந்தவர்கள். இவர்களுள் ஜஹ்னுதான் கங்கையை ஆசமனம் செய்து குடித்தவர்.

குசனுக்கு குசாம்பு, மூர்த்தயன், வசு, குசநாபன் என்ற நான்கு பிள்ளைகள். இவர்களுள் குசாம்புவின் மகன் காதி. காதியின் மகள் ஸத்யவதி.

அவளை தனக்கு விவாஹம் செய்து தரும்படி ரிஷீகர் என்ற மஹரிஷி வேண்டினார். அவர் தன் மகளுக்குத் தகுதியானவர் அல்ல என்று நினைத்த காதி, வெண்மை நிற உடலும், ஒரு காது மட்டும் நீல நிறமாகவும் இருக்கும்படியான ஆயிரம் குதிரகளைச் சீதனமாகத் தந்தால் பெண்ணைத் தருவேன் என்றான்.

அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட ரிஷீகர் வருணனிடம் சென்று காதி கேட்ட மாதிரியான குதிரைகளைப் பெற்றுவந்து கொடுத்தார். வேறு வழியின்றி ஸத்யவதியை ரிஷீகருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் காதி.

ஒருநாள் ஸத்யவதியும், அவளது தாயாரும் மகப்பேறு வேண்டி யாகம் செய்து தருமாறு ரிஷீகரிடம் வேண்டினர். அவர் தன் மனைவிக்கு அந்தண தேஜஸுடனும், மாமியார் அரசி என்பதால் க்ஷத்ரிய தேஜஸுடனும் குழந்தை பிறப்பதற்காக தனித்தனியாக இரு மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தில் இடவேண்டிய சரு என்னும் அவியுணவைப் பக்குவம் செய்து வைத்துவிட்டு மாத்யான்னிக ஸ்நானம் செய்வதற்காக நதிக்குச் சென்றார்.

தன் மனைவிக்கு உயர்ந்த உணவு செய்திருப்பார் என்று நினைத்த ஸத்யவதியின் தாய், அதை எடுத்துத் தான் உண்டுவிட்டு, தன்னுடையதை மகளுக்குக் கொடுத்தாள்.

அதை அறிந்த முனிவர், தவறான காரியத்தால் உனக்குப் பிறக்கும் குழந்தை உலகைத் தண்டிப்பவனாகவும், உன் சகோதரன் ப்ரும்ம ஞானியாகவும் இருக்கப்போகிறான் என்று ஸத்யவதியிடம் சொன்னார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment