Wednesday, July 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 295

தன் தந்தை சிற்றன்னைக்கு வசப்பட்டு வரமளித்துவிட்டு, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டும், பிள்ளைப் பாசத்தினால் தவிப்பதையும் கண்டு, தந்தை அளித்த சத்தியத்தைக் காப்பாற்ற மனைவியுடனும் இலக்குவனும் வனமேகினான் ஸ்ரீராமன்.

வனத்தில் காமத்தினால் குழம்பிய மனமுடைய சூர்ப்பனகையின் காதுகளையும் மூக்கையும் வெட்டியெறிந்தார். அதற்காக அவளது சகோதரர்கள் கரனும், தூஷணனும் பதினான்காயிரம் ராக்ஷஸர்களோடு போரிட வந்தனர். எவராலும் ஜெயிக்கமுடியாத தன் கோதண்டத்தை மண்டலம் போல் வளைத்து அவர்கள் அனைவரையும் கொன்றார்.

சீதையின் அழகையும், குணங்களையும் பற்றி சூர்ப்பனகை வாயிலாகக் கேள்விப்பட்டான் இராவணன். அதனால் மாரீசனை மிக அழகான புள்ளிமானாக்கி அவர்களது குடிலின் அருகில் அனுப்பினான். அதைக் கண்டு மனம் மயங்கிய சீதை அதைப் பிடித்துத் தரும்படி வேண்ட, இராமன் மானைத் துரத்திச் சென்றான். மாரீசனின் சூழ்ச்சியால் இலக்குவன் ராமனைத் தேடிச் செல்ல, தனியாக இருந்த சீதையை இராவணன் அபகரித்துச் சென்றான்.

இராமன் மாரீசனின் சூழ்ச்சியறிந்து அவனைக் கொன்றுவிட்டான். ஆசிரம்த்திற்கு வந்து சீதையைக் காணாமல், துடித்துப்போனான்.

தன் பொருட்டு இராவணனுடன் போரிட்டு உயிர் நீத்த ஜடாயுவிற்கு அந்திம கடன்கள் செய்தான்.
பின்னர் கபந்தனை வதம் செய்தான். 

வானரர்களின் உதவியால் சீதை இலங்கையில் இருப்பதாக அறிந்தான். எல்லையற்ற பராக்கிரமம் உள்ள ஸ்ரீ ராமன், சாதாரண பாமரன் போல் குரங்குகளுடன் சேர்ந்து சமுத்திரக் கரைக்கு வந்தான்.

தன் மீது பாலம் கட்டிக்கொண்டு இலங்கை சென்று விஸ்ரவஸின் புதல்வனான இராவணனை வெற்றிகொள்ளுமாறு வேண்டினான்.
குரங்குகள்‌ மலைகளை அடியோடு பெயர்த்து வர, அவற்றைக்‌கொண்டு நளன் மற்றும் நீலனின் உதவியோடு கடலின்மீது பாலம் அமைத்தான் ஸ்ரீ ராமன்.

பின்னர் ஏராளமான வானரப் படைகளுடன் இலங்கைக்குள் புகுந்தான்.
இராவணன், நிகும்பன், கும்பன், தூம்ராக்ஷன், துன்முகன், சுராந்தகன், நராந்தகன், அதிகாயன், விகம்பனன், இந்திரஜித், கும்பகர்ணன் ஆகியோரின் தலைமையில் பெரும் படைகளை அனுப்பினான். அனைவரையும் கொன்று குவித்து இறுதியில் இராவணனையும் அழித்தான் ஸ்ரீ ராமன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment