Sunday, December 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 610

உத்தவர் கேட்டார். கண்ணா! நீயே ப்ரும்மம் ஆவாய். எதனாலும் மறைக்க இயலாத மறை பொருள் நீயே. எல்லா பொருள்களிலும் வியாபித்திருக்கிறாய். நீ யார் யாருக்கு எவ்வெவ்வாறு காட்சி கொடுத்து முக்தி அளித்தாயோ அதையெல்லாம் நான் அறியலாமா? என்றார்.

கண்ணன் சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கூறலானான். உன் ஆர்வம் என்னை மகிழ்வூட்டுகிறது உத்தவா. இதே கேள்வியை முன்பொரு சமயம் அர்ஜுனன் போர்முனையில் நின்றுகொண்டு கேட்டான். 

அரசுரிமைக்காக உறவினரைக் கொல்வது பாவம். அதர்மம். என்று கூறி போரிலிருந்து விலக எண்ணினான். அப்போது நான் அவனுக்குப் பல விஷயங்களை எடுத்துக்கூறி ஞானத்தை போதித்தேன். 

நானே எல்லா உயிர்களின் ஆன்மா, நண்பன், தலைவன். அனைத்து பொருள்களின் தோற்றம், இருப்பு, அழிவு ஆகியவற்றின் காரணமும் நானே. நானே நற்கதி. காலமும் நானே. படைப்புக்கு முன்னும் பின்னும் இருப்பவன் நானே. ஜெயிக்க முடியாத பொருள்களில் என் ஸ்வரூபம் மனமாகும். வேதத்தை முழுமையாக அறிந்தவர்களுள் நான் ஹிரண்யகர்பன். மந்திரங்களுள் ப்ரணவம் நானே. அக்ஷரங்களில் நான் அ காரமாவேன். சந்தங்களில் காயத்ரியாவேன். தேவர்களுக்குள் இந்திரனும் அஷ்ட வசுக்களில் அக்னியும், பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஷ்ணுவும், பதினோரு ருத்ரர்களுள் நீலலோஹிதனும் நானே.

சித்தர்களில் கபிலர், பறவைகளில் கருடன், ப்ரஜாபதிகளில் தக்ஷன், பித்ருக்களில் அர்யமா, அசுரர்களில் ப்ரஹ்லாதனாக இருக்கிறேன். நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன் நானே. யக்ஷர்களில் குபேரன் நான். மனிதர்களில் அரசனாக இருக்கிறேன். குதிரைகளுள் உச்சைஸ்ரவஸ், உலோகங்களுள் தங்கம், தண்டிப்பவர்களுள் யமன், பாம்புகளில் வாசுகி. நாகராஜர்களுள் ஆதிசேஷன், கொம்பும், தெற்றுப்பல் உடைய விலங்குகளுள் சிங்கம் நான். நால்வகை ஆசிரமங்களில் சந்நியாசம் நான். வர்ணங்களுள் ப்ராமணன். புண்ணிய தீர்த்தங்களுள் கங்கை. நீர்நிலைகளுள் கடலாவேன்.

ஆயுதங்களுள் வில். வில்லேந்தியவர்களுள் பரமேஸ்வரன் நானே. உயர்ந்த ஸ்தானங்களுள் மேரு. பெரு முயற்சிக்குப் பின் அடையும் இடங்களுள் ஹிமாசலம், மரங்களில் அரசமரம், தானியங்களில் யவம் (நெல்).
புரோஹிதர்களில் வஸிஷ்டர். வேதம் அறிந்தவர்களுள் ப்ருஹஸ்பதி, படைத்தலைவர்களுள் ஸ்கந்தன், நன்னெறி பரவச் செய்பவர்களுள் ப்ரும்மா ஆவேன்.

ஐம்பெரும் வேள்விகளில் வேதம் ஓதுதல் என்னும் ப்ரும்ம யக்ஞம் நான்,‌ விரதங்களுள் அஹிம்சையாக இருக்கிறேன். தூய்மைப் படுத்துபவர்களுள் வாயு, அக்னி, சூரியன், நீர், வாய்ச்சொல் மற்றும் ஆன்மா அனைத்தும் நானே. அஷ்டாங்க யோகங்களுள் ஸமாதி, ஜெயிக்கும் ஆலோசனைகளுள் ரகசிய ஆலோசனை. அறிவு பூர்வமான வாதங்களுள் ப்ரும்ம வித்தை. தத்துவங்களில் எண்ணிக்கையில் அறிய இயலாத விகல்பமாக(infinity) இருக்கிறேன்.

பெண்களுள் சதரூபை, ஆண்களுள் ஸ்வாயம்புவ மனு, மாமுனிவர்களுள் நாராயண ரிஷி, ப்ரும்மச்சாரிகளுள் ‌‌ஸனத்குமாரர். ரகசியங்களுள் மௌனம், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்களுள் காலமாவேன். ருதுக்களில்‌ வசந்தம், மாதங்களில்‌ மார்கழி. நட்சத்திரங்களுள் அபிஜித்.

நான்கு யுகங்களில்‌ க்ருதயுகம் நான். அறிவாற்றல் மிக்கவர்களுள் தேவலர், அஸிதர். வியாஸர்களுள் க்ருஷ்ணத்வைபாயனர். பேரறிவாளர்களுள் சுக்ராச்சாரியார். 
என்னிடம் ப்ரேம பக்தி செலுத்துபவர்களுள் நீயாக இருக்கிறேன் உத்தவா. கிம்புருஷர்களுள் ஹனுமான். வித்யாதரர்களுள் சுதர்சனன். ரத்தினங்களுள் பத்மராகம். மலர்களுள் தாமரை. புல்வகைகளுள் குசம் எனப்படும் தர்ப்பை. வேள்விகளில் ஆஹுதிகளுள் பசு நெய் நான். நன்முயற்சி செய்பவர்களின் செல்வம், கபடர்களுள் சூதாடி. துன்பங்களைப் பொறுப்பவர்களின் பொறுமை. ஸாத்வீக குணமும் நானே. 

பலம் மிக்கவர்களின் பலம், பக்தர்களின் பயன் பாராக் கர்மம் நான். விஷ்ணு மூர்த்தங்களில் வாசுதேவன். கந்தர்வர்களில் விசுவாவஸு. அப்ஸரஸ்களில் பூர்வசித்தி. மலைகளின் அசையாத் தன்மையும், புவியின் மணமாகவும் இருக்கிறேன். நீரின் நீர்மை என்பது நானே. ஒளிபொருந்தியவைகளுள் அக்னி. சூரிய சந்திரர்களின் கிரணங்கள் நான். ஆகாயத்தில் அதன் குணமான சப்தம் நான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

1 comment: