Friday, December 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 614

உத்தவா! பக்தியோகம் பற்றி உனக்கு முன்பே கூறியிருப்பினும் நீ ஆர்வத்துடன் கேட்பதால் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறேன். 

என் கதைகளைக் கேட்கவேண்டும் என்ற பேராவல்,
எப்போதும் என் லீலைகளைச் சொல்வது,
என்னைப் பூஜை செய்வதில் உறியான நம்பிக்கை,
தோத்திரங்களை ஆசையுடன் சொல்வது,
பூஜை செய்வதில் ஈடுபாடு,
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது,
என்னை விடவும் என் அடியார் மீது அதிக அன்பு,
அவர்களைப் பூஜிப்பது,
எல்லா ஜீவன்களிடத்திலும் என்னையே காண்பது,
எல்லா நிகழ்வுகளையும் என் செயலாகவே காண்பது,
மனத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்வது,
மற்ற எல்லா விருப்பங்களையும் விட்டுவிடுவது,
என் பொருட்டு பொருள், சுகம், போகங்கள் அனைத்தையும் விடுவது,
தானம், வேள்வி, யாகம், ஜபம், விரதம் அனைத்தையும் என் த்ருப்திக்காகச் செய்வது,
இவற்றையெல்லாம் பின்பற்றி ஒருவன் மனத்தை என்னிடம் செலுத்துவானாகின் அவனுக்குத் தூய்மையான அன்புமயமான பக்தி ஏற்படும். என்னிடம் பக்தி ஏற்பட்டபின் அடையவேண்டிய வஸ்து ஒன்றுமில்லை.

இவ்வுலகம் வெறும் வெளித் தோற்றமாகும். உண்மையில் இல்லை. மனம் உலகப் பொருள்களில் ஈடுபட்டால் புலன்கள் அலையத் துவங்கும். மனத்தில் ரஜோ குணம் தலை தூக்கி அசுத்தமடையும். இந்நிலையில் பக்தி, தர்மம், வைராக்யம் ஆகியவை அழிந்துபோகும்.

எதனால் என்னிடம் பக்தி வருமோ அதுவே தர்மம். எல்லாவற்றிலும் என்னைக் காண்பது ஞானம். புலனுகர் பொருள்களில் மயங்காமல் இருப்பது வைராக்யம். சித்திகள் அனைத்தும் ஐஸ்வர்யம் ஆகும்.

என்று முடித்தான் பகவான்.

உத்தவன் அடுத்த கேள்வியைத் தயாராக வைத்திருந்தார். 

கமலக் கண்ணா! தானம், தவம், சாதுர்யம், ஸத்யம், ரிதம், தியாகம், நீங்காத செல்வம், யக்ஞம், தக்ஷிணை இவற்றின் பொருள் என்ன? எது பலம்? பலம் என்றால் என்ன? லாபம் என்பதென்ன? உயர்ந்த கல்வி, நாணம், வளமை, சுகம், துக்கம் இவற்றைப் பற்றிக் கூறுங்கள்.

எவன் பணக்காரன்? ஏழை என்பவன் யார்? ஈஸ்வரன் யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை பகருங்கள்.
என்றார்.

கண்ணன் உத்தவரை தீர்கமாகப் பார்த்தான். பின்னர் பேசத் துவங்கினான்.

உத்தவா! யமம் என்பது 12 வகைப்படும். அஹிம்சை (பிறரைத் துன்புறுத்தாமை), ஸத்யம், திருடாமை, எதிலும் ஒடாமல் தனித்து விளங்குவது, நாணம், பொருள்களைத் தேவைக்கு அதிகமாகச் சேர்க்காமை, சாஸ்திரங்களிடத்தும், என்னிடத்தும் நம்பிக்கை, ப்ரும்மச்சர்யம், மௌனம், நிலையான புத்தி, பொறுமை, அச்சமின்மை ஆகிய பன்னிரண்டும் யமம் ஆகும்.

சௌசம் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் சேர்ந்த தூய்மை), ஜபம், தவம், ஹோமம், சிரத்தை, விருந்தோம்பல், எனக்குப் பூஜை செய்வது, பிறர்க்குதவி, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வது, கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது, குரு சேவை, ஆகியவை நியமம் ஆகும். 
மனத்தை என்னிடம் செலுத்துவது சமம். புலன்களை அடக்குவது தமம். துன்பங்களைச் சகித்துக் கொள்வது திதிக்ஷா, நாவையும், காமத்தையும் வெற்றிகொள்வது திருதி எனப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment