Sunday, December 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 613

ஞானிக்கு மிகவும் பிரியமானவன் நானே. எனக்கும் ஞானி மிகவும் இஷ்டமானவன். ஞானி என்னை எப்போதும் இதயத்தில் தாங்குகிறான். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் புனிதத்தை வேறெந்த சாதனையும் தர இயலாது. 

ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையால் இவ்வுடல் ஏற்படுகிறது. பூர்வ கர்மா இல்லையெனில் உடல் உருவாகாது. முதலில் உடல் இருப்பதில்லை. கடைசியிலும் இருக்கப்போவதில்லை. பிறப்பு, இருப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு, மறைவு எதுவுமே உங்களோடு சம்பந்தப்படவில்லை. 

உத்தவர் கேட்டார்.
கண்ணா! எல்லா உலகங்களுக்கும் அதிபதியே! தூய்மையான இந்த ஞானத்தை ப்ரும்மா உள்பட அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஏற்படும் விதமாக உங்களிடம் பக்தி செய்வது எப்படி?

பாமர மக்கள் இருண்ட பாழுங்கிணற்றில் விழுந்திருக்கிறீர்கள். காலம் என்ற பாம்பினால் தீண்டப் பட்டுள்ளார்கள். அப்படியும் புலன் இன்பங்களில் ஆழ்ந்திருக்கிறார்கள். இவற்றிலிருந்து விடுவிக்கக்கூடிய இன்சொற்களைக் கூறுங்கள். 

என்றார். 

கண்ணன் மீண்டும் பதிலுரைக்கத் துவங்கினான். இதே கேள்விகளை ஒரு சமயம் யுதிஷ்டிரர் பீஷ்மரைக் கேட்டார். 

பாரத யுத்தம் முடிந்து மனம் கலங்கியிருந்தார் தர்மபுத்திரர். உற்றார் உறவினர் அனைவரும் யுத்தத்தில் மாண்டுபட்டதால் அவர் மனம் மிகவும் வாட்டமுற்றது.

அவர் பீஷ்மரிடம் சென்று பல விதமான தர்மங்களைக் கேட்டு அறிந்தார். அதன் பின் பிதாமகர் அவருக்கு முக்தியின் வழியையும் விளக்கினார்‌.

பீஷ்மர் கூறியவற்றின் சாரத்தை உனக்குச் சொல்கிறேன் உத்தவா! கவனமாகக் கேள்! என்று துவங்கினான் கண்ணன்.

மீண்டும் ப்ரக்ருதி புருஷன், ஆத்மா, ச்ருஷ்டி, ஸ்திதி, பஞ்ச பூதங்கள், தன்மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறினான் கண்ணன். 
அவை அனைத்திலும் பரமாத்மாவே இருக்கிறார் என்றறிவது ஞானம். 

இவ்வுலகம் பலவகையான பொருள்களால் ஆனது என்றெண்ணாமல் ஒரே பொருளால் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்வது விஞ்ஞானம். 

நூல்களைப் படித்து அறிவது பரோக்ஷ ஞானம் (விஞ்ஞானம்) என்றும், அனுபவத்தால் அறிவது அபரோக்ஷ ஞானம் (மெய்ஞானம்) என்றறியப்படுகிறது.

உற்பத்தி, இருப்பு, ஆகியவற்றில் உள்ளோட்டமாக பின்னியிருப்பது, அனைத்தும் அழிந்தாலும் அழியாத சத்ய வஸ்து எதுவோ அதுவே ஸத் எனப்படும். 

ஒரு விஷயத்தை ஆராய வேதம், ப்ரத்யக்ஷம், மேலோர் வாக்கு, அனுமானம் ஆகிய நான்கு ப்ரமாணங்கள் உண்டு. அவற்றின்படி பார்த்தாலும், கண்களால் காணப்படும் பொருள் அனைத்துமே மாறுதலுக்குட்பட்டது என்பதால் சத்யம் இல்லை என்பது தெளிவாகும். விவேகியாக இருப்பவன் அவற்றைத்தள்ளி வைராக்யம் கொள்ள வேண்டும். 

சுவர்கம், யாக யக்ஞங்களால் அடையப்படும் உலகங்கள், ஸத்யலோகம் உள்பட அனைத்தும் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அழியக்கூடியவையே. அதனால் மெய்ப்பொருளை உணர்வது ஒன்றே எப்போதும் சாந்தி தரக்கூடியது. 

பக்தியோகத்தின் விளக்கத்தை உனக்கு முன்பே விரிவாகக் கூறினேன் உத்தவா! இருப்பினும் உன் ஆர்வத்தின் காரணமாக மீண்டும் விளக்குகிறேன்.

என்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment