Tuesday, November 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 592

தத்தாத்ரேயர் அடுத்ததாக கடலை விளக்குகிறார்.

ஒரு பெருங்கடலைப்போல யோகியானவன் மகிழ்ச்சியுடனும் கம்பீரத்துடனும், ஆழம் காண முடியாதவனாகவும், கடந்து செல்ல அதாவது அவனை இழிவுபடுத்த இயலாதவனாகவும், அலட்சியம் செய்ய இயலாதவனாகவும், கலங்காதவனாகவும், எப்போதும் அமைதியுடனும் இருக்கவேண்டும்.

நதிகள் வந்து கலப்பதால் கடல் பெருகுவதில்லை. நீர் வரத்து நின்று விட்டாலும் குறைவு படுவதில்லை. யோகியும் ஆன்மாவை பரம்பொருளில் நிறுத்தி விடுவதால் மாறுபாடுகளுக்கு உட்படமாட்டான்.

புலன்களை வெல்லாதவன் விட்டில்பூச்சி போல் அவற்றால் இழுக்கப்பட்டு நரகத்தில் விழுகிறான். (பதினோராவது குரு)

மலருக்கு சிரமம் கொடுக்காமல் தேனீ தேனை எடுக்க்கும். அதேபோல யோகி இல்லறத்தார்க்கு சிரமம் கொடுக்காமல் அவர்கள் தரும் உணவை சிறிதளவு ஏற்கவேண்டும்.

மலர் சிறியதோ பெரியதோ தேனீ அதன் சாரமான தேனை மட்டும்தான் எடுக்கும். அதைப்போல பல்வகைப்பட்ட சாஸ்திரங்களிலிருந்து யோகி சாரத்தை மட்டும் கிரஹித்துக் கொள்ளவேண்டும்.

தேனீயைப்போல் சேர்த்து வைக்கக் கூடாது. யோகி பிக்ஷை ஏற்ற உணவை இரவுக்கு, நாளைக்கு என்றெல்லாம் சேர்த்துவைக்கக்கூடாது. சேர்த்தால் அழிவு வரும். கைகளே பிக்ஷைக்கான பாத்திரம். வயிறு கொள்ளும் மட்டுமான உணவை ஏற்றல் வேண்டும்.

அடுத்ததாக பதிமூன்றாவது குருவான ஆண்யானை பற்றிக் கூறுகிறார்.

பெண்யானையைக் கண்டு மயங்கி அருகில் செல்லும் ஆண்யானை அதைப் பிடிக்க வெட்டப்பட்டிருக்கும் குழிக்குள் விழும். அதுபோல யோகி மனத்தினாலும் பெண்ணைத் தீண்டலாகாது.
அது அவனது தவம் அனைத்தையும் அழித்து நரகத்தில் தள்ளும்.

தேன் எடுப்பவன் அடுத்த குருவாகச் சொல்லப்படுகிறான். தேன் எடுப்பவன் ஒருக்காலும் எடுத்த தேனை அனுபவிப்பதில்லை. அதை யாருக்காவது கொடுத்துவிடுவான். அதேபோல இல்லறத்தானின் பொருள் துறவிகளுக்கும் சாதுக்களுக்கும் செலவிடுவதற்காகவே.

அதிவேகமாக ஓடக்கூடிய மான் வேடனின் ஊதும் கொம்பு இசையில் மயங்கி நின்று பிடிபடும். அதுபோல யோகி உலகியல் இன்பங்களைத் தூண்டும் இசையைக் கேட்கலாகாது. 

மான்வயிற்றில் பிறந்த ரிஷ்யச்ருங்கர் உலகாயத ஆடல் பாடல்களில் மயங்கி மாட்டிக் கொண்டார்.

தூண்டில் முள்ளில் செறுகப்பட்ட உணவுத்துளிக்கு ஆசைப்பட்டு மீன் மாட்டிக்கொள்ளும். அதுபோல் சுவையான உணவுக்கு மயங்கி நாவிற்கு அடிமையாகக் கூடாது.

ஆகாரத்தை நிறுத்தினால் இந்திரியங்கள் வசப்படும்‌. மற்ற புலன்களைக்கூட அடக்கிவிடலாம். நாவை அடக்குவது மிகவும் கடினம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment