Tuesday, December 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 605

பகவான் தொடர்ந்தான். 

சிலர் தினசரி கர்மாக்களை‌ மோக்ஷ சாதனம் என்றெண்ணுகின்றனர். சிலர் புகழை ஆன்ம வழியென நம்புகிறார்கள். இன்னும் சிலர் புலன்டக்கம், ஸத்யம் ஆகியவற்றை மோக்‌ஷத்திற்கான வழி என்கிறார்கள்.சிலர் தன்னலத்தையும், செல்வத்தையும் தியாக‌ம் செய்தால் முக்தி கிட்டும் என்று நம்புகிறார்கள்.

கர்ம யோகிகள், வேள்வி, தானம், விரதம், நியமம், யமம் ஆகியவற்றால் முக்தி கிட்டும் என்கிறார்கள். இவைகளால் அந்தந்த கார்மாக்களுடைய மேலுலகங்கள் கிட்டும். ஆனால் அவற்றின் பலனுக்கேற்பவே அவ்வுலக வாசம். அந்த ஆனந்தம் குறுகிய காலம்தான். அதன் பின் மீண்டும் அஞ்ஞான இருள்தான். 

என்னிடம் மனத்தை ஈடுபடுத்தி வேறெதிலும் நாட்டமின்றி என்னுள் ரமிப்பவர் அடையும் ஆனந்தமே எல்லையற்றது.

அதை போகங்களில் ஈடுபடுபவனால் அனுபவிக்க இயலாது. பொறிகளை அடக்கி, விருப்பமற்று, சாந்தமாக சமபுத்தியுடன் இருப்பவனுக்கு என்னிடம் சுலபமாக மனம் லயிக்கும். அவனுக்கு எந்த இடமானாலும் சுகமே. 

என்னிடம்‌ ஈடுபடுபவனுக்கு ஸ்வர்க‌ லோகமோ, அரச பதவியோ, யோக சித்திகளோ, முக்தியோ‌ கூட இரண்டாம் பட்சம் தான். அவன் அவற்றை விரும்புவதில்லை.

இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று என் பச்சை மாமலைத் திருமேனியில் ஈடுபடுவான். 

பக்தனிடம் நான் வைக்கும் அன்பு அளவு கடந்தது. அவ்வளவு அன்பை ப்ரும்மா, லக்ஷ்மி, சங்கர்ஷணன், ஏன் என்னிடம் கூட நான் வைக்கவில்லை.

எவன் எல்லாவற்றையும் வாசுதேவனின் வடிவம் என்று பார்க்கிறானோ அவனே மஹாத்மா. அவனுடைய பாத தூளியால் என்னுள் விளங்கும் அண்டமெல்லாம் புனிதமடையட்டும் என்று நான் அவன் பின்னாலேயே எப்போதும் செல்கிறேன்.

என்னிடம் புத்தியை செலுத்தி எந்த பொருளிலும் விருப்பமற்று, நிலையான மனம் கொண்டு மன அமைதியுடன் விளங்கும் சாதுக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை வேறெவரும் அறியக்கூட இயலாது. 

என் பக்தன் புலனுகர் பொருள்களில் ஈடுபட்டாலும் அவற்றில் மயங்குவதில்லை. என்னிடம் உள்ள நிலையான இச்சையால் அவனதில் மயங்காமல் தப்பித்துக் கொள்கிறான். மயங்கினாலும் விரைவில் விடுபடுவான்.

என்னிடம் கொண்ட பக்தி அக்னி போன்றது‌. அனைத்துப் பாவங்களையும் எரித்து சாம்பலாக்கிவிடும்.

பக்தி செலுத்துவதால்‌ ஏற்படும் சௌக்கியம் வேறெந்த மார்கங்களிலும் கிடைக்காது.

சான்றோர்களின் ஹ்ருதயம் நான். அவர்களது ஆன்மாவாவேன். எக்குலத்தில் பிறந்தாலும் என் பக்தியினால் தூய்மையடைந்துவிடுகிறான்.

நேர்த்தியான சீருடை அணிந்து, மிகுந்த ஒழுக்கம் கடைப்பிடித்து, ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்தாலும் படிக்கவில்லை என்றால் எப்படிப் பயனில்லையோ, அதுபோல மிகுந்த ஆசார அனுஷ்டாங்களுடனும் நியமங்களுடனும், தவம், நற்கல்வி, எல்லாம் இருந்தும் என்னிடம் பக்தி இல்லையென்றால் முக்தி கிடைக்காது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment