Monday, November 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 591

புறாவைப் பற்றிக் கூறும்போது தத்தாத்ரேயர் ஒரு சிறிய நிகழ்வைக் கூறுகிறார்.

புறாவைப்போல் சம்சாரத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிறார்.

ஒரு காட்டில் ஒரு ஜோடிப்புறாக்கள் கூடு கட்டிக்கொண்டு வசித்துவந்தன. இரண்டும் ஒன்றன்மேல் ஒன்று ‌மிகுந்த அன்பு வைத்திருந்தன. பெண்புறா எதையெல்லாம் விரும்பிற்றோ அனைத்தையும் ஆண்புறா சிரமம் பார்க்காமல் கொண்டுவந்தது. இரண்டும் ஒன்றாகக் காட்டில் சுற்றித் திரிந்தன. விளையாடின. பேசி மகிழ்ந்தன. உணவு உண்டன. 

பெண்புறா கருவுற்று முட்டைகள் இட்டது. காலம் செல்ல செல்ல முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வந்தன. அவை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருந்தன. அவற்றின் மீது அன்பு கொண்டு சீராட்டிப் பாராட்டி வளர்த்தன. அவைகளின் அகவல் பெரிய புறாக்களுக்கு உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. 

மாயையினால் மயங்கி குஞ்சுகளின் அழகில் மயங்கித் திரிந்தன. ஒரு நாள் பெரிய புறாக்கள் இரண்டும் இரை தேட வெளியே சென்றிருந்தன. அவ்வமயம் ஒரு வேடன் வந்தான். கூட்டின் அருகே இன்னும் பறக்கத் தெரியாமல் தத்தி தத்தி நடந்து கொண்டிருந்த குட்டிப்புறாக்களை வலைவீசிப் பிடித்தான். 

பின்னர் அவற்றை எடுத்துச் செல்லாமல் வலையோடு அங்கேயே போட்டுவிட்டு ஒளிந்துகொண்டான். முதலில் கூடு திரும்பிய தாய்ப்புறா தன் குஞ்சுகள் வலையில் அகப்பட்டுக்கொண்டதைப் பார்த்து மிகுந்த துயருடன் அரற்றிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிற்று. பறந்தது. 

மிகவும் தீனமாக சக்தியற்று குஞ்சுகள் எழுப்பும் அகவலை கேட்க கேட்க, அதனால் அதன் குட்டி இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் தானும் வலையில் விழுந்தது. இப்போதும் வேடன் வலையை எடுத்துப் போகவில்லை. 

சற்று நேரத்தில் அங்கே வந்த ஆண்புறா அதிர்ந்தது. கதறிற்று. 

நான் துர்பாக்யசாலி! துர்மதியுள்ளவன். எனக்கு இன்னும் இல்லறம் அலுக்கவில்லை. இவளோடு நான் இன்னும் இன்பமாகப் பல காலம் வாழ இச்சை கொண்டுள்ளேனே. மனைவி போன பின்பு, மற்ற மூன்று புருஷார்த்தங்கள் எப்படிக் கிட்டும். அவளது தெய்வம் நான். என்னை மிகவும் நம்பினாள். என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லையே. இந்தப் பாழடைந்த கூட்டில் தனியாக என்னை விட்டு அவள் மட்டும் குஞ்சுகளுடன் மேலுலகம் செல்வாள்.

எனக்கு மட்டும் இனி இவ்வுலகில் என்ன வேலை? யாருக்காக வாழப்போகிறேன். என்றெல்லாம் அரற்றி மதி கெட்டுப்போய்த் தானும் வலையில் விழுந்தது. 

இப்போது கொடூரமான அந்த வேடன் வந்து எல்லாவற்றையும் சுருட்டி வலையோடு கொண்டுபோனான்.

குடும்ப வாழ்க்கை நடத்துபவனின் நிலையும் இதுவே. பரமார்த்திகம் பற்றிய சிந்தனையே இல்லாமல் எப்போதும் மனைவி, மக்கள், அவர்களின் சுகம், மனமகிழ்ச்சி, கேளிக்கை என்று அலைகிறான்.

 மனித சரீரம் முக்தியின் வாசலைத் திறக்கும் கதவு.

 பல கோடி பிறவிகளுக்குப் பிறகு அபூர்வமாக ஒருவனுக்கு மனிதப்பிறவி வாய்க்கிறது. 

அதை இறையறிவு இன்றி முக்தி அடைய முயற்சியும் இன்றி வீணாக்குபவர் இந்தப் புறாக்களைப் போன்றவர் ஆவர்.

புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்கள் அனைத்தும் சுவர்கம் மற்றும் நரகத்தில் கூடக் கிடைக்கும். துன்பம் வருவதற்கு மனிதன் எப்படி முயற்சி எடுப்பதில்லையோ அதே போல இன்பம் வருவதற்கும் முயற்சி தேவையில்லை. எனவே அவற்றின் மேல் பற்று கொள்ளலாகாது.

யோகியானவன் தானாக எது கிடைக்கிறதோ அதில் த்ருப்திகொள்ளவேண்டும். கிடைக்கும் உணவு சுவையானதோ, சுவையற்றதோ, நிறையவோ, குறைவானதோ மலைப்பாம்பைப் போல் அப்படியே ஏற்கவேண்டும்‌. மலைப்பாம்பு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும். வாயில் எது விழுகிறதோ அதை அப்படியே ஏற்கும். இதற்கு அஜகர வ்ருத்தி என்று பெயர். அதை யோகியும் கைக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து பல நாள்களுக்கு உணவே கிட்டாவிடிலும் முயற்சி செய்யலாகாது‌.

 வினைப்பயன் என்றெண்ணி அமைதி காக்கவேண்டும்.

 மனோபலம், உடல் பலம், சாமர்த்தியம் அனைத்தும் இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு தன் க்ஷேமத்தைப் பற்றிய கவலையின்றி இருக்கவேண்டும்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment