Thursday, December 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 609

கண்ணன் தொடர்ந்தான். மனம், உடல், வாயு ஆகியவற்றுடன் சேர்ந்து என்னை தியானிப்பவனுக்கு மனோஜவம் என்ற சித்தி கிடைக்கும். அதனால் அவனால் அவன் விரும்பும் இடத்திற்கு நினைத்த கணமே செல்லமுடியும். 

மனத்தைக் காரணமாக வைத்து வேறு வடிவத்தை அடைய விரும்பினால் அது கிடைக்கும். அதற்கு அவன் சித்தத்தை முழுவதுமாக என்னிடம் ஊன்றி மாற விரும்பும் வடிவைச் சிந்திக்கவேண்டும். 
ஒரு யோகி மற்றொரு உடலில் ப்ரவேசிக்க விரும்பினால் அவன் செய்யவேண்டியது யாதெனில், அடைய வேண்டிய உடலில் தான் இருப்பதாகச் சிந்திப்பது. அப்படிச் செய்தால் சூக்ஷ்ம ரூபமான ப்ராணன் வாயுவுடன் சேர்ந்து மலருக்கு மலர் தாவும் வண்டைப்போல் தாவிவிடும். 

தான் விரும்பும் நேரத்தில் மரணம் அடைய விரும்புபவன் குதிகாலினால் மலத்துளையை மூடிக்கொண்டு ப்ராணனை இதயம், மார்பு, கழுத்து, தலை என்ற வரிசையில் எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர் உச்சந்தலையில் உள்ள ப்ரும்மரந்திரத்தில் வெளியேற்றி ப்ரும்மத்தில் லயிக்கச் செய்து உயிரை விடவேண்டும்.

ஒருக்கால் மேலுலகங்கள் சென்று விளையாட ஆசை இருப்பின் என்னுடைய ஸகுண ரூபத்தை தியானிக்க வேண்டும். அப்போது ஸத்வகுணமுள்ள அப்ஸரஸ்கள் வந்து அவனை விமானத்தில் ஏற்றி மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்வர்.

சத்ய சங்கல்பனான என்னிடம் சித்தத்தை நிறுத்துபவனின் எண்ணங்கள் யாவும் சத்யமாகும்.   
ஈஷித்வமும், வசித்வமும் என் இயல்புகள். அதனால் என் ஆணையை எவராலும் மீற இயலாது. எல்லோரும் என் ஆதிக்கத்திற்குப் பணிவார்கள். என்னைத் தியானிப்பவனின் ஆணையையும் எவராலும் மீற இயலாது.

என்னிடம் காரணமற்ற பக்தி செலுத்தி மனத்தூய்மை பெற்று தாரணையைத் தெரிந்து கொண்டால் 
பிறப்பு, இறப்பு, முற்கால விஷயங்கள் அனைத்தும் புலப்படும். 

நீர்வாழ் பிராணிக்கு நீரால் அழிவு ஏற்படாது. அதுபோல் என்னிடம்‌ ஒன்றிய சித்தமுடையவன் யோகமயமாகிவிடுகிறான். நீரும் நெருப்பும் அவனை ஒன்றும் செய்யாது.

ஸ்ரீவத்ஸம், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றுடன் என்னை தியானிப்பவரை எவராலும் வெல்ல இயலாது. 

எல்லா வகையான சித்திகளும் என்னை தியானிப்பது ஒன்றினாலேயே கிடைக்கும். ஆனால் உத்தவா! என்னிடமே ஒன்றுபவர்களுக்கு இவையெல்லாம் இடையூறுகள் என்று சொல்கிறார்கள். இவை என்னை அடையத் தாமதப்படுத்தும். 

பிறப்பு, தவம், மந்திரம் ஆகியவற்றால் என்னென்ன சித்திகள் கிடைக்கிறதோ அவையனைத்தும் யோகத்தினாலேயே கிடைப்பவை. ஆனால் அவற்றால் யோகத்தின் பயனான நான் கிடைக்கமாட்டேன். 

அத்தனை விதமான யோகங்கள், ஸாங்க்யம், தர்மம் அனைத்திற்கும் நானே தலைவன். 

எல்லா ப்ராணிகளுக்குள்ளேயும் வெளியேயுமாய் முழுவதுமாக வியாபித்திருப்பவன் நானே என்று சொல்லி கண்ணன் சிரித்தான்.
உத்தவர் திருதிருவென்று விழித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment