Friday, November 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 597

கண்ணன் கூறியதனைத்தையும் செவி மடுத்த உத்தவர் கேட்டார்.

கண்ணா!
கர்மாக்களுடன் ஜீவனுக்குத் தொடர்பில்லையா?
அப்படியெனில் குணங்களுக்குக் கட்டுப்படுவானா? குணங்களுக்கு ஆட்பட்டவன், குணங்களை ஆள்பவன் இருவருக்கும் என்ன வித்தியாசம்? 
எவ்வாறு அவனுக்கு இன்பம் கிட்டும்? அவனுடைய அடையாளங்கள் என்ன? எதை அனுபவிக்கிறான்? எதை விடுவான்? எத்தகைய தோற்றம் அவனுடையது? எப்படிப் படுப்பான்? அமர்வான்? உண்பான்? ஒரு ஞானியை எவ்வாறு அடையாளம் காண்பது?

முகத்தில் விழுந்த குழற்கற்றையை ஒற்றை விரலால் ஒயிலாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே பேசத் துவங்கினான் கண்ணன்.

உண்மையில் ஆத்மா கட்டுப்படுவதே இல்லை. குணம் என்பதே மாயையின் தோற்றம். ஆத்மா தனிப்பட்டது. அதற்கு விடுபடுதல், கட்டுப்படுதல் ஆகிய ஒன்றும் இல்லை. 

இன்பம், துன்பம், சரீரம், சோகம், மோகம் ஆகிய அனைத்தும் மாயையால் ஏற்படும் தோற்றம். பிறப்பு, இறப்பு ஆகிய அனைத்துமே கனவு போன்றது. அஞ்ஞானத்தினால் அவை சத்யம் போல் தோன்றும்.

என்னுடைய அம்சமேதான் ஜீவன். அவன் அஞ்ஞாத்தால் மாட்டிக்கொள்கிறான். ஞானம் வந்த கணமே அனைத்து கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ஜீவன் என்னைப் போன்றவனே. ஒரே உடலில் உறையும் ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் வெவேறு சுபாவம் உடையவை. ஜீவாத்மா துன்பத்தை இயல்பாகக்‌ கொண்டது. ஆளப்படுபவது. பரமாத்மாவின் இயல்போ ஆனந்தம். ஆள்வது. 

ஜீவனும் ஈஸ்வரனும் ஒரே மரத்தில் கூடு கட்டும் பறவைகள் போல் சரீரத்தினுள் வசிக்கிறார்கள். சமமானவர்கள். நட்புக் கொண்டவர்கள். ஒன்று மரத்தில் பழுக்கும் கர்மாவாகிய பழத்தை உண்டும் பலமின்றி இருக்கிறது. மற்றொன்று பழத்தை உண்ணாமலே பலமாக இருக்கிறது‌. பழத்தை உண்ணாதவன் தன்னையும் மற்றவனையும் முழுமையாக அறிகிறான். உண்பவனோ தளையினால் கட்டுப்பட்டவன்‌. பழத்தை உண்ணாதவனுக்கு மரத்தின் மீது பற்றில்லை. அவன் நித்ய முக்தன்.

சரீரத்தில் தங்கி கர்மாக்களில் ஈடுபட்டாலும் ஞானம் வந்தவுடன் திரை விலகி அனைத்தும் பொய்யென்று உணர்கிறான்.

ஜீவனோ ஆத்மாவுக்கு உடல், உருவம் ஆகியவை இல்லை என்றுணராதவனாக உடலைத் தான் என்றெண்ணி கனவில் வருவதையெல்லாம் உண்மையென்று நம்புபவன் போலிருக்கிறான்.

ஞானி அனைத்தையும் குணவிகாரம் என்றுணர்வதால் உண்பது, உறங்குவது, நடப்பது, சுற்றுவது, குளிப்பது என்று எதைச் செய்தாலும் அதை உடலுக்கான செயலாகப் பார்ப்பானே தவிர, தன்னுடன் அதைத் தொடர்பு படுத்துவதில்லை.

கண்ணாடியில் இருக்கும் அழுக்கு, பிம்பத்தில் தெரியுமே தவிர பார்ப்பவனை ஒட்டாது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment