Tuesday, December 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 611

கண்ணன் தொடர்ந்தான். 
அந்தணர்களிடம் பக்தியுடன் இருப்பவர்களுள் நான் பலிச் சக்ரவர்த்தி. 

நடக்கும்‌ laசக்தி, ஜீரண சக்தி, பேசும் சக்தி, கைகளின் சக்தி, சுகங்கள் அனைத்தும் நானேயாவேன். தோலின் தொடு உணர்ச்சி, கண்களின் பார்வை, நாவின் ருசி, கேட்கும் திறன், வாசனையை உணர்தல் ஆகிய ஐந்து ஞானேந்திரியக் கர்மாக்களாகவும் நானே இருக்கிறேன். 

பூமி, வாயு, அக்னி, ஆகாயம், நீர் ஆகியவற்றின் தன்மாத்திரைகள், அஹங்காரம், மஹத் தத்துவம், ஜீவன், ப்ரக்ருதி, ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய விகாரங்களாக இருப்பவனும் நானே. 

தத்துவங்களின் எண்ணிக்கை, அவற்றின் லட்சணங்கள், உணரும் அறிவு, பயன் அனைத்தும் நானே. நானே ஈஸ்வரன், நானே ‌ஜீவன், நானே குணம், நானே எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறேன். என்னைத் தவிர வேறெந்தப் பொருளும் இங்கு இல்லை உத்தவா. 

பரமாணுக்களைக் கூட எண்ணிவிடலாம். என் விபூதிகளை எண்ண இயலாது. 
எங்கெல்லாம் தேஜஸ், செல்வம், புகழ், ஐஸ்வர்யம், தியாகம், அழகு, பொறுமை, பராக்ரமம், விஞ்ஞானம் ஆகியவை உள்ளனவோ அனைத்தும் என் அம்சங்களே. 

உத்தவா! நீ கேட்டபடி என் விபூதிகளை சுருக்கமாகச் சொன்னேன். ஆனால் இவையனைத்தும் மனோவிகாரங்கள். மனத்தால் சிந்திக்கத் தக்கதும், பேசத் தக்கதுமான எப்பொருளும் மெய்யாகாது. 

நீ ப்ராணனை வசப்படுத்தி ப்ரபஞ்சத்தை நோக்கிச் செல்லும் புத்தியை அடக்கவேண்டும். அப்போதுதான் பிறவிச் சுழலினின்று விடுபட இயலும். 

வாக்கையும் மனத்தையும் அடக்காமல் எவ்வளவு பூஜை, தியானம், விரதம் தானம் ஆகியவற்றைச் செய்தாலும் பயனில்லை. அவை பச்சை மண் குடத்தில் பிடித்த நீராக வீணாகும். 

என்னிடம் பக்தியுடன் மனம், வாக்கு, ப்ராணன் ஆகியவற்றை தன்வயப்படுத்தினால் வினைகள் முடிவடையும்.

அவரவர் எவ்வெந்த நியதியில் இருக்கிறார்களோ அதைப் பின்பற்றி என்னிடம் பக்தி செய்து பயனை எனக்கு அர்ப்பணிக்கவேண்டும்‌. அனைவரும் என் அம்சங்களே என்பதை மனத்தில் கொண்டால் துவேஷபுத்தி வராது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment