Saturday, December 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 615

பகவான் தொடர்ந்தான்.

எந்த ஜீவனுக்கும் தீமை நினைக்காமல் இருப்பதும், தானம் மற்றும் கர்மங்களை விட்டு விடுவதே தவமாகும்.

ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் சமமாக நினைப்பது ஸத்யம், உண்மையாகவும் இனிமையாகவும் பேசுவது ரிதம் எனப்படும்‌‌. கர்மாவில் பற்றற்று இருப்பது சௌசம், கர்மங்களை விட்டுவிடுவது ஸந்நியாசம்.

தர்மம்தான் உயர்ந்த செல்வம். பரம்பொருளான நானே யக்ஞம். ஞானோபதேசம் செய்வதே தக்ஷிணை. ப்ராணாயாமம் சிறந்த பலமாகும்.

என்னுடைய ஐஸ்வர்யம் பகம். என்னிடம் பக்தி செலுத்துவதே லாபம். ஜீவன்களிடம் பேத புத்தியை நீக்குவதே வித்யை. விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய அஞ்சுவது நாணம்.

 எதற்கும் ஆசைப்படாமல்‌ இருப்பது ஸ்ரீ. சுகதுக்கத்தைக் கடப்பது சுகம். இன்பங்களில் மனத்தைச் செலுத்துவது துக்கம். பந்தம் எது, முக்தி எது என்றறிபவன் பண்டிதன்.

சரீரத்தில் நான் என்ற பற்று‌கொள்பவன் முட்டாள். சம்சாரச் சுழலினின்று விலக்கி என்னை நோக்கிச் செலுத்தும் பாதை எதுவோ அதுவே நல்வழி.

ஸத்வகுணம் மிகுந்திருப்பது ஸ்வர்கம். தமோகுணத்தின் மிகுதியே நரகம். குருவே உண்மையான உறவினர். குருவும் நானும் வெவ்வேறல்ல. 

இம்மனித உடலே‌ இல்லம். நற்குணங்களே செல்வம். கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையாதவன் தரித்திரன். புலன்களை வசப்படுத்தாததவன் க்ருபணன் (கஞ்சன்)

விஷயப் பற்றில்லாதவன் ஈஸ்வரன்‌. 
உத்தவா! நீ கேட்டவற்றிற்கு மிகத் தெளிவாக விடை கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும் குண தோஷங்கள் பற்றிப் பேசுவதால் ஒரு பயனுமில்லை.

தோஷங்களில் மனத்தைச் செலுத்துவதே குற்றம். குணம் தோஷம் ஆகியவற்றைக் கடந்து ஆத்ம ஸ்வரூபத்தில் பார்வையை நிறுத்துவதே குணமாகும். என்றான்.

உத்தவர் அடுத்த கேள்வி கேட்டார். கண்ணா! வேதங்கள் தங்கள் ஆணைகளாகும்‌. அவற்றில் செய்யத் தகுந்த, மற்றும் தகாத கர்மாக்கள் பற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளதே. எனில் கர்மாக்களின் குண தோஷம் பற்றிச் சிந்திக்காமல் அவற்றை எவ்வாறு செய்ய இயலும்? குண தோஷங்களைப் பார்க்காமல்  கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவது எவ்வாறு? இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துவீர்களா? என்று கேட்டார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment