Sunday, November 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 590

தத்தாத்ரேயர் தொடர்ந்தார்.

அக்னியில் விழும் பொருளின் குணத்தை அது பார்ப்பதில்லை. நல்லதோ கெட்டதோ எதுவாகினும் சாம்பலாக்கிவிடும். ஞானியும் எந்த ஒரு விஷயத்திலும் குணம் தோஷம் என்று பிரித்துப் பார்த்து ஒதுக்கலாகாது. அவருடைய ஞானத்தீயில் அனைத்தும் சாம்பலாகிவிடும்.

ஞானி சிலரிடம் தன்னை மறைக்கிறார். சிலரிடம் தன் உண்மை ஸ்வரூபத்தைக் காட்டுகிறார். ஆனால் தனக்கு உணவளிப்பவர் எவராயினும் அவரது முன்/ பின் வினைகளை எரித்து விடுகிறார்.

ஒரு மரக்கட்டை எரியும்போது அக்னியின் வடிவம் அந்தக் கட்டை வடிவில் தென்படும். அதைப் போலவே ஆன்மாவும் உடல்களினுள் புகுந்துகொண்டு அவற்றின் வடிவமாகவே தோன்றுகிறது‌.

எப்படித் தேய்கிறது? எப்படி வளர்கிறது என்று அறியமுடியாத வேகத்தில் சந்திரனின் கலைகள் வளர்கின்றன. அதே போல பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உடல் வளர்ந்தும் தேய்ந்தும் மாறுபடுகிறது. ஆனால் அதன் வளர்ச்சியையோ தேய்மானத்தையோ ஒருவரும் அறியமுடிவதில்லை. ஆனால் அதற்கும் ஆத்மாவுக்கும் தொடர்பில்லை.

 அக்னியின் ஜுவாலைகளுக்குத் தோன்றுமிடமும் மறையும் இடமும் தெரியாது.

அதுபோல உயிர்களின் தோற்றுவாயும், மறைவும் கால மாற்றத்தில் கண்ணுக்குத் தெரிவதில்லை.

சூரியன் நீரை உறிஞ்சி அதையே மழையாகப் பொழிந்துவிடுகிறான். அதுபோல யோகியும் பொருளைப் பெறுவதிலும் வழங்குவதிலும் பற்றின்றி இருக்கவேண்டும்.

ஒரே சூரியன் பல்வேறு நீர்த்தேக்கங்களில் ப்ரதிபலித்து வெவ்வேறாகத் தோன்றும். அதுபோல் உண்மையில் இருப்பது ஒரே ஒரு ஆன்மாவே. பல்வேறு உடல்களில் பலவாகப் ப்ரதிபலிக்கிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment